2.3 ஐஞ்சிறு காப்பியம்
பெருங்காப்பியத்திற்கு இலக்கணம்
வகுத்த தண்டியாசிரியர் சிறுகாப்பியத்திற்கும் இலக்கணம் வகுத்துள்ளார். ஆனால்,
சிறு காப்பியம் எனும் சொல்லைப் பயன்படுத்தாமல் காப்பியம் எனும் சொல்லையே
பயன்படுத்துகிறார்
முதன் முதலாக, சி.வை.தாமோதரம்
பிள்ளையே தமது சூளாமணி முகவுரையில் சிறு
காப்பியம் என்ற சொல்லாட்சியைப் பயன்படுத்துகின்றார்.
அவைதாம்,
ஒருதிறப் பாட்டினும் பலதிறப் பாட்டினும்
உரையும் பாடையும் விரவியும் வருமே
- (தண்டியலங்காரம்-11)
(பாடை = பாஷை , மொழி)
பெருங்காப்பியமும்
சிறுகாப்பியமும் ஒருவகைச்
செய்யுளாலும், பலவகைச் செய்யுளாலும் உரை விரவியும் (இணைந்தும்) பிற
மொழி விரவியும் வரும் என்றார் தண்டியாசிரியர்.
· ஐஞ்சிறு காப்பியங்கள்
(1) உதயணகுமார காவியம்
(2) நாககுமார காவியம்
(3) யசோதர காவியம்
(4) நீலகேசி
(5) சூளாமணி
2.3.1
உதயணகுமார காவியம்
பெருங்கதையின் சுருக்க நூல் இது.
கந்தியார் எனும் சமணப் பெண்பால்
துறவியால் இந்நூல்
பாடப்பட்டிருக்கலாம் என்பர்.
ஆறு காண்டங்கள், 367 செய்யுட்கள்
உடையது.
இதன் காலம் கி.பி. 15ஆம் நூற்றாண்டு என்கிறார் முனைவர் இரா.காசிராசன்.
2.3.2
நாககுமார காவியம்
சமண நூல்.ஆசிரியர் பெயர் தெரியவில்லை. மகத நாட்டு
அரசன் நாககுமாரனின் கதையைக் கூறுவதால் இது நாககுமார
காவியமானது. விருத்தப்பாவில் அமைந்த 170 பாடல்களை உடையது. ஐந்து சருக்கங்களைக்
கொண்டது.
இக்காப்பியத்தில் நாககுமாரனின்
பிறப்பு, வளர்ப்பு, அவனுடைய வீரச் செயல்கள்,பஞ்சமி நோன்பின் சிறப்பு,துறவின்
மேன்மை ஆகியன போற்றப்படுகின்றன.
1973இல் சென்னைப் பல்கலைக்கழகம் இந்நூலை
வெளியிட்டது.
மன்னன் சிரோனிகராசனுக்குக்
கௌதம முனிவர் கூறும் பஞ்சமி கதையாக இக்கதை
அமைகின்றது. அம்மன்னன்
அருகக் கடவுளைப் போற்றிப் பாடும் பாடல் உள்ளம் உருக்குவது.
அறிவன் நீ
அமலன் நீ ஆதி நீயே
ஆரியன் நீ சீரியன் நீ அனந்தன் நீயே.
2.3.3
யசோதர காவியம்
உயிர்க்கொலை செய்தல் தீமையென்று விளக்க எழுந்த காப்பியம்
இது. சமணக் காப்பியம்.
ஐந்து சருக்கமும் 320
செய்யுட்களும் பெற்று அமைகிறது.
ஒரு பாடலைக் கொண்டு இந்நூல் ஆசிரியர் வெண்ணாவலுடையார் என்பர்.
· காவியக் கதை
மன்னன்அசோகன்
மகன் யசோதரன், அமிர்தபதி என்ற தன் தேவியுடன் அரியணை ஏறுகிறான். அரசி, யானைப்
பாகனின் பாடலைக் கேட்டு உள்ளம் மயங்கி அவனுடன் கள்ள உறவு கொள்கிறாள். தன்
கணவனையும் மாமியையும் நஞ்சு தந்து கொல்கிறாள்.
· தனித்தன்மை
இசையை இந்நூல் வெறுக்கிறது.
அது கொலைக்கும் காரணமாக அமையும் என்கிறது. சிற்றின்ப இழிவு, தவ மேன்மை ஆகியவற்றை
இந்நூல் விளக்குகிறது.
2.3.4
நீலகேசி
குண்டலகேசிக்கு மறுப்பாக எழுந்த
நூல் இது.யாப்பருங்கல விருத்தி எனும் நூல் இதனை நீலம்
எனக் கூறும்.
ஆசிரியர் பெயர் தெரியவில்லை.10 சருக்கங்களையும்,894 பாடல்களையும் உடைய நூல் இது.
· நீலகேசி - கதைச் சுருக்கம்
பாஞ்சால நாட்டிலுள்ள
பலாலயம் சுடுகாட்டில் காளிக்கு இடப்படும் பலியை முனிச்சந்திரர் எனும்
சமணத் துறவி தடுக்கிறார். காளி பழையனூர் நீலியை
அனுப்பி முனிவரை விரட்டச் சொல்கிறாள். முனிவரை விரட்ட வந்த நீலி வாதத்தில்
முனிவரிடம் தோற்று அவரது மனைவியாகிறாள். வாதத்தில் பலரையும் வென்றுபௌத்தத்
துறவியான குண்டலகேசியையும், புத்தரையும் வாதத்தில் வெல்கிறாள்.
2.3.5
சூளாமணி
சமண
சமயக் காப்பியம். ஆசிரியர் தோலாமொழித் தேவர்.
12 சருக்கங்கள், 2131 பாடல்களை உடையது.
ஸ்ரீபுராணம்
எனும் மகாபுராணத்தைத் தழுவிய கதை இது
என்பர்.
இக்கதை பாகவதத்தை ஒத்துள்ளது
என்பது மு.வ.வின் கருத்து. பலராமனையும் கண்ணனையும் போல இக்கதையில் திவிட்டன்,
விசயன் எனும் இரு மன்னர்கள் வருகின்றனர்.
· தனிச்சிறப்புகள்
மண்ணுலக வேந்தன் திவிட்டன் விண்ணுலக
மங்கை சுயம்பிரபையை மணந்த வரலாற்றை இந்நூல் விளக்குவதால் விண்ணையும் மண்ணையும்
இணைக்கும் நூல் எனப்படுகிறது.
பெருங்காப்பிய இலக்கணம் யாவற்றையும்
பெற்று,இது சிறு காப்பிய வரிசையில் இடம் பெறுவது முரண்பாடே. "நடையழகில்
சிந்தாமணியைவிடச் சூளாமணி உயர்ந்து நிற்கிறது” என்று கி.வா.ஜகந்நாதன் கூறுகிறார்.
|