4.3 ஓவிய நூல்கள்
 

ஓவியம் பற்றி, தனித்த நிலையில் விளக்கும் முழுமையான பண்டைய ஓவிய நூல்கள் இதுவரை கிடைக்கவில்லை. ஆனால் இலக்கியங்களிலும், கல்வெட்டுக்களிலும் இவை பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன. ஓவிய நூல்கள் வழக்கில் இருந்து, காலப் போக்கில் கலைவரலாற்றாசிரியர் கரங்களில் சிக்காது மறைந்து போயிருக்க வேண்டும்.
 

4.3.1 தமிழக ஓவிய நூல்கள்
 

பழைய இலக்கியங்களின் வாயிலாகவும், கல்வெட்டுகளின் வாயிலாகவும் தமிழகத்தில் ஓவிய நூல்கள் இருந்தமையை அறிய முடிகிறது.
 

ஓவிய நூல்
 

தமிழிலக்கியத்தில் மணிமேகலையில் ஓவிய நூல் பற்றிய குறிப்புக் காணப்படுகிறது. கூத்தாடும் ஆடல் மகளிர் இதனை நன்கு கற்றுத் தேர்ந்திருந்ததாக மணிமேகலை கூறுகிறது. சிலப்பதிகாரத்திற்கு உரையெழுதிய அடியார்க்கு நல்லார் தம் காலத்தில் இருந்த ஓவிய நூல் ஒன்றிலிருந்து மேற்கோள் பாடல் ஒன்றைக் காட்டுகின்றார். இதனால் தமிழ்நாட்டில் தமிழ்மொழியில் செய்யுள் வடிவில் இயற்றப் பட்ட ஓவிய நூல் இருந்தது என்று கூறலாம்.
 

தட்சிண சித்திரம்
 

சித்திரகாரப் புலி என்று பெயர் படைத்த மகேந்திர வர்ம பல்லவன் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் வழக்கில் இருந்த தட்சிண சித்திரம் என்ற நூலுக்கு உரையெழுதியுள்ளான். இதனை மாமண்டூர் குடைவரைக் கோயிலிலுள்ள அவனது கல்வெட்டு தெரிவிக்கிறது. இதனால் தென்னிந்திய. ஓவிய மரபுகளைத் தெரிவிக்கும் ஓவிய நூல்கள் தமிழகத்தில் இருந்துள்ளன எனலாம்.
 

4.3.2 வடமொழி நூல்கள்
 

வடமொழியில் இயற்றப் பட்ட சிற்ப நூல்களிலிருந்து ஓவியம் பற்றிய பல செய்திகளை அறிய முடிகிறது. ஆனால் தனித்த நிலையில் ஓவியம் பற்றித் தெரிவிக்கும் பழமையான ஓவிய நூல்கள் வட இந்தியாவில் இதுவரை கிடைக்கவில்லை. விஷ்ணு தர்மோத்திரம், அபிலாஷ்தார்த்த சிந்தாமணி, சிவ தத்துவ ரத்தினாகரம், சில்ப ரத்தினம், நாரத சில்பம், சரசுவதி சில்பம், பிரஜாபதி சில்பம் முதலியவை சித்திரங்கள் பற்றித் தெரிவிக்கும் நூல்களில் குறிப்பிடத் தக்கவையாகும். இந்நூல்கள் ஓவியத்தின் தன்மை, வகைகள், செயல்முறை, வண்ணங்கள், துணைக் கருவிகள், மூலப் பொருட்கள், நற்பண்புகள், குறைகள், நடைமுறை, திறனாய்வு மரபுகள் பற்றிக் கூறுகின்றன. விஷ்ணு தர்மோத்திரத்திலுள்ள சித்திர சூத்திரம் என்று அழைக்கப்படும் பகுதியே பண்டைய ஓவியக் கலை நுட்பம் பற்றித் தெரிவிக்கும் தலைசிறந்த பகுதியாகும். மேற்கண்ட ஓவியம் பற்றிய நுட்பங்கள் இதில் எடுத்துக் கூறப்பட்டுள்ளன.
 

ஓவிய உறுப்புகள்

ஓவியம் பின்வரும் ஆறு அங்கங்களைக் கொண்டதாக உள்ளது.

1. ரூபபேதம்

உருவ வேறுபாடு

2. பிரமாணம்

அளவுப் பொருத்தம்

3. பாவம்

உணர்ச்சி, சுவை (ரசம்)

4. லாவண்ய யோஜனம்

பளபளப்பு, கவர்ச்சித் தோற்றம்

5. சாதுருச்சியம்

உருவ ஒற்றுமை

6. வர்ணிக்கா பங்கம்

மேடு பள்ளங்கள் காட்டும் வகையில் வண்ணங்கள் கொடுத்தல்

ஓவியத்தைப் பின்வரும் நான்கு பிரிவுகளாக விஷ்ணு தர்மோத்தரம் வகைப்படுத்துகிறது.

1. சத்தியம்

இயற்கைத் தன்மையானது

2. வைணிகம்

இசைத் தன்மை நிறைந்தது

3. மிச்ரம்

கலப்புத் தன்மையுடையது

4. நாகரம்

நாகரிகத் தன்மை மிக்கது

வர்த்தனைகள்

ஓவியத்தை வகைப்படுத்திய பின்னர் படிப்படியாக ஓவியத்தில் நிறம் மாற்றுவதற்கு `வர்த்தனை' என்று பெயரிட்டு அதனைப் பின்வரும் மூன்று வகையாகப் பிரித்துக் கூறுகிறது விஷ்ணு தர்மோத்தரம்.

1. பிந்துஜ வர்த்தனம்

புள்ளிகளால் ஓவியம் தீட்டுவது

2. பத்ரஜ வர்த்தனம்

வளைகோடுகள் இட்டு நிழல் வண்ணம் காட்டுவது

3. ரைகீச வர்த்தனம்

நுண்ணிய கோடுகளால் படிப்படியாக நிறம் மாறுவது

வரையும் முறைக்கு வழிகாட்டி

விஷ்ணு தர்மோத்தரம் சித்திரம் வரைவதற்குப் பல வழிகளைக் கூறுகிறது. ஐவகை ஆணினங்கள் ஐவகைப் பெண்ணினங்கள், உடல்     உறுப்புகளின் அமைப்புகள், ஆபரணங்கள் முதலியவற்றின் அமைப்பு முறை பற்றி எடுத்துச் சொல்கிறது. மேலும் ஓவியம் வரைவதற்குரிய இடத்தை (அடித்தளம்) எவ்வாறு தயாரிப்பது, மூல வண்ணங்கள்,     துணை     வண்ணங்கள்     எவ்வாறு உருவாக்கப்பட வேண்டும். வண்ணங்களை எவ்வாறு பூசுவது போன்ற அரிய செய்திகளைத் தெரிவிக்கிறது.

குறை நிறைகள்

ஓவியம் வரைதல் பற்றிய செயல் முறைகளை எடுத்துக் கூறி ஓர் ஓவியத்திற்குரிய சிறப்பியல்புகளையும் விஷ்ணு தர்மோத்தரம் எடுத்து மொழிகிறது. ஓவியத்தில் ஆழமாகவும் அழுத்தமாகவும் வரைகோடுகள் இருப்பின் அதுவே உயர்ந்த படைப்பாகக் கலைவல்லாரால் கருதப்படும். வேறு சிலர் ஓவியத்தில் வர்த்தனையைச் சிறப்புடையதாகக் கருதுகின்றனர் என்கிறது.

அக்காலத்தில் எளிய முறையில் வரையப்பட்ட முழு உருவங்கள் மற்றும் குறைவான கோடுகளால் வரையப்பட்ட உருவங்கள் சிறந்த     ஓவியங்களாகக் கருதப்பட்டன. ஓவியங்களுக்கு அளவுக்கு மீறி அலங்காரங்கள் செய்வதும் ஆடம்பரமான ஒளிமிக்க வண்ணங்கள் அளிப்பதும் ஓவியத்தின் குறைபாடுகளாகக் கருதப்பட்டன. ஏதாவது ஒன்றின் மிகுதி, அவ்வோவியத்தில் காணப்படும் குற்றமாகக் கருதப்பட்டது.

தொனிப் பொருள்

ஓவியக் கலையின் ஒரு தலையாய பண்பாகத் தொனிப் பொருளையே விஷ்ணு தர்மோத்தரம் வலியுறுத்திக் கூறுகிறது. இதற்கு எடுத்துக் காட்டாகப் பல வகைச் சான்றுகளைக் காட்டுகிறது. பகல் பொழுதைக் குறிக்க மலர்ந்த தாமரைகள், இரவைக் குறிக்கப் பதுங்கிச் செல்லும் திருடர்களின் செயல், குறி இடத்தை நாடிச் செல்லும் மங்கையர் உருவங்கள் ஆகியவை ஓவியத்தில் காட்டப்படும். இதுபோன்ே மாரிக் காலத்தைக் குறிப்பிடக் கார் முகில்கள், வானத்தில் பறக்கும் வெள்ளை நாரைகள்; கோடைக் காலத்தைக் குறிக்க வெப்பத்தால் வாடும் வழிப்போக்கர்கள்; வசந்த காலத்தைக் குறிக்க வாசமிக்க மலர்கள் நிறைந்த பூந்தோட்டங்கள், காடுகள் ஓவியத்தில் காட்டப்பட வேண்டும் என்கிறது இந்நூல். ஓர் ஓவியத்தில் உட்பொருளை முழுவதுமாக அறிந்து கொள்ள இவ்வகை அடையாளங்களை அறிந்து கொள்ள வேண்டுவது அவசியமாகும். இதனைப் பண்டை ஓவியம் பற்றிய இந்நூற்பகுதிகள் நன்கு எடுத்துக் காட்டி ஓவியனுக்கு வழிகாட்டியுள்ளன. இதனால்தான் இந்திய நாட்டில் சிறப்பு மிக்க, வரலாற்றில் அழியாத இடம் பெற்ற ஓவியங்கள் உருவாயின.

அபிலாஷ்தார்த்த சிந்தாமணி

மேலைச் சாளுக்கிய மன்னனால் எழுதப் பெற்ற நூல் இது. நாட்டிய மண்டபத்தைப் பற்றிக் கூறும் பகுதியில் அம்மண்டபத்தை எவ்வாறு ஓவியத்தால் அழகு செய்தனர் என்பதை இந்நூல் விரித்துக் கூறுகிறது. ஓவியம் வரையும் சுவரை உருவாக்குவது, வண்ணங்கள் கலப்பதற்குரிய பசைப் பூச்சு, வண்ணங்களின் விதங்கள், தூரிகைகளின் வேறுபாடுகள், தூரிகை, இலேகினி, வர்த்தகம் முதலிய ஓவியக் கருவிகள் ஆகியவை பற்றி இந்நூல் எடுத்துக் கூறுகிறது. மேலும் ஓவியங்கள் வரைவதும் பலவகை உருவங்களை எழுதுவதும் இவற்றில் ஆராயப் பட்டுள்ளன. இறுதியாக ரசிக சித்திரம். தூளி சித்திரம், பாவ சித்திரம், வியத்த சித்திரம், அவியத்த சித்திரம் முதலிய ஓவியத்தின் பிரிவுகள் இந்நூலில் எடுத்து விளக்கப் பட்டுள்ளன.

சில்ப ரத்தினம்
 

கி.பி.பதினோராம் நூற்றாண்டைச் சார்ந்த ஸ்ரீகுமாரர் எழுதிய நூல் சில்ப ரத்தினம் ஆகும். இதிலுள்ள `சித்திர லட்சணம்' என்ற பகுதி சித்திரம், அர்த்த சித்திரம், சித்திர பாசம் என்று மூன்று வகையாகச் சித்திரங்களைப் பகுத்துக் கூறுகிறது. சித்திரம் உருண்டை வடிவ உருவங்களைக் குறித்தது. அர்த்த சித்திரம் புடைப்பு உருவங்களைக் குறித்தது. சித்திர பாசம் தட்டையான உருவங்களைக் குறித்தது. வண்ணங்களில் வெள்ளை, கறுப்பு, மஞ்சள், சிவப்பு, நீலம் ஆகியவை ஐந்து அடிப்படை வண்ணங்களாக இந்நூலில் குறிப்பிடப் படுகின்றன. இந்நூலில் சித்திரக் கருவிகள், சித்திரங்கள் தீட்டும் முறை பற்றி எடுத்துக் கூறப்பட்டுள்ளது.