4.3 நாடும் வளமும்

E

வளமில்லாத நாட்டில் வறுமை ஏற்படும். வறுமையால் பல தீய
செயல்கள் நடைபெறும். நாட்டின் அமைதி கெடும். மக்களின்
மகிழ்ச்சியும் குறையும். வன்முறைகள், போராட்டங்கள் ஆகியவை
நிகழும்.

எனவே ஒரு நாட்டின் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்வதற்கும், மன
அமைதியுடன் வாழ்வதற்கும், ஒரு நிலையான வாழ்வை அமைத்துக்
கொள்வதற்கும், அடிப்படையாக இருப்பது அந்த நாட்டின் வளமே.
ஆகவேதான் வள்ளுவர் வளம்மிகுந்த நாடே சிறந்தநாடு என்று
குறிப்பிடுகிறார்.

ஒரு நாட்டில் இயற்கையாக வளம் அமைந்திருத்தலும் உண்டு.
முயற்சியால் அல்லது உழைப்பால் வளம் சேர்க்கப்படுதலும் உண்டு.


4.3.1 நாடாவளம்

இயற்கையாகவே அதாவது, தானாகவே வளம் அமைந்து இருக்கும்
நாட்டில் மனிதர்களின் முயற்சியோ, உடல் உழைப்போ
தேவைஇல்லை. நாம் நாடாமல் அல்லது தேடாமல் செல்வம்
தடையின்றிக் கிடைக்கும். அத்தகைய இயற்கை வளம்பெற்ற நாடே,
சிறந்தநாடு என்று வள்ளுவர் கூறுகின்றார்.


நாடு என்ப நாடா வளத்தன நாடு அல்ல
நாட வளம் தரும் நாடு



(குறள் : 739)


தன்னிடம் வாழும் மக்கள் முயற்சி செய்து தேடி வருந்தாமலே,
தானாகவே வந்து அடையும் செல்வம்உடைய நாடே சிறந்த நாடு.
அவ்வாறு இல்லாமல், தேடி வருந்திய பின்னரே பயன் தரக்கூடிய
வளத்தினை உடையது சிறந்த நாடு அல்ல என்பது இக்குறளின்
பொருள்.

இயற்கையாகவே ஒரு நாடு, இயற்கை வளம் மிகுந்த நாடாகக்
காணப்பட்டால், அந்நாட்டை வளப்படுத்துவதற்கு உரிய முயற்சிகள்
எதுவும் செய்ய வேண்டாம். அந்த முயற்சியை அல்லது உழைப்பை
நாட்டின் வேறு வகையான பணிகளுக்குப் பயன்படுத்தலாம்.
அதனால் வேறுபல துறைகள் அல்லது பணிகள் வளர்ச்சி அடையும்.
நாடு பல நிலைகளில் முன்னேறும். இவ்வாறு பல வகையில்
முன்னேற்றம் அடைந்த நாடு, பிற நாடுகளைவிட மேம்பட்ட
நிலையில் அமைந்திருக்கும். அத்தகைய நாட்டை வள்ளுவர் நாடுகளுள் சிறந்தநாடு என்று குறிப்பிடுகிறார்.

மேலும், முயற்சி செய்து தேடி வருந்தாமல் கிடைக்கும்
வளம் பொருந்திய நாட்டைவிட்டு மக்கள் புலம்பெயரமாட்டார்கள்.
அங்கேயே நிலையாக வாழ்வார்கள். எனவே தான் வள்ளுவர்,
‘நாடா வளம்’ பொருந்திய நாடு, நாடுகளுள் சிறந்த நாடு என்று
சுட்டுகிறார்.


4.3.2. நீர்வளம்

உயிர் வாழ்வதற்கு நீர் மிகமுக்கியம்.
உயிரினங்கள்     மட்டுமல்ல,
தாவரங்களும் உயிர் வாழ்வதற்கு நீர்
மிகவும்தேவை.     எனவே தான்
வள்ளுவர். ‘வான் சிறப்பு’ என்ற
அதிகாரத்தில் ‘நீர் இல்லாமல்
உலகம் அமையாது’ என்று
குறிப்பிடுகிறார்.

பறவைகளும், விலங்குகளும் நீருக்காக அலைவதை நாம்
பார்த்திருக்கிறோம். விபத்தாலோ, பிறவற்றாலோ பாதிக்கப்பட்டு
மரணப் படுக்கையில் இருப்பவன், ‘தண்ணீ! தண்ணீ!!‘ என்று
தன்நாவின்     வறட்சியின் காரணமாகக் கேட்பதையும்
பார்த்திருக்கிறோம்.     பாலைவனப் பகுதியில், தன்நாவின்
வறட்சியைப் போக்குவதற்கு    நீர் கிடைக்காததால் உயிர்
நீத்தவர்களைப் பற்றியும் கேள்விப்பட்டிருக்கிறோம்.

கலிங்கரத்துப்பரணி     எனும்     நூலில்     பாலைவனத்தின்
கொடுமைகளைப் பற்றிப் பல பாடல்கள் உள்ளன. அதில்
பாலைவனப் பகுதியில் குடிப்பதற்கு நீரில்லாமல் வருந்தும்
விலங்கினங்கள் எவ்வாறு துன்பப்படுகின்றன என்பதைப்பற்றி
ஒருபாடல் உள்ளது.

மான் ஒன்று, பாலைவனத்தில், அருந்துவதற்கு நீர் கிடைக்காமல்,
அங்கும் இங்குமாக ஓடி அலைகிறது. கண்ணுக்குத் தெரியும்
தூரத்தில், சொட்டுச் சொட்டாக (Drop by drop) நீர் கீழே
விழுவதைப் பார்க்கிறது. உடனே அங்கு ஓடிச்செல்கிறது. அங்குக்
கிடைத்த சிறிது நீரை அருந்தியது. உடனே அதற்கு விக்குகிறது.
ஏனென்றால் ஓரிரு சொட்டு நீர் தான் கிடைத்தது. அதற்குமேல்
நீர் கிடைக்கவில்லை. காரணம் அதற்குக் கிடைத்த நீர், ஓடி
இளைத்துச் சோர்ந்த நிலையில் இருந்த நாயின் வாயில்இருந்து
ஒழுகிய நீர். அது அதன் தாகத்தைத் தணிப்பதற்குப் போதாது.
எனவே விக்கியது.


நாயின் வாயின் நீர் தன்னை, நீர் எனா
நவ்வி நாவினால் நக்கி விக்குமே !


(கலிங்கத்துப்பரணி, காடுபாடியது : 82-83)


நீர் கிடைக்காததால் வரும் துன்பத்தையும், நீரின் அருமையையும்
இந்த நிகழ்ச்சி எடுத்துக் கூறுகிறது. இல்லையா?

நீரின் அருமையையும் தேவையையும் அறிந்த வள்ளுவரும் ஒரு
நாட்டிற்கு நீர் எவ்வளவு முக்கியமானது என்பதை விளக்குகிறார்.

நிலத்தின் அடியிலிருந்தும் ஊற்றுகளின் வாயிலாக நீர் கிடைக்கும்.
மழையினால் நீர் கிடைக்கும். மலைகளிலிருந்து பாயும்
அருவிகளின் வாயிலாகவும் நீர் கிடைக்கும். இயற்கை நமக்கு
வழங்கும் இந்த மூன்று வகையான நீர் கிடைக்காவிட்டால்
நாம் உயிர்வாழ முடியாது. இந்த உண்மையினை உணர்ந்த
வள்ளுவர், ஒரு நாடு எவ்வாறு இருக்க வேண்டும் என்று
குறிப்பிடும்போது, நாட்டிற்கு உரிய உறுப்புகளில் ஒன்றாக நீரைச்
சுட்டுகிறார்.


இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல் அரணும், நாட்டிற்கு உறுப்பு



(குறள் : 737)


ஒரு மனிதனுக்கு உறுப்புகள் எந்த அளவுக்கு முக்கியம்
வாய்ந்தவையோ, அதைப்போல ஒரு நாட்டிற்கும் சில உறுப்புகள்
முக்கியமானவை. அவற்றுள் நீர்வளம் சிறப்புவாய்ந்த உறுப்பு என்று
வள்ளுவர் குறிப்பிடுகின்றார்.

முடியாட்சிக் காலத்திலும், இன்றைய குடியாட்சிக் காலத்திலும்,
நீர்த்தேக்கத்திற்கும்,     நீர்ப்பாசனத்திற்கும் முக்கியத்துவம்
கொடுக்கப்படு்கிறது காரணம். வள்ளுவர் குறிப்பிடுவதுபோல்,
நாட்டின் முக்கியமான ஓர் உறுப்பாக நீர் திகழ்கிறது.