|
நண்பர்களே! இந்தப் பாடத்தில் இருந்து என்னென்ன தெரிந்து
கொண்டோம் என்பதை நினைவு படுத்திப் பாருங்கள்.
உலக மொழிகளில் முதன்மை மொழிகளுள் ஒன்றாகக்
கருதப்படும் தமிழ்மொழி 2500 ஆண்டு காலப் பழைய
இலக்கியங்களைக கொண்டது என்பதை நாம் அறிந்து
கொண்டோம். தமிழ் வளர்ப்பதற்குப் பாண்டிய மன்னர்கள்
ஓர் அமைப்பினை ஏற்படுத்தி வைத்திருந்தனர் என்பதையும்,
அவ் அமைப்பிற்குப் பிற்காலத்தில் சங்கம் என்ற பெயர்
வழங்கப்பட்டது என்பதையும் தெரிந்து கொண்டோம்.
அக்காலத்தில் புலவர்கள் பாடிய பாடல்கள் அகப்பாடல்கள்,
புறப்பாடல்கள் என்று பிரித்து அமைக்கப்பட்டன என்பதையும்
புரிந்து கொண்டோம்.
சங்கப் பாடல்கள் எட்டுத்தொகை நூல்கள் என்றும்,
பத்துப்பாட்டு என்றும் பிரிக்கப்பட்டமையை நாம் அறிந்து
கொண்டோம்.
சங்க கால வாழ்வியலையும், சங்க இலக்கிய யாப்பு, சங்க
இலக்கியத்தில் உவமைகள் ஆகியவை பற்றியும் தெரிந்து
கொண்டோம்.
|