6.2 படைப்பு நிலை வகை

ஒரு நாடகம் மேடையில் படைக்கப்படும் போது அல்லது
நடிக்கப்படும் போது தான் உயிர்பெறுகிறது. நாடகக்கதை, கதை
மாந்தர், கதைப்பின்னல், கதைப்போக்கு போன்ற யாவும் உண்மை
நிகழ்வுகள் போல் ஆக்கம் பெறுகின்றன.

எனினும் நடிப்பதற்குரிய அல்லது மேடைஏறுதற்குரிய
அமைப்புக்கூறுகள் அனைத்து நாடகங்களிலும் அமைந்து
விடுவதில்லை. எனவே நடிப்பதற்கான நாடகங்கள் தவிர, பிற
நாடகங்கள் படிப்பதற்கானவையாகக் கொள்ளப் படுகின்றன.
இவ்வகை நாடகங்கள் குறித்துப் பார்க்கலாம்.

6.2.1 நடிப்பதற்கான நாடகம்

ஒரு நாடகமானது மேடையில் நடிக்கத்தக்க வண்ணம்
அதற்கான கூறுகளைக் கொண்டதாக அமையும் போது, அது
நடிப்பதற்கேற்ற நாடகமாகக் கருதப்படுகிறது. நாடகம் நடக்கும்
கால அளவு, கதைப்பின்னல், கதைமாந்தர் யாவும் மேடை
ஏறுதற்கு உகந்ததாக அமைந்து வரல் வேண்டும். மேலும் மேடை
நாடக இலக்கணத்தின் படி நிலைகளான தொடக்கம், வளர்ச்சி,
முரண், உச்சம், இறக்கம், முடிவு போன்ற தன்மைகள் கொண்டு
விளங்க வேண்டும். நிகழ்ச்சிகள் திருப்பங்கள் நிறைந்து
பார்ப்போரைக் கவரும்வண்ணம் இடம் பெறல் வேண்டும். நாடக
முடிவில் உரிய செய்தி (message) பார்வையாளரைச்
சென்றடைய வேண்டும். இத்தகைய தன்மை நடிப்பதற்கான
நாடகத்தின் நிலையை முடிவு செய்கிறது.

  • நாடக இலக்கணத்தின் படிநிலைகள்

  • 1) தொடக்கம் - நாடகத்தின் தொடக்கக் காட்சி.
    2) வளர்ச்சி - நாடகத்தின் வளரும் நிலை.
    3) முரண் - கதைக்குள் எழும் சிக்கல்.
    4) உச்சம் - நாடகக் கதைப்போக்கின் உச்சகட்ட நிலை.
    5) இறக்கம் - உச்சகட்டத்தினின்று இறங்கி வரும் நிலை.
    6) முடிவு - நாடகக் கதையின் முடிவு.

    நடிப்பதற்கான நாடகத்தைப் படிப்பதற்காகவும் கொள்ளலாம்.
    மேலும் நாடகத்தின் அனைத்துக் கலைஞர்களையும் ஒரு சேர
    வைத்துப் பயிற்சிதரும் முறை, ‘ஒத்திகை' யில் முக்கிய
    நிலையாகக் கருதப்படுகிறது. இதனை ‘நாடக வாசிப்பு' எனக்
    குறிப்பிடலாம்.

    ஒத்திகை என்பது, நாடகம் மேடையில் நடிக்கப்படுவதற்கு
    முன் செய்யப்படும் பயிற்சி (rehearsal) ஆகும்.

    6.2.2 படிப்பதற்கான நாடகம்

    கதை நிகழ்ச்சிகளை விளக்கும் நிலையில் அமையும் நாடகம்
    பொதுவாகப் படிப்பதற்கெனவே கொள்ளப்படுகிறது. இது நீளமான
    கதையமைப்பு மற்றும் நீண்ட உரையாடல்கள் கொண்டிருக்கும்.
    அதிகமான கதைமாந்தர்கள் மற்றும் கிளைக்கதைகளால்
    ஆக்கப்பட்டிருக்கும். மேலும், படித்து உணரத்தக்க செய்திகள்
    பலவற்றை அடைப்புக் குறிக்குள் விளக்கி நிற்கும். அப்படியே
    மேடையேற்றம் செய்யின் மிக நீண்ட நேர அளவில் நடத்தப்பட
    வேண்டியதாக இருக்கும். இவ்வகை நாடகங்கள் படிப்பதற்குரியன
    ஆகும்.

    பொதுவாகப் படிப்பதற்கான     நாடகங்கள் கருத்து
    விளக்கங்களையும் பல     கிளைக்கதைகளையும் கொண்டு
    அமைவதால் படிப்போர்க்கும், பார்ப்போர்க்கும் சலிப்பினை
    உருவாக்கும்.     பேராசிரியர்     சுந்தரம்     பிள்ளையின்
    ‘மனோன்மணீயம்‘ என்ற நாடகத்தை இவ்வகைக்கு உரிய
    சான்றாகக் கொள்ளலாம்.

    எனினும், படிப்பதற்கான நாடகங்களை உரிய முறையில்
    மாற்றம் செய்து நடித்தற்கு ஏற்ற வகையில் உருவாக்க முடியும்.
    படிப்பதற்கான நாடகங்கள் தரமான நாடக இலக்கியமாக அமைய
    வாய்ப்பு உண்டு. மேலும் தெளிவு பெற, நடித்தற்கான நாடகம்,
    மற்றும் படித்தற்கான நாடகம் ஆகியவற்றின் வேறுபாட்டினை
    நோக்குவோம்.

    6.2.3 வேறுபாடுகள்

    நடித்தற்கான நாடகம் மற்றும் படித்தற்கான நாடகம் ஆகியன
    அடிப்படையில் சில வேறுபாடுகளைக் கொண்டுள்ளன. அவற்றில்
    குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் பட்டியலில் சுட்டப்பட்டுள்ளன.

    நடித்தற்கான நாடகம்

    படித்தற்கான நாடகம்

    1) வரையறுக்கப்பட்ட கால
    அளவு
    2) தெளிவான
    கதையமைப்பு
    3) அளவான
    கதைமாந்தர்கள்
    4) மேடைக்கூறுகள் மற்றும்
    மிகுந்து வரும்
    5) உரையாடல் சுருக்கமாகச்
    விளக்க நிலையில்
    அமைந்து வரும்.
    6) பார்வையாளருக்கான
    பொதுவான பல
    செய்திகளை
    வெளிப்படுத்தி
    நிற்கும்.
    1) நீண்ட கால அளவு
    2) கிளைக்கதைகள்
    அமைந்து வரும் நீண்ட
    கதையமைப்பு
    3) அளவற்ற பல
    கதைமாந்தர்கள்
    4) இலக்கியக் கூறுகள்
    மிகுந்து மேடைக்
    குறிப்புக்கள் வரும்
    5) உரையாடல்
    நீளமானதாக, செறிவுடன்
    அமைந்து வரும்
    6) அவரவர் படித்து
    அறிந்து நாடகச்
    செய்தியை வெளிப்படுத்தி
    கொள்ளத்தக்க வகையில்
    நிற்கும்