1.2 கல்வெட்டு

    பழங்காலத்தில் சில செய்திகள் என்றும் அழியாமல் இருக்கவேண்டும் என்று மக்கள் விரும்பினார்கள். அதனால், பல பொருள்கள் மீது அவற்றை நிலையாக எழுதி வைத்தார்கள். அவற்றில் கல்லும் ஒன்று ; மற்றொன்று உலோகம்.

   முதலில் கல்லின் மீது எழுத வேண்டிய செய்தியை ஓவியம்போல் வரைவார்கள். பின்பு அதன்மீது கூர்மையான உளி போன்ற கருவியால் வெட்டுவார்கள். வெட்டிய எழுத்துகள் கல்லில் சிறிது பள்ளமாகத் தோன்றும். கல்லில் வெட்டப்பட்டிருப்பதால் அவை ‘கல்வெட்டுகள்’ எனப்படும். கல்லைக் குறிக்கச் ‘சிலை’ என்ற ஒரு சொல்லும் உண்டு. அறிவிக்கும் செய்தி அல்லது உத்தரவு சாசனம் எனப்படும். அதனால் கல்வெட்டைச் ‘சிலாசாசனம்’ எனவும் கூறுவர்.

• கல்வெட்டின் மூலம்


    கல்வெட்டுச் செய்திகள் முதலில் ஓலையில் எழுதப்பட்டன. பின்னர் அவை கல்வெட்டாகப் பொறிக்கப்பட்டன. சில செப்பேடாகவும் எழுதப்பட்டன. பல கல்வெட்டுகளில் ‘இந்த ஓலையை ஆதாரமாகக் கொண்டு கல்லிலும், செம்பிலும் எழுதிக் கொள்ளலாம்’ என்று எழுதப்பட்டிருப்பதைக் காணலாம்.

• கிடைக்கும் இடங்கள்


   பழங்காலக் கல்வெட்டுகள் தமிழக மலைக் குகைகளிலும், சங்ககால நடுகற்களிலும், தொல்லியல் அகழாய்வுகளில் கிடைக்கும் பானை ஓடுகளிலும் கிடைக்கின்றன. முத்திரைகளிலும், மோதிரங்களி¢லும், பழமையான காசுகளிலும் இதனை ஒத்த எழுத்துப் பொறிப்புகள் உள்ளன.

• படி எடுப்போர்


   மைய அரசின் தொல்லியல் அளவீட்டுத்துறையின் கல்வெட்டுப் பிரிவினர், தமிழகத் தொல்லியல் துறையினர், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத் தொல்லியல் - கல்வெட்டுத் துறையினர் ஆகியோர் கல்வெட்டுகளைப் படி எடுத்து ஆய்வு செய்கின்றனர்.
1.2.1 கல்வெட்டின் அமைப்பு

   இந்தக் கல்வெட்டுகள் உரைநடை வடிவிலும், பாடல் வடிவிலும் எழுதப் பெற்றிருக்கும். சில இடங்களில் உரைநடை - பாடல் இரண்டு வடிவங்களிலும் எழுதப் பெற்றிருக்கும். பாடல் கல்வெட்டுகள்கூட யாப்பு இலக்கண முறையில் பாடல் வடிவில் இல்லாமல்,உரைநடை போல் தொடர்ந்து எழுதப்பட்டிருக்கும்.

• உரைநடை


    கி.பி 926 - ஆம் ஆண்டு, முதல் பராந்தக சோழனின் இருபத்திரண்டாம் ஆட்சியாண்டில் திருவிசலூர்ச் சிவபெருமானுக்கு, கிளிநல்லூர் உடையான் பாகன் சர்வதேவன் என்பவன் 96 ஆடுகள் கொடுத்து ஒரு நந்தா விளக்கு வைத்தான். இதை அக்கோயிலில் உள்ள கல்வெட்டு, பின்வருமாறு உரைநடையில் கூறுகிறது :

ஸ்வஸ்திஸ்ரீ மதிரை கொண்ட
கோப்பரகேசரி வன்மர்க்கு
யாண்டு 22 ஆவது வட
கரைத் தேவதான பிரமதேய
ம் அவநிநாராயணச்ச
துர்வேதிமங்கலத்துத் தி
ருவிசலூ ர்ப் பெருமானடி
களுக்குக் கிழார்க் கூற்றத்துக் கிளிநல்
லூ ர்க் கிளிநல்லூர்க் கிழவன் பாக
ன் சர்வதேவன் தொண்ணூற்றா றாட்டா
ல் வந்த நெய்கொண்டு சந்திராதித்த
வல் எரிவதற்கு வைத்த நொந்தா விளக்கு
ஒன்று இது ஊர்ப் பெருங்குறி
பெருமக்கள் ரக்ஷை உ

(யாண்டு 22 - பராந்தக சோழன் ஆட்சிக்கு வந்த ஆண்டு ; தேவதானம் - கோயில் கொடை ஊர்; பிரமதேயம் - பிராமணர்கட்.குக் கொடையாக அளிக்கப்பட்ட ஊர்; சதுர்வேதம் - நான்கு வேதம்; பெருமானடிகள் - சிவபெருமான்; கூற்றம் - நாட்டின் உள்பிரிவு; கிழவன் - உரியவன்; சந்திராதித்தவல் - சந்திர சூரியர் உள்ளவரை; பெருங்குறி - ஊர் ஆளும் சபை; நொந்தா விளக்கு -எப்பொழுதும் எரியும் நந்தாவிளக்கு)

• பாடல் செய்தி


   பாடல் கல்வெட்டின் அமைப்பைப் படத்தில் பாருங்கள்.

பாட்டுக் கல்வெட்டு
   செங்கல்பட்டு மாவட்டம், காஞ்சிபுரம் வட்டம், திருப்புட்குழி விசயராகவப் பெருமாள் கோயில் முன் மண்டபத்துக் கிழக்குச் சுவரில், ஒரு பாடல் கல்வெட்டு உள்ளது.

குலசேகர தேவரான சுந்தர பாண்டியன் சிதம்பரம் கோயில் பொன்வேய்ந்தான்; பல புலவர்களால் பாடல்
பெற்றான்; எம் மண்டலமும் கொண்டான் என்ற சிறப்புப் பெயரைப் பெற்றான்; தென்னவனான அப்பாண்டிய
மன்னன் வாழ்க

என்று அப்பாடல் கல்வெட்டுக் கூறுகிறது. இந்தப் பாடல் கல்வெட்டை வெட்டி வைத்தவன் சுந்தர பாண்டியனின் உயர் அலுவலனான அழகியான் பல்லவராயன் என்பவன். இச் செய்தியை அப்பாடலின் கீழ் எழுதப்பட்டுள்ள இரண்டு வரி உரைநடைக் கல்வெட்டுக் கூறுகிறது.

• பாடல் வரிவடிவம்


   மேற்கண்ட செய்தி, கீழ்க்காணும் பாடலில் உள்ளது. அப்பாடல்

வாழ்க கோயில் பொன்மேய்ந்த மகிபதி வாழ்க செந்தமிழ் மாலை தெரிந்தவன் வாழ்க மண்டலம் யாவையும் கொண்டவன் வாழ்க சுந்தர மன்னவன் தென்னனேய்

என்பதாகும். அதன் கீழ் ‘பெருமாள் குலசேகர தேவர் திருத்தோளுக்கு நன்றாக, எடுத்தகை அழகியான் பல்லவராயர் செய்வித்த தன்மம்’ என்று வெட்டப்பட்டுள்ளது. (பல்லவராயர் என்பது அரசு உயர் அலுவலர்கட்குத் தமிழக அரசர்கள் அளித்த பட்டப் பெயர்களில் ஒன்று; திருக்தோளுக்கு நன்றாக என்றால் உடல் நலத்தின் பொருட்டாகக் கொடுத்த கொடை என்பது பொருள்; கோயில் - சைவர்களுக்குக் கோயில் என்பது சிதம்பரம்; மகிபதி - அரசன்; செந்தமிழ் மாலை - தமி¢ழ் இலக்கியம்)
1.2.2 கல்வெட்டின் பகுதிகள்

   பொதுவாக ஒரு முழுமையான கல்வெட்டு கீழ்க்காணும் பகுதிகளைக் கொண்டிருக்கும் :
(1) மங்கலச் சொல்
(2) மெய்க்கீர்த்தி
(3) அரசன் பெயர்
(4) ஆண்டுக் குறிப்பு
(5) கொடை கொடுத்தவர்
(6) கொடைச் செய்தி
(7) சாட்சி
(8) காப்புச் சொல்
(9) எழுதியவர்

• மங்கலச் சொல் - கிரந்தம்


   கல்வெட்டின் தொடக்கத்தில் மங்கலச் சொல் அமைந்திருக்கும். பெரும்பாலும் ‘ஸ்வஸ்திஸ்ரீ’ என்று, கிரந்த எழுத்துகளில் வடமொழிச்சொல் எழுதப்பட்டிருக்கும். சுபமஸ்து, நமசிவாய, சித்தம் என்ற சொற்கள் அமைந்துள்ள கல்வெட்டுகளும் உண்டு.

• மங்கலச் சொல் - தமிழ் வடிவம்


   ‘ஸ்வஸ்திஸ்ரீ’ என்ற சொல்லை, தமிழில் ஒலி பெயர்ப்புச் செய்து ‘சுவத்திசீ’ என்றும் சில இடங்களில் குறிக்கப்பட்டிருக்கும். சில கல்வெட்டுகளில் ‘ஸ்வஸ்திஸ்ரீ’ என்பதன் மொழி பெயர்ப்பாக ‘நன்மங்கலம் சிறக்க’ என்றும் ‘எல்லா நன்மையும் பெறுக’ என்றும் எழுதப் பெற்றிருக்கும்.

• எழுதியவர்


    கல்வெட்டை அல்லது செப்பேட்டை யார் எழுதினார்கள் என்ற பெயர் இறுதிப் பகுதியில் இருக்கும். ‘இச் சாசனம் கல்லில் வெட்டினேன் இவ்வூர் அழகிய தச்சன்’, ‘இவ்வெழுத்து வெட்டினேன் காலிங்கராய ஆசாரியன் எழுத்து’ என்பன சில கல்வெட்டுகளை வெட்டியவர் பெயர்களாகும்.

    இறுதியில் சிவன் கோயில் கல்வெட்டுகளில் ‘பன்மாகேசுவரர் இரட்சை’ என்றும், திருமால் கோயில் கல்வெட்டுகளில் ‘வைஷ்ணவர் இரட்சை’ என்றும் எழுதப் பெற்றிருக்கும்.

   சில கல்வெட்டுகளில் இப்பகுதிகளில் ஒன்றிரண்டு குறைவாகவும் இருக்கும்.

1.2.3 கல்வெட்டில் மொழிகள்

  தமிழ்நாட்டில் பலமொழி பேசுகின்ற அரச மரபுகள் ஆட்சி செய்த காரணத்தால், தமிழைத் தவிர, தெலுங்கு, கன்னடம், வடமொழி, பாரசீகம், அரபு மொழிக் கல்வெட்டுகளும், கிழக்கிந்தியக் கம்பெனி வருகைக்குப்பின் சில ஆங்கிலக் கல்வெட்டுகளும் எழுதப்பட்டன.

• வட்டெழுத்தும் தமிழும்


  தொடக்க காலத்தில் தமிழ் எழுத்துகளில் கல்வெட்டுகள் வெட்டப்பட்டன. பின்னர் காலப்போக்கில் தமிழ் எழுத்துகள் வட்டெழுத்தாகவும், இன்றைய தமிழ் எழுத்துகளின் முன்னோடி எழுத்தாகவும் வரிவடிவ வளர்ச்சி பெற்றது. பெரும்பாலும் வட்ட வடிவங்களில் உள்ளதால் வட்டெழுத்து எனப் பெயர் பெற்றது.
தமிழ் வட்டெழுத்து

• வட்டெழுத்து


   வட்டெழுத்து, கி.பி பதினொன்றாம் நூற்றாண்டுக்குப் பின்னர் சிறிது சிறிதாகத் தமிழ்நாட்டில் வழக்கு இழந்துவிட்டது. முதலாம் இராசராசன் காலத்தில் (985-1014) சில இடங்களில் வட்டெழுத்துகள் இன்றைய தமிழ் வடிவத்திற்கு மாற்றி எழுதப்பட்டன. குற்றாலம் கல்வெட்டு இதனைத் தெரிவிக்கிறது. ‘பழங்கல்வெட்டு வட்டம் ஆகையால் தமிழாக வெட்டித்து’ என்பது கல்வெட்டுத் தொடர்.
வட்டெழுத்து

• தமிழ் எழுத்து


  இன்றைய தமிழ் எழுத்துகள் படிப்படியாகக் காலம் தோறும் வளர்ந்து வந்தன. மெய்யெழுத்துகள் புள்ளிபெறும் என்பது இலக்கண விதி ; ஆனால் பெரும்பாலும் கல்வெட்டெழுத்துகள் புள்ளி வைத்து எழுதப்படுவதில்லை. உச்சரிப்பில் குறில், நெடில் வேறுபாடு உண்டு என்றாலும், கல்வெட்டுகளில் அவை ஒரே மாதிரியாகத்தான் எழுதப்பட்டிருக்கும். சில பழந்தமிழ்க் கல்வெட்டுகளில் புள்ளிகளும் உள்ளன.

• கிரந்தம்


   வடமொழி நாகரி வரிவடித்தில் எழுதப்பட்டது. பல்லவர்கள் காலம்முதல் வடமொழியை எழுத ‘கிரந்தம்’ என்ற எழுத்துவகை உருவாக்கப்பட்டது. இன்றும் அரிதாகத் தமிழுடன் கலந்து எழுதப்பெறும் ஸ, ஷ, ஜ, ஹ, ஸ்ரீ ஆகியவை கிரந்த வரிவடிவங்களே.

• சொற் பொருள்


   கல்வெட்டுகளில் வழங்கிவரும் சில சொற்களுக்குத் தனிப் பொருள் உண்டு. கீழ்க்கண்ட தொடர்களில் உள்ள சொற்களில் பொருளைக் காணுங்கள்.

   பயிர் ஏறின நிலம் - பயிர் விளைந்த நிலம்
   ஒட்டிக் குடுத்த பரிசு - எழுதிக் கொடுத்த விதம்
   ரண்டு செய்தான் - தீங்கு செய்தான்
   பூசைக்கு உடலாக - பூசைக்கு மூலப் பொருள் ஆக
   பொன்னை ஒடுக்குதல் - பொன்னைச் சேர்த்தல்
   இம்மரியாதையில் - இந்த முறையில்

   கல்வெட்டுச் சொற்களுக்குத் தனி அகராதிகளும் சில தொகுக்கப்பட்டுள்ளன. அவற்றின் மூலம் கல்வெட்டுகளின் பொருளை அறியுங்கள்.

• எழுத்து முறை


   சொல்லுக்குச் சொல் இடைவெளி விடுவதோ, நிறுத்தக்குறிகள் முற்றுப்புள்ளி, அரைப்புள்ளி, கால்புள்ளி இடும் பழக்கமோ இல்லை. மிக அரிதாகச் சில கல்வெட்டுகள் மெய்ப்புள்ளி பெற்று எழுதப்பட்டிருக்கின்றன. ரகரத்திற்கு இடப்படும் கீழ்க்கோடும் இருக்காது. ‘கரடு’ என்பது ‘காடு’ என்றே எழுதப்பட்டிருக்கும். பொருளுக்கு ஏற்ப அதனைக் காடு என்றும், கரடு என்றும் படிக்க வேண்டும். வரிவடிவமும் காலம்தோறும் வேறுபடும்.

1.2.4 கல்வெட்டில் பொதுச் செய்திகள்

   கொடையைப் பற்றியும், படி எடுப்போர் பற்றியும், பல செய்திகள் குறிக்கப்பட்டுள்ளன.

• கொடைச் செய்தி


  கொடை கொடுத்தவரின் வளநாடு, நாடு, ஊர் முதலிய விபரங்களும், அவன் குடிப் பெயரும் பின்னர் அவனுடைய பெயரும் வெட்டப்பட்டிருக்கும். ‘கேயமாணிக்க வளநாட்டு பட்டினக் கூற்றத்துக் குற்றாலம் உடையான் வேளாளன் காரானை விழுப்பரையன்’ என்ற அமைப்பில் பெயர்கள் காணப்படும். பெண்கள் கொடை அளித்தால் அவர்கள் தந்தை பெயர் அல்லது கணவர் பெயருடன் அவர்கள் பெயர் எழுதப்பட்டிருக்கும். சபையார் அல்லது ஊரார் கொடை கொடுத்தால் அவற்றின் பெயர் குறிக்கப்படும். எந்தக் கோயில் இறைவனுக்கு அல்லது யாருக்கு, எதன் பொருட்டு, என்ன கொடுக்கப்பட்டது என்ற விபரங்கள் இப்பகுதியில் குறிக்கப்படும். ‘தென்கரைத் திரைமூர் நாட்டு திருக்குரங்காடு துறை உடைய மகாதேவர்க்கு நந்தா தீபம் ஒன்றுக்கு வைத்த பால்பசு நாற்பத்தெட்டு’, ‘உய்யக் கொண்டார் வளநாட்டுத் திருவழுந்தூர் நாட்டு திருக்கற்றளி மகாதேவர்க்குச் சித்திரைத் திருநாள் அபிஷேகத்துக்குக் கொடுத்த இறையிலி நிலம்’ என்பன போல் எழுதப்பட்டிருக்கும். கோயில் சபையாரிடம் அல்லது ஊரார் வசம் கொடையை அளிப்பார்கள்.

• சாட்சி


    கொடைக்குச் சாட்சியாக ஒருவரோ அல்லது சிலரோ கையொப்பம் இடுவர். ‘இதுக்கு அறியும் சாட்சி மணவாளன் எழுத்து’ என்பது ஒரு கல்வெட்டில் கண்ட சாட்சிக் கையெழுத்து ஆகும்.

• காப்புச் சொல்


     அளிக்கப்பட்ட ஒரு கொடை நீண்ட நாள் நின்று நிலவ வேண்டும் என்று கருதியவர்கள் அதனைப் பிற்காலத்தவர் காப்பாற்றி வளர்க்க வேண்டும் என்ற விருப்பத்தைத் தெரிவித்திருப்பர். ‘இதனை மேன்மேலும் காத்து வளர்ப்பவர் சிவ பிரதிஷ்டை செய்த புண்ணியம் பெறுவார்கள்’.

   ‘தீங்கு நினைத்தான் ஏழு வம்சம் அறுவான்’, ‘இதற்குத் தீங்கு செய்தார் கங்கைக் கரையில் காராம்பசுவைக் கொன்ற தோஷத்தில் போவார்கள்’ என்பன போல, காப்பாற்றுபவர்களுக்குப் புண்ணியமும், அழித்தவர்களுக்குப் பாவமும் வரும் என்பன போன்ற தொடர்கள் இப்பகுதியில் எழுதப் பெற்றிருக்கும்.

1.2.5 கற்பதுக்கை

   சங்க காலம் என்பது கி.மு ஐந்தாம் நூற்றாண்டு முதல் கி.பி மூன்றாம் நூற்றாண்டுவரை எனத் தொல்லியல் ஆய்வுகளால் நிரூபிக்கப்பட்டுள்ளது. சங்க காலத்தில் தமிழகத்தில் பல போர்கள் நடைபெற்றிருக்கின்றன என்பதை அக்கால இலக்கியங்கள் மூலம் அறிகின்றோம். அப்போர்களில் பலர் வீரமரணம் அடைந்தனர். அவர்களைப் புதைத்த இடங்கள் ‘பதுக்கை’ எனப்பட்டன. இதைப் பெருங்கற் காலப் பண்பாடு என்றும் கூறுவர்.

• பதுக்கையில் கல்நடல்


   அந்தப் பதுக்கைகள் மீது கல்நட்டு அதில் அவர்கள் உருவத்தைப் பொறித்து அவற்றில் அவ்வீரர்களின் பெருமைகளையும், பெயரையும் பொறித்து வைத்தனர். வீரர் நினைவாக நட்டகல் ‘நடுகல்’ எனப்பட்டது.

நடுகல்
நடுகல்

இதனை,

‘அம்புவிட வீழ்ந்தோர் வம்பப் பதுக்கை’ ‘பதுக்கை சேர்த்தி பீடு¢ம் பெயரும் எழுதி இனி நட்டனரே கல்லும்’

எனச் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. இந்நடுகற்கள் வீரர்கல் - வீரக்கல், நினைவுக்கற்கள் என்றும் கூறப்படுகின்றன. சங்க இலக்கியங்களில் எழுத்துடைய பல நடுகற்கள் இருந்தன என்ற குறிப்புகள் கிடைக்கப் பெற்றாலும், எழுத்துடைய சங்ககால நடுகற்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. அகழாய்வுகளில் பல பெருங்கற்படைச் சின்னங்களைத் தோண்டியெடுத்து, ஆய்வு செய்துள்ளனர்.
பெருங்கற்படை
1.2.6 கல்வெட்டில் இலக்கியம்

   கல்லில் அல்லது உலோகத்தில் எழுதினால் அந்த எழுத்துகள் நெடுங்காலம் அழியாமல் இருக்கும் ; நிலைத்து நிற்கும் என்பதைக் கண்டறிந்தார்கள். நல்லவர்கட்கு நாம் உதவி செய்தால், அவர்கள் அதை என்றும் மறக்காமல் இருப்பார்கள். அவர்கள் என்றும் அதனை நினைவில் வைத்துக் காப்பார்கள். அதுபோல் கல்லின் மேல் எழுதிய எழுத்து என்றும் நிலைத்திருக்கும் என்று புலவர் அவ்வையார் கூறினார். இதனை

நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்
கல்மேல் எழுத்துப்போல் காணுமே

என்ற பாடல் பகுதியால் அறியலாம்.

• கல்வெட்டில் பழமொழி


  இளமைக் காலத்தில் கல்வி கற்கத் தொடங்குகிறோம். ஒருவர் இளமைக் காலத்தில் கற்கும் கல்வி உள்ளத்தில் ஆழப் பதிந்து என்றும் நிலைத்திருக்கும். அது கல்லின் மேல் எழுதிய எழுத்துகள் போல அழியாமல் இருக்கும் என்பதை ஒரு பழமொழியால் விளக்கினர். அந்தப் பழமொழி,

இளமையில் கல்வி சிலையில் எழுத்து

என்பதாகும்.

• சங்கப் பெயர்கள்


   இவையன்றி நாணயம், முத்திரை, மோதிரம், பதக்கம் ஆகியவற்றிலும் தமிழ் எழுத்துப் பொறிப்புகள் பல கிடைத்திருக்கின்றன.

   அதியமான், நெடுஞ்செழியன், மாக்கோதை, குட்டுவன் கோதை, பெருவழுதி, கொல்லிரும் பொறை, கொல்லிப் பொறை, பெருங்கடுங்கோ, இளங்கடுங்கோ போன்ற சங்க கால அரசர் பெயர்கள் தமிழ் எழுத்துகளில் பொறிக்கப்பட்டுக் கிடைத்துள்ளன.

• எழுத்துப் பொறிப்பு


   பானை ஓடுகளில் தமிழ் எழுத்துப் பொறிப்புகள் பல சொற்களாகக் கிடைத்துள்ளன. அவற்றில் பண்ணன், கண்ணன், அந்தை, ஆதன், பிட்டன், கொற்றன், அந்துவன், நள்ளி, சாத்தன் என்ற சங்க இலக்கியத்தோடு தொடர்புடைய பல சொற்கள் கிடைத்துள்ளன.
தன் மதிப்பீடு : வினாக்கள் - I
1)

கல் எழுத்தைப் பற்றிப் பாடிய புலவர் யார்?

(விடை)
2) வீரர்களைப் புதைத்த இடத்திற்குப் பெயர் என்ன? (விடை)
3) தமிழில் பொறிக்கப்பட்ட சங்ககால அரசர் ஒருவர் பெயரைக் குறிப்பிடுக. (விடை)
4) கல்வெட்டின் பகுதிகளில் எவையேனும் இரண்டினைக் குறிப்பிடுக. (விடை)
5) எந்த மன்னன் காலத்தில் வட்டெழுத்துகள் தமிழ் வடிவத்திற்கு மாற்றி அமைக்கப்பட்டன? (விடை)