3.0 பாட முன்னுரை

நல்லியக்கோடனிடம் பரிசுப் பொருள்களைப் பெற்று மீண்டு
வருகிறான் ஒரு சிறுபாணன். அம்மன்னனிடம் தான் பெற்ற பரிசுப்
பொருள்களின் மிகுதியை, வறுமையுற்ற பாணனிடம் அவன்
வியப்புடன் கூறுகிறான். அப்பொழுது நல்லியக்கோடனின் வள்ளல்
தன்மை, சேர, சோழ, பாண்டியர் மற்றும் கடையெழு வள்ளல்களின்
வள்ளல் தன்மையை விட மேம்பட்டது என்று ஒப்பிட்டுக் கூறுகிறான்.
சிறுபாணாற்றுப்படையில் 41-113 அடிகளில் இடம் பெற்றுள்ள
இச்செய்திகளை இப்பாடம் விவரிக்கிறது.

மூவேந்தர்களும் சிறுபாணாற்றுப்படையும்

பழங்காலத்தில் தமிழகத்தைச் சேர, சோழ, பாண்டியர் என்னும்
மூவேந்தர்கள் ஆட்சி செய்தனர். இம் மூவேந்தர்களின்
தலைநகர்களாக முறையே வஞ்சியும், உறந்தையும், மதுரையும்
விளங்கின. அவற்றின் சிறப்பை இந்நூல் 41-83 அடிகளில்
சிறப்பித்துக் கூறுகிறது.