6.2 ஆற்றுப்படைஇலக்கியங்களின் வளர்ச்சி

    சிற்றிலக்கிய வகைமை வளர்ச்சிக்கான அடித்தளத்தை தொல்காப்பியத்திலிருந்து காணமுடிகிறது.

கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்
ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப்
பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறீஇச்
சென்று பயனெதிரச் சொன்ன பக்கமும்
        - (தொல்காப்பியம் - 1037)

(பெற்ற பெருவளம் = பரிசில் பெற்றவன் தான் பெற்ற செல்வம் பற்றி; பெறாஅர்க்கு அறிவுறீஇ = பெறாதவனுக்குப் பெறும் முறை பற்றி அறிவுரை கூறி)

    கூத்தரும் பாணரும், பொருநரும், விறலியரும் பரிசில் பெற்று வரும்போது எதிரே பெறாதவன் வந்தால் அவனுக்குத் தாம்பெற்ற பெரிய செல்வம் பற்றி அறிவுறுத்தி, சென்று பரிசில் பெற உதவுவர் எனத் தொல்காப்பியம் இலக்கணம் வகுத்தது. இத்துறை பின்னர்ச் சிறப்பாக வளர்ச்சி அடைந்தது.

    சங்க இலக்கியத்தில் புறநானூற்றிலும், பதிற்றுப்பத்திலும் ஆற்றுப்படைத் துறை அமைந்த சிறுசிறு பாடல்கள் இருப்பதைக்  காண முடிகிறது.


    பத்துப் பாட்டு நூல்களுள் ஐந்து நூல்கள் ஆற்றுப்படை  நூல்களாக அமைகின்றன.

(1) திருமுருகாற்றுப் படை
(2) பொருநராற்றுப் படை
(3) சிறுபாணாற்றுப் படை
(4) பெரும்பாணாற்றுப் படை
(5) கூத்தராற்றுப் படை

அகவல் யாப்பில் அமைந்த இச்சிற்றிலக்கிய வகைமை நன்கு  வளர்ச்சியடைந்து இருபதிற்கும் மேற்பட்ட ஆற்றுப்படை  நூல்களாய் மலர்ந்தன.

(1)
தணிகையாற்றுப் படை
- கச்சியப்ப முனிவர்
(2)
புலவராற்றுப் படை
- திருமேனி இரத்தினக்
கவிராயர்
(3)
நெஞ்சாற்றுப் படை
- தொழுவூர் வேலாயுத
முதலியார்
(4)
புலவராற்றுப் படை
- குலாம் காதிறு நாவலர்
(5)
இறையனாற்றுப் படை
- பின்னத்தூர் நாராயணசாமி
ஐயர்

    ஆற்றுப்படை எனும் சிற்றிலக்கிய வளர்ச்சியாக இவற்றைக்
கொள்ளலாம்.

6.2.1 அந்தாதி இலக்கியத்தின் வளர்ச்சி

    ஒரு பாடலின் இறுதியில் உள்ள எழுத்து, அசை, சொல், சீர், அடி இவற்றுள் ஏதேனும் ஒன்று அடுத்த பாடலின்  முதலில் வருமாறு அமைத்துப் பாடுவதை நாம் அந்தாதி  என்கிறோம்.

    யாப்பு அடிப்படையில் அமைந்த திறன் இது.

    பக்தி இலக்கியத்தின் தாக்கமாகச் சிற்றிலக்கியத்தில்  வளர்ச்சி பெற்ற வகைமை இது.

ஈறு முதலாத் தொடுப்பதந் தாதியென்
றோதினர் மாதோ உணர்ந்திசி னோரே
         - (யாப்பருங்கலம்-20)

(ஈறு = இறுதி ; தொடுப்பது = உருவாக்குவது)

· அந்தாதி நூல்கள்

    கி.பி. ஆறாம் நூற்றாண்டில் காரைக்காலம்மையாரின்  அற்புதத் திருவந்தாதி தோன்றியது. அதுவே முதல்  அந்தாதி எனும் சிறப்பினைப் பெறுகிறது.

    பொய்கையாழ்வார்,     பூதத்தாழ்வார், பேயாழ்வார் இயற்றிய முதல் மூன்று திருவந்தாதிகளும் இக்காலம் சார்ந்தே  அமைகின்றன.

    அந்தாதி இலக்கியத்தைப் புகழ் மிக்கதாய் மாற்றிய அந்தாதி அபிராம பட்டர் இயற்றிய அபிராமி அந்தாதி  (கி.பி.18) ஆகும்.

காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதிக்குப் பிறகு,  தமிழில் அந்தாதி இலக்கியம் வளர்ச்சி அடைந்தது.

தெய்வங்களைப் பற்றிய     அந்தாதியும், கோவில்கள்,  திருத்தலங்கள் பற்றிய அந்தாதிகளும் தமிழில் பெருகின. கி.பி.16ஆம் நூற்றாண்டில் வரதுங்கராம பாண்டியன் பாடிய திருக்கருவைப் பதிற்றுப் பத்தந்தாதி, குட்டித் திருவாசகம்   என அழைக்கப் பட்டது.

· சில அந்தாதி வகைகள்

    அந்தாதி இலக்கியம் தோன்றிய பின்னர், அதுவே பல வகைகளாக வளர்ச்சியடைந்தது.

(1) பதிற்றுப் பத்தந்தாதி
(2) யமக அந்தாதி
(3) திரிபந்தாதி
(4) நிரோட்டக அந்தாதி
(5) நூற்றந்தாதி
(6) சிலேடை யந்தாதி

என அந்தாதி வகைகள் சிறப்பாக வளர்ச்சியடைந்தன.

· அபிராமி அந்தாதியின் சிறப்பு

    அபிராம பட்டர் இயற்றிய அபிராமி அந்தாதி  அந்தாதி வகைகளில் ஒளியாகத் திகழ்கிறது.

தனம்தரும் கல்வி தரும்ஒரு நாளும் தளர்வறியா
மனம்தரும் தெய்வ வடிவும் தரும்நெஞ்சில் வஞ்சம்இல்லா
இனம்தரும் நல்லன எல்லாம் தரும்அன்பர் என்பவர்க்கே
கனம்தரும் பூங்குழ லாள்அபி ராமி கடைக்கண்களே.
             - (அபிராமி அந்தாதி)

என்று     பல்வகைப் பேறுகளையும் அன்னை அபிராமியின்  கடைக்கண்கள் தந்தருளும் என்கிறார் அபிராம பட்டர்.

6.2.2 பிள்ளைத் தமிழ் இலக்கிய வகையின் வளர்ச்சி

    தலைவனையோ, கடவுளையோ குழந்தையாகப் பாவித்துக்  கொண்டு, பத்துப் பருவங்களாக அமைத்துப் பாடுவது பிள்ளைத் தமிழ் எனப்பட்டது. ஒரு பருவத்திற்குப் பத்து விருத்தங்களாக நூறு பாடல்கள் பாடப்படும்.

பிள்ளைத் தமிழ் இலக்கியங்கள் பெரும்பாலும் கழிநெடில்  ஆசிரிய விருத்தத்திலேயே அமையும்.


· வகை

    பிள்ளைத் தமிழ் இலக்கியத்தை (1) ஆண்பாற் பிள்ளைத்  தமிழ், (2) பெண்பாற் பிள்ளைத் தமிழ் என இரு வகையாகப்   பகுப்பர்.

ஆண்பால் பிள்ளைத் தமிழின் பருவங்கள்

    
(1)

காப்பு

(2)
செங்கீரை
(3)
தால்
(4)
சப்பாணி
(5)
முத்தம்
(6)
வருகை
(7)
அம்புலி
(8)
சிற்றில்
(9)
சிறுபறை
(10)
சிறுதேர்

பெண்பால் பிள்ளைத் தமிழின் பருவங்கள்

    
(1) காப்பு
(2) செங்கீரை
(3) தால்
(4) சப்பாணி
(5) முத்தம்
(6) வருகை
(7) அம்புலி
(8) கழங்கு
(9) நீராடல்
(10) ஊசல்

    பிள்ளைத் தமிழ் இலக்கியம்     தோன்றுவதற்குத்  தொல்காப்பிய நூற்பாவே அடிப்படை என்பர்.

குழவி மருங்கினும் கிழவ தாகும்
         - (தொல்.பொ-82)

    "குழவிப் பருவத்தும் காமப் பகுதி உரியதாகும்” என  நச்சினார்க்கினியர் அதற்கு உரை எழுதினார்.

· பன்னிரு பாட்டியல் - விளக்கம்

    பன்னிரு பாட்டியல் எனும் நூல் இவ்விலக்கிய  வகையைப் பிள்ளைப் பாட்டு என்ற பெயரால் குறிப்பிடுகிறது.

பிள்ளைப் பாட்டே தெள்ளிதின் கிளப்பின்
மூன்று முதலா மூவேழ் அளவும்
ஆன்ற திங்களின் அறைகுவர் நிலையே - (ப.பா-101)

    மூன்று முதலா மூவேழ் அளவும் = மூன்றாம் மாதம் முதல்  இருபத்தோராம் மாதம் (3x7=21) வரையிலான காலத்தில்பாடுவதே)

    அதாவது மூன்று மாதம் முதல் இருபத்தோரு மாதம்  வரையிலான காலத்தில் உள்ள குழந்தையின் செயல்பாடுகளைப்  பாடுவதையே பிள்ளைப்பாட்டு எனப் பன்னிருபாட்டியல்  விளக்குகிறது.

· பிள்ளைத் தமிழின் வளர்ச்சி நிலை

    வகையை வளர்த்த பெருமை ஆழ்வார்களைச் சாரும். 

    ஆழ்வார்கள், கண்ணனைக் குழந்தைப் பருவத்தானாகப்  பாவித்துப் பாடிய பாடல்களே பிள்ளைத் தமிழின் அழகினைக்  காட்டுகின்றன.

    பெரியாழ்வார் கண்ணனைச் சிறு குழந்தையாய் எண்ணி,  குழவிப் பருவத்தைத் தேன் ஊறும் சொற்களால் குழைத்துத் தம் திருமொழியில் பாடியுள்ள தாலப் பருவம், அம்புலிப்  பருவம், செங்கீரைப் பருவம், சப்பாணிப் பருவம், தளர்நடைப்  பருவம், அச்சோப் பருவம், புறம் புல்கல் பருவம், பூச்சி காட்டல், முலையுண்ணல், காது குத்தல், நீராட்டல், குழல்வாரக்  காக்கையை வா என அழைத்தல், கோல் கொண்டு வா எனல்,  பூச்சூட்டுதல், காப்பிடல் ஆகிய பகுதிகளை அழகான பாசுரங்களில் பாடி மகிழ்கிறார். சிறுமியர் தாம் கட்டிய சிற்றில்  (சிறு+இல்) சிதையாமல் காக்க வேண்டும் எனக் கண்ணனிடம்  வேண்டுவதை நாச்சியார் திருமொழி அழகாகக் காட்டுகிறது.
இவை பிள்ளைத் தமிழ் வகைக்குத் தொடக்கமாய் அமைந்தன  எனலாம். குமரகுருபரர் மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழை  இயற்றினார்.அவர் பாடிய மற்றொரு நூல் முத்துக்குமாரசுவாமி   பிள்ளைத் தமிழ். பகழிக் கூத்தர், சிவஞான முனிவர் முதலிய  பலரும் இவ்வகை நூல்களை இயற்றியிருக்கிறார்கள்.  இக்காலத்திலும்     பிள்ளைத்     தமிழ் நூல்கள் பல வெளிவந்திருக்கின்றன.