2.0 பாட முன்னுரை அன்பார்ந்த மாணவர்களே! நாடகக் கலையின் தோற்றம், மனிதன் தோன்றியபோதே தொடங்கி விட்டது. காலப்போக்கில் நாடகம் வளர்ச்சியையும், பல மாற்றங்களையும் பெற்றது. ஆடலுக்குள்ளும் பாடலுக்குள்ளும் ஆரம்பகால நாடகங்கள் அடங்கியிருந்தன. அவை மன்னர் அவைகளிலும், தெருக்களிலும், களத்து மேடுகளிலும், கோவிலுக்கு முன்பும், திருவிழாக்களிலும் நடிக்கப் பெற்றன. எனினும் ஒழுங்குபடுத்தி எழுதப்பட்ட நாடக இலக்கியம் ஏதுமிருக்கவில்லை. பெரும்பாலும் பதினாறாம் நூற்றாண்டிற்குப் பின்னர், எழுதப்பட்ட வடிவத்தில் சிற்றிலக்கிய வகை நாடகங்கள் கிடைக்கின்றன. கல்வெட்டுகளில், கைப்பிரதிகளில் நாடகக் குறிப்புகள் எழுதப்பட்டுக் கிடைக்கின்றன. கூத்துவகை நாடகம் பற்றியும் தெரிய வருகின்றன. 19ஆம் நூற்றாண்டின் முன்னர் இருந்த காலப்பகுதியில் தோன்றிய நாடகங்களைத் தொன்மை நாடகம் எனக் கொண்டு, அதன் போக்குகள், தோற்றம், வளர்ச்சி என்பன பற்றி இப்பாடம் மூலம் அறிந்து கொள்வீர்கள். |