4.0 பாட முன்னுரை

    இந்தியாவின் செவ்விய ஆடல் வகைகளில் (classical dance forms) ஒன்று பரதநாட்டியம். இக்கலை வடிவம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் உருவாகியது. கூத்து, ஆடல், நாட்டியம், தாசி ஆட்டம், சின்னமேளம், சதிர் எனப் பல பெயர்களில் இக்கலை வடிவம் (art form) அழைக்கப்பட்டது. ஏறக்குறைய கடந்த 70 ஆண்டுகளாக இது ‘பரத நாட்டியம்’ என்று அழைக்கப்படுகிறது.

பரத நாட்டிய     நிகழ்ச்சியில் ஆடலோடு பாடல் இருக்கும். இராகதாளம் இருக்கும். கருவிகளின் பக்க இசை இருக்கும். முக ஒப்பனை, ஆடை அணி அலங்காரங்கள் இருக்கும். ஆதலால், பரதநாட்டியம் பல கலைகளின் சங்கமமாக விளங்கும்.

பரத நாட்டியக் கலையை மேடைக் கலையாக வடிவமைத்தவர்கள் தஞ்சை நால்வர். இவர்கள் காட்டிய வழியில் பரம்பரைக் கலைஞர்கள் இக் கலை வடிவங்களைப் பாதுகாத்தனர். பிற கலை வல்லுநர்களும் கற்று வளப்படுத்தினர்.

இன்று இந்தியாவில் மட்டுமன்றி உலகின் பிற நாடுகளிலும் பரதநாட்டியக்கலை பரவியுள்ளது. நல்ல வரவேற்புப் பெறுகிறது. நாளுக்கு நாள் பிரபலமடைகிறது.