1.6 தொகுப்புரை


    
திருவள்ளுவர், தமிழ் அக இலக்கிய மரபைப் பின்புலமாகக்
கொண்டே, காமத்துப்பாலை அமைத்துள்ளார். காமத்துப்பாலின்
அதிகாரப் பகுப்பு முறையும், அக இலக்கிய நூல்களில் இடம்
பெற்றுள்ள நிகழ்ச்சிகளைக் கூறும் முறையும் நோக்கும்போது,
அவை அக இலக்கிய மரபை மேலும் வளப்படுத்தும் வகையில்
அமைந்துள்ளன. களவு, கற்பு என்ற இரு பிரிவுகளும்
அகப்பாடல்களில் முக்கியமானவை. வள்ளுவத்திலும் களவியல்,
கற்பியல் என்னும் இரு பெரும்பிரிவுகள் தலைவன், தலைவி
இடையே நிகழும் களவு ஒழுக்கமும், கற்பு ஒழுக்கமும் சிறப்பாக
எடுத்துக்காட்டப்பட்டுள்ளன.

    ஊடலும், கூடலும் அக இலக்கிய மரபில் சுவை மிகுந்த பகுதி.
தலைவன் மீது வீணாக ஐயம்கொண்டு, தலைவி ஊடல் கொள்ளும்
நிகழ்ச்சிகளையும், ஊடல் தீர்ந்து கூடுகின்றபொழுது அடைகின்ற
இன்பத்தையும் மரபு மாறாமல் வள்ளுவர் எடுத்துரைக்கின்றார்.

    மேலும் அக இலக்கிய மரபில், சிறப்பு வாய்ந்தவை, தலைவன்,
தலைவி ஆகியோர் கூற்றுகள். இவை எவ்வாறு, அவர்களின் மன
உணர்வுகளை எல்லாம் எடுத்துக் காட்டுகின்றன என்பதனையும்
வள்ளுவர் காமத்துப்பாலில் எடுத்துக் காட்டியுள்ளார்.


பயில்முறைப் பயிற்சி

    அக இலக்கிய மரபில் பாடல்கள் நாடகப்பாங்கினை
அடியொற்றி எழுதப்பெற்றன. கதை மாந்தர்கள்
நேரடியாகப் பேசுவது போல் பாடல்கள் அமைவது
வழக்கம். இவ்வகையில் வழங்கும் பாடல்கள் கூற்றுவகைச்
செய்யுள் எனப்பட்டன என்று இப்பாடத்தில் நீங்கள்
படித்தறிந்தீர்கள். பாடத்தில் 3.2, 3.3, 3.4 என்ற
பகுதிகளில்     எடுத்தாளப்பட்டிருக்கும் குறள்களுள்
தலைவன் கூற்றாக அமைந்த குறள்கள் எவை எனவும்
தலைவியின் கூற்றாக அமைந்தவை எவை எனவும்
வகைப்படுத்துங்கள்.


தன் மதிப்பீ்டு : வினாக்கள் - II

  1. ஊடலை உப்போடு ஒப்பிட்டுக் கூறுவதற்குரிய
    காரணங்கள் யாவை?

[விடை]

  1. தலைவி தலைவன் மீது ஊடல் கொள்வதற்கு
    உரிய ஏதேனும் ஒரு காரணத்தைக் கூறி விளக்குக.

[விடை]

  1. பெண்ணின் கண்கள், குவளை மலர்களைவிட
    எந்த வகையில் சிறந்தவை?

[விடை]

  1. அகப்பொருள் பாடல்களில் கூற்று
    நிகழ்த்துவோரில் யார் முதன்மையானவர்?

[விடை]

  1. தலைவனைக் கனவிலாவது கண்டு மகிழ்வேன்
    என்று தலைவி கூறக் காரணம் என்ன?

[விடை]