6.3 பதிற்றுப்பத்து

பதிற்றுப்பத்திலிருந்து     முதல் நூற்றாண்டுக் காலத்துச்
சேரவேந்தர்கள் பற்றிய செய்திகளை அறிகிறோம். வரலாறு,
நிலவளம், மன்னர்களைப் பற்றிய செய்திகள், மக்களின்
வாழ்க்கை முறை முதலியவற்றைப் பற்றித் தெரிந்து கொள்ள
இந்நூல் உதவுகிறது. இனி ஒவ்வொரு பத்தாகக் காணலாம்
6.3.1 முதற் பத்து்
    உதியன் சேரலாதனைப் பாடிய பத்துப் பாடல்களும்
கிடைக்கவில்லை. பாடிய புலவர் பெயரும் தெரியவில்லை.
6.3.2 இரண்டாம் பத்து

    உதியன் சேரலாதனுக்கும், வேண்மாள் நல்லினி என்ற
அரசிக்கும் மகனாகப்     பிறந்தவன்     இமயவரம்பன்
நெடுஞ்சேரலாதன். புண்ணுமிழ் குருதி, மறம் வீங்கு
பல்புகழ், பூத்த நெய்தல், சான்றோர் மெய்ம்மறை,
நிரைய வெள்ளம்,     துயிலின் பாயல், வளம்படு
வியன்பணை, கூந்தல் விறலியர், வளன் அறு பைதிரம்,
அட்டு மலர் மார்பன்
என்ற தலைப்புக்களில் குமட்டூர்க்
கண்ணனார் இவனது வரலாற்றைப் பாடியுள்ளார்.

நெடுஞ்சேரலாதன் வடக்கே இமயமலை வரை படையெடுத்துச்
சென்று வென்றவன். அதற்கு அடையாளமாக இமயத்தில்
வில்லைப் பொறித்தவன். தமிழினத்தின் சிறப்பை உலகறியச்
செய்தவன். ஆரியர்களை வென்று தன்னை வணங்கச் செய்தவன்.
கடம்பர்களை வென்றவன். பகைவரோடு வஞ்சனையின்றிப் போர்
செய்தவன். தன் வீரர்களுக்குக் கவசமாகவும் விளங்கியவன்.
பகைவர்கள் புறமுதுகிட்டு ஓடுமாறு போர் செய்தவன்.

போரில் பெற்ற பெருஞ்செல்வங்களைப் படைகளுக்கும்,
குடிமக்களுக்கும் அளித்துள்ளான். தனது உறவினரின் நீண்ட
நாள் பசியைப் போக்க மாமிசம் கலந்த வெண்சோற்றினை
அளித்துள்ளான். இவன் பரிசிலர்க்குத் தெளிந்த கள்ளினையும்,
புதிய ஆடைகளையும்     அணிகலன்களையும் வழங்கிச்
சிறப்பித்ததை,

    மையூன் பெய்த வெண்ணெல் வெண்சோறு
    நனையமை கள்ளின் தேறலொடு மாந்தி
    நீர்ப்படு பருந்தின் இருஞ்சிறகு அன்ன
    நிலந்தின் சிதாஅர் களைந்த பின்றை
    நூலாக் கலிங்கம் வாள் அரைக் கொளீஇ    
                 (பாடல் -2)

(மையூன் = ஆட்டிறைச்சி; கள்ளின்தேறல் = கள்ளின் தெளிவு;
சிதாஅர் = கிழிந்த ஆடை ; நூலாக்கலிங்கம் = நூற்கப்படாத
நூலாலாகிய ஆடை, பட்டாடை)

என்ற பாடல் வரிகள் மூலம் அறியலாம்.

6.3.3 மூன்றாம் பத்து

    இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் தம்பி பல்யானைச்
செல்கெழுகுட்டுவன். இவனது வரலாற்றை அடுநெய் ஆவுதி, கயிறு குறுமுகவை, ததைந்த காஞ்சி, சீர்சால் வெள்ளி,
கான் உணங்கு கடுநெறி, காடுறு கடுநெறி, தொடர்ந்த குவளை, உருத்துவரு மவிர் நிறை, வெண்கை மகளிர்,
புகன்ற ஆயம்
என்ற தலைப்புக்களில் இந்த மூன்றாம்
பத்துச் சிறப்பிக்கிறது. இம்மூன்றாம் பத்தின் ஆசிரியர்
பாலைக் கௌதமனார்.

    குட்டுவன் குட்ட நாட்டிற்கு உரியவன். இவன் உம்பcc
காட்டில் ஆட்சி செலுத்தினான். தன் அறிவு ஒத்த முதியவரின்
வழிகாட்டுதலின்படி ஆட்சி செய்தான். தன் நாட்டில் உள்ள
நிலத்தின் எல்லையை அவரவருக்கு உரியவாறு வகுத்து
ஒழுங்கு செய்தான். இவனது நாட்டில் வேள்வித் தீயின்
புகையையும், தம்மை நாடி வருபவர் அளவில்லாது உண்ணச்
சமைக்கும் நெய் மணத்தையும் கடவுளரும் விரும்புவர்.

இதனை,

ஊனத்து அழித்த வால்நிணக் கொழுங்குறை
குய்இடு தோறும் ஆனாது ஆர்ப்ப
கடல்ஒலி கொண்டு செழுநகர் வரைப்பின்
நடுவண் எழுந்த அடுநெய் ஆவுதி
இரண்டுடன் கமழும் நாற்றமொடு வானத்து
நிலைபெறு கடவுளும் விழைதகப் பேணி    (பாடல்-1)

என்ற பாடல் அடிகள் படம் பிடித்துக் காட்டுகின்றன.

    அகப்பா என்பது பகைவரின் கோட்டை. அக்கோட்டை
மிகுந்த காவலை உடையது. அது உம்பற் காட்டுப் பகுதியில்
இருந்தது. குட்டுவன் அதனைத் தன் படை வலிமையால்
பகைவர்களை அழித்து வெற்றி பெற்றான். இந்த வெற்றிச்
சிறப்பினை

அண்ணலம் பெருங் கோட்டகப்பா எறிந்த
பொன்புனை உழிஞை வெல்போர்க் குட்டுவ (பாடல் -2)

என்ற பாடல் அடிகள் தெரிவிக்கின்றன.

     நாடு வறட்சியால் வாடிய போதும், தன்னை நாடி வரும்
பாணர், கூத்தர் முதலான பரிசிலருக்கு அவர்கள் உள்ளம்
மகிழப் பசியை நீக்கி, பொன்னாலான அணிகலன்களை
வழங்கினான் என்று பல்யானைச் செல்கெழு குட்டுவனின்
கொடைத் திறத்தை இப்பத்து விவரிக்கிறது.

     நிலம், நீர், காற்று, தீ, வான் என்ற ஐந்தையும் அளந்து
முடிவு கண்டாலும் குட்டுவனின் அறிவாற்றலை அறிய முடியாது
எனக் கீழ்வரும் பாடல் அடிகள் விளக்குகின்றன.

    நீர்நிலம் தீவளி விசும்போ டைந்தும்
அளந்துகடை யறியினும் அளப்பருங் குரையைநின்
வளம் வீங்கு பெருக்கம் இனிதுகண் டிகுமே                 (பாடல்-4)

6.3.4 நான்காம் பத்து

     நான்காம்     பத்தின் ஆசிரியர் காப்பியாற்றுக்
காப்பியனார். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனும், வளோவிக்
கோமான்     பதுமனின் மகள் பதுமன் தேவியும்
பெற்றெடுத்த மகனாவான் களங்காய்க் கண்ணி நார் முடிச்சேரல்.
அவன் புகழை, கமழ்குரல் துழாய், கழையமல் கழனி,
வரம்பில்வெள்ளம், ஒண்பொறிக் கழற்கால், மெய்யாடு
பறந்தலை, வாள்மயங்கு கடுந்தார், வலம்படுவென்றி,
பரிசிலர் வெறுக்கை, ஏவல் வியன் பணை, நாடுகாண் அவிர்
சுடர்
எனும் பத்துத் தலைப்புகளில் பாடுகிறார்.

    இம்மன்னன் தன் தோற்றத்தாலே பகைவர்களை நடுங்கச்
செய்துள்ளான். பூழி நாட்டை வெற்றி கண்டான். பெருவாயில்
என்னும் இடத்தில் இருந்த நன்னனின் போர் ஆற்றலை
முழுமையும் அழித்தான். இவன் மிகுந்த செல்வத்தை உடையவன். வறுமையில் தாழ்ந்த குடியை உயர்ந்த நிலைக்குக் கொண்டு
வந்தான். பகைவர்களை அழித்தான். உயர்ந்த சான்றோர்களிடம் பணிவுடையவன். ஐம்புலன்களையும் அடக்கி ஆள்பவன்
என்பதை

    பகைவர் ஆரப் பழங்கண் அருளி
    நகைவர் ஆர நன்கலம் சிதறி
    ஆன்றவிந்து அடங்கிய செய்தீர் செம்மால்                     (பாடல்-7)

(ஆர = நிறைய; பழங்கண் = துன்பம்)

என்ற பாடல் அடிகள் மூலம் நாம் அறியலாம்.

     தன்னை நாடிவரும் பரிசிலரை மகிழ்ச்சியுடன் கள்ளைக்
குடிக்க வைத்துத் தானும் உண்டு, இரவலர்களை வேற்றிடம்
செல்லாமல் காப்பான். அவர்களைத் தன்னிடமே தங்க வைத்துக்
கொள்வான்.

6.3.5 ஐந்தாம் பத்து

     ஐந்தாம் பத்தைப் பாடியவர் பரணர் இமயவரம்பன்
நெடுஞ்சேரலாதனுக்கும் சோழன் மகள் மணக்கிள்ளிக்கும்
மகனாகப் பிறந்தவன் செங்குட்டுவன். சுடர்வீ வேங்கை,
தசும்பு துளங்கு இருக்கை, ஏறா ஏணி, நோய்தபு
நோன்தொடை, ஊன்துவை அடிசில், கரைவாய்ப் பருதி,
நன்னுதல் விறலியர், பேரெழில் வாழ்க்கை, செங்கை மறவர்,
வெருவரு புனல்தார்
என்ற தலைப்பில் அமைந்த
ஐந்தாம் பத்து சேரன் செங்குட்டுவன் வரலாற்றை அறியத் துணை
புரியும்.

     இவன் தன்னைப் பகைத்தவர் அழியவும், நட்புடையவர்
ஆக்கம் பெறவும் துணை புரிவான். பகைவர் வலிமை கெட
வஞ்சியாமல் எதிர் நின்று போர் செய்பவன்.

     இவனது ஆட்சி எல்லையாக வடக்கே இமயமும்,
தெற்கே குமரியும் இருந்தன. இவன் போர் செய்வதையே
தொழிலாக உடையவன். இதனை,

    போரடு தானைப் பொலந்தார் குட்டுவ (பாடல்-3)

(தானை = சேனை)

எனப் பரணர் பாடியதில் இருந்து அறியலாம்.

வறுமையால் தன்னை நாடி வந்த வறியவர்கள் உண்பவற்றை
மறைக்காது உண்ணச் செய்தான். அவர்களோடு அமர்ந்து தானும்
உண்டான். பாணர், கூத்தர் முதலியோர் மகிழப் பொன்னணிகள் தந்தான்.

விறலியருக்குப் பெண் யானையையும், வீரர்களுக்கு
ஆண் யானைகளையும், பாணர்களுக்குக் குதிரையினையும்
பரிசாகக் கொடுத்தான். இதனை

    பாடு விறலியர் பல்பிடி பெறுக!
    துய்வீ வாகை, நுண்கொடி உழிஞை
    வென்றி மேவல், உருகெழு சிறப்பின்
    கொண்டி மள்ளர் கொல்களிறு பெறுக!
    மன்றம் படர்ந்து, மறுகுசிறைப் புக்கு
    கண்டி நுண்கோல் கொண்டுகளம் வாழ்த்தும்
    அகவலன் பெறுக மாவே!
                (பாடல்-3)

(உருகெழு = அச்சம் தரும்; மள்ளர் = வீரர்; அகவலன் = பகைவன்)

என்று பாடுகின்றார்.

செங்குட்டுவன் பகைவரும் வியந்து பாராட்டும் கெடாத கல்வி
அறிவும், ஒழுக்கமும் உடையவன் என்பதை,

     இகல்வினை மேவலை ஆகலின் பகைவரும்
தாங்காது புகழ்ந்த தூங்குகொளை முழவின்
தொலையாக் கற்ப
                 (பாடல்-3)

(தாங்காது = வியப்புத் தாளாது; தூங்குகொளை = தூங்கலோசை
கொண்ட; தொலையாக் கற்ப = கெடாத அறிவுடையவனே)
என்ற அடிகள் விளக்குகின்றன.

பல போர்களைச் செய்து பெற்ற பொருள்கள் அரியவை
என்று எண்ணாமல், தனக்காகப் பாதுகாக்காமல், மறந்தும்
கனவில்கூடப் பிறர் உதவியை வேண்டாமல் வாழ்ந்தவன்
செங்குட்டுவன். இதனை,

    நிலம்புடைப்பு அன்னஆர்ப்பொடு விசும்பு துடையூ
    வான்தோய் வெல்கொடி தேர்மிசை நுடங்கப்
    பெரிய ஆயினும் அமர்கடந்து பெற்ற
    அரிய என்னாது ஓம்பாது வீசி
    கலம்செலச் சுரத்தல் அல்லது கனவினும்
    களைகஎன அறியாக் கசடுஇல் நெஞ்சத்து
    ஆடுநடை அண்ணல்         (பாடல்-4)

(புடைப்பு = இடிப்பது; விசும்பு துடையூ = வானத்தைத் தடவி;
கலம்செலச் சுரத்தல் = அணிகலன் வழங்குதல்; கசடு = குற்றம்;
ஆடுநடை = பெருமித நடை)

என்ற பாடல் அடிகளால்     பரணர் செங்குட்டுவனை
வாழ்த்துவதிலிருந்து அறியலாம்.

செங்குட்டுவன் தனது நண்பன் அறுகை என்பானின் பகைவன்
மோகூர் மன்னன் மீது படையெடுத்து வெற்றி பெற்றான்.
நண்பனின் பழிச் சொல்லைப் போக்கினான்.

தன் வெற்றிக்குத் துணையான வீரர்களுக்குச் சோறு வேறு,
தனக்கு வேறு சோறு எனப் பிரித்துக் காணப்படாத வண்ணம் உணவளித்தான்.

     பகைவரை அழித்த உன்போன்ற வேந்தரும் இல்லை,
உனக்கு ஒப்பாரும் இல்லை என்று பரணர் செங்குட்டுவனைப் புகழ்கின்றார்.

     நண்பர்க்கும், மகளிர்க்கும் வணங்கிய மென்மையினையும்,
பகைவர்க்கு வணங்காத ஆண்மையினையும் உடையவன்
செங்குட்டுவன் என்பதை,

     கைவல் இளையர் நேர்கை நிரப்ப
வணங்கிய சாயல் வணங்கா ஆண்மை (பாடல்-8)

என்ற அடிகள் விவரிக்கின்றன. இது போன்ற அரிய செய்திகளை
இப்பத்தின் வழி அறியலாம்.

6.3.6 ஆறாம் பத்து

    குட நாட்டிற்கு உரிய மன்னன் சேரலாதன், அவனுக்கும
வளோவிக் கோமானின் மகளான தேவிக்கும் மகனாகப்
பிறந்தவன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்.தண்டகாரணியத்தில் ஆரியர் திருடிப் போன மலையாடுகளை மீட்டு, தன் நகரான தொண்டிக்குக் கொண்டு வந்தான். இதன் காரணத்தால் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் எனப் பெயர் பெற்றான்.
வானவரம்பன் என்பது இவனது இயற்பெயர். இவனது
வரலாற்றுச் சிறப்புகளை வடுஅடு நுண்அயிர், சிறுசெங்குவளை,
குண்டு கண் அகழி, நில்லாத் தானை, துஞ்சும் பந்தர்,
வேந்து மெய்ம் மறந்த வாழ்ச்சி, சில்வளை விறலி,
ஏவிளங்குதடக்கை, மாகூர் திங்கள், மரம்படு தீங்கனி

ஆகிய தலைப்புக்களில் ஆறாம் பத்து எடுத்துரைக்கிறது.
இப்பத்தினைக் காக்கைபாடினியார் நச்செள்ளையார் பாடியுள்ளார்.

இப்பத்தின் வழி அறியலாகும் செய்திகள்:

ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் மழவரைப் போரில்
வென்றான். குழந்தையைக் காக்கும் தாயைப் போலத் தன்
மக்களைப் பாதுகாத்தான். அறத்தையே விரும்பும் குணத்தை உடையவனாக விளங்கினான்.

    இவன் அவையில் குமரி முதல் இமயம் வரையிலும் உள்ள
அனைத்து அரசரும் கூடியிருப்பர். அவையில் சான்றோர்களும்
நிறைந்து இருப்பர். அனைவரும் கூடியிருந்த ஒரு நேரத்தில்
பாணர், விறலியரின் ஆட்டமும்     பாட்டும்     கேட்டு
மகிழ்ந்திருந்தான். அதனைக்     கண்ட     இவனுடைய
பகைவர்கள் சிற்றின்பத்தில் மூழ்கி நிற்கும் எளியவன் என
இவனை நினைத்தனர். ஆனால் இவன் கொடிய நஞ்சினை
உடைய மலைவாழ் பாம்புகளை அஞ்சிடச் செய்யும் மேகத்தின்
இடி முழக்கத்தை ஒத்தவன் என்பதை அறியார். அவனுடைய
வீரர்கள் பகைவர்களை ஒரே வீச்சில் அழிக்கும் வெற்றி வீரர்கள்.
கூற்றுவனின் பகையை ஒத்தவன் சேரலாதன். இதனைக் காக்கைபாடினியார்

    வாள்நகை இலங்கு எயிற்று
    அமிழ்துபொதி துவர்வாய் அசைநடை விறலியர்
    பாடல் சான்று நீடினை உறைதலின்
    வெள்வேல் அண்ணல் மெல்லியன் போன்ம்என
    உள்ளுவர் கொல்லோநின் உணரா தோரே?
                (பாடல் - 1)

(விறலியர் பாடல் சான்று நீடினை உறைதலின் = விறலியர்
பாட்டைப்     பெரிதும்     விரும்பியிருத்தலாலே;
மெல்லியல் போன்ம்
= சிற்றின்பத்தில் ஈடுபட்டவன் போலும்;
உணராதோர்
= இயல்பை உணராதவர்கள்)

போர் செய்யும் ஆவலால் வந்த பகைவரை வஞ்சியாது போர்
செய்து அழித்த மேம்பட்ட கை சேரலாதனது கை என்பதை,

நல்லமர்க் கடந்தநின் செல்லுறழ் தடக்கை
இரப்போர்க்குக் கவிதல் அல்லதை இரைஇய
மலர்புஅறியா எனக் கேட்டிகும்                      (பாடல்-2)

(செல்உறழ் = இடிபோன்ற; கவிதல் = கொடுப்பதற்காகக்
குவிதல்; அல்லதை = தவிர; இரைஇய = பிறரிடம் இரக்க;
மலர்பு
= விரிதல்)

என்ற பாடல் அடிகளால் அறியலாம்.

வறியவர் தன் நாட்டில் இல்லாததால், பிறருக்கு உதவி செய்து
மகிழ்கின்ற இன்பத்தை எண்ணி, பிற நாடுகளில் இருந்து வரும்
வறியவரைத் தேரில் ஏற்றி வந்து உணவை மிகுதியாக உண்ணக்
கொடுக்கும் புகழை உடையவன் சேரலாதன் என்பதை

குடவர் கோவே கொடித்தேர் அண்ணல்
வாரார் ஆயினும் இரவலர் வேண்டித்
தேரில் தந்தவர்க்கு ஆர்பதம் நல்கும்
நகைசொல் வாய்மொழி இசைசால் தோன்றல்
                 - (பாடல்-5)

என்ற பாடல் அடிகள் கூறுகின்றன. சேரலாதன் பகைவர்க்கு
அஞ்சாதவனாய் இருப்பினும் தன் தலைவியின் ஊடலுக்கு
அஞ்சுபவன்; அதைவிட இரவலரின் இரக்கம் மிகுந்த பார்வைக்கு
இளகுபவன் என்பதை,

நுண்ணுதல் மகளிர் துனித்த கண்ணினும்
இரவலர் புன்கண் அஞ்சும்
                - (பாடல்-7)

என்ற அடிகளின் மூலம் அறியலாம்.

6.3.7 ஏழாம் பத்து

    சேரலாதன் அந்துவஞ்சேரல், நுட்பமான கேள்வி ஞானம்
உடையவன். அவனுக்குப் பொறையன் தேவி என்பவள் பெற்றுத்
தந்த மகன் செல்வக் கடுங்கோ வாழியாதன். இவனுடைய
வரலாற்றை, புலாஅம் பாசறை, வரைபோல் இஞ்சி, அருவி
ஆம்பல், உரைசால் வேள்வி, நாள்மகிழ் இருக்கை,
புதல்சூழ் பறவை,வெண் போழ்க் கண்ணி, ஏம வாழ்க்கை,
மண்கெழு ஞாலம்,பறைக் குரல் அருவி
என்ற தலைப்பிலான பாடல்கள் மூலம் ஏழாம் பத்து விவரிக்கிறது. இப்பத்தைப்
பாடியவர் கபிலர்.

செல்வக் கடுங்கோ வாழியாதன் தன் நாட்டில் பல வளங்களை
ஏற்படுத்தியவன். தன் பகைவரைத் தோற்று ஓடும்படி செய்தவன்.
பல போர்களைச் செய்தவன். வேள்விகள் செய்தவன்.

இவன் வறியவர்களுக்குப் பொருள் கொடுத்து உதவுவதால் செலவு
குறித்து வருந்தமாட்டான். தொடர்ந்து உதவுவதால் உண்டாகும்
புகழை நினைத்து மகிழவும் மாட்டான் என்பதை,

ஈத்த திரங்கான், ஈத்தொறு மகிழான்
ஈத்தொறு மாவள் ளியன்என நுவலுநின்
நல்லிசை தரவந் திசினே         (பாடல்-1)

(வள்ளியன் = வள்ளல்; நல்லிசை = புகழ்; வந்திசின் = வந்தேன்)

என்ற பாடல் அடிகள் விளக்குகின்றன. இது போன்ற அரிய
செய்திகளின்வழி,     கடுங்கோவின் வீரம், கொடை பற்றி
அறியலாம்.

6.3.8 எட்டாம் பத்து

    செல்வக்கடுங்கோ வாழியாதன் என்பவனுக்கும் வளோவிக்
கோமான் பதுமனின் மகளுக்கும் மகவாகப் பிறந்தவன்
பெருஞ்சேரல் இரும்பொறை. இவனது வரலாற்றை இந்த
எட்டாம் பத்து விளக்குகின்றது.

இப்பத்தில் இடம் பெற்றுள்ள பாடல்களின் தலைப்புகள்
குறுந்தாள் ஞாயில், உருத்து எழு வெள்ளம், நிறம் திகழ்
பாசிழை, நலம் பெறு திருமணி, தீம் சேற்று யாணர்,
மா சிதறு இருக்கை,     வென்றாடு துணங்கை,
பிறழ நோக்கு இயவர், நிறம்படு குருதி, புண்ணுடை
எறுழ்த் தோள்
என்பன. இதனைப் பாடியவர் அரிசில்கிழார்.

    சோழர்களையும் பாண்டியர்களையும் ஒரே போரில்
வென்றவன் இச் சேரன். அம்மன்னர்களின் முரசுகள், குடைகள்,
அணிகள் ஆகியவற்றைக் கவர்ந்தவன். வேள்வி பல செய்தவன்.

இவனது நாட்டில் வளம் சிறந்து காணப்பட்டது. இவன்
பகைவரோடு அஞ்சாது போர் செய்தவன். போரில் சுடுவதற்காக
உண்டாக்கிய தீயானது பகைவரின் ஊர்களைக் கவர்ந்து
உண்ணுதலால் சுடு நாற்றம் நாறும். புகை மிகுதியாகத் தோன்றி
நான்கு திசைகளிலும் மறைக்கும். யானைகளையும் அரிய அணிகலன்களையும் இவனுக்கு     வரியாகக் கொடுக்காத
பகைவர்கள் உடல் நடுக்கம் மிக இவனைத் தெய்வம் என
வணங்கி நிற்பர்.

    இவன் வேள்வி செய்வதற்குரிய வேதங்களை முறையாகக் கற்றவன். அவற்றிற்குரிய கடமைகளையும் குறைவின்றிச்
செய்தவன் என்பதை,

கேள்வி கேட்டுப் படிவம் ஒடியாது
வேள்வி வேட்டனை     - (பாடல்-4)

(கேள்வி = மறைப்பொருள் ; படிவம் ஒடியாது = விரதம்
கெடாமல்; வேள்வி வேட்டனை = வேள்வி செய்தாய்)

என்று குறிப்பிடுகின்றார் அரிசில்கிழார்.

    செல்வமும், குண அமைதியும், மகப்பேறும், தெய்வ
உணர்வும், பிறவும் முன்செய்தவம் உடையவர்க்கே கிடைக்கும் என்பதை, வேதம் கற்ற புரோகிதனுக்கு, உணர்த்தி அவனைக் காட்டுக்குத் தவம் செய்ய அனுப்பினான். இதனை,

    வண்மையும் மாண்பும் வளனும் எச்சமும்
    தெய்வமும் யாவதும் தவமுடையோர்க்குஎன
    வேறுபடு நனந்தலைப் பெயர     - (பாடல்- 4)

(நனந்தலை = விரிந்த இடம்)

என்ற பாடல் அடிகள் விளக்குகின்றன.

பகைவர்களை முழுவதுமாக ஒழித்தவன். பகை மன்னர்களின்
வீரர்கள் அழியவும் பகை மன்னர்கள் இறந்துபடவும் செய்தவன்.
இவனுடைய குதிரைப் படைகளையும், காலாட் படைகளையும்
எண்ண முடியாது என்பதை,

பண்ணமை தேரும் மாவும் மாக்களும்
எண்ணற்கு அருமையன் எண்ணின்றோ இலனே
             - (பாடல் - 7)

என வியந்து பேசுகிறார் புலவர். இவன் தகடூர்க் கோட்டையை
அழித்தவன் என்பதை,

வில்பயில் இறும்பில் தகடூர் நூறி - (பாடல் - 8)

என்ற அடி குறிப்பிடுகின்றது.

6.3.9 ஒன்பதாம் பத்து

    குட்ட நாட்டுக் குடியினனான இரும்பொறைக்கும் மையூர்
கிழான் மகள் அந்துவஞ்செள்ளைக்கும் மகனாகப் பிறந்தவன் இளஞ்சேரல் இரும்பொறை. இவனது வரலாற்றை நிழல்விடு
கட்டி, வினைநவில்யானை, பல்தோல் தொழுதி, தொழில்
நவில் யானை, நாடுகாண் நெடுவரை, வெந்திறல் தடக்கை,
வெண்தலைச் செம்புனல், கல்கால் கவணை, துவராக்
கூந்தல், வலிகெழு தடக்கை
என்ற தலைப்புகளில் இப்பத்துப் பாடல்கள் விவரிக்கின்றன.

இப்பத்துப் பாடல்களை எழுதியவர் பெருங்குன்றூர் கிழார்.

இரும்பொறை பொன்னாலான தேரை உடையவன்.
பகைவனைக் கொல்லும் கூற்றுவனைப் போன்ற வலிமை
உடையவன் என்கிறது இப் பதிற்றுப்பத்து.

சேர நாட்டிற்கும், பாண்டிய நாட்டிற்கும் இடைப்பட்ட பகுதி
பூழிநாடு, அந்நாட்டைக் கைப்பற்றியவன் இவன். இதனை,

நுதல்அணந்து எழுதரும் தொழில்நவில் யானை
    பார்வல் பாசறைத் தரூஉம் பல்வேல்
பூழியர் கோவே         - (பாடல்-4)

(அணந்து = நிமிர்த்தி)

என்ற பாடல் அடிகள் விவரிக்கின்றன. சோழர்களை வென்றான்
என்பதை,

    ஒன்னாப் பூட்கைச் சென்னியர் பெருமான்
    இட்ட வெள்வேல் முத்தைத் தம்என
    முன்திணை முதல்வர் போல நின்று
    தீஞ்சுனை நிலைஇய திருமா மருங்கின்
    கோடுபல விரிந்த நாடுகாண் நெடுவரை    
                 - (பாடல்-5)

(ஒன்னாப் பூட்கை = பகைமை கொண்ட; சென்னியர் =
சோழர்; முத்தை (முந்தை) = முன்னே, எதிரே;
தம்என = தருக என்று; முன் திணை முதல்வர்= குலத்து
முன்னோர்; கோடு = சிகரம்)

என்ற அடிகள் குறிப்பிடுகின்றன.

அறம் பல செய்தவன். அறம் செய்ய இடையூறு வந்தால்
அதனைப் போக்கப் போரைச் செய்பவன். போரில் ஆண்மகன்,
அறத்தையும், நல்ல நெஞ்சத்தையும் அசைந்த நடையையும்
உடையவன்.

பாணர் முதலானவருக்குப் பரிசில் வழங்கி ஆதரிப்பவன்.
கொற்றவையை வழிபடுபவன். சோழ பாண்டியர்கள், குறுநில
மன்னர்கள் இவனை வணங்கி நிற்பர்.

கழுவுள் என்ற ஆயர் தலைவனையும் அவனுக்குத் துணையாக
வந்தவரையும் பெருஞ்சேரல் இரும்பொறை வென்றான்.

    இவனுடைய காலத்தில் போர் வீரர்கள் இரவு நேரங்களிலும்
வாளைச் சுமந்தவர்களாகத் திரிந்தனர். போர் செய்வதை
விருப்பமாகக் கொண்டனர். கூறிய வஞ்சினம் தவறாமல் தம்
குடிக்குப் புகழைத் தேடவிரும்பினர்.

இரும்பொறையோடு போரிட அஞ்சிய பகைவர்கள் உறக்கம்
கொள்ள மாட்டார்கள். இவனிடம்     இருந்து தம்மைப்
பாதுகாக்குமாறு தெய்வத்தை வழிபடுவர். இவனோடு போர்
புரியப் பகைவர்கள் இல்லாததால்     வீரர்கள் போர்
வெறிகொண்டு திரிவர். யானைகளும் மதம் கொண்டு திரியும்.
குதிரைப் படையும் தயார் நிலையில் அணிகலன்களை
அணிந்து நிற்கும். இதனை,

     மறவர் மறல; மாப்படை உறுப்பத்
தேர்கொடி நுடங்கத் தோல்புடை யார்ப்ப    
             - (பாடல்-2)

என்ற அடிகள் விளக்குகின்றன.

(மறல = போர்வெறி கொண்டு திரிய; மா = குதிரை ;
உறுப்ப = ஆயத்தமாய் நிற்க; தோல் புடை ஆர்ப்ப =
கிடுகுப்படை (கேடயம் தாங்கிய படை) ஒருபுறம் ஆரவாரிக்க)

பல வழியிலும் பெற்ற குறையாத செல்வமும், பகைவர்
பலமுறை போரிட்டு அழித்த போதும் குறையாத வீரர்களையும் கொண்டவன். செங்கோன்மை, சால்பு, வீரம் போன்ற வற்றாத புகழையும், செல்வத்தையும் உடையவன் இரும்பொறை என்பதை,

     பாடுநர், கொளக்கொளக் குறையாச் செல்வத்து,
    செற்றோர்
கொளக் கொளக் குறையாத் தானை,
    சான்றோர்
வண்மையும், செம்மையும், சால்பும்,
    மறனும்
புகன்று புகழ்ந்து அசையா நல்இசை
நிலம் தரு திருவின் நெடியோய்     (பாடல்-5)

(அசையா = குறையாத ; நல்இசை = புகழ்)

எனப் பதிற்றுப்பத்துப் புகழ்கிறது.