ஒரு துணையாசிரியர் செப்பனிட்ட செய்தியை அச்சுக் கோக்கும் பகுதிக்கு அனுப்பும்முன் சில கேள்விகளைக் கேட்க வேண்டும் என இதழாளர் ரெங்கசாமி பார்த்தசாரதி கூறுகின்றார். அவை பின்வருமாறு:
1)
செய்தியில் கொடுத்திருக்கும் விவரங்கள் சரியானவையா என்று கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும்.
2)
செய்திகளில் ஆதாரமற்ற, தொடர்பற்ற முடிவுகள் உள்ளனவா, செய்திகளைப் படிப்பதில் வாசகர்களுக்கு இடையூறு உள்ளதா என்று பார்க்க வேண்டும்.
3)
ஒவ்வொரு செய்திக்கும் போதுமான விளக்கம் உள்ளதா, சாதாரண வாசகனும் புரிந்துகொள்ளும் வகையில் செய்தி உள்ளதா என்று கவனிக்க வேண்டும்.
4)
செய்திகள் கோவையாக உள்ளனவா என்று கேட்டுப் பார்த்துச் சரிசெய்து கொள்ள வேண்டும்.
5)
தேவையில்லாமல் வாசகரைச் சிரமப்படுத்தக் கூடிய வகையில் செய்திகளின் மொழிநடை உள்ளதா? புரியாத, குழப்பமான சொற்கள் உள்ளனவா என்று கவனிக்க வேண்டும்.
6)
உரிய காலத்தில் செய்தித்தாளை வெளியிடல் வாசகர் மத்தியில் பத்திரிகைக்கு நல்ல பெயரை ஏற்படுத்தும். உரிய காலத்திற்குள் இந்தச் செய்தியை அச்சுக்கோத்து முடித்துவிட முடியுமா என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.