3.6 திவ்வியப்பிரபந்தத்தின் சிறப்புகள்
திவ்வியப் பிரபந்தம் திராவிடவேதம் என்று பாராட்டப்
பெற்றது. வைணவத்தின் அடிப்படைக் கருத்துகளை இது
வழங்கியது. இது சமய நூலானாலும் சமயம் கடந்த ஒரு ஒப்பற்ற
நூல்.
3.6.1 திராவிட வேதம்

ஆழ்வார்கள் ஈரத்தமிழில் பாடிய தெய்வப்பனுவல்கள்
திராவிட வேதம்
என்று சிறப்பிக்கப்படுகின்றன. (ஈரம் = அன்பு)
வடமொழி வேதங்களைக் காட்டிலும் அருளிச் செயல்களுக்குத்
தனி ஏற்றம் உண்டு. ‘வேதங்களினால் கலங்கின ஞானமே
உண்டாகும் என்றும், ஆழ்வார்களின் திவ்வியப் பிரபந்தங்களைக்
கொண்டே அதனைத் தெளிவுபடுத்திக் கொள்ளவேண்டும்
என்றும்’ துணிந்துரைத்தார் வேதாந்ததேசிகர்.

செய்ய தமிழ்மாலைகள் நாம் தெளியஓதித்
தெளியாத மறைநிலங்கள் தெளிகின்றோமே

என்பது அவர் வாக்கு.

‘அல்ப ஞானிகளால் கலங்கின வேதமானது உண்மை
ஞானத்துக்குத் துறையான ஆழ்வார் பக்கலிலே சேர்ந்து
ஆழ்பொருளை அறிவித்தது’ என்றார் அழகிய மணவாளப்
பெருமாள் நாயனார். அவரே, ஆசாரிய ஹிருதயம் என்னும்
நூலில் வேதத்தில் உபநிஷதம் போலத் தமிழ் மறையில்
திருவாய்மொழி
சிறப்புடையது என்றும் குறிப்பிட்டார்.

3.6.2 அடிப்படை நூல்
நாதமுனிகள், ஆளவந்தார், இராமாநுசர் தொடக்கமாகவுள்ள
வைணவப் பெரியோர்கள்     (ஆசார்யர்கள்) திவ்வியப்
பிரபந்தங்களைத் தழுவியே வைணவத்தை வளர்த்தனர். மக்கள்
அனைவர்க்கும் உய்தி அளிக்கும் பிரபத்தி மார்க்கத்தைக்
கற்பிக்கவும், வைணவத்துக்குச் சமயக்கட்டமைப்பை நல்கவும்
அவர்களுக்கு     உதவியவை     ஆழ்வார்     பாசுரங்களே.
ஆசார்யர்களுக்குள்    நடுநாயக ரத்தினமாகப் போற்றப்படும்
இராமாநுசர், ஆழ்வார்களின் பாசுர ஒளியிலேயே வைணவத்தைத்
தனிப்பெரும் சமயமாக - விசிஷ்டாத்வைதமாக நிறுவிக்
காட்டினார். அன்றியும் பின்னாளில் பெரியவாச்சான் பிள்ளை
இயற்றிய பரந்தரஹஸ்யம், பிள்ளைலோகாசாரியர் இயற்றிய
அஷ்டாதசரஹஸ்யம்,
அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்
இயற்றிய ஆசார்யஹிருதயம்     முதலான     தத்துவ
நூல்களுக்கெல்லாம் முதற்காரணமாகவும் அடிப்படையாகவும்
அமைந்தவை ஆழ்வார்களின் பாசுரங்களே. இந்நூல்களுள்
கூறப்பட்டிருப்பவை முற்றும் நாலாயிரத்திவ்வியப் பிரபந்தங்களின்
கருத்துப்பொருளும்     வேதாந்தங்களின்     நுண்பொருளுமே
எனக்கூறுவர் வைணவ அறிஞர்.
3.6.3 ஒப்பற்ற இலக்கியம்
திவ்வியப்பிரபந்தம் சமயச்சார்புடைய நூலாயினும் சமய
எல்லையைத் தாண்டி அது தரும் இலக்கிய இன்பம் வானினும்
உயர்ந்தது எனலாம். எனவே தான் இதன் கவிதைச்சுவையும்
அழகும் நுகர்ந்து நுகர்ந்து இன்புறத்தக்கன
என்றும், தமிழ்
மக்கள் அனைவருக்கும்     பொதுவுடைமையாக இது
கொள்ளுதற்குரிய பெருந்தகுதி     வாய்ந்தது
என்றும்
‘பக்திப்பாடல் என்ற நூல் வகையில் இதனைப் போன்ற
பெருமையுடைய நூல்கள் மிகமிகச் சிலவற்றைத்தான் கருதுதல்
கூடும்’ என்றும் அறிஞர் எஸ்.வையாபுரிப்பிள்ளை போற்றிக்
கூறியுள்ளார்.