4.2 புதுக்கவிதைப் பொருண்மை

     கவிதைக்குக் குண்டூசி முதல் இமயமலை வரை எப்பொருளும்
பாடுபொருளாகலாம்.     புதுக்கவிதையும்     இவ்வாறே
எப்பொருளைக் குறித்தும் பாடப்பெறுவதாய் அமைகின்றது.

     தன்னம்பிக்கை, பாசம், நட்பு, காதல், இயற்கை, உழைப்பாளி,
வறுமை, விலைவாசி, வேலையில்லாத் திண்டாட்டம், பெண்மை,
கட்சி, அரசியல், விலைமகளிர், மதநல்லிணக்கம், உயிரிரக்கம்
என்னும் பொருண்மைகளில் அமைந்த புதுக்கவிதைகளை இங்குக்
காண்போம்.

4.2.1 தன்னம்பிக்கை

     கவிதை இன்புறுத்துவதாகவும் அறிவுறுத்துவதாகவும் அமைவது
இயல்பு. மனம் உடைந்த நிலையில், வாழ்வே வெறுத்துவிட்டதாக
விரக்தியடைபவர்களுக்கு ஆறுதல் கூறி, வாழ்வில் ஒரு பிடிப்பு
ஏற்படுமாறு செய்தல் மிகவும் தேவையான ஒன்றாகும்.

காயப்படாத மூங்கில்
புல்லாங்குழல் ஆகாது
வலிபடாத வாழ்வில்
வசந்தங்கள் நுழையாது

எனவும்,

துடியாய்த் துடி
சாதிக்க
!
படியாய்ப் படி
வாதிக்க
!
மரங்குடைய
கோடாலி கொண்டு போவதில்லை
மரங்கொத்தி!
அவனவன் கையில்
ஆயிரம் ஆயுதம்
!

எனவும் அமையும் பா.விஜய்யின் கவிதைகள் இத்தன்மையன.

4.2.2 பாசம், நட்பு, காதல்

     குடும்பத்தில் உள்ளவர்களின் பாசம் ஒருவனின் வாழ்வுக்கும்
வெற்றிக்கும் வழிகாட்டியாக அமையும்.

     அப்பா அடித்துவிட்டார்
     வலிக்கிறதுதான்
     என்றாலும்
     தடவிக் கொடுக்கும் அம்மா
     பாவமாய்ப் பார்க்கும் அக்கா
     பயத்தில் அழும் தம்பி
     இன்னும்கூட அடிவாங்கலாம் அப்பாவிடம்!     (தபூ சங்கர்)

என்னும் கவிதை ‘கிளைஞரை நீட்டி அளக்கும் கோலாக’ அடி
வாங்குவதை அன்போடு அடையாளம் காட்டுகின்றது.

  • நட்பு

  •      நட்பு, எதிர்பார்ப்பு அற்றது; வயது முதலான எவ்வித
    வேறுபாடும் அற்றது; துன்பத்தால் துவளும்போது தோள்கொடுத்துத் துணைநிற்பது.

         நீ என்னிடம்
         பேசியதைவிட
         எனக்காகப்
         பேசியதில்தான்
         உணர்ந்தேன்
         நமக்கான
         நட்பை             (அறிவுமதி)

    என்னும் கவிதை, உண்மை நட்பின் இலக்கணத்தை உணர்ந்து
    கொண்டதாக உணர்த்தி நிற்கின்றது.

  • காதல்

  •      உண்மை அன்பால், எல்லா வேறுபாடுகளையும் மறந்து ஒன்றுகின்ற இரண்டு இதயங்களின் உன்னத உணர்வு காதல்.

         சுயநலத்தின்
         விரல்பிடித்து வெளியானாலும்
         பொதுநலத்தின்
         நிழலாய்
         தொடருவதே
         காதல்             (இ.இசாக்)

    என்பது, காதலின் இயல்பைத் தெள்ளிதின் உரைக்கின்றது.

    4.2.3 இயற்கை

         இயற்கையை உணர்ந்து பாராதவன் மனிதன் அல்லன்
    பாடாதவன் கவிஞன் அல்லன். எந்தப் பொருளையும் கண்டு கண்டு அதில் அழகை உணர்ந்து உணர்ந்து உருகிப் பாடுதல் கவிஞர் இயல்பு.

         இந்த
         நீள
         நீலக் கரும்பலகையில்
         எழுதும்
         இவை
         மௌன பாஷையின்
         லிபிகளோ?

         நிலவு என்னும்
         ஒற்றை வாக்கியக் காவியத்தை
         எழுதி முடித்த
         எக்காளத்தில் . . .
         எவனவன்
         இத்தனை முற்றுப் புள்ளிகள்
         இட்டு வைத்தவன்?         (வைரமுத்து)

    என்பது வானத்து நட்சத்திரங்களைக் குறித்தமைந்த இனிய
    கவிதையாகும் (லிபி-எழுத்து).

    4.2.4 உழைப்பாளி, வறுமை

         உழைப்பவர் இல்லையேல் உலகமே இல்லை. மீன்காரியைப்
    பற்றிய கவிதை பின்வருமாறு:

         மீனை நாம் உண்கிறோம்
         மீனால் இவள் உண்கிறாள்
         என்பது போன்ற
         நாலாந்தர முரண்களில்
         அளக்கக் கூடாது இவளை
         தண்ணீரில்
         முட்டையிடுகிறது மீன்
         கண்ணீரில்
         குஞ்சு பொறிக்கிறாள் இவள்     (யுகபாரதி)

  • வறுமை

  •      ஆடம்பரப் பொருள்களுக்கு ஏங்காமல் உணவு, உடை, உறையுள்
    என அத்தியாவசியப் பொருள்களுக்கே ஏங்கும் நிலை
    வறுமை
    யாகும். பலர் எவ்வளவு உழைத்தும் குடிக்கும் கூழுக்கே
    திண்டாடும் நிலையில் இருக்கின்றனர் என்பது மறுக்கமுடியாத
    உண்மை.

         வறுமையின் தத்துவம்
         சமயவாதிகளுக்குப்
         பிரசங்கத் தலைப்பு

         குருவி ஜோசியக்காரனுக்கு
         வயிற்றுப் பிழைப்பு

         கலாசிருஷ்டியோடு
         எழுதுபவனுக்கு
         நிலாச்சோறு

         கல்லூரி மாணவனுக்கு - வெறும்
         பரீட்சைக் கேள்வி
    !

    என்பது, வறுமையைப் பற்றிப் பலரின் பலவித எண்ணங்களை
    எடுத்துரைக்கிறது.

    4.2.5 விலைவாசி, வேலையில்லாத் திண்டாட்டம்

         ஆண்டுதோறும் பொருள்களின் விலை ஏறிக்கொண்டே
    செல்வது, வறியவர்களுக்கு ஏக்கத்தையும் அவற்றை அனுபவிக்க
    முடியாத ஏமாற்றத்தையும் கூட்டிக் கொண்டே செல்வதாக
    அமைகின்றது.

         விற்போரின்
         முதலிரவு
         வாங்குவோரின்
         வயிற்றெரிச்சல்
         ஆள்வோரின்
         அனாதைகள்
         எதிர்த்தரப்பின்
         ஏக வாரிசுகள் !

    என்னும்     கவிதை விலைவாசி     குறித்த     பலரின்
    கண்ணோட்டங்களைக் காட்டுகின்றது.

  • வேலையில்லாத் திண்டாட்டம்

  •      பட்டப் படிப்பு என்பது, சட்டை அழுக்காகாமல் நாற்காலியில்
    அமர்வதற்கு என்றே பலரும் நினைக்கின்றனர். கிடைக்கும்
    வேலைகளைத் தங்கள் கல்வித் தகுதிக்குக் கீழானவை எனப்
    புறக்கணிக்கின்றனர். படித்துமுடித்த அனைவருக்கும் அவர்களின்
    எதிர்பார்ப்பிற்கேற்பப் பணியும் ஊதியமும் உண்டாக்கித் தரும்
    நிலையில் நாடு இல்லை. எனவே, வேலையில்லாத் திண்டாட்டம்
    என்பது முற்றுப் புள்ளியை எட்டாததாகவே உள்ளது.

         ஆனாலும்
         வள்ளுவர் அறிவாளிதான்
         கற்றதனால் ஆயபயன்
         வேலை கிடைக்காது. . .
         வாலறிவனை
         வாழ்நாள் எல்லாம்
         தொழு என்றார்         (தமிழன்பன்)

    எனவே கவிதை, கடவுள் வாழ்த்து அதிகாரத் திருக்குறளின்
    சொல்லாட்சியைத்     தன்போக்கிற்குத்     திரித்துக் கொண்டு
    நிலைபெறுகின்றது.

    4.2.6 பெண்மை

         பல நூற்றாண்டுகளாகப் பெண்கள் எவ்விதச் சுதந்திரமும் இன்றி
    அடிமைத் தளத்தில்     அல்லலுறுகின்றனர். வரதட்சணைக்
    கொடுமையால் பெண்கள் முதிர்கன்னிகளாகவே வாழும் நிலை
    உள்ளது.

         திருமணம் என்பது
         சொர்க்கத்தில் இல்லை
         ரொக்கத்தில், பவுனில்
    !

    என்பது இவ்வுண்மையை உணர்த்தும் கவிதையாகும்.

         கல்வியறிவு பெற்று, வேலைக்குச் செல்லும் பெண்களின் நிலையும்
    அங்குள்ள ஆண்களிடமிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ளப்
    பாடாய்ப்படுவதாகவே உள்ளது. சான்று:

         சில ஆண்களின்
         ஆரோக்கியமில்லாத பார்வைகள்
         கம்பளிப் பூச்சியாய்
         உள்முதுகில் ஊரும்

         சிலர்
         கோப்புகளை வாங்கும்போது
         அவர்களின்
         விரல்களையும் விசாரிப்பார்கள்
         இத்தனை சூறாவளிக்கு
         மத்தியில்தான்
         அந்தக் குத்துவிளக்குகள்
         வெளியில் எரிந்துவிட்டு
         வீடு வருகின்றன

         அவர்களின் கதவுகளைத்
         திறந்து விட்டோம்
         தெருவுக்குள் வந்தார்கள்
         தீ
    !  
                                   (வைரமுத்து)

    4.2.7 கட்சியும் அரசியல்வாதியும்

         ஆட்சியில் அமர்ந்து பொதுத்தொண்டில் ஈடுபட விழைவோர்
    தமக்கெனக் குறிக்கோள், சின்னம் ஆகியன ஏற்படுத்திக்கொண்டு
    கட்சியைத் தோற்றுவிப்பர். பிற்காலத்தில் தன்னல நோக்கத்தோடும்
    கட்சிகள் பல தோன்றத் தொடங்கிவிட்டன.

         கொடிமரங்களைப்
         போலவே
         கட்சிகளுக்கும்
         இங்கே
         இலட்சியவேர் இல்லை     (தமிழன்பன்)

    என்பது கொள்கையற்ற கட்சி, வேரற்ற மரத்தையொத்தது எனப்
    புலப்படுத்துகின்றது. வேரில்லாமை கொடிமரத்திற்குத் தகும்
    கட்சிக்குத் தகாதல்லவா?

  • அரசியல்வாதி

  •      பொதுநல உணர்வும், அறிவும், ஒழுக்கமும், நிர்வாகத் திறனும்
    உடையவர்கள் கட்சி தொடங்கி அரசியல்வாதியாகிப் பதவியேற்று
    நாடாளுதல் போற்றத்தக்கதாக அமையும். இத்தகைய தகுதியின்றி
    யாவரையும் அச்சுறுத்தும் வல்லமையும் நயவஞ்சகமும் கொண்டோர்.
    அரசியல்வாதியாகி விட்டால் நாட்டில் விபரீதம்தான் ஏற்படும்.

         எங்கள் ஊர் எம்.எல்.ஏ
         ஏழு மாதத்தில்
         எட்டுத் தடவை
         கட்சி மாறினார்
         மின்னல் வேகம்
         என்ன வேகம்?

    என்னும் கவிதை, தன்னலம்கருதி அடிக்கடி பல கட்சிகளுக்கு மாறும்
    அரசியல்வாதியைத் தோலுரித்துக் காட்டுகிறது.

         தேர்தல்கால வாக்குறுதிகள், அவர்கள் வெற்றி பெற்ற பிறகு
    பெரும்பாலும் கண்துடைப்பாக அமைந்து விடுவதை,

         இல்லாத ஊருக்குப்
         போகாத வழியை
         அறியாத மக்களிடம்
         புரியாதபடி
         சொல்லி வைக்கும்
         சத்திய வாக்கு         (மு.வை.அரவிந்தன்)

    என்னும் கவிதை புலப்படுத்துகிறது.

    4.2.8 விலைமகளிர்
         யாரோ ஒரு சிலரைத் தவிரப் பெரும்பாலான விலைமகளிர்,
    வறுமையும்     சந்தர்ப்ப சூழலும் காரணமாக இந்நிலைக்கு
    ஆளானவர்கள் ஆவர். சமுதாயத்திற்கு இவ்வகை ஒழுக்கம், கேடு
    பயப்பதேயாகும். தொன்றுதொட்டு வரும் புரையோடிய புண்ணாகவே
    இஃது உள்ளது.

         நாங்கள் பொம்மைகள்
         தொங்கவும் விடலாம்
         தூக்கியும் நிறுத்தலாம்
         எந்த இராத்திரியும்
         எங்கட்கு நவராத்திரியே
         நாங்கள் பொம்மைகள்

    என்னும் கவிதை, தங்களின் கழிவிரக்க நிலையைத் தாங்களே
    எடுத்துச் சொல்வதாக அமைகின்றது.

    4.2.9 மத நல்லிணக்கமும் உயிரிரக்கமும்

         மனிதன் தோன்றிய காலத்திலேயே மதமும் தோன்றிவிட்டது.
    இனக் குழுத் தலைவர்கள் தங்கள் அறிவுக்கும் அனுபவத்திற்கும்
    ஏற்ப மதங்களை வகுத்தனர். யாவரும் சேர்ந்து வாழும் சூழல்
    ஏற்பட்டபோது எது சிறந்த மதம் என மனிதர்கள் மோதிக்
    கொள்கின்றனர். அங்கே அன்பு மறைந்து, போலிக் கவுரவம்
    தலைதூக்கி, உலகப் பொருள்கள் தாக்கப்படுகின்றன.

         எனக்காக நீங்கள்
         உங்களைப் பலியிடவில்லை
         உங்களுக்காக
         என்னைப் பலியிடுகிறீர்கள். . .!
         என்னைப்
         பாதுகாப்பதாய்
         எண்ணி
         என் படைப்புகளை
         அழித்துவிடாதீர்
    !         (மேத்தா)

    என்னும் கவிதை, கடவுளே வந்து அறிவுறுத்துவதாய் அமைந்துள்ளது.

  • உயிரிரக்கம்

  •      எவ்வுயிர்க்கும் இவ்வுலகப் பொருள்களை நுகர்ந்து வாழ
    உரிமையுண்டு. வல்லமை படைத்த மனிதன் பிற மனிதர்க்கோ
    உயிர்களுக்கோ தீங்கு செய்தல் கூடாது அவ்வுயிர்களைக்
    கொல்லுதலும் கூடாது. தன்னால் இயன்ற உதவிகளைப் புரிவதே
    தக்கது ஆகும்.

         பசுவுக்கு
         உண்ணி பிடுங்கிக் கொண்டிருக்கும்
         அப்பாவும்
         ஆட்டுக்குட்டியை
         மடியில் போட்டு
         ஈத்திக் கொண்டிருக்கும்
         அம்மாவும்
         படித்ததில்லை
         உயிர்களிடத்தில் அன்பு வேண்டும்

    என்பது தயை-பிறவிக்குணம் என்பதை உணர்த்துகின்றது.

         புதுக்கவிதை எவற்றையும் பாடவல்லது     திட்பமாகவும்
    நுட்பமாகவும் சொல்லித் திருத்தவல்லது என்பதை இவற்றால்
    அறிகிறோம்.

    இனி, உத்திமுறைகள் குறித்துக் காண்போம்.

    தன் மதிப்பீடு : வினாக்கள் - I
    1) அடிதோறும் ஒரு சொல்லே அமைந்த புதுக்கவிதை
    ஒன்று தருக.
    (விடை)
    2) ‘தளைதட்டிய திருக்குறள்’ எனப்படுவது யாது? (விடை)
    3) புதுக்கவிதையில் எவ்வெச் சொற்கள் இடம்
    பெறுகின்றன?
    (விடை)
    4) புதுக்கவிதையில் தொடைநயம் இடம்பெறுவது
    உண்டா?
    (விடை)
    5) வாங்குவோரின் வயிற்றெரிச்சல் எது? (விடை)