முகப்புதொடக்கம்

புறத்திணை இயல்

இவ்வோத்து என்ன பெயர்தோ எனின், புறத்திணையியல் என்னும் பெயர்த்து. இது புறப்பொருள் உணர்த்துதலாற் பெற்ற பெயர்.

அஃது யாங்ஙனம் உணர்த்தினாரோ எனின், அகத்திணையாகிய எழுதிணையும் சாற்றி, அவற்றின் புறத்து நிகழ்வன எழுதிணை உணர்த்தினார் என்று கொள்க அவை:-

மலையாகிய குறிஞ்சித்திணைப்புறம் நிரைகோடலும் நிரை மீட்டலும் என்னும் வேறுபாடு குறித்து வெட்சி எனவும் கரந்தை எனவும் இரண்டு குறி பெறுதலும்.

காடுறையுலதாகிய முல்லைப்புறம் மண்நசை வேட்கையால் எடுத்துச் செலவுபுரிந்த வேந்தன்அடல் குறித்துச் செலவு புரிதலான், அவ்விரு பெருவேந்தரும் ஒரு வினையாகிய செலவு புரிதலின் அது வஞ்சி என ஒரு குறி பெருதலும்.

புனலுலகாகிய மருதத்துப்புறம் எயில் அழித்தலும், எயில் காத்தலும் என்னும் வேறுபாடு குறித்து உழிஞை எனவும் நொச்சி எனவும் இரண்டு குறி பெறுதலும்.

மணலுலகாகிய நெய்தற்புறம் இரு பெருவேந்தரும் பொருதலாகிய ஒரு தொழிலே புரிதலால் அது தும்பை என ஒரு குறி பெறுதலும்,

நடுநிலைத்திணையாகிய பாலைப்புறம் வேந்தரே யாயினும் ஏனையோராயினும் தமது மிகுதியாகிய வெற்றியைக் குறித்தலால் அது வாகை என ஒரு குறி பெறுதலும்,

பெருந்திணைப்புறம் நிலையாமையாகிய நோம்திறப் பொருளே குறித்து வருதலின் காஞ்சி என ஒரு குறி பெறுதலும்.

கைக்கிளைப்புறம் செந்திறமாகிய ஒரு பொருளே குறித்து வருதலின் பாடாண் என ஒரு பெருதலும் உணர்த்தியவாறு கண்டு கொள்க.

மேலை ஓத்தினுள்,

''புறத்திணை மருங்கின் பொருந்தின் அல்லது,
அகத்திணை மருங்கின் அளவுதல் இலவே''

(அகத். 58)

என அகத்திணைச் செய்யுள் இயற்பெயர் கூறப்பெறாதென்றமையானும், புறத்திணை மருங்கிற் பொருந்தும் என்றமையானும் உலகியலோடு ஒத்துவரும் காமப்பொருளாகப் பாடாண் பாட்டின்கண் இன்பம் இயற்பெயர் சார்த்தி வரப்பெறும் என்று கொள்க.

''ஆன்ற சிறப்பின் அறம்பொருள் இன்பமென
மூன்றுவகை நுதலிய துலகம் அவற்றுள்
அறமும் இன்பமும் அகலா தாகிப்
புறன்எனப் படுவது பொருள்குறித் தன்றே''

என்னும் பன்னிருபடலச் செய்யுள் புறப்பொருள் அறமும் இன்பமும் அகலாதாகி எனக் கூறினார்; அவர் கூறுதல் வாகைத் திணைக்கண் 'கட்டில்நீத்த பால்' முதலாகக் 'காமம் நீத்த பால்', ஈறாக அறங்கூறுதலில் அச்சார்பாகக் கூறியது மயங்கக் கூறுதலாம்.

''ஆங்ஙனம் உரைப்பின் அவற்றது வகையால்
பாங்குறக் கிளந்தனர் என்ப அவைதாம்
வெட்சி கரந்தை வஞ்சி காஞ்சி
உட்குவரு சிறப்பின் உழிஞை நொச்சி
முரண்மிகு சிறப்பின் தும்பையுள் ளிட்ட
மறனுடை மரபின் ஏழே ஏனை
அமர்கொள் மரபின் வாகையும் சிறந்த
பாடாண் பாட்டொடு பொதுவியல், என்ப''

எனவும்,

''கைக்கிளை ஏனைப் பெருந்திணை என்றாங்கு
அத்திணை யிரண்டும் அகத்திணைப் புறனே''

எனவும் புறப்பொருள் பன்னிரண்டு வகைப்படக் கூறில், அகமும் பன்னிரண்டாகி மாட்டேறு பெறுதல்வேண்டும். அகத்திணை ஏழாகிப் புறத்திணை பன்னிரண்டாகில், ''மொழிந்த பொருளோடு ஒன்றவைத்தல்'' (மரபு.112) என்னுந் தந்திர உத்திக்கும் பொருந்தாதாகி "மிகைபடக் கூறல்" :தன்னான் ஒரு பொருள் கருதிக் கூறல்" (மரபு. 110) என்னும் குற்றமும் பயக்கும் என்க. அன்றியும் பெருந்திணைப் புறனாகிய காஞ்சி நிலையாமை யாதலானும், பொதுவியல் என்பது,

''பல் அமர் செய்து படையுள் தப்பிய
நல்லாண் மாக்கள் எல்லாரும் பெறுதலின்
திறப்பட மொழிந்து தெரிய விரித்து
முதற்பட எண்ணிய எழுதிணைக்கும் உரித்தே''

எனத் தாமே கூறுகின்றாராதலின், மறத்திற்கு முதலாகிய வெட்சியின் எடுத்துக் கோடற்கண்ணும் கூறாமையானும், கைக்கிளையும் பெருந் திணையும் புறம் என்றாராயின் அகத்திணை ஏழ் என்னாது ஐந்து எனல் வேண்டுமாதலானும், பிரமம் முதலாகச் சொல்லப்பட்ட மணம் எட்டனுள்ளும் யாழோர் கூட்டமாகிய மணத்தை ஒழித்து ஏனைய ஏழும் புறப்பொருளாதல் வேண்டுமாதலானும், முனைவன் நூலிற்கும் கலி முதலாகிய சான்றோர் செய்யுட்கும் உயர்ந்தோர் வழக்கிற்கும் பொருந்தாது என்க.
 


முன் பக்கம் மேல்அடுத்த பக்கம்