இந்தப் பாடல்களுக்கு எல்லாம் மணிமுடியாக விளங்கும் ஒரு
பாணாற்றுப்படைப் பாடலைப் புறநானூற்றில் (180), கோனாட்டு
எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் பாடியுள்ளார்.
ஈர்ந்தூர் கிழான் கோயமான் என்று அழைக்கப்பட்ட தோயன்
மாறன் என்னும் குறுநிலத் தலைவனின் வள்ளல் தன்மை மிக
அழகாகச் சொல்லப்படுகிறது.
“நாள் தோறும் தொடர்ந்து வாரிக் கொடுக்கும் அளவு
பெருஞ்செல்வம் அவனிடம் இல்லை. ஆனால் பரிசில் பெற
வருபவர்க்கு இல்லை என்று சொல்லும் சிறுமையும் அவனிடம்
இல்லை. தன் மன்னனுக்குத் துணையாகப் போர்கள் பல
செய்ததால் இவன் உடம்பை இரும்புக் கருவிகள் சுவைத்தன.
அதனால் ஏற்பட்ட புண்கள் ஆறி விழுப்புண் ஆகிய வடுக்கள்
உடம்பில் மிக உள்ளன. அதனால் மருந்துக்காக வெட்டப்படும்
மூலிகை மரத்தைப் போல் அவ்வுடம்பு வாள் செய்த வடுக்கள்
மிகுந்து அழகின்றிக் காணப்படுகிறது. ஆனால் அவன்
ஆண்மையோ வடு (களங்கம் - குறை) இல்லாதது. அவன்,
கொடை வண்மைக்கு நண்பன், பாணர் பசிக்குப் பகைவன்.
கலையில் முதிர்ச்சிமிக்க பாணனே, உன் வறுமை நீங்க வேண்டும்
என்றால் என்னோடு அவனிடம் வா.
நாம் அவனிடம் இரக்கும் பொழுது, அவன்
வேறொருவனிடம் சென்று இரப்பான். உண்ணாமல் இளைத்த
நம் வயிற்றுப்பகுதியை அவனிடம் காட்டி ஒரு பொருளைக்
கேட்டு இரப்பான். அந்த வேறொருவன் அவனது ஊரைச்சேர்ந்த
வேல் செய்யும் கொல்லன்தான். அவனிடம் என்ன சொல்லி
இரப்பான் தெரியுமா? உடனே ஒரு வேல் வடித்துக் கொடு
என்றுதான்! போர் செய்து பொருள் தேடி வந்து இவர்களின்
வாடிய வயிற்றுக்கு உணவு இட வேண்டும் என்றுதான்!”
(இரத்தல் = பொருள் உதவி கேட்டல்).
அருமையான கொடை வள்ளல்தானே இவன்?
இனிய மாணவர்களே! இப்பாடலில் இருந்து என்ன
உணர்கிறோம்? கொடையாக வழங்கப்படும் பொருளின்
அளவைவிடக் கொடுக்கும் இயல்பாகிய அந்தப்
பண்பைத்தான் புலவர்கள் சிறப்பித்துப் பாடுகிறார்கள் என்பதைப்
புரிந்து கொள்வோம். |