|
6.3 விபுலானந்த
அடிகளார்
தமிழ்த்தாய் ஈன்ற நற்றவப்
புதல்வர்களுள் யாழ்நூல்
கண்ட விபுலானந்த அடிகளாரு ம் ஒருவராவார். பதினான்கு
ஆண்டுகள் மேற்கொண்ட இயலிசை ஆய்வின்
அடிப்படையிலும், சிலப்பதிகாரத்தில் யாழ் பற்றிய குறிப்புகள்
அடிப்படையிலும் யாழ்நூல் என்ற தலைசிறந்த இசைத்
தமிழாய்வு நூலை எழுதியுள்ளார்.
6.3.1
வாழ்வியல்
இலங்கை யாழ்ப்பாணம் மட்டக்களப்புப்
பகுதியில்
உள்ள காரைத் தீவில் சாமித் தம்பியார், கண்ணம்மையாருக்கு
மகனாகப் பிறந்தார். பெற்றோர் இவருக்கு மயில்வாகனன்
என்று பெயரிட்டனர். 1916-இல் மதுரைத் தமிழ்ச் சங்கப்
பண்டிதத் தேர்வினை முடித்தார். 1920-இல் இலண்டன்
பல்கலைக்கழகத்தாரால் நடத்தப் பெற்ற இளம் அறிவியல்
பட்டத் தேர்விலும் வெற்றி பெற்றார். பிறகு கல்லூரித் தலைமை
ஆசிரியர் ஆனார். இராமகிருஷ்ண மடத்தில்
சேர்ந்து 1924-ஆம் ஆண்டு சித்திரைத் திங்கள் பௌர்ணமியன்று
சுவாமி விபுலானந்தர் ஆனார். தமிழறிஞர்கள் இவரை
விபுலானந்த அடிகள் என்று அழைத்தனர். அண்ணாமலைப்
பல்கலைக் கழகத் தமிழ்ப் பேராசிரியராக விளங்கி பின்பு
அப்பணியில் தொடராமல் தமிழிசை ஆய்வில் தோய்ந்து
உழைத்து யாழ் நூல் என்ற அரிய இசைத் தமிழ் நூலை
1947-இல் எழுதி வெளியிட்டார்.
6.3.2
யாழ் நூலமைப்பு
யாழை மீட்டுருவாக்கம் செய்யும்
நிலையில் அடிகளார்
யாழ்நூல் ஆய்வில் ஈடுபட்டார்.
யாழ்நூல் பாயிரவியல், யாழ் உறுப்பியல், இசை
நரம்பியல், பாலைத் திரியியல், பண்ணியல், தேவார
இயல், ஒழிபியல் என்ற ஏழு இயல்களைக் கொண்டு
அமைந்துள்ளது.
இசை நரம்புகளின்
பெயரும் முறையும், இசை நரம்புகளின்
ஓசைகளும் அவைகளுக்குப் பிற்காலத்தார் வழங்கிய பெயர்களும்,
இயற்கையின் இயன்ற இசையும், மெய்ப்பாடுகளும் இணை,
கிளை, பகை, நட்பு என்னும் பொருந்திசை நிலைகள்.
ஆரோசை, அமரோசை, மூவகைத் தானம், தேவபாணி,
பரிபாடல், மிடற்றுப் பாடல், கருவிப் பாடல், பாணர்
வரன்முறை, திணைக் கருப்பொருளாகிய யாழின் பகுதி, யாழ்க் கருவியின் தெய்வ நலம்,
இக்கருவி தமிழ்நாட்டிலிருந்து பிற நாடுகளுக்குப் பரவிய வரன்முறை போன்றன கூறப்பட்டுள்ளன.
யாழ் உறுப்பியல்
என்ற பகுதியில் வில் யாழ்,
பேரியாழ், மகரயாழ், சீறியாழ், செங்கோட்டி யாழ்,சகோட யாழ் ஆகியவற்றின்
உறுப்புகளின் அமைதி பற்றிக் கூறப்பட்டுள்ளது.
வில் வடிவில்
அமைந்த யாழ் வில் யாழாகும். யாழ்
வகைகளில் முதன்மை பெறும் யாழ்கள் நான்காகும்.பேரியாழ், மகர யாழ், சகோட
யாழ், செங்கோட்டி யாழ்
என்பனவாகும். இந்நான்கு வகை தவிர நாரத யாழ்,
கீசக யாழ், தும்புரு யாழ், மருத்துவ யாழ் போன்றனவும்
உள.
யாழ் நூலில்
இசை நரம்பியல், பாலைத் திரியியல்,
பண்ணியல், தேவார இயல், ஒழிபியல் என்ற பகுதிகளில்
இசை இலக்கணங்கள் பற்றிய செய்திகள் உள்ளன; அந்நூல்
இசை இலக்கிய ஆய்வாகவும் அமைந்துள்ளது.
பண்ணியலில் பாலை யாழ்,
குறிஞ்சி யாழ், மருத
யாழ், நெய்தல் யாழ்
என்ற நாற்பெரும் பண்களும்
அகநிலை, புறநிலை, அருகியல், பெருகியல் என்னும்
நால்வகை வேறுபாடுகளினால் ஒவ்வொன்றும் நான்காகி 16
பண்கள் ஆகும் நிலை கூறப்பட்டுள்ளது.
தேவார இயலில் 103 பண்களில்
தேவாரப் பாடலில் காணப்படும் பண்கள், கட்டளை விவரங்களைக்
குறிப்பிட்டுள்ளார்.
பழந்தமிழிசை மரபிற்கும் வடநாட்டிசை
மரபிற்கும்
அமைந்த தொடர்பு நிலையையும் விளக்கியுள்ளார்.
6.3.3
நூல் அரங்கேற்றம்
யாழ் நூல் கரந்தைத் தமிழ்ச்
சங்கத்தின் சார்பில்
திருக்கொள்ளம் புதூர் திருக்கோயிலில் ஜு ன் 5.6.1947இல்
அரங்கேற்றம் செய்யப்பட்டது. அடிகளாரின்
கணக்குப்படி தயாரிக்கப்பட்ட முளரி யாழ், சுருதி வீணை,
பாரிசாத வீணை, சதுர்தண்டிப் பிரகாசிகை
போன்றவற்றை அங்கு பார்வைக்கு வைத்தனர்.
இசைப் பேரறிஞர் க.பொ.சிவானந்தம்,
அடிகளார்
கண்டு உணர்ந்த யாழ்களை மீட்டி இன்னிசை பொழிந்தார்.
|