1.3 படைப்பிலக்கியம் தோன்றக் காரணம்

பண்டைக் காலத்தில் கிரேக்கர்கள் படைப்பாளிகளைத் தேவதைகள் எழுதத் தூண்டுவதாக நம்பிக்கை கொண்டிருந்தனர். ஒவ்வொரு இலக்கியப் பிரிவுக்கும் ஒரு தேவதை என்று ஒன்பது தேவதைகள் இருப்பதாக நம்பினார்கள். நம் நாட்டிலும் கல்விக்காக ஒரு பெண் கடவுள் (சரசுவதி) இருப்பதாக இன்றும் நம்புகிறோம்.


சரசுவதி

உலகம் முழுதும் இருந்த பெரும் படைப்பாளிகள் கடவுள்தான் தம்மை எழுதத் தூண்டுவதாக நம்பினார்கள். மில்டன், பாரதியார் போன்ற பெருங்கவிஞர்களும் கடவுளே தம்மை எழுத வைத்ததாக நம்பியுள்ளனர்.

மில்டன் பாரதியார்

திருஞான சம்பந்தர் ஞானப்பால் உண்டு மூன்று வயதிலேயே படைப்பாளியாக மாறி விட்டதாகவும், சுந்தரருக்கு இறைவனே ‘பித்தா’ என்று பாட, சொல் எடுத்துக் கொடுத்ததாகவும் தமிழில் ஏராளமான கதைகள் இது தொடர்பாக உள்ளன.

திருஞான
சம்பந்தர்
சுந்தரர்

ஆனால், படைப்பிலக்கியம் தோன்ற உண்மையான காரணங்கள் கீழ்க்காண்பவைகளாக இருக்கலாம்.

1)

தன் உள்ளத்து உணர்வுகளை யாரிடமாவது எப்படியாவது வெளிப்படுத்த வேண்டும் என்னும் ஆவல் என்பதாக இருக்கக் கூடும். எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் வாய் மொழிக் கதைகளாக அடுத்தவர்க்குக் கூறுவார்கள். எழுதப் படிக்கத் தெரிந்து, சரியான வடிவம் கொடுக்கத் தெரிந்தவர்கள் வரி வடிவில் படைப்பிலக்கியம் படைக்கக் கூடும்.

2)

இயற்கையாகவே படைப்புணர்வு மிகுந்து இருப்பவர்கள் படைப்பிலக்கியம் படைக்கலாம்.

3)

இதழ்களுக்கு எழுத வேண்டும் என்ற உணர்வு உள்ளவர்களும் படைப்பாளர்களாக மாறலாம்.

4)

எழுத்தின் மூலம் புகழ் பெற வேண்டும் என்ற உந்து சக்தியும் இதற்குக் காரணமாகலாம்.

5)

ஒரு படைப்பாளியின் படைப்பைப் பார்த்துத் தானும் படைப்பாளியாக மாற வேண்டும் என்ற எண்ணமும் காரணமாகலாம்.

6)

பொருளீட்டுவதற்கு எழுத்தை ஒரு தொழிலாகக் கொள்வதும் உண்டு.