2.1 பெருங்காப்பியம்

     காப்பிய வகைமையில் சிறந்து நிற்பன பெருங்காப்பியங்கள். அணிவகை இலக்கணங்களைப் பற்றி விளக்கும் தண்டியலங்காரம் பொதுவணியியலில் தொடர்நிலைச் செய்யுள் பற்றி விரிவாகப் பேசுகிறது.

     தொடர்நிலைச் செய்யுள் இரு வகைப்படும். அவை:

(1) பொருள்தொடர் நிலைச் செய்யுள்
(2) சொற்றொடர் நிலைச் செய்யுள்

    பொருளினுஞ் சொல்லினும்
    இருவகை தொடர்நிலை
         - (தண்டியலங்காரம்-6)


(பொருளினும் = பொருள்தொடர் நிலை; சொல்லினும் = சொற்றொடர் நிலை)

· சுப்பிரமணிய தேசிகர் உரை

(1) பொருள் தொடர்நிலைச் செய்யுள்
    
     ஒரு சரித்திரத்தைத் தொடர்ச்சியாகக் கூறும் சிந்தாமணி, கம்பராமாயணம் முதலியன.

(2) சொற்றொடர் நிலைச் செய்யுள்
    
    அந்தாதியாகப் பாடப்பட்ட பிரபந்தங்கள்

2.1.1 காப்பியத்தின் அடிப்படை

    

தண்டியலங்கார நூலாசிரியர்     தண்டி,    பொருள் தொடர்நிலைச் செய்யுளை இரண்டாகப் பகுத்தார்.

(1) பெருங்காப்பியம்
(2) காப்பியம்

என இருவகைப்படும் என்றார்.

     பெருங்காப்பியமே காப்பிய மென்றாங்
     கிரண்டா யியலும் பொருள்தொடர் நிலையே - (7)

     பெருங்காப்பியமும், காப்பியமும் பொருள் தொடர் நிலையின் இரு வகைகள்.

     சிறுகாப்பியம் என்று தண்டியலங்கார     நூற்பா கூறாவிட்டாலும், பெருங்காப்பியம் அல்லாதது சிறுகாப்பியமே என்று உரையாசிரியர் சுப்பிரமணிய தேசிகர் குறிப்பிடுகிறார்.

2.1.2 பெருங்காப்பிய இலக்கணம்      பெருங்காப்பியத்தின்     அடிப்படையாகப்     பொருள் தொடர்நிலைச் செய்யுளைக் குறிப்பிட்ட தண்டியாசிரியர் அடுத்த நூற்பாவில் பெருங்காப்பியத்தின் இலக்கணத்தை முன்வைக்கிறார்.

அவற்றுள்
பெருங்காப்பிய நிலை பேசுங் காலை
வாழ்த்து வணக்கம் வருபொருள்
1 இவற்றினொன்று
ஏற்புடைத் தாகி முன்வர வியன்று
நாற்பொருள்2 பயக்கு நடைநெறித் தாகித்
தன்னிகரில்லாத் தலைவனை யுடைத்தாய்3
மலை4 கடல்5நாடு6 வளநகர்7 பருவம்8
இருசுடர்த் தோற்றமென்9 றினையன புனைந்து
நன்மணம் புணர்தல்10 பொன்முடி கவித்தல்11
பூம்பொழில் நுகர்தல்12 புனல்விளை யாடல்13
தேம்பிழி மதுக்களி14 சிறுவரைப் பெறுதல்15
புலவியிற் புலத்தல்16 கலவியிற் களித்தலென்17
றின்னன புனைந்த நன்னடைத் தாகி
மந்திரந் தூது செலவுஇகல் வென்றி18
சந்தியிற் றொடர்ந்து சருக்க மிலம்பகம்19
பரிச்சேத மென்னும் பான்மையின் விளங்கி
நெருங்கிய சுவையும் பாவமும்20 விரும்பக்
கற்றோர் புனையும் பெற்றிய தென்ப
             -(தண்டியலங்காரம்-8)


பெருங்காப்பியத்தில்

1. வாழ்த்துதல்,

    தெய்வம் வணங்குதல்,உரைக்கும் பொருள் உணர்த்தல் எனும் மூன்றினுள் ஒன்று முன்வர நடக்க வேண்டும்.

     அதாவது பெருங்காப்பியத்தில் கடவுள் வாழ்த்து அமைதல் வேண்டும்.

     சீவக சிந்தாமணிக் காப்பியம்
     மூவா முதலா உலகமொரு மூன்று

என்று கடவுள் வாழ்த்தோடு தொடங்குகிறது.

     மணிமேகலை பதிகத்தில் சம்பாபதித் தெய்வத்தொடு தொடங்குகிறது. கடவுள் வாழ்த்து இல்லை.

     பெருங்கதையில் கடவுள் வாழ்த்து இருந்திருக்கலாம். ஆனால் தொடக்கம்     மறைந்து போனதால் நமக்குக் கிடைக்கவில்லை.

     எந்தத் தெய்வப் பெயரையும் கூறாமல், இளங்கோவடிகள் சிலம்பின் மங்கல வாழ்த்துப் பாடலில் திங்கள் (நிலா), ஞாயிறு (சூரியன்), மாமழை, புகார் போற்றுதல் என்ற இயற்கை சார்ந்த போற்றுதலை முன்வைத்துப் புதுமை படைக்கிறார்.

     திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்
    ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்
    மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்
         - (சிலப்பதிகாரம் - புகார்க்காண்டம்)

2. நாற்பொருள்

    ‘நாற்பொருள் பயக்கு நடைநெறித்தாகி’ பெருங்காப்பியங்கள் அமைக்கப் படல் வேண்டும்.

     அறம், பொருள், இன்பம், வீடு எனும் நான்கு பொருட்களைப் பெருங்காப்பியம் வலியுறுத்திப் பாட வேண்டும்.

     இந்நான்கினுள் ஏதாவது ஒன்றோ, பலவோ குறைந்து வருவதைத்     தண்டியாசிரியர் காப்பியம்     அதாவது சிறுகாப்பியமென்றார்.

     அறமுதனான்கினுங் குறைபாடு உடையது
    காப்பிய மென்று கருதப்படுமே.
         - (தண்டியலங்காரம்-10)

    சிலப்பதிகாரம் நாற்பொருளையும் பாடவில்லை. அறம், பொருள், இன்பம் எனும் மூன்றினையே பாடுகிறது.

     துறவினையும், பசி     போக்குதலையும்,     சமுதாய சீர்திருத்தத்தையும் முன் நிறுத்திப் பாடிய மணிமேகலை அறத்தையும் வீடுபேற்றையும் மட்டுமே பாடியது. பொருளும், இன்பமும் மேகலைக் காப்பியத்தில் வலியுறுத்தப் படவில்லை.

     பெருங்கதை நான்கு பொருட்களையும் பாடுகிறது. மு.அருணாசலம் இலக்கியக் கொள்கை எனும்     நூலில் “பெருங்கதை நாற்பொருளும் கூறுவதே; இறுதிப் பகுதி இறந்து போயினும், நூலின் இடையே அருகனைத் தலைவன் வழிபட்ட செய்திகள் விரிவாகச் சொல்லப்பட்டமையால் வீடும் கூறிற்று என்று கொள்ளலாம்” எனக் கருத்துரைக்கிறார்.

3. தன்னிகர் இல்லாத தலைவன்

     குறைபாடுகள் ஏதும் அற்ற, எதையும் முடிக்கும் வலிமை வாய்ந்த தன்னிகர் இல்லாத்     தலைவனைப்     பெற்றுப் பெருங்காப்பியங்கள் அமைதல் வேண்டும்.

    சிலம்பு, மணிமேகலை     இரு காப்பியங்களிலும் தன்னிகரற்ற தலைவன் இல்லை. தன்னிகரற்ற    தலைவியரே இடமபெறுகின்றனர். இரட்டைக் காப்பியங்களாய்த் திகழும் அவ்விரு நூல்களிலும் பெண்மையே உயர்வு பெற்றது. தன்கணவன் குற்றமற்றவன் என நிறுவக் கண்ணகியே போராடி வென்றாள். அதேபோல் பசிக்கொடுமை அகற்ற மணிமேகலை அமுத சுரபியோடு மனிதநேயப் பணியாற்றினாள்.    சிறைக் கோட்டத்தினை அறக்கோட்டமாக்கினாள். சீவக சிந்தாமணியில் தன்னிகரற்ற தலைவனாகச் சீவகன் இருந்தான்.

4. மலை வளம் பாடுதல்

    சிலப்பதிகாரத்தில் சேரன் செங்குட்டுவன் மலைவளம் காணச் சென்றதும்,குன்றக் குறவர்கள் மலையில் விளைந்த பரிசுப் பொருட்களைப் பரிசாகத் தந்ததையும்     இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார்.

     மணிமேகலையில், வஞ்சியில் உள்ள யானைக் கூட்டம் மலைநாடு போன்ற தோற்றத்தைத் தருகிறது என்று சாத்தனார் பாடுகிறாரே தவிர விரிவான வருணனைப் பகுதி(மலை பற்றியது) அமையவில்லை.

     குறிஞ்சி நிலம் கடந்தது என்ற பகுதியில் பெருங்கதை மலை வருணனை தருகிறது.

5. கடல் பற்றிய செய்திகள்

     சிலப்பதிகாரத்தின் கடலாடு காதை கடல் பற்றிய அதிகமான செய்திகளைத் தருகிறது.

     மணிமேகலையில், மணிபல்லவத் தீவினைக் கூறும்போது கடலால் சூழப்பட்ட தீவு எனச் சாத்தனார் கூறுகின்றார்.

     பெருங்கதையில் கடல் பற்றிய செய்திகள் ஏதுமில்லை.

6,7. நாடு, வளநகர் பற்றிய செய்திகள்

     நாட்டுப் படலம், நகரப் படலம்    ஆகியன பிற்கால இலக்கியங்களில பாயிரத்தையடுத்து இடம் பெறத் தொடங்கின.

     சிலப்பதிகாரத்தில் நாடுகாண் காதை, ஊர்காண் காதை முதலியவற்றில் நாடு, வள நகர் பற்றிய வருணனைகள் அதிகம் இடம் பெற்றுள்ளன.

     மூன்று நாடுகளை ஒன்றாக இளங்கோ கண்டதால் மூன்று நாடுகள், மூன்று நகரங்களை அழகாக விவரித்துள்ளார்

     மணிமேகலைக் காப்பியத்தில் புகார், மதுரை,வஞ்சி, கச்சி ஆகிய நான்கு நகரச் சிறப்புகள் விளக்கப்பட்டுள்ளன.

    பெருங்கதைக காப்பியம் மகத நாட்டினையும் அதன் தலைநகராகிய இராசகிரியத்தையும் வருணிக்கிறது.

சீவக சிந்தாமணியில் ஏமாங்கத நாட்டின் வளம், மழை வளம், பயிர் வளம் ஆகியன நாமகள் இலம்பகத்தில் 48 பாடல்களாய் அமைந்துள்ளன. தலைநகர்     இராசமாபுரம், அரசர்வீதி,    நகரச் செய்திகள் ஆகியன 63 பாடல்களாய் அமைந்துள்ளன.

7,8. பருவம் பற்றிய செய்திகள்

    பருவ வருணனை காப்பியத்தின் முக்கியக் கூறாக அமைகிறது.

     சிலப்பதிகார வேனிற் காதை பருவத்தைப் போற்றுகிறது.

     மணிமேகலைக் காப்பியத்தில் பருவச் சிறப்புகள் இடம் பெறவில்லை.

     பெருங்கதைக்    காப்பியத்தில்    பருவச்    சிறப்பு கூறப்பட்டாலும் சிறப்புப் பெறவில்லை.

9. இருசுடர்த் தோற்றம்

     சூரிய சந்திரர்களின் தோற்றத்தையும் மறைவையுமே இரு சுடர்த் தோற்றம் என்கிறோம்.

     உலகம் ஒளிபெறுமாறு உச்சியில் தோன்றிய சூரியன் கதிர் பரப்பியதையும்,அந்தி வானத்தில் வெண்பிறை தோன்றியதையும், சிலப்பதிகாரம் விளக்குகிறது.

10. நன்மணம் புணர்தல் (திருமணம் புரிதல்)

    சிலப்பதிகாரத்தில் - கண்ணகி கோவலன் மணம் சீவகசிந்தாமணியில - சீவகன் எண்மரை மணத்தல் பெருங்கதையில் - உதயணன் மணம் நான்கு
 உதயணன் மகன் மணம் மூன்று          யூகி முதலியோர் மணம்

11. பொன்முடி கவித்தல்

     பெருங்கதையில் மட்டும் இது உண்டு.


12. பூம்பொழில் நுகர்தல் (சோலை நுகர்தல்)

     மூன்று காப்பியங்களிலும் இது நடைபெறுகிறது.

13. புனல் விளையாட்டு (புனல் - நீர்)

     மணிமேகலையில் புனல் விளையாட்டு இல்லை. சிலப்பதிகாரத்தில் புனலாடு காதை உண்டு.

     பெருங்கதையில் நீர் விளையாட்டு நடைபெறும்போதுதான், உதயணன் வாசவதத்தையை யானைமீது ஏற்றிக் கொண்டு தன்னுடைய ஊருக்குச் செல்ல முடிந்தது.

     மனத்திற்கு மகிழ்ச்சி தருவதற்காக இவ் விளையாட்டு அமைக்கப்படுகிறது.

14. மதுக்களி (மது அருந்தி மகிழ்ந்திருத்தல்)

சிலம்பில் வேட்டுவ வரியில் மது அருந்துதல் பற்றிய செய்தி வருகிறது.

மணிமேகலையில் களிமகன் பற்றிய செய்திகள் வருகின்றன.

15. சிறுவரைப் பெற்றெடுத்தல்

     மணிமேகலைக் காப்பியத்தில் இது இடம் பெறவில்லை. பெருங்கதையில் உதயணன் பிறத்தலும், அவன் மகன் பிறத்தலும் சொல்லப்படுகிறது.

     சீவகன் இடுகாட்டில் பிறந்த செய்தியைச் சீவகசிந்தாமணி விளக்குகிறது.

16,17. புலவியிற் புலத்தல், கலவியிற் கலத்தல்

     தலைவியோடு அன்பு கொண்டு உடலாலும் உள்ளத்தாலும் கலத்தலும் பொய்க் கோபம் ஏற்பட்டு வருந்துதலும் சிலம்பு, சீவகசிந்தாமணி, பெருங்கதையில் இடம்     பெற்றுள்ளன. மணிமேகலையில் அவை இடம் பெறவில்லை.

18. மந்திரம், தூது, செலவு, இகல், வென்றி

     ( மந்திரம - அமைச்சர்களுடன்     ஆலோசனை, தூது-சமரசத்திற்கான தொடர்பு, செலவு - மேற்செல்லுதல், இகல்= போர் ; வென்றி - வெல்லுதல்)

     இவை அரசியல்     தொடர்பான மரபுகள். சேரன் செங்குட்டுவன் வடநாடு சென்று கனக விசயரோடு போரிட்டு வென்ற செய்தியைச் சிலம்பு கூறுகிறது.பெருங்கதையே மந்திரம், தூது, செலவு, இகல் வென்றமையை முழுமையாய் விளக்குகிறது.

19. சருக்கம், இலம்பகம் எனும் உட்பிரிவுகள்

     (சருக்கம் - நூலின் உட்பிரிவு, இலம்பகம் - நூலின் பெரும்பிரிவு; அத்தியாயம்)      சிலப்பதிகாரத்தில் மூன்று காண்டங்களைப் பல்வேறு காதைகள் எனும் உட்பிரிவுகளாக இளங்கோ பிரித்துள்ளார்.

     சிலம்பில் மனையறம் படுத்த காதை, அரங்கேற்று காதை, கடலாடு காதை என அமைகிறது. ஆனால் காதை என்ற பெயர் தண்டியலங்காரத்தில் இடம் பெறவில்லை.

     சீவகசிந்தாமணியில் இலம்பகம் எனும்      உட்பிரிவு பயன்படுத்தப்பட்டுள்ளது.(நாமகள் இலம்பகம், காந்தர்வதத்தையார் இலம்பகம், முத்தியிலம்பகம் என 13     இலம்பகங்கள் அமைக்கப்பட்டன.)

20. சுவையும் பாவமும்

     சுவை அதாவது மெய்ப்பாடு எட்டெனத் தொல்காப்பியர் குறிப்பிடுகிறார்.

     (1) நகை
     (2) அழுகை
     (3) இளிவரல் (இழிப்புக் காரணமாகப் பிறப்பது)
     (4) மருட்கை (வியப்பு)
     (5) அச்சம்
     (6) பெருமிதம் (வீரத்தின் காரணமாகப் பிறப்பது)
     (7) வெகுளி
     (8) உவகை (இன்பம் காரணமாகப் பிறப்பது)

எனும் எண்வகை மெய்ப்பாட்டுடன் ஒன்பதாவதாகச் ‘சமநிலை’ என்னும் சாந்தி ரசத்தையும் சேர்த்து வடமொழி இலக்கியங்களில் நவரசம் என்றனர். சுவையை ‘ரசம்’ என்றும் ‘பாவம்’ என்றும் குறிப்பிடுவதுண்டு.இவற்றுள் சிலவற்றை எல்லாக் காப்பியங்களிலும் காண்கிறோம்.