5.1 சங்க இலக்கியம்

சங்க காலத்திலேயே ஓவியக் கலை நன்கு வளர்ச்சி அடைந்துள்ளது என்பதற்குச் சங்க நூல்களிலே சான்றுகள் கிடைக்கின்றன.

ஓவம்

ஓவியத்தைக் குறிக்க 'ஓவம்' என்ற சொல் சங்க இலக்கியத்தில் கையாளப் பட்டுள்ளது. அழகிய வீடு, நகர், கட்டடம் ஆகியவை ஓவத்திற்கு ஒப்பிட்டுக் காட்டப் பட்டுள்ளன.

ஓவத் தன்ன வுருகெழு நெடுநகர்

(பதிற்றுப்பத்து.88 : 28)

ஓவத் தன்ன இடனுடை வரைப்பின்

(புறநானூறு. 251 : 1)

ஓவத் தன்ன வினைபுனை நல்லில்

(அகநானூறு. 98 : 11)

ஓவியம் புலப்படுத்தும் கருத்தைக் குறிப்பிடும் போது 'ஓவச் செய்தி' என்று அகநானூறு(5:20) தெரிவிக்கின்றது.

5.1.1 ஓவியர்

ஓவியக் கலைஞர்களைப்     பற்றியும்     அவர்களது அருந்திறன் குறித்தும் நற்றிணை, மதுரைக் காஞ்சி போன்ற சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. நற்றிணைப் பாடல் (118:7) ஒன்று ஓவியரை 'ஓவ மாக்கள்' என்கிறது. மதுரைக் காஞ்சியோ, எக்காட்சியினையும் தமது ஓவியத்திற்குள் கொண்டு வந்து ஒப்பிட்டுக் காட்டுவர்; ஓவியர்கள்,எதனையும்  நுட்பமாக உணர்ந்தவர்கள். ஆழமான நோக்குடையவர் என்று கூறுகிறது. இதனால் அவர்களைக் 'கண்ணுள் வினைஞர்' என்று பெயரிட்டு அழைக்கிறது.
    

எவ்வகைச் செய்தியும் உவமங் காட்டி
நுண்ணிதி னுணர்ந்த நுழைந்த நோக்கிற்
கண்ணுள் வினைஞர்

(மதுரைக் காஞ்சி. 516 - 518)

'கண்ணுள் வினைஞர்' என்ற சொல்லுக்குப் பத்துப்பாட்டு  உரையாசிரியர் நச்சினார்க்கினியர் "நோக்கினார் கண்ணிடத்தே  தம்தொழிலை நிறுத்தலின் கண்ணுள் வினைஞர்" என்று உரை எழுதியுள்ளார். எனவே சிறந்த ஓவியர்கள் என்பவர்கள்  காண்பவர்களின் கண்களில் தாம் வரைந்த காட்சியை நிறுத்தும் திறன் படைத்தவர்கள் என்று அக்காலத்தில் கருதப்பட்டனர்.

துகிலிகை

ஓவியம் வரைவதற்காகப் பயன்படுத்தப் பட்ட தூரிகையை நற்றிணைப் பாடல் ஒன்று 'துகிலிகை' என்று குறிப்பிடுகிறது. மென்மையான தூரிகையைப் பாதிரி மலரோடு ஒப்பிட்டுக்  கூறுகிறது. மேலும் தூரிகைக்குரிய இறகுகளை அரக்கைக் கொண்டு ஒட்டிச் சேர்த்து, சங்க கால ஓவியர்கள் உருவாக்கியுள்ளனர் என்று நற்றிணை கூறுகிறது.

ஓவ மாக்கள் ஒள்ளரக் கூட்டிய
துகிலிகை யன்ன துய்த்தலைப் பாதிரி

(நற்றிணை. 118)

புனையா ஓவியம்

ஓவியத்தில் வரையப்படும் உருவங்களை வண்ணங்களைக் கொண்டு தீட்டும் முன்பாக அவற்றைக் கோடுகளால் ஆன உருவமாக மட்டும் வரைவர். இத்தகைய கோடாக வரையும்  ஓவியங்கள் பற்றிச் சங்க இலக்கியம் குறிப்பிடுகிறது. இதனைப் 'புனையா ஓவியம்' என்று பெயரிட்டு அழைக்கிறது. தலைவனைப் பிரிந்ததால் மிகுந்த ஆடை அலங்காரங்கள்,  புனைவுகள் இல்லாமல் வருத்தத்துடன் எளிமையாகக் காட்சியளித்த தலைமகளை (பாண்டிமாதேவி) நெடுநல்வாடை புனையா ஓவியம் போல இருந்ததாகத் தெரிவிக்கிறது.
    

புனையா ஓவியம் கடுப்பப் புனைவில்

(நெடுநல்வாடை.. 147)

இவ்வடிக்கு     உரையெழுதிய     நச்சினார்க்கினியர் "வண்ணங்களைக் கொண்டெழுதப் படாத ஓவியம்" என்று பொருள் கூறுகின்றார்.
    

சங்க காலத்தில், தன் காதலைத் தலைவி ஏற்றுக் கொள்ளா விட்டால் தலைவன், அவள் உருவத்தைப் புனையா ஓவியமாக எழுதிப் பனை மடலால் செய்யப்பட்ட குதிரையில் அமர்ந்து, ஊருக்குள் வலம் வந்து முறையிடும் வழக்கம் இருந்துள்ளது.

5.1.2 ஓவியம் வரையும் இடங்கள்

சங்க கால மக்கள் அரண்மனை, வீடு, பொது இடங்கள் ஆகியவற்றில் வண்ண ஓவியங்களை வரைந்து வைத்தனர்.  மன்னனது மாளிகையில் அரசன் ஓய்வெடுக்கும் இடம், அந்தப்புரம் போன்ற இடங்களில் ஓவியங்கள் இருந்துள்ளன.
    

சித்திர மாடம்

பாண்டியரின் அரண்மனையில் சித்திரங்கள் நிறைந்த ஒரு தங்குமிடம் இருந்தது. இது சித்திர மாடம் என்று அழைக்கப் பட்டது. பாண்டியன் நன்மாறன் இச்சித்திர மாடத்தில் தங்கியிருந்த     போது உயிர் நீத்ததாகப் புறநானூறு தெரிவிக்கிறது. இதனால் இம்மன்னன் சித்திர மாடத்துத் துஞ்சிய நன்மாறன் என்று அழைக்கப் பட்டான்.

அரண்மனை

மதுரையில் பாண்டியரின் அரண்மனையில் அழகு மிக்க ஓவியங்கள் இருந்ததாக நெடுநல்வாடை கூறுகின்றது. பாண்டியனது அரண்மனையின் அந்தப்புரச் சுவர்கள் செம்பினை உருக்கிச் செய்தது போன்று உறுதியாக இருந்தன. வெள்ளியைப் போன்று வெண்மையான சுதை பூசிய அச்சுவர்கள் மீது மலர்கள் பூத்துக் குலுங்கும் கொடிகள் வண்ண     ஓவியமாக வரையப்பட்டிருந்தன     என்று நெடுநல்வாடை தெரிவிக்கிறது.

வெள்ளி யன்ன விளங்கும் சுதையுரீஇ
மணிகண் டன்ன மாத்திரள் திண்காழ்ச்
செம்பியன் றன்ன செய்வுறு நெடுஞ்சுவர்
உருவப் பல்பூ வொருகொடி வளைஇக்
கருவொடு பெயரிய காண்பின் நல்லில்

(நெடுநல்வாடை. 110 - 114)

பாண்டி மாதேவி அமர்ந்திருந்த அந்தப்புரக் கட்டிலுக்கு மேலே இருந்த விதானச் சுவரில் ஓவியங்கள் வரையப் பெற்றிருந்தன. இவற்றில் மேட இராசி முதலிய இராசிகளின் உருவங்கள் இருந்தன. மேலும் பாண்டியரது குல முதல்வனான சந்திரனோடு அவனது காதல் மனைவி உரோகிணி சேர்ந்திருக்கும் காட்சியும் தீட்டப் பட்டிருந்தது. பாண்டியன் நெடுஞ்செழியனைப் பிரிந்திருந்த     பாண்டி மாதேவி அவ்வோவியத்தைக் கண்டு தானும் உரோகிணியைப் போன்று எப்போதும் கணவனோடு சேர்ந்திருக்க முடியவில்லையே என்று வருத்தங் கொண்டதாக நெடுநல் வாடை கூறுகிறது.

புதுவது இயன்ற மெழுகுசெய் படமிசைத்
திண்நிலை மருப்பின் ஆடுதலை யாக
விண்ணூர்பு திரிதரும் வீங்குசெலல் மண்டிலத்து
முரண்மிகு சிறப்பின் செல்வனோடு நிலைஇய
உரோகிணி நினைவனள் நோக்கி நெடிதுயிரா

(நெடுநல்வாடை. 159 - 163)

சோழர் அரண்மனை

காவிரிப்பூம் பட்டினத்துச் சோழர் அரண்மனையில் வெளிப் புறத்துச் சுவர்களின் மீது ஓவியங்கள் தீட்டப் பட்டிருந்தன. அதன் வழியே சாலையில் சென்ற தேர்களால் சேறும்  தூசியும் எழும்பி அவ்வோவியங்கள் மீது படிந்திருந்தன. இதனால் வெண்மை நிற அரண்மனைச் சுவர்கள் சாம்பலில்  புரண்ட ஆண் யானை போன்று தோன்றியது என்று கடியலூர்  உருத்திரங் கண்ணனாரின் பட்டினப்பாலை தெரிவிக்கிறது.

தேரோடத் துகள்கெழுமி
நீறாடிய களிறுபோல
வேறுபட்ட வினையோவத்து
வெண்கோயில் மாசூட்டும்

(பட்டினப்பாலை. 47 - 50)

எழுத்து நிலை மண்டபம்

மதுரைக்கு அருகிலுள்ள திருப்பரங்குன்றத்தில் ஓவியங்கள் வரையப் பட்ட மண்டபம் ஒன்று இருந்தது. இது எழுத்து நிலை மண்டபம் என்றும் எழுதெழில் அம்பலம் என்றும் அழைக்கப் பட்டதாகப் பரிபாடல்  கூறுகிறது.     முருகனுக்குரிய குன்றத்திலுள்ள இம்மண்டபத்தில், காமன் தனது மெல்லிய மலர்க்கணையைக் கொண்டு அவனது சிறப்பு மிக்க தொழில் நுட்பம் சிறந்து விளங்கும்படி வரைந்தது போன்ற வண்ண ஓவியம் வரையப் பட்டிருந்தது என்று பரிபாடல் தெரிவிக்கிறது.

நின் குன்றத்து
எழுதெழில் அம்பலங் காமவேள் அம்பின்
தொழில் வீற்றிருந்த நகர்    

(பரிபாடல். 18 : 27 - 29)

இரதி, மன்மதனின் உருவங்கள் இம்மண்டபத்தில் வரையப் பட்டிருந்தன. மேலும் கௌதமனின் மனைவி அகலிகை மீது  ஆசை கொண்டு வந்த இந்திரன் பூனை வடிவில் வந்து கௌதமன் வீட்டில் நுழை ந்தது, நிறையழிந்த அகலிகையின் கோலம், வீட்டிற்குத் திரும்பி வந்த கௌதமன், அகலிகை மீது கோபம் கொண்டு அவளைக் கல்லாக்கியது முதலிய காட்சிகள் பரங்குன்றத்து எழுத்து நிலை மண்டபத்து ஓவியத்தில் இடம்  பெற்றிருந்தன. இதனைப் பரங்குன்றத்திற்கு வந்தவர்கள் கண்டு ஆவலுடன் ஒன்றிப் போய் அங்குள்ள காட்சிகளைக் குறித்துப் பேசிக் கொண்டனர் என்று பரிபாடல் கூறுகிறது.
    

இரதி காமன் இவளிவன் எனாஅ
விரகியர் வினவ வினாவிறுப் போரும்
இந்திரன் பூசை இவளக லிகைஇவன்
சென்ற கவுதமன் சினனுறக் கல்லுரு
ஒன்றிய படிவிதென் றுரைசெய் வோரும்
இன்ன பலபல யெழுத்துநிலை மண்டபம்
    

(பரிபாடல். 19 : 48 - 53)