1.1 பல்லவர் காலத்திற்கு முந்திய சிற்பங்கள்

  • இலக்கியச் செய்தி


  • சங்க காலம், சங்கம் மருவிய காலம் ஆகிய காலப் பகுதிகள் பல்லவர் காலத்திற்கு முந்தியவை ஆகும். அக்காலச் சிற்பங்களைக் குறித்து இலக்கியங்கள் வாயிலாகவே அறிய இயலுகிறது.

    1.1.1 சிற்பம்

    காவிரிப்பூம் பட்டினத்தில் இருந்த மாளிகைகளில் சுதைச் சிற்ப உருவங்கள் அமைக்கப்பட்டிருந்தன; இந்திர விழாவிற்கு அங்குக் கூடிய மக்கள் அச்சிற்பங்களைக் கண்டு மகிழ்ந்தனர் என்பதையும் மணிமேகலை எடுத்துரைக்கிறது. (மணிமேகலை 3 : 127-131)

    அக்காலச்     சிற்பக்     கலைஞரைச் சிலப்பதிகாரம் ‘மண்ணீட்டாளர்’ (5 : 30) என்கிறது. சிவபெருமானுக்கும், திருமாலுக்கும், முருகக்     கடவுளுக்கும், கொற்றவைக்கும் கோயில்கள் அமைக்கப்பட்டிருந்தன. அவை சுடுமண் கொண்டு அமைக்கப்பட்டவை. பரிபாடல் மரச் சிற்பங்கள் பற்றிக் கூறுகின்றது. தமிழகத்தில் கொற்கை, அரிக்க மேடு, உறையூர் போன்ற இடங்களில் நிகழ்த்தப்பட்ட அகழ்வு ஆய்வுகளில் அக்காலச் சுடுமண் ஓடுகளும், சிற்பங்களும் கிடைத்துள்ளமை மேற்கண்ட கருத்திற்கு அணி சேர்ப்பதாக அமைகின்றது.