6.4 அவிநய தர்ப்பணம்

    ஆடற்கலை     இலக்கண நூற்களுள் அவிநய தர்ப்பணமும் ஒன்றாகும். இந்நூல் வடமொழியில் நந்திகேசுவரர் எழுதிய அபிநயதர்ப்பணம் என்ற நூலின் மொழிபெயர்ப்பாகும். இதனை மொழி பெயர்த்தவர் வீரராகவையன் ஆவார். இதனை இந்நூலின் பாயிரத்தின் மூலம் அறிய முடிகின்றது.

ஓதிய வடமொ ழிச்சொல் உரைஅபிநய நன்னூலை மேதரு தமிழாற் செய்தான் வீர ராகவையன் தானே

இந்நூல் வடமொழியிலிருந்து ஆங்கிலத்திலும் தெலுங்கிலும் மொழிபெயர்த்து     வெளியிடப்பட்டுள்ளது.     இந்நூலின் கருத்துகளை ஆங்கிலத்தில் சிறீ காவிய கீர்த்த மனோமோகன் கோவி என்பவர் வெளியிட்டுள்ளார். இந்நூலை டாக்டர். உ.வே. சாமிநாதையர் நூல் நிலையம் 1957-இல் வெளியிட்டுள்ளது.

    அவிநயதர்ப்பணம் செய்திகளை 129 பாடல்கள் மூலம் விளக்கியுள்ளது. இந்நூலுக்கு முன்சேர்ப்பு என்ற முறை விளக்கம் தரும் நிலையில் 61 பாடல்களும், பின்சேர்ப்பு என்ற நிலையில் 94 பாடல்களும் அவற்றிற்குரிய உரை விளக்கங்களும் இடம் பெற்றுள்ளன.

    மூலநூலின் வடமொழிச் சுலோகமும் இடம் பெற்றுள்ளது. இந்நூல் செய்திகள் சென்னை கலாசேத்திர நாட்டியக் கலைப் பேராசிரியர் திருமதி. எல்.சாரதா அம்மாள். செயலெட்சுமி அம்மாள் உதவியுடன் வெளியிடப்பட்டுள்ளது. இந்நூல் டெல்லி சங்கீத நாடக அகாடமியின் பொருள் உதவியோடு வெளியிடப்பட்டது.

6.4.1 நூல் அமைப்பு

    நூலின் முன்சேர்ப்பு பகுதியில் மகாபரத சூடாமணி என்ற ஆடல் இலக்கண நூலிலிருந்து 61 பாடல்களும், அவற்றிற்கான உரை விளக்கங்களும் இடம் பெற்றுள்ளன. இதில் திருநடன வணக்கம், நாட்டியத் தோற்றமும் வளர்ச்சியும், சபா மண்டபம் முதலிய செய்திகள், நாட்டியக் கிரமம், நடன பேதங்கள், திரியாங்கம், அவிநயம், தாண்டவம் இலாசியம் பற்றிய எட்டு வகைப் பொருள்களை விளக்கி உரைக்கின்றது.

    நூல் என்ற பகுதியில்

     பாயிரமும்

    1) ஒன்பது வகைச் சிரசுகள்     2) எட்டு திருட்டி பேதங்கள்     3) கண்ட பேதங்கள்     4) ஒற்றைக் கை வகை     5) இரட்டைக் கை வகை     6) தசாவதாரங்கள்     7) தேவர்களுக்குக் கைகள்     8) நான்கு சதிகள்     9) பாந்தவ்யக் கைகள்     10) பொது     11) சுவைகள்

என்ற 11 பகுதிகளும் இடம் பெற்றுள்ளன.