| தி.ஜா. படைப்புக்களின்
வெற்றிக்குப் பெரும்பாலும் அவர்
படைக்கும் உயிரோட்டமான
கதை மாந்தர்களே
காரணமாகின்றனர்.
தம் சிறுகதைகளில் எல்லா வகையான கதைமாந்தர்களையும்
தி.ஜா. படைத்துள்ளார். பெருநிலக் கிழார்கள், செல்வர்கள்,
வறியவர்கள், கலைஞர்கள், ஆசிரியர்கள்,
மாணவர்கள்,
சிறுவர்கள், துறவிகள், ஆண்டிகள், பரதேசிகள், தாசிகள் என்று
தொடரும் கதை மாந்தர்களில் புத்தர், கருவூர்த்
தேவன்,
இராவணன் ஆகியோரும் இடம் பெறுகின்றனர்.
அப்பாவித் தனத்தின்
எல்லையிலும், சூழ்ச்சித் திறத்தின்
எல்லையிலுமாக இருவேறு துருவங்களான கதை மாந்தர்களைப்
படைத்துக் காட்டுவது இவர் சிறப்பு. பேராசைக்காரர்களையும்,
பொறாமைக்காரர்களையும் எத்தர்களையும், ஏமாற்றுபவர்களையும்,
வாய்ச்சொல் வீரர்களையும் படம் பிடித்துக் காட்டுவதுபோல்
துல்லியமாகக் காட்டுவது இவர் தனிச்சிறப்பு. உலகில் நாம்
காணும் உண்மை மனிதர்களாகவே அவர்கள் தோன்றுவர்.
இச்சிறப்பினால் இவர் படைக்கும் கதை மாந்தர்கள் பலர் வாசகர்
மனத்தில் பதிந்து விடுகின்றனர்.
இவருடைய பாத்திரப் படைப்பின் வெற்றிக்கு
முதல்
காரணமாக அமைவது கதை மாந்தரைப் பற்றிய
முழு
வர்ணனை. அடுத்ததாக உரையாடல் திறனைக் குறிப்பிடலாம்.
சிறப்பான வெளியீட்டு நெறியாக இவர் உரையாடலைப்
பயன்படுத்துகின்றார். "தி.ஜா. உரையாடல்கள் மூலமே
பாத்திரங்களின் இயல்பையும் ஈடுபாட்டையும், தவிப்பையும்,
விழிப்பையும் சுட்டிக்காட்டுகிறார்" என்கிறார்
க.நா. சுப்பிரமணியம் (நாவல் விமர்சனம், ப.89).
“உரையாடலில் இவர் கையாளும்
மௌன இடைவெளிகள்
இவருக்கு மட்டும் கைவந்த சிறப்பான உத்தி.
மிகவும்
இக்கட்டான சந்தர்ப்பங்களில் குறிப்பிட்ட கதை மாந்தர் என்ன
சொல்லி விடுவாரோ என்று வாசகர் திகிலுடன் எதிர் நோக்கும்
நேரங்களில் அந்த ஆணோ, பெண்ணோ ஒன்றும்
பதில்
சொல்லாமல் இருப்பது மூலமே எவ்வளவோ சொல்லும்
ஜால வித்தை ஜானகிராமனில் தனிப்பட்ட
உத்தியாகப்
பரிணமித்து விடுகிறது” என்கிறார்
சிட்டி (சிட்டி
இலக்கியத் தேடல் - நளபாகம்).
கதை மாந்தரை வர்ணிப்பதற்கு
ஒரு சான்று பாருங்கள்
“பார்த்தால் ‘பாவம்’ என்று இரக்கப்பட
வேண்டும்
போலிருக்கும். அப்படி ஒரு தயவை எழுப்புகிற தோற்றம்.
கட்டை குட்டையான உடல்; சற்று உருண்டையாக,
பூசினாற் போலிருக்கும், உருண்டைத் தலை வழுக்கை. பின்
உச்சியில் பூனை மீசை மாதிரி எண்ணி ஐந்தாறு நரைமயிர்கள்.
கண்ணுக்கு ஒரு வெள்ளி பிரேம் மூக்குக் கண்ணாடி
. . .
எப்போதும். ஒரு மோட்டா அரைக்கைக் காக்கிச்
சட்டை.
நடக்கிறபோது கூடக் குழந்தை நடக்கிற மாதிரி இருக்கும்.
மேலே பார்த்துக்கொண்டு அடிப்பிரதட்சிணம்
செய்வது
மாதிரியான நடை” (கண்டாமணி,யாதும் ஊரே ப.33 ) -நேர்முக
வர்ணனை செய்வது போல் இருக்கிறதல்லவா!
கதை மாந்தர் பண்பினை எளிமையாகவும்,
அழுத்தமாகவும்
பெரும்பாலான சமயங்களில் நகைச் சுவையாகவும் சொல்வது
இவருக்குக் கைவந்த கலை. ஒரு சிறு நிகழ்ச்சியிலேயே கதை
மாந்தர் பண்பை அளவிட்டுச் சொல்லும் ஆற்றலும் இவருக்கு
உண்டு. மனிதாபிமானம் சிறுகதையில்
ஒரு காட்சியைப்
பாருங்கள்!
மனைவிக்கு வாங்கிக் கொடுத்த
கைக்கடிகாரம், வாங்கிய
ஒரு மணி நேரத்தில் ஆட்டோ ரிக்ஷாவில் நழுவி விழுந்து
விட்டது. “கையிலே வாட்ச் இருக்கா பாத்தியானு நீங்களாவது
சொல்ல மாட்டளோ? உங்களுக்கு சங்க ஞாபகம்தான்” என்று
அவருக்குக் குழி வேறு பறித்தாள் அவள். அது அவள் சுபாவம்.
“வாழைப்பழத் தோலில் சறுக்கி அவள் விழுந்தால்
கூடச்
சுற்றி இருப்பவர்கள் தொலியை முன்னாலேயே பார்த்து அவளை
எச்சரித்திருக்க வேண்டும் என்பது அவள்
பார்வை”
(மனிதாபிமானம், ப.3-4). இனி தி.ஜா.படைத்த
விந்தை
மாந்தர்களைப் பார்ப்போமா?
|