எந்த ஒரு சமயமும் தொடக்க காலத்தில் பல பிரிவுகளைக்
கொண்டதாக அமைவது கிடையாது. அந்தச்சமயம் வளர
வளர - அச்சமயத்தைப் பின்பற்றுவோர் அதிக அளவில் பெருகப்
பெருக - அச்சமயத்தில் பல பிரிவுகள் ஏற்படுவது இயல்பாகும்.
இது தவிர்க்க இயலாதது ஆகும். அவ்வகையில் சமண சமயம்
தமிழ்நாட்டில் தழைத்தோங்கிய காலத்தில், அச்சமயம் மூன்று
பெரும் பிரிவுகளாகப் பிரிந்தது. அப்பிரிவுகளாவன:
- சுவேதாம்பர சமணம்
- திகம்பர சமணம்
- ஸ்தானகவாசி சமணம்
3.1.1 சுவேதாம்பர சமணம்
 |
சுவேதாம்பர சமணம் |
சுவேத + அம்பரம். சுவேத என்றால் வெள்ளை. அம்பரம்
என்றால் ஆடை. அதாவது வெள்ளை ஆடை என்பது பொருள்.
சுவேதாம்பர சமண முனிவர்கள் வெண்மை நிற ஆடைகளை
அணிவர். இவர்கள் தங்கள் வழிபாட்டு ஆலயங்களில் உள்ள
தீர்த்தங்கரர் திருவுருவங்களுக்கும் வெண்மை நிற
ஆடைகளையே அணிவிப்பர். இவர்கள் உருவ வழிபாட்டைப்
பின்பற்றுபவர்கள்.
3.1.2 திகம்பர சமணம்
 |
திகம்பர சமணம் |
திக் + அம்பரம். திக் என்றால் திசை. அம்பரம் என்றால்
ஆடை. அதாவது திசைகளை ஆடையாக உடையவர்கள்
என்பது பொருள். திகம்பர சமணர்கள் திசைகளை ஆடையாக
உடுத்தியவர்கள் என்றால் இவர்கள் ஆடைகளே உடுத்த
மாட்டார்கள் என்பது கருத்து. எனவே இவர்கள் தங்கள்
வழிபாட்டுக் கோயில்களில் உள்ள தீர்த்தங்கரர்களின்
திருவுருவங்களுக்கும் ஆடைகளை உடுத்த மாட்டார்கள். இச்
சமயத்தவர் உடை உடுத்தாது அம்மணமாகவே இருப்பர்.
இவர்களின் தீர்த்தங்கரர்களும் அவ்வாறே படைக்கப்பட்டிருப்பர்.
இப்பிரிவினரும் உருவ வழிபாட்டைப் பின்பற்றுபவர்கள்.
3.1.3 ஸ்தானகவாசி சமணம்
இச் சமணப் பிரிவினர் உருவ வழிபாட்டை ஏற்றுக்
கொள்வதில்லை. இவர்கள் தங்களின் கோயில்களில் சமண
சமயத்தின் சாத்திரங்கள் என்று அழைக்கப்படும் ஆகம
நூல்களை வைத்து வழிபடுவர். இவர்களுக்கு அருகக் கடவுளும்
தீர்த்தங்கரர்களும் இந்த ஆகமங்களே ஆகும்.
இம்மூவகைப் பிரிவில் திகம்பர சமணர்கள்தாம் பழங்காலத்
தமிழகத்தில் மிகுதியாக வாழ்ந்தனர். தமிழ்நாட்டில் தற்பொழுது
உள்ள சமணர்களும் இவர்களே. மற்ற இரு சமணப் பிரிவினர்
வட இந்தியாவில் மிகுதியாகக் காணப்படுகின்றனர்.
|