2.3. விடுகதை வழங்கும் சூழலும் பயனும்


    விடுகதைகள் தமிழக மக்களிடையே எவ்வெச் சூழல்களில்
நிகழ்த்தப் பெறுகின்றன. என்று பற்றியும் அவற்றின்
பயன்பாடுகள் குறித்தும் காணலாம்.

2.3.1. சூழல்கள்

    விழுப்புரம், கடலூர், தஞ்சை, திருச்சி, இராமநாதபுரம், விருதுநகர்,
சிவகங்கை     முதலான     மாவட்டங்களில்     களப்பணி
மேற்கொண்டபோது, பின்வரும் சூழல்களில் விடுகதைகள்
நிகழ்த்தப் பெறுகின்றன என்று அறிந்து கொள்ள முடிந்தது.

• கூட்டம்

    சிறுவர் சிறுமியர் மகிழ்ச்சியாக ஒன்று கூடும்போது அல்லது
குடும்ப உறுப்பினர்கள் கூடும்போது அல்லது வயது
வேறுபாடில்லாமல் பலரும் ஒன்று கூடும்போது விடுகதை
அமர்வுகள் (Riddling Session) நடைபெறுகின்றன. ஒரு
சில ஊர்களில் செயற்கையாக அத்தகைய சூழல்கள்
உருவாக்கப்பட்டன. ஆண் பெண் வயது வேறுபாடில்லாமல்
கூடியிருந்த சூழல்கள் அவை. விடுகதை போடுவதில்
அனைவரும் மகிழ்ச்சியாக கலந்து கொண்டனர். ஒருவர் ஒரு
விடுகதையைக் கூறி, விடை கூறுமாறு பிறரிடம் சவால்

விடுத் தொனியில் கூற, குழுமியிருக்கும் அனைவரும் விடை
தேடும் முயற்சியில் உற்சாகத்துடன் ஈடுபட்டனர். விடை
கூறமுடியாத நிலை ஏற்பட்டபோது விடுகதை கூறியவர் வெற்றிப்
பெருமிதத்துடன் விடை கூறினார். சில நேரங்களில் விடை
தெரியாதவர்கள் பதிலுக்கு ஒரு விடுகதையைக் கூற, முன்பு
விடுகதை கூறியவர் அதனை அறிந்திருக்கவில்லையாயின்
இருவரும் அவரவர் கூறிய விடுகதைகளுக்கான விடைகளைப்
பரிமாறிக் கொண்டனர். ஒருவரையொருவர் வெற்றி கொள்ள
வேண்டும், தன் அறிவாற்றலை வெளிப்படுத்த வேண்டும் என்ற
வேகமும்,     உற்சாகமும்     இச்சூழல்களில்     மக்களிடம்
வெளிப்பட்டதை அறிய முடிந்தது.

• பணியிடம்

    அடுத்து, வயல்களில் தொழில் செய்யும் சூழல்களில் விடுகதைகள்
போடப்படும் என்று பல ஊர்களில் கூறப்பட்டது. பெண்கள்
மட்டுமே பணி செய்யும் இடங்கள் என்றில்லாது ஆண்-பெண்
இருசாராரும் பணி செய்யும் இடங்களிலும் இந்த விடுகதை
விளையாட்டு விளையாடப்படுகிறது. இதனால் பணிக்கு எவ்வித
இடையூறும் ஏற்படுவதில்லை. மாறாகப் பணியில் ஈடுபடுவோர்
உற்சாகம் பெறுகின்றனர். இதனை விழுப்புரம் அருகில் உள்ள
ஒர் ஊரில் வயலில் களையெடுக்கும் சூழலில் விடுகதை
போடப்படுவதை நேரில் பார்த்தபோது அறிந்து கொள்ளமுடிந்தது.

• வகுப்பு

    சில கிராமப்புற ஆரம்பப் பள்ளிகளில் ஆசிரியர்களே
மாணவர்களுக்கு விடுகதைகளைக் கூறி விடைகேட்கும் நிலையும்
காணப்படுகிறது. இச்சூழல்களில் மாணவர்கள் ஆசிரியர்களுக்கு
விடுகதை கூறி விடை கேட்பதில்லை.

• தனிமை

    சில விடுகதைகள்     இரட்டை     அர்த்தம் உடையன.
மேலோட்டமாகப் பார்த்தால் பாலியல் சம்பந்தப்பட்டதாக
விடுகதைகள் அமைக்கப்பட்டிருக்கும். ஆழமாகச் சிந்தித்தால்
அதற்கான விடை வேறாக இருக்கும். இத்தகைய விடுகதைகள்
பருவ வயதுடைய அல்லது முதிய ஆண்களுக்குள்ளோ,
பெண்களுக்குள்ளோ தனி இடங்களில் பரிமாறிக் கொள்ளப்படும்.
சில நேரங்களில் திருமண உறவுமுறையுடைய ஆண், பெண்
இருசாராரும் தனித்திருக்கும்போது இத்தகைய விடுகதையைக்
கூறிச் சுகம் காண்பர்.

2.3.2. பொதுவான பயன்கள்

    விடுகதை விளையாட்டு பொழுது போக்கிற்காகப் பெரிதும்
பயன்படுகின்றது. வயது வேறுபாடில்லாமல் அனைவரும்
மகிழ்ச்சி அடைகின்றனர்.

    அறிவைக் கூர்மைப் படுத்திக்கொண்டு பல்வேறு பொருட்களை
ஒப்புமைப்படுத்தி உண்மை காணும் வேகத்தை விடுகதைகள்
நல்குகின்றன. வெற்றி பெற்றே தீருவது என்ற வைராக்கிய
உணர்வை விடுகதை அமர்வுகள் ஏற்படுத்துகின்றன. வெற்றி
பெறும்போது ஏற்படும் மகிழ்ச்சி தன்னம்பிக்கையை வளர்க்கிறது.

• நினைவாற்றல்

    கட்டுதிட்டமான அமைப்புடைய விடுகதைகளை மாற்றாமல்
நினைவில் கொள்ள மக்கள் முயற்சி மேற்கொள்கின்றனர். இது
மக்களின் நினைவாற்றலை வளர்க்கின்றது. விடைப் பொருட்கள்
விடுகதைகளில் உவமை, உருவகம் வாயிலாக வர்ணிக்கப்படும்.
இத்தகைய வர்ணனைகள் அப் பொருளைப் பற்றிய அறிவை
மக்களுக்கு ஏற்படுத்துகின்றன. விடு கணக்குகள் மக்களின்
வாய்மொழிக் கணக்கறிவைப் பெரிதும் வளர்க்கின்றன.

• பணிச்சுமை

    பணியில் ஈடுபட்டுள்ளபோது, போடப்படும் விடுகதைகள்
மக்களின் பணிச்சுமையைக் குறைத்து உற்சாக மூட்டுகின்றன.
இதனால் பணியில் அவர்கள் தொடர்ந்து ஈடுபட முடிகின்றது.

• அறிவாற்றல்

    ஆசிரியர் மாணவரின் அறிவுத்திறனைச் சோதிக்க விடுகதைகள்
பயன்படுகின்றன. பொதுமக்கள் தங்கள் சிறுவர் சிறுமியரின்
அறிவுத்திறனைச் சோதிக்கவும் விடுகதைகள் பயன்படுகின்றன.

• உளவியல்

    இளைஞர்களுக்குப் பாலியல் அறிவை விடுகதைகள் நல்குகின்றன.
காதலர்கள் தங்கள் உணர்வுகளைப் பரிமாறிக் கொள்ளவும்
உதவுகின்றன. விடுகதைகளைப் படைப்பதன் வாயிலாக மக்கள்
தங்கள் நுண்ணறிவினை வெளிப்படுத்துகின்றனர். உளவியல்
அடிப்படையில்     இது     அவர்களை மகிழ்விக்கின்றது.
ஏட்டிலக்கியங்கள் புதிர்களின் தன்மைகளை ஏற்றுத் தங்களை
வளப்படுத்திக் கொள்கின்றன.

• பல்துறை

    இன்றைய பத்திரிகைகளில் சிறுவர்களுக்கென ஒரு பகுதி
ஒதுக்கப்படுகின்றது. அதில் விடுகதைகள் இடம் பெறுகின்றன.
இதனைச் சிறுவர்கள் விரும்பிப் படிக்கின்றனர். வணிக
அடிப்படையில் பத்திரிகை வளர்ச்சிக்கும் விடுகதைகள்
பயன்படுகின்றன என்று கூறலாம். திரைப்படங்களிலும்
விடுகதைகள் பொருத்தமாகக் கையாளப்படுகின்றன. இவை
மக்களின் வரவேற்பைப் பெற்றுப் படத்தின் வெற்றிக்குத் துணை
செய்கின்றன.

• பயன்களின் சான்றுகள்

    விடுகதைகளால் ஏற்படும் பயன்களுக்கு ஒன்றிரண்டு சான்றுகள்
வருமாறு:


சான்று-1


:


அவனிதனில் ஓர் அற்புதத் தருவுண்டு
அதற்கு ஈராறு கிளைகளுண்டு
கிளைக்குக் கிளை நான்குண்டு
சீராரும் கிளைக்குச் சிறு கிளை ஏழுண்டு
கிளைக்குப் பத்துப் பத்துப் பத்துக் கிளையுமுண்டு
நீல இலை பாதி வெண்மை இலைபாதி ஆக இலை
ஒன்றாக - அது என்ன?


மனித வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளுள் ஒன்று
ஆண்டு, மாதம், வாரம், நாள், இரவு, பகல், பற்றிய அறிவாகும்.
இதனையே இந்த விடுகதை விளக்குகின்றது. இதில் ஆண்டு ஒரு
மரமாகவும், மாதம், வாரம், நாட்கள் முதலியன கிளைகளாகவும்
இரவு பகல் இரண்டும் இலைகளாகவும் உருவகிக்கப்பட்டுள்ளன.
ஓர் ஆண்டுக்குப் பன்னிரண்டு மாதங்கள் என்பதும், மாதத்திற்கு
நான்கு வாரங்கள் என்பதும் வாரத்திற்கு ஏழு நாட்கள் என்பதும்,
மாதத்திற்கு முப்பது நாட்கள் என்பதும் ஒரு நாள் என்பது ஓர்
இரவும் பகலும் சேர்ந்தது என்பதும் இவ்விடுகதை அறிவுறுத்தும்
செய்திகளாகும்.

    பள்ளிப் பிள்ளைகளுக்குப் புதிய பாடத்திட்டங்களையும்,
விடுகதைகள் வாயிலாகப் போதிக்கலாம் என்பதற்குப் பாஸ்பரஸ்
பற்றிய பின்வரும் விடுகதையைச் சான்றாகக் கொள்ளலாம்.


சான்று-2


:


நீருக்குள் இருக்கும்
மீனுமல்ல
வெளியில் வந்தால் எரியும்
நெருப்பு மல்ல - அது என்ன?

2.3.3 சமுதாயப் பயன்கள்

    விடுகதைகள் மக்களின் அறிவுத்திறன் வெளிப்பாடாக
இருப்பதோடு அவர்களின் வாழ்வியல் கூறுகளை-வாழ்வியல்
முறைகளை-வெளிப்படுத்துவனவாகவும் அமைந்துள்ளன. குடும்ப
வாழ்க்கையில் நிகழக்கூடிய காதல், திருமணம், மறுமணம்,
பரத்தையர் ஒழுக்கம், கூடா ஒழுக்கம் பற்றியெல்லாம்
விடுகதைகள்     விளக்குகின்றன.     குறிப்பாகக்     கதை
அடிப்படையிலான     விடுகதைகள்     இவ்வகையில்
குறிப்பிடத்தக்கவை.

    தமிழ்ச்சமுதாயத்தில் வயது வந்த அல்லது பருவ வயதடைந்த
ஓர் ஆணும், பெண்ணும் இயல்பாகச் சந்தித்து உரையாடுவது
கட்டுப்படுத்தப்படுகிறது. எனவே, காதலர்கள் மறைபொருளாக
உரையாடுவதாக     விடுகதைகள்     உருவாக்கப்படுகின்றன.
(சான்றுக்குக் காண்க: விரிவு 2.3.2 சான்று-1) அவ்வாறே வயதான
ஓர் ஆண், பேத்தி வயதுடைய பெண்ணைத் திருமணம் செய்து
கொள்ளும் வழக்கம் நம்மிடையே காணப்படுகின்றது. இதனால்
ஏற்படும் சிக்கல்களை விடுகதைகள் தெளிவுபடுத்துகின்றன.
(சான்றுக்குக் காண்க பிரிவு :2.3.2 சான்று-2) இவ்வாறு பல்வேறு
நிலைகளில் சமுதாயத்தைப் புரிந்து கொள்வதற்கு விடுகதைகள்
துணையாக அமைகின்றன என்பதை அறியலாம்.