மனிதன் சிந்திக்கத் தொடங்கிய
போதே படைப்பிலக்கியமும் தோன்றி விட்டது. ஓவியம், சிற்பம், இசை போன்று
படைப்பிலக்கியமும் ஒரு வகைக் கலையாகப் பிறந்தது. பிற
கலைகள் கல்வி அறிவற்றவர்களும் உணர்ந்து மகிழும்
கலைகளாகும். ஆனால் படைப்பிலக்கியம் படிக்கத்
தெரிந்தவர்களே படித்து மகிழும் கலையாகும். இதனால் இக்கலை பிற கலைகளில் இருந்து சற்று மாறுபட்ட கலையாகும்.
இந்தப் படைப்பிலக்கியமாவது மற்றொன்றைப் பார்த்துப்
படைக்கப்படாததாகும். தனியொருவனே தன் சிந்தனைத்
திறனால் கற்பனை கலந்து ஒரு வடிவம் கொடுத்துப்
படைப்பதாகும். ஒருவன் ஒரு வகையான படைப்பிலக்கியம்
படைத்த பிறகு அது போலவே இன்னொருவன் தன்
கற்பனையில் இன்னொன்றைப் படைப்பதும்
படைப்பிலக்கியமாகும். பண்டைக் காலத்தில் படைப்பு இலக்கியங்கள் பெரும்பாலும்
செய்யுளிலேயே எழுதப்பட்டன. குறைந்த சொற்களில் நிறையச்
செய்திகளைச் செய்யுளில் கூறிவிட முடியும். ஓலைச்
சுவடிகளில் எழுதியதால் குறைவாக எழுதி, நிறைவாகச் சொல்ல
வேண்டும் என்ற எண்ணம் படைப்பாளிகளிடம்
இருந்ததால்
செய்யுள் நடை அதற்குத் துணையாக இருந்தது. எனவே,
உரைநடை தேவைப்படுகின்ற இடம்
தவிர, பிற படைப்புகளில்
செய்யுள் நடையே பயன்பட்டது.
ஒரு நிகழ்வை அல்லது ஒரு செய்தியைக் கூற விழைகிற
படைப்பாளி தன் படைப்பினைச் சுருங்கச் சொல்லி விளங்க
வைக்க விழைகிறான். அதற்குச் செய்யுள் நடை மிகவும்
பயன்பட்டது.
மேலும், ஓர் ஓலைச் சுவடியில் எழுதப்பட்ட படைப்பு
பழங்காலத்தில் படிப்பவர்களால் மனப்பாடம் செய்யப்பட்டது.
மனப்பாடம் செய்வதற்குச் செய்யுள் நடையே ஏற்றது
என்பதாலும் செய்யுள்
நடை வழக்கத்தில் இருந்தது.
இலக்கியம் மட்டுமின்றி மருத்துவம், சோதிடம், நீதி,
ஆசாரம் ஆகியவையும் செய்யுள் நடையிலேயே
எழுதப்பட்டன. பெரும்
கதைகளும் செய்யுள் நடையிலேயே எழுதப்பட்டன. இவை காப்பியங்கள் என்று பெயர்
பெற்றன.
காலங்கள் மாறி, அச்சகங்கள் உருவாகி
நூல்கள்,
வெளிவரத் தொடங்கிய பிறகுதான் உரைநடை
இலக்கிய
வளர்ச்சி ஏற்பட்டது. உரைநடையில் சிறுகதை, நாவல், நாடகம்
போன்ற படைப்பிலக்கியங்களும்,
பிற சமூகச் செய்திகளைக்
கூறுகின்ற கட்டுரைகளும், நூல்களும் எழுதப்பட்டன.
மருத்துவம், சோதிடம், நீதி, தத்துவம் ஆகிய செய்திகளும்
உரைநடையில் எழுதப்பட்டு மக்களால் படிக்கப்பட்டன. நம் உள்ளத்தில் தோன்றிய படைப்பு ஆர்வத்திற்கும், படைப்பு வெளியீட்டிற்கும் இடையில் நம் மனத்தில் தோன்றுகின்ற படைப்புத் திறனை அடிப்படையாகக் கொண்ட மொழிவடிவம் எல்லாமே படைப்புதான். இதனை ஆங்கிலத்தில் Creative Literature என்று கூறுவர். கவிதை, சிறுகதை, நாடகம், நாவல் ஆகியவை
படைப்பிலக்கியங்கள் என்று கருதப்படலாம். மேலும், கற்பனை
வளம் உள்ள கட்டுரைகள், கடிதங்கள், விளம்பரங்கள்
ஆகியவையும் படைப்பிலக்கியங்களுள் அடங்கக் கூடும்.
படைப்பு என்பது அனுபவத்தின் வெளிப்பாடு.
அனுபவத்தில் இருந்து பெற்ற சிந்தனை வளர்ச்சியால்
நாம் உணர்ந்த கருத்துகளைப் பிறருக்கு வெளிப்படுத்தவும்,
விளக்கவும் நமக்கு ஒரு வடிகால் தேவைப்படுகிறது.
அந்த வடிகாலே படைப்பாக வெளிப்படுகிறது. நல்ல ஓவியன்
அதனை ஓவியமாகத் தீட்டுவான். நல்ல சிற்பி அதனைச்
சிற்பமாக வடித்து எடுப்பான். இசைக் கலைஞன் இசையாகப்
பாடுவான். நல்ல இலக்கியவாதி இலக்கியமாகப் படைத்துச் சமூகத்திற்கு அளிப்பான்.
படைப்பினைக் கதை, கட்டுரை என்று இரு வகையாகப் பிரிக்கலாம். சங்க இலக்கிய அகப் பாடல்கள் சிறுசிறு கதைகளைக் கூறும் இலக்கியங்கள்தான். நீதி இலக்கியங்கள், மருத்துவ நூல்கள், சோதிட நூல்கள் எல்லாம் கவிதை நடையில் எழுதப்பட்ட கட்டுரைகளே. தற்காலத்தில் கதை என்பது உரைநடை வடிவில் எழுதப்படும் சிறுகதை, நாவல், நாடகம் ஆகியவற்றைக் குறிக்கிறது. கதை என்பது உள்ளத்தைச் சார்ந்தது. உணர்ச்சிக்கும், கற்பனைக்கும் இடமளிப்பது. கட்டுரை என்பது செய்திகளை விரித்துக் கூறும் படைப்பாகும். இதில் கற்பனைக்கு இடமில்லை. செய்திகளுக்கு மட்டுமே முக்கிய இடம் அளிப்பது கட்டுரையாகும். கட்டுரையானது அனுபவத்தில் விளைந்த கருத்தை விளக்கிக் கூறுவது ஆகும். இக்கட்டுரைக்கு, ‘வடிவம்’, உரைநடை வடிவமே ஆகும். |