1.1 அரசுக்கு அரண் ஆகும் உறுப்புகள்

அரசன் முடியாட்சியின் தலைவன். அரசனே ஓர் ஆட்சியின்
வெற்றிக்கும் தோல்விக்கும் முழுப் பொறுப்பு உடையவன். ஒரு
நாட்டை ஆளும் அரசன் ஆற்றல் உடையவனாக இருக்க வேண்டும்.
அவ்வாறு இருந்தால்தான் அவனால் ஆளப்படும் நாடும் வளம்
பெறும்; மக்களும் பகைவர் பயமின்றி மகிழ்வுடன் வாழ்வார்கள்.
ஆற்றல் உள்ள அரசனுக்கு எவை எவை தேவை என்பவை பற்றி
வள்ளுவர் குறிப்பிடுகிறார்.


படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு


(குறள் எண் 381)


- என்பது குறள்.

(கூழ் = உணவு, செல்வம், ஏறு = ஆண் சிங்கம்)

ஒரு நல்ல அரசனுக்கு ஆற்றல் மிகுந்த படை, நல்ல குடிமக்கள்,
செல்வச் செழிப்பு, நல்ல அமைச்சர்கள், பிறநாட்டுடனும் பிறருடனும்
நட்பு, பாதுகாப்பான கோட்டை ஆகியவை அமைந்து இருக்க
வேண்டும். இந்த ஆறு ஆற்றல்களையும் ஓர் அரசன் பெற்று
இருப்பானேயானால் அவன் அரசர்களுள் சிங்கமாகத் திகழ்வான்.
அவனது ஆட்சி சிறந்த ஆட்சியாகக் கருதப்படும். இவை பற்றி
வள்ளுவர் கூறும் கருத்துகள் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன.