1.3 வரிவடிவம்

    இதுவரை நாம் மொழியை எழுதுவதற்குப் பயன்படுத்தப்
பெறும் எழுத்து முறைகள் பற்றிப் படித்தோம். இனி அந்த
எழுத்து முறையில் பயன்படுத்தப் பெறும் வரிவடிவங்களைப்
பற்றியும் தமிழ் வரிவடிவ வளர்ச்சி பற்றியும் கற்போம்.

• ஒலியும் வடிவமும்

    ஒவ்வொரு மொழிக்கும் உரிய ஒலி வடிவத்தைக் குறிக்கும்
எழுத்து வடிவத்தை வரிவடிவம் என்று அழைக்கின்றோம்.

1.3.1 வரி வடிவ வேறுபாடு்

    ஒரு சில மொழிகளே எழுத்து மொழிகளாகத் திகழ்கின்றன
என்று முன்பு படித்தோம். அந்த ஒரு சில மொழிகளும்
வரிவடிவப் பயன்பாட்டு நிலையில் வேறுபடுகின்றன.

    ஒரு சில மொழிகளுக்குத் தனி வரிவடிவம் உள்ளது.
சான்றாகத் தமிழ்மொழியைக் குறிப்பிடலாம். தமிழ் மொழியை
எழுத இன்று நாம் பயன்படுத்தும் எழுத்து வடிவம்
அம்மொழிக்கே உரியது. வேறு எந்த மொழியும் தமிழ்
வரிவடிவில் எழுதப் பெறுவது இல்லை.

    ஒரு சில மொழிகள் மற்றொரு மொழிக்குரிய எழுத்து
வரிவடிவில் எழுதப் பெறுகின்றன. சான்றாக ஹிந்தி, மராத்தி,
சமஸ்கிருதம், சிந்தி ஆகிய மொழிகளைக் குறிப்பிடலாம்.
இம்மொழிகள் எல்லாம் தேவநாகரி என்னும் வரிவடிவத்தில்
எழுதப் பெற்று வருகின்றன. இது போன்று ரோமன் எழுத்து
வடிவத்தில் ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், டச்சு முதலான
மொழிகள் எழுதப் பெற்று வருகின்றன என்பதை இங்கு
ஒப்பிட்டு நினைத்துப் பார்க்கலாம்.

1.3.2 வரிவடிவ மாற்றம்

    உலக அளவில் பல்வேறு மொழிகளுக்கு உரிய
வரிவடிவங்கள் காலந்தோறும் மாற்றம் பெற்று வந்துள்ளன.
மக்கள் பிற மொழிச் சமூகத்தினருடன் மேற்கொள்ளும்
தொடர்பாலும், எழுதுவதற்குப் பயன்படுத்தும் பொருள்களின்
தன்மையாலும் வரிவடிவ மாற்றம் நிகழ்ந்து விடுகின்றது.

• தொடர்பால் ஏற்படும் மாற்றம்

    தமிழர் வடமொழி பேசுபவர்களுடன் கொண்டிருந்த
தொடர்பால் தமிழகத்தில் புதிய வரிவடிவங்களே தோன்றி
உள்ளன. அவற்றை நாம் கிரந்த எழுத்துகள் என்று
குறிப்பிடுகின்றோம். வடமொழிச் சொற்களைத் தமிழ் மொழிச்
சொற்களுடன் கலந்து எழுதுகையில் வடமொழிச் சொற்களை
எழுதக் கிரந்த எழுத்துகள் உருவாக்கப் பெற்று உள்ளன. ஷ,
ஸ, ஜ போன்றவை கிரந்த எழுத்துகள் ஆகும்.

• பொருளால் ஏற்படும் மாற்றம்

    தமிழ் மொழியை எழுதுவதற்குப் பயன்படுத்திய
பொருள்களின் தன்மைக்கு ஏற்பவும், அம்மொழியின்
வரிவடிவம் பெரிதும் மாற்றம் பெற்றுள்ளது. இதை நாம்
எழுத்துச் சீர்திருத்தம் என்னும் பகுதியில் இப்பாடத்தில் கற்க
உள்ளோம்.

1.3.3 தமிழ் வரிவடிவ வளர்ச்சி

    இன்று நாம் தமிழ் மொழியை எழுதப் பயன்படுத்தி வரும்
வரிவடிவம் அண்மைக் காலத்தில் தோன்றியது ஆகும்.
இவ்வெழுத்து வடிவங்களுள் பெரும்பாலானவை தமிழ் நூல்கள்
அச்சிடப் பெற்ற காலத்தில்தான் வழக்கிற்கு வந்தன. இதற்கு
முன்னர் வழக்கில் இருந்த எழுத்து வடிவங்களை அறிந்து
கொள்ள நடுகற்கள், கல்வெட்டுகள், செப்பேடுகள் ஆகியவை
பயன்படுகின்றன. இவற்றை அடிப்படையாகக் கொண்டு தமிழ்
வரிவடிவம் காலந்தோறும் வளர்ந்து வந்த முறையை அறிஞர்
பட்டியல் இட்டு உள்ளனர். அப்பட்டியலில் ஒவ்வோர்
எழுத்தும் எப்படி மாற்றம் பெற்று இன்றைய நிலையை
அடைந்துள்ளது என்பதைக் காணலாம். அப்பட்டியல் இதோ:

உயிர் எழுத்துகள தமிழி வட்டெழுத் துகள் மெய் எழுத்துகள் தமிழி வட்டெழுத் துகள்