உகரம்
(முதல் பருவம்)

பாடம் - 12
12.2 படிப்போம்

உலகத்தொழில் கண்காட்சி

ஆசிரியர், மாணவர் கலந்துரையாடல்

ஆசிரியர் : வணக்கம்!
மாணவர்கள் : வணக்கம்!
ஆசிரியர் : அனைவரும் நலமா? பல நாள் கழித்துச் சந்திக்கின்றோம்.
மாணவர்கள் : ஆமாம், நாங்கள் அனைவரும் நலம்.
ஆசிரியர் : விடுமுறை நாள்களை எவ்வாறு கழித்தீர்கள்?
மாணவர்கள் : கண்காட்சி வாரமாயிற்றே. நாங்கள் எல்லாரும் எங்களுக்குப் பிடித்த கண்காட்சிகளுக்குச் சென்று வந்தோம்.
ஆசிரியர் : நன்றாகத்தான் விடுமுறையைக் கழித்துள்ளீர்கள். நீங்கள் எந்தக் கண்காட்சிக்குச் சென்றீர்கள்?
ஈத்தன் : நான் வீட்டு உபயோகப்பொருட்கள் கண்காட்சிக்குச் சென்றேன்.
நிலவன் : நான் புத்தகக்கண்காட்சியில் புத்தகங்கள் வாங்கினேன்.
தருண் : நீங்கள் எந்தக் கண்காட்சிக்குச் சென்றீர்கள்?
ஆசிரியர் : நான் உலகத்தொழில் கண்காட்சிக்குச் சென்றிருந்தேன்.
நிலவன் : தொழில் கண்காட்சியா? அப்படி என்றால் என்ன?
ஆசிரியர் : சொல்கிறேன். பொருள் கண்காட்சி என்றால், பொருள்களின் வகைகளைக் காட்சிப்படுத்தி இருப்பர் அல்லவா? அதுபோல், தொழில் கண்காட்சியில், பல்வேறு நாடுகளின் தொழில்கள் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும். அதாவது, நாடுகள் உருவாக்கிய, முன்னேற்றம் கண்ட தொழில்கள், தொழிற் கருவிகள் போன்றவற்றை ஒரே இடத்தில் காட்சியாக வைத்திருப்பர்.
டேவிட் : பல நாடுகளின் தொழில்கள், தொழிற்கருவிகள் ஒரே இடத்திலா? கேட்கவே வியப்பாக உள்ளது.
தருள் : நீங்கள் எங்கு நடைபெற்ற கண்காட்சிக்குச் சென்று வந்தீர்கள்?
ஆசிரியர் : நான், துபாயில் நடைபெற்ற உலகத் தொழில் கண்காட்சிக்குச் சென்று வந்தேன் தருண்.
ஏஞ்சலின் : கண்காட்சி எத்தனை நாள்கள் நடைபெற்றன?
ஆசிரியர் : நாள்கள் இல்லை ஏஞ்சலின். மாதக்கணக்கில், ஆண்டுக் கணக்கில் தொழில் கண்காட்சிகள் நடைபெறும். நான் சென்று வந்த கண்காட்சி 6 மாதம் நடைபெற்றது. அதாவது 2021 அக்டோபர் 1 முதல் 2022 மார்ச் 31 வரை நடைபெற்றது.
நிலவன் : அப்படியா? மாதக்கணக்கிலா நடைபெற்றது?
ஆசிரியர் : ஆம் நிலவன். மற்றக் கண்காட்சிகளில் ஒரு கடை சில அடி அகலத்தில் வைக்கப்பட்டிருக்கும். ஆனால், இங்கு ஒவ்வொரு நாடும் பல ஏக்கர் பரப்பளவில் கண்காட்சி அமைத்திருந்தது. ஒரு நாட்டின் தொழில் வளர்ச்சி முழுவதையும் காட்சிப்படுத்த வேண்டும் அல்லவா?
சங்கமித்ரா : அடேங்கப்பா … எவ்வளவு பெரிய கண்காட்சி நீங்கள் சென்று வந்த கண்காட்சியின் சிறப்புகளைக் கூறுங்கள்.
ஆசிரியர் : “மனங்களை இணைத்து, எதிர்காலத்தை உருவாக்குதல்” என்ற மையப் பொருளுடன் இது நடைபெற்றது. இதில் உலகம் முழுவதிலும் உள்ள தொழில்நுட்ப முன்னேற்றங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
ஏஞ்சலின் : ஒரு நாடு எவற்றையெல்லாம் காட்சிப்படுத்தியிருந்தது?
ஆசிரியர் : மருத்துவம், சுற்றுலா, கட்டடம், வேளாண்மை, உணவு, உடை, மின்னணு சாதனங்கள், தொழில்நுட்பம் போன்ற பல்வேறு துறை சார்ந்த இயந்திரங்கள் மற்றும் அவற்றின் வடிவமைப்பு போன்றவை இடம்பெற்றிருந்தன.
வர்ஷிதா : மிக நல்ல கேள்வி வர்ஷிதா. பல்வேறு நாட்டினர், தங்கள் உழைப்பாலும் அறிவாலும் உருவாக்கிய பொருள்களைக் காட்சிப்படுத்துவர். அவை குறித்த தகவல்கள் அரங்குகளில் திரையிடப்படும். பல்வகைத் தொழில்நுட்பங்கள் உலகிற்கு அறிமுகப்படுத்தப்படும். ஒவ்வொரு நாட்டினரும் தங்கள் நாட்டிற்கான முதலீடுகளை ஈர்க்கும் விதமாகப் புதிய வழிகளில் அரங்குகளை அமைப்பர். அதனைக் காண வரும் …
வர்ஷிதா : புதிதாகத் தொழில் தொடங்கும் எண்ணம் உடையவர்களுக்கு, இது ஒரு நல்ல வாய்ப்பை ஏற்படுத்தித் தரும். அப்படித்தானே.
ஆசிரியர் : அப்படியேதான் வர்ஷிதா. நன்றாகப் புரிந்துகொண்டாய். தொழில் முன்னேற்றம், நாட்டை முன்னேற்றும், உலகத்தொழில் கண்காட்சி ஏன் என்பது அனைவருக்கும் புரிந்ததா?
மாணவர்கள் : நன்றாகப் புரிந்தது. நாங்களே கண்காட்சிக்குச் சென்று வந்ததுபோல் இருந்தது.
ஆசிரியர் : மகிழ்ச்சி!

பொருள் அறிவோம்

1. பதப்படுத்துதல் - கெட்டுப்போகாமல் பாதுகாத்தல்
2. தொழிற்கருவி - தொழிலுக்குப் பயன்படுத்தும் பொருட்கள்
3. காட்சிப்படுத்துதல் - அனைவரும் பார்க்கும்படி வைத்தல்
4. ஈர்க்கும் - கவரும்
5. எண்ணம் - சிந்தனை

விடை காண்போம்

தொழில்கள் அல்லது பொருள்களின் வகைகள் போன்றவற்றை ஒரே இடத்தில் காட்சிப்படுத்துவது ‘கண்காட்சி’ என்பர்.

ஆசிரியர், உலகத் தொழில் கண்காட்சிக்குச் சென்று வந்தார்.

துபாயில் நடைபெற்ற உலகத்தொழில் கண்காட்சியின் மையப்பொருள் “மனங்களை இணைத்து, எதிர்காலத்தை உருவாக்குதல்”