2.7 பகுத்தல்

    பாதீடு முதலிய 6 துறைகள் பகுத்தல என்பதில் அடங்கும்.

2.7.1 பாதீடு

    பகுத்து இடுவது, பாதீடு. பகுத்து - பாத்து - பாது ; இடு -
ஈடு ; கொண்டு வந்து ஊர் மன்றத்தில் நிறுத்தின ஆநிரையை
மறவர் தகுதி அறிந்து பகுத்துக் கொடுப்பதால் பாதீடு எனப்
பெற்றது.

  • கொளுவின் பொருளும் கொளுவும்

    கவர்ந்து வந்த ஆன்திரளை அந்த அந்த மறவர்கள் றி
செல்களை ஆய்ந்து அவரவர் தகுதிக்கேற்பப் பகுத்து ஈவது,
பாதீடு என்னும் துறையாம்.

கவர்கணைச் சுற்றம் கவர்ந்த கணநிரை
அவர்அவர் வினைவயின் அறிந்துஈந் தன்று.

    போரினைப் புரிந்த மறவர்கள், பகைவரது நிலத்திற்குச்
சென்று ஒற்றி ஆராய்ந்து வந்து சொன்னவர்கள், நல்நிமித்தம்
பார்த்துச் சொன்னவர்கள் ஆகிய எல்லார்க்கும் வெட்சி
மறவர்கள் தங்களுடைய சிற்றூர் மன்றத்தில் கொண்டு வந்து
நிறுத்திய ஆநிரைகளைப் பங்கிட்டார்கள். இதுவே உதாரண
வெண்பாவின் கருத்து


2.7.2 உண்டாட்டு

    உண்டு + ஆட்டு = உண்டாட்டு. ஊனும் கள்ளும் உண்பதை
‘உண்டு’ என்பது காட்டுகிறது. வேந்தன் தகுதி அறிந்து சிறப்புச்
செய்தமையாலும் கள்ளுண்டமையாலும் மனம் களிப்பெய்தி
ஆடியதை ஆட்டு என்பது சுட்டுகிறது. எனவே, இந்தத் துறை
உண்டாட்டு எனப் பெற்றது.

  • கொளுவின் பொருளும் கொளுவும்

    வெட்சி மறவர்கள் வெற்றியும் வேந்தனது வரிசையும்
(சிறப்பும் பாராட்டும்) பெற்றார்கள். பெற்ற அதனால், கள்ளும்
இறைச்சியும் உண்டு மனம் களித்தார்கள் ; ஆடினார்கள். இந்த
நிகழ்வைக் கூறுவது உண்டாட்டு என்னும் துறையாம்.

தொட்டுஇமிழும் கழல்மறவர்
மட்டுஉண்டு மகிழ்தூங்கின்று.

(மட்டு = கள் ; மகிழ் = மகிழ்ச்சி ; தூங்கின்று = கூத்தாடியது)

2.7.3 கொடை

    கொடுப்பது, கொடை. கொடையாவது தன்னைத் தேடி
வந்தவர்களுக்குக் எதையும் எதிர்பாராது, விரும்பிக் கொடுப்பதாம்.
பாதீடு என்பது மேற்கொண்ட செயலில் பங்கு கொண்டவர்களுக்கு
இடுவது.

  • கொளுவின் பொருளும் கொளுவும்

    ஊர்ப் பொது மன்றில் தந்து நிறுத்திய ஆநிரைகளில் ஒன்றேனும் எஞ்சாதபடியும், வேண்டிவந்தவர்கள் ஒருவரும் விடுபடாதபடியும்,
தமக்குப் பின்னொரு காலத்து வேண்டுமென்று எண்ணாமல்,
பசுக்களை விரும்பி விரைந்து கொடுப்பது கொடை என்னும் துறையாம்.

ஈண்டிய நிரை ஒழிவு இன்றி
வேண்டியோர்க்கு விரும்பி வீசின்று.

2.7.4 புலனறி சிறப்பு

    புலன் - அறிவு. அறிவை அறிந்து சிறப்புச் செய்வதால்
புலனறி சிறப்பு என்றனர். முதலில் போரிடும் மறவர்கள் சிறப்புக்கு
உரியவர்கள். இவர்களை அடுத்துச் சிறப்புச் செய்வதற்கு உரியவர்
கள் ஒற்றர்கள். ஏன்? இவர்கள் மாறுவேடத்தில் மறவர்க்கு முன்பே
பகைநாட்டில்
சென்று தங்கி அஞ்சாது ஒற்றறிகின்றனர். அறிவார்ந்த
ஒற்றர்க்குப் பங்கில் மிகுதி கொடுத்தமையால் புலனறி சிறப்பு
எனப்பட்டது.

  • கொளுவின் பொருளும் கொளுவும்

    கொடிய பகைவர் நாட்டுக்குச் சென்று ஒற்றி (வேவு பார்த்து)
அந்நாட்டின் நிலைமையை ஆய்ந்து உரைத்தவர்களுக்கு, போரிட்டு
ஆத்திரளைக் கவர்ந்து வந்த மறவர்கள் பங்கினைவிட மிகுதியாகக்
கொடுத்துச் சிறப்பித்தல் புலனறி சிறப்பு என்னும் துறையாம்.

வெம்முனை நிலை உணர்த்தியோர்க்குத்
தம்மினும்மிகச் சிறப்புஈந்தன்று.

2.7.5 பிள்ளை வழக்கு

    பிள்ளை - கரிக்குருவி என்னும் காரிப் பறவை. நிமித்தம்
பார்த்தற்குப் பொருத்தமான பறவைகளுள் ஒன்று பிள்ளை. இதன்
பெயர்ச்சியைக் (அசைவு, பறக்கும் திசை முதலியன) கொண்டு
நல்நிமித்தம், தீநிமித்தம் கண்டறிவர். வழக்கு - வழங்குவது.
பிள்ளைச் சகுனத்தைப் பார்த்தறிந்து சொன்னவர்க்கு வழங்குவது
பிள்ளை வழக்கு எனப்பட்டது.

  • கொளுவின் பொருளும் கொளுவும்

    பிள்ளை என்னும் கரிக்குருவியின் புடைபெயர்ச்சியைக்
கொண்டு தப்பாதபடி சகுனம் சொன்ன புலவர்க்கு மிகுதியாக வழங்கியதைக் கூறுவது பிள்ளை வழக்கு என்னும் துறையாம்.

பொய்யாது புள்மொழிந்தார்க்கு
வையாது வழக்குஉரைத்தன்று.

2.7.6 துடிநிலை

    துடி - உடுக்கை. ஒருவகை இசைக்கருவி. இங்கு துடி
என்பது அதனைக் கொட்டுகின்ற துடியனுக்கு ஆகிவருகின்றது
(ஆகுபெயர்). நிலை - நிலைமை. நிலைமையாவது துடியனின் கெழுதகைமை (உரிமை). துடியனின் கெழுதகைமையைப் பாராட்டுவதால் துடிநிலை என்ற பெயர் பெற்றது இத்துறை.

  • கொளுவின் பொருளும் கொளுவும்

    துடிநிலையாவது, வெட்சி மறவர் தமது பழங்குடி
முறைமையால் துடியனது கெழுதகைமையாம் பண்பைப்
பாராட்டுவது ஆகும்.

தொடுகழல் மறவர் தொல்குடிமரபில்
படுகண்இமிழ்துடிப் பண்புஉரைத்தன்று.

எடுத்துக்காட்டு வெண்பா :

முந்தை முதல்வர் துடியர், இவன்முதல்வர் ;
எந்தைக்குத் தந்தை ; இவன்எனக்கு ; - வந்த
குடியொடு கோடா மரபினோற்கு இன்னும்
வடியுறு தீந்தேறல் வாக்கு.
  • இதன் கருத்து

    துடியனாகிய இவனுடைய பாட்டனுக்குப் பாட்டன் முதலாயினோர்,
என் பாட்டனுடைய பாட்டன் முதலிய முந்தையோர்க்குத் துடிகொட்டுபவராக இருந்தனர். என் தந்தைக்கு இவன் தந்தை ; இந்நாளில், எனக்கு இவன்
துடி கொட்டுகின்றான். எனது குடியொடு தொடர்ந்து இவனது குடியும்
வருகின்றது. இத்தகையவனுக்கு இனிய கள்தெளிவை இன்னமும்
வார்ப்பாயாக என்றான் ஒரு மறவன்.