 |
சமணம் |
இறைவனின் திருச் செயல்களைப் பஞ்ச கிருத்தியங்கள்
என்பர். அதாவது, இறைவன் படைத்தல், காத்தல், அழித்தல்,
மறைத்தல், அருளல் ஆகிய ஐந்து செயல்களைச் செய்வதாக,
சைவர் கூறுவர். இறைவனின் இந்த ஐந்தொழில்களைச்
சமணர்களின் தெய்வங்களான தீர்த்தங்கரர்கள் செய்வது இல்லை.
தீர்த்தங்கரர்களை வணங்கி, அவர்கள் வழி நடந்து,
நல்லொழுக்க நெறி நின்று வீடுபேறு அடைவதே சமணர்களின்
தலையாய குறிக்கோளாகும்.
3.4.1 எமனை வென்றது
சிவபெருமான் பல திருவிளையாடல்களைச் செய்ததாகக்
கூறுவர் சைவ சமயத்தினர். அதுபோல, சமணர்களும் சில
திருவிளையாடல்களைக் குறிப்பிடுகின்றனர். அவற்றுள் ஒன்றுதான்
அருகக் கடவுள் எமனை வென்றார் என்று கூறுவது. அருகக்
கடவுள் எமனை வென்றவர் என்பதை,
கன்று காலனைக் கடந்தாய்! காதற் காமனைக் கடிந்தாய்!
தொன்று மூத்தலைத் துறந்தாய்! தோற்ற மாக்கடல் இறந்தாய்
என்று நீலகேசி கூறுகிறது. காலனை (எமனை) அருகன் வென்ற
செய்தி திருக்கலம்பகத்திலும் இடம் பெற்றுள்ளது.
3.4.2 முப்புரம் எரித்தது
முப்புரம் என்பது ஆணவம், கன்மம், மாயை என்ற
மூன்று மலங்கள் (அழுக்கு) ஆகும். இவற்றைச் சிவபெருமான்
அழித்தார் என்று சைவ சமய நூல்கள் கூறுகின்றன. அதுபோல,
அருகக் கடவுளும் முப்புரத்தை எரித்தார் என்று சமண நூல்கள்
கூறுகின்றன. ஆனால் சமணர்கள் குறிக்கும் முப்புரம் என்பது
காமம், வெகுளி, மயக்கம் என்னும் மூன்று குற்றங்கள் ஆகும்.
இதனை,
ஒருமூன்று அவித்தோன் ஓதிய ஞானத்து
இருமொழிக் கல்லதுஎன் செவியகம் திறவா
என்று சிலப்பதிகாரம் கூறுகிறது.
3.4.3 காமனை வென்றது
சிவபெருமானும் அருக தேவரும் காமனை வென்றவர்கள்
என்று சைவர்களும் சமணர்களும் குறிப்பிடுகின்றனர்.
மகர வெல்கொடி மைந்தனைக் காய்ந்தவன்
என்று சிவபெருமான் காமனை வென்ற செய்தியைத்
திருநாவுக்கரசர் குறிப்பிடுகிறார்.
களிசேர் கணையுடைய காமனையும் காய்ந்த
அளிசேர் அறவாழி அண்ணல் இவன் என்ப
என்று அருகக் கடவுள் காமனை வென்ற செய்தி
சீவகசிந்தாமணியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
|