6.2 தனி மனித ஒழுக்கங்கள்
    தனிமனித ஒழுக்கங்கள் சரியாக இருப்பதே
சமுதாயத்தை நல்வழியில் கொண்டு செல்லும். எனவே,
தனிமனித ஒழுக்கத்திற்கு இன்றியமையாமை
கொடுத்துள்ளனர் சங்க காலத்துச் சான்றோர்.
6.2.1 பெரியோர் ஒழுக்கம்
    சான்றோர்கள் எங்ஙனம் வாழ்ந்தார்கள் என்பது
குறிப்பிடத் தக்கது. சான்றோர்கள் எதன் மீதும்
ஆசை கொள்ளமாட்டார்கள். மாறாக உள்ளத்தில் ஆசை
எழுந்தால், அது குறித்து முன்னோர் சொற்களைக்
கருவியாகக் கொண்டு தம்செயல் அறத்திற்கும்
பொருளுக்கும் தவறின்றி இருக்கின்றதா? தம் தகுதிக்கு
அச்செயல் சரியானதுதானா? என்பவற்றை ஆராய்வர்
அதன்பின்புதான் தம் ஆசையை நிறைவேற்ற
முற்படுவர். சான்றோர்களின் - பெரியோர்களின்
இப் பண்பை,

விழையா உள்ளம் விழையும் ஆயினும்
என்றும் கேட்டவை தோட்டியாக மீட்டுஆங்கு
அறனும் பொருளும் வழாமை நாடித்
தன்தகவு உடைமை நோக்கி, மற்றதன்
பின்ஆ கும்மே முன்னியது முடித்தல்
அனைய பெரியோர் ஒழுக்கம்
(286)
(தோட்டி = அங்குசம்; வழாமை = பிழை செய்யாமை)

என்ற பாடற் பகுதி அழகாக விளக்கியுள்ளது.
6.2.2 பிற உயிர்களிடத்து அன்பு
    மக்கள் தங்கள் இன்பத்திற்காக மற்ற
உயிரினங்களுக்கு இடையூறு செய்வதில்லை. ஓர்
ஆடவன் தன் நாட்டிற்குக் கடமையாற்றுவதற்காக
மனைவியைப் பிரிந்து சென்று மீண்டு வருகின்றான்.
வரும்போது, விரைந்து வந்து மனைவியைச் சந்திக்க
வேண்டும் என்று நினைப்பது இயற்கை. அப்போது
வேறு எதுவும் கவனத்திற்கு வாராது. இருப்பினும்
வழியில், சேர்ந்திருக்கும் இணை வண்டுகள் தேரின்
மணி ஓசையால் அஞ்சி விலகிடக்கூடாது என்பதற்காகத்
தேரில் உள்ள மணிகளின் நாவினை ஒலிக்காதவாறு
கட்டுகின்றான் அந்த ஆடவன். இதனை,

நரம்பு ஆர்த்தன்ன, வாங்குவள் பரிய
பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த
தாதுண் பறவை பேதுறல் அஞ்சி
மணிநா ஆர்த்த மாண்வினைத் தேரன்
(4)

என்ற பாடற்பகுதி வெளிப்படுத்துகின்றது.

    ஒரு தலைவன் தன் தேரில் பூட்டிய குதிரையை
அடிக்காமலும் மணி ஓசையால் மான்கள் தம்
சேர்க்கையைவிட்டு அஞ்சி ஓடாமல் இருக்கும்
வகையிலும் தேரைச் செலுத்துமாறு தேர்ப்பாகனிடம்
கேட்டுக்கொள்கிறான். (134)

    இவை அக்கால மக்கள் பிற உயிர்கள் மீது
கொண்டிருந்த பரிவினைக் காட்டுகின்றன.

தன் மதிப்பீடு : வினாக்கள் - I
1

சிலம்புகழி நோன்பு யார்வீட்டில் நடத்தப்பட
வேண்டும்?

விடை
2

மணமக்களை எதைத் தெளித்து வாழ்த்தினர்?

விடை
3

குழந்தை எதுவாகக் கருதப்பட்டது?

விடை