தொடக்கம்

சிறுபாண் ஆற்றுப்படை

(ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை 
இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது)

வேனிற்காலம்
மணி மலை ப் பணைத் தோள் மா நில மடந்தை
அணி முலைத் துயல்வரூஉம் ஆரம் போல,
செல்புனல் உழந்த சேய் வரல் கான்யாற்று,
கொல்கரை நறும் பொழில் குயில் குடைந்து உதிர்த்த
புதுப் பூஞ் செம்மல் சூடி, புடை நெறித்து, 5
கதுப்பு விரித்தன்ன காழ் அக நுணங்கு அறல்
அயில் உருப்பனைய ஆகி, ஐது நடந்து,
வெயில் உருப்புற்ற வெம் பரல் கிழிப்ப,
வேனில் நின்ற வெம் பத வழி நாள்
காலை ஞாயிற்றுக் கதிர் கடாவுறுப்ப, 10
பாலை நின்ற பாலை நெடு வழிச்
சுரன் முதல் மராஅத்த வரி நிழல் அசைஇ


அழகு மிக்க விறலியருடன் இளைப்பாறும் இரவலன்


ஐது வீழ் இகு பெயல் அழகு கொண்டு, அருளி,
நெய் கனிந்து இருளிய கதுப்பின்; கதுப்பு என,
மணிவயின் கலாபம், பரப்பி, பல உடன் 15
மயில், மயிற் குளிக்கும் சாயல்; சாஅய்
உயங்கு நாய் நாவின் நல் எழில் அசைஇ,
வயங்கு இழை உலறிய அடியின்; அடி தொடர்ந்து,
ஈர்ந்து நிலம் தோயும் இரும் பிடித் தடக் கையின்,
சேர்ந்து உடன் செறிந்த குறங்கின், குறங்கு என, 20
மால் வரை ஒழுகிய வாழை: வாழைப்
பூ எனப் பொலிந்த ஓதி; ஓதி,
நளிச் சினை வேங்கை நாள்மலர் நச்சி,
களிச் சுரும்பு அரற்றும் சுணங்கின் சுணங்கு பிதிர்ந்து,
யாணர்க் கோங்கின் அவிர் முகை எள்ளி, 25
பூண் அகத்து ஒடுங்கிய வெம் முலை; முலை என,
வண் கோள் பெண்ணை வளர்த்த நுங்கின்
இன் சேறு இகுதரும் எயிற்றின்; எயிறு என,
குல்லை அம் புறவில் குவி முகை அவிழ்ந்த
முல்லை சான்ற கற்பின்; மெல் இயல்; 30
மட மான் நோக்கின் வாள் நுதல் விறலியர்
நடை மெலிந்து அசைஇய நல் மென் சீறடி
கல்லா இளையர் மெல்லத் தைவர,
பொன் வார்ந்தன்ன புரி அடங்கு நரம்பின்
இன் குரல் சீறியாழ் இடவயின் தழீஇ, 35
நைவளம் பழுநிய நயம் தெரி பாலை
கை வல் பாண்மகன் கடன் அறிந்து இயக்க,
இயங்கா வையத்து வள்ளியோர் நசைஇ,
துனி கூர் எவ்வமொடு துயர் ஆற்றுப்படுப்ப,
முனிவு இகந்திருந்த முது வாய் இரவல! 40


வஞ்சி மாநகரின் சிறப்பு


கொழு மீன் குறைய ஒதுங்கி, வள் இதழ்க்
கழுநீர் மேய்ந்த கய வாய் எருமை
பைங் கறி நிவந்த பலவின் நீழல்,
மஞ்சள் மெல் இலை மயிர்ப் புறம் தைவர,
விளையா இளங் கள் நாற, மெல்குபு பெயரா, 45
குளவிப் பள்ளிப் பாயல் கொள்ளும்
குட புலம் காவலர் மருமான் ஒன்னார்
வட புல இமயத்து, வாங்கு வில் பொறித்த
எழு உறழ் திணி தோள், இயல் தேர்க் குட்டுவன்
வரு புனல் வாயில் வஞ்சியும் வறிதே: அதாஅன்று, 50


தமிழ் நிலை பெற்ற மதுரையின் மாண்பு


நறவு வாய் உறைக்கும் நாகு முதிர் நுணவத்து
அறை வாய்க் குறுந் துணி அயில் உளி பொருத
கை புனை செப்பம் கடைந்த மார்பின்,
செய் பூங் கண்ணி செவிமுதல் திருத்தி,
நோன் பகட்டு உமணர் ஒழுகையொடு வந்த 55
மகாஅர் அன்ன மந்தி, மடவோர்
நகாஅர் அன்ன, நளி நீர் முத்தம்
வாள் வாய் எருந்தின் வயிற்றகத்து அடக்கி,
தோள் புறம் மறைக்கும், நல் கூர் நுசுப்பின்,
உளர் இயல் ஐம்பால் உமட்டியர் ஈன்ற 60
கிளர் பூண் புதல்வரொடு கிலுகிலி ஆடும்
தத்து நீர் வரைப்பின் கொற்கைக் கோமான்;
தென் புலம் காவலர் மருமான்; ஒன்னார்
மண் மாறு கொண்ட, மாலை வெண் குடை,
கண் ஆர் கண்ணி, கடுந் தேர்ச் செழியன்; 65
தமிழ் நிலைபெற்ற, தாங்கு அரு மரபின்
மகிழ் நனை, மறுகின் மதுரையும் வறிதே; அதாஅன்று,


உறந்தையின் சிறப்பு


நறு நீர்ப் பொய்கை அடைகரை நிவந்த
துறு நீர்க் கடம்பின் துணை ஆர் கோதை,
ஓவத்து அன்ன உண்துறை மருங்கில் 70
கோவத்து அன்ன கொங்கு சேர்பு உறைத்தலின்,
வரு முலை அன்ன வண் முகை உடைந்து,
திரு முகம் அவிழ்ந்த தெய்வத் தாமரை,
ஆசு இல் அங்கை அரக்குத் தோய்ந்தன்ன
சேயிதழ் பொதிந்த செம் பொன் கொட்டை, 75
ஏம இன் துணை தழீஇ, இறகு உளர்ந்து,
காமரு தும்பி காமரம் செப்பும்
தண் பணை தழீஇய தளரா இருக்கைக்
குண புலம் காவலர் மருமான் ஒன்னார்
ஓங்கு எயி்ல் கதவம் உருமுச் சுவல் சொறியும்80
தூங்கு எயில் எறிந்த தொடி விளங்கு தடக்கை,
நாடா நல் இசை, நல் தேர்ச் செம்பியன்
ஓடாப் பூட்கை உறந்தையும் வறிதே: அதாஅன்று,


ஏழு வள்ளல்களின் சிறப்பு


வானம் வாய்த்த வள மலைக் கவா அன்
கான மஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கிய 85
அருந் திறல் அணங்கின் ஆவியர் பெருமகன்,
பெருங் கல் நாடன், பேகனும்; சுரும்பு உண
நறு வீ உறைக்கும் நாக நெடு வழிச்
சிறு வீ முல்லைக்குப் பெருந் தேர் நல்கிய,
பிறங்கு வெள் அருவி வீழும் சாரல் 90
பறம்பின் கோமான், பாரியும்; கறங்கு மணி
வால் உளைப் புரவியொடு வையகம், மருள,
ஈர நல் மொழி, இரவலர்க்கு ஈந்த,
அழல் திகழ்ந்து இமைக்கும் அஞ்சு வரு நெடு வேல்,
கழல் தொடித் தடக் கை, காரியும்; நிழல் திகழ் 95
நீலம், நாகம் நல்கிய, கலிங்கம்
ஆல் அமர் செல்வற்கு அமர்ந்தனன் கொடுத்த,
சாவம் தாங்கிய சாந்து புலர் திணி தோள்,
ஆர்வ நன் மொழி, ஆயும்; மால் வரைக்
கமழ் பூஞ் சாரல் கவினிய நெல்லி 100
அமிழ்து விளை தீம் கனி ஒளவைக்கு ஈந்த,
உரவுச் சினம் கனலும் ஒளி திகழ் நெடுவேல்,
அரவக் கடல் தானை, அதிகனும்; கரவாது,
நட்டோர் உவப்ப, நடைப் பரிகாரம்
முட்டாது கொடுத்த, முனை விளங்கு தடக் கை,105
துளி மழை பொழியும் வளி துஞ்சு நெடுங் கோட்டு
நளி மலை நாடன், நள்ளியும்; நளி சினை
நறும் போது கஞலிய நாகு முதிர் நாகத்துக்
குறும் பொறை, நல் நாடு கோடியர்க்கு ஈந்த,
காரிக் குதிரைக் காரியொடு மலைந்த 110
ஓரிக் குதிரை, ஓரியும்; என ஆங்கு,
எழு சமம் கடந்த எழு உறழ் திணி தோள்
எழுவர் பூண்ட ஈகைச் செந் நுகம்,


நல்லியக்கோடனின் தலைமைச் சிறப்பு


விரி கடல் வேலி வியலகம் விளங்க,
ஒரு தான் தாங்கிய உரனுடை நோன் தாள்115
நறு வீ நாகமும் அகிலும் ஆரமும்
துறை ஆடு மகளிர்க்குத் தோள் புணை ஆகிய
பொரு புனல் தரூஉம், போக்கு அரு மரபின்,
தொல் மா இலங்கைக் கருவொடு பெயரிய
நல் மா இலங்கை மன்னருள்ளும், 120
மறு இன்றி விளங்கிய வடு இல் வாய் வாள்,
உறு புலித் துப்பின், ஓவியர் பெருமகன்
களிற்றுத் தழும்பு இருந்த கழல் தயங்கு திருந்து அடி,
பிடிக் கணம் சிதறும் பெயல் மழைத் தடக் கை,
பல் இயக் கோடியர் புரவலன் பேர் இசை125
நல்லியக்கோடனை நயந்த கொள்கையொடு,


புரவலனிடம் பரிசுபெறச் சென்ற விதம்


தாங்கு அரு மரபின் தன்னும், தந்தை
வான் பொரு நெடு வரை வளனும், பாடி,
முன் நாள் சென்றனம் ஆக


வருத்தம் போக்கிய வண்மைச் சிறப்பு


இந் நாள்,
திறவாக் கண்ண சாய் செவிக் குருளை 130
கறவாப் பால் முலை கவர்தல் நோனாது,
புனிற்று நாய் குரைக்கும் புல்லென் அட்டில்
காழ் சோர், முது சுவர்க் கணச் சிதல் அரித்த,
பூழி பூத்த புழல் காளாம்பி:
ஒல்கு பசி உழந்த ஒடுங்கு நுண் மருங்குல், 135
வளைக் கை, கிணை மகள் வள் உகிர்க் குறைத்த
குப்பை வேளை உப்பு இலி வெந்ததை,
மடவோர் காட்சி நாணி, கடை அடைத்து,
இரும் பேர் ஒக்கலொடு ஒருங்கு உடன் மிசையும்
அழி பசி வருத்தம் வீட; பொழி கவுள், 140
தறுகண் பூட்கை, தயங்கு மணி மருங்கின்,
சிறு கண் யானையொடு பெருந் தேர் எய்தி;
யாம் அவண் நின்றும் வருதும்.


எயிற்பட்டினத்தில் கிடைக்கும் பொருள்கள்


நீயிரும்,
இவண் நயந்து இருந்த இரும் பேர் ஒக்கல்
செம்மல் உள்ளமொடு, செல்குவிர்ஆயின், 145
அலை நீர்த் தாழை அன்னம் பூப்பவும்,
தலை நாள் செருந்தி தமனியம் மருட்டவும்,
கடுஞ்சூல் முண்டகம் கதிர் மணி கழாஅலவும்,
நெடுங் கால் புன்னை நித்திலம் வைப்பவும்,
கானல் வெண் மணல் கடல் உலாய் நிமிர்தர, 150
பாடல் சான்ற நெய்தல் நெடு வழி,
மணி நீர் வைப்பு, மதிலொடு பெயரிய,
பனி நீர்ப் படுவின், பட்டினம் படரின்
ஓங்கு நிலை ஒட்டகம் துயில் மடிந்தன்ன
வீங்குதிரை கொணர்ந்த விரை மர விறகின் 155
கரும் புகைச் செந் தீ மாட்டி, பெருந் தோள்,
மதி ஏக்கறூஉம் மாசு அறு திரு முகத்து,
நுதி வேல் நோக்கின், நுளைமகள் அரித்த
பழம் படு தேறல் பரதவர் மடுப்ப,
கிளை மலர்ப் படப்பைக் கிடங்கில் கோமான், 160
தளை அவிழ் தெரியல் தகையோற் பாடி,
அறல் குழல் பாணி தூங்கியவரொடு,
வறல் குழல் சூட்டின், வயின் வயின் பெறுகுவிர்:


வேலூர் வளமும் எயினர் விருந்தும்


பைந் நனை அவரை பவழம் கோப்பவும்,
கரு நனைக் காயாக் கண மயில் அவிழவும், 165
கொழுங் கொடி முசுண்டை கொட்டம் கொள்ளவும்,
செழுங் குலைக் காந்தள் கை விரல் பூப்பவும்,
கொல்லை நெடு வழிக் கோபம் ஊரவும்,
முல்லை சான்ற முல்லை அம் புறவின்,
விடர் கால் அருவி வியல் மலை மூழ்கிச் 170
சுடர் கால்மாறிய செவ்வி நோக்கி,
திறல் வேல் நுதியின் பூத்த கேணி,
விறல் வேல் வென்றி, வேலூர் எய்தின்
உறு வெயிற்கு உலைஇய உருப்பு அவிர் குரம்பை
எயிற்றியர் அட்ட இன் புளி வெஞ் சோறு, 175
தேமா மேனிச் சில் வளை ஆயமொடு
ஆமான் சூட்டின அமைவரப் பெறுகுவிர்.


ஆமூர் வளமும் உழவர் விருந்தும்


நறும் பூங் கோதை தொடுத்த நாள் சினைக்
குறுங் கால் காஞ்சிக் கொம்பர் ஏறி,
நிலை அருங் குட்டம் நோக்கி, நெடிது இருந்து, 180
புலவுக் கயல் எடுத்த பொன் வாய் மணிச் சிரல்
வள் உகிர் கிழித்த வடு ஆழ் பாசடை,
முள் அரைத் தாமரை முகிழ் விரி நாள்போது
கொங்கு கவர் நீலச் செங் கண் சேவல்
மதி சேர் அரவின் மானத் தோன்றும் 185
மருதம் சான்ற மருதத் தண் பணை,
அந்தணர் அருகா, அருங் கடி வியல் நகர்,
அம் தண் கிடங்கின், அவன் ஆமூர் எய்தின்
வலம் பட நடக்கும் வலி புணர் எருத்தின்
உரன் கெழு நோன் பகட்டு உழவர் தங்கை, 190
பிடிக் கை அன்ன பின்னு வீழ் சிறுபுறத்துத்
தொடிக் கை மகடூஉ, மக முறை தடுப்ப,
இருங் காழ் உலக்கை இரும்பு முகம் தேய்த்த
அவைப்பு மாண் அரிசி அமலை வெண் சோறு,
கவைத் தாள் அலவன் கலவையொடு பெறுகுவிர். 195


நல்லியக் கோடனின் மூதூர் அண்மையது என்று அறிவித்தல்


எரி மறிந்தன்ன நாவின், இலங்கு எயிற்று,
கரு மறிக் காதின், கவை அடிப் பேய்மகள்
நிணன் உண்டு சிரித்த தோற்றம் போல,
பிணன் உகைத்துச் சிவந்த பேர் உகிர், பணைத் தாள்,
அண்ணல் யானை அருவி துகள் அவிப்ப, 200
நீறு அடங்கு தெருவின் அவன் சாறு அயர் மூதூர்
சேய்த்தும் அன்று; சிறிது நணியதுவே.


வாயிலின் சிறப்பு


பொருநர்க்கு ஆயினும், புலவர்க்கு ஆயினும்,
அரு மறை நாவின் அந்தணர்க்கு ஆயினும்,
கடவுள் மால் வரை கண் விடுத்தன்ன, 205
அடையா வாயில் அவன் அருங் கடை குறுகி


நல்லியக்கோடன் அவையில் வீற்றிருக்கும் காட்சி


அவன் குணங்களும் அவற்றை ஏத்துவோரும்


செய்ந்நன்றி அறிதலும், சிற்றினம் இன்மையும்,
இன் முகம் உடைமையும், இனியன் ஆதலும்,
செறிந்து விளங்கு சிறப்பின் அறிந்தோர் ஏத்த;
அஞ்சினர்க்கு அளித்தலும், வெஞ் சினம் இன்மையும், 210
ஆண் அணி புகுதலும், அழிபடை தாங்கலும்,
வாள் மீக் கூற்றத்து வயவர் ஏத்த;
கருதியது முடித்தலும், காமுறப் படுதலும்,
ஒரு வழிப் படாமையும், ஓடியது உணர்தலும்,
அரி ஏர் உண்கண் அரிவையர் ஏத்த; 215
அறிவு மடம் படுதலும், அறிவு நன்கு உடைமையும்,
வரிசை அறிதலும், வரையாது கொடுத்தலும்,
பரிசில் வாழ்க்கைப் பரிசிலர் ஏத்த;
பல் மீன் நடுவண் பால் மதி போல,
இன் நகை ஆயமொடு இருந்தோற் குறுகி 220


யாழ் வாசித்து, அரசனைப் புகழ்ந்து பாடுதல்


பைங் கண் ஊகம் பாம்பு பிடித்தன்ன,
அம் கோட்டுச் செறிந்த அவிழ்ந்து வீங்கு திவவின்;
மணி நிரைத்தன்ன வனப்பின்; வாய் அமைத்து,
வயிறு சேர்பு ஒழுகிய வகை அமை அகளத்து,
கானக் குமிழின் கனி நிறம் கடுப்ப, 225
புகழ் வினைப் பொலிந்த பச்சையொடு; தேம் பெய்து,
அமிழ்து பொதிந்து இலிற்றும், அடங்கு புரி நரம்பின்;
பாடு துறை முற்றிய பயன் தெரி கேள்விக்
கூடு கொள் இன் இயம் குரல் குரல் ஆக,
நூல் நெறி மரபின், பண்ணி, 'ஆனாது, 230
முதுவோர்க்கு முகிழ்த்த கையினை' எனவும்,
'இளையோர்க்கு மலர்ந்த மார்பினை' எனவும்
'ஏரோர்க்கு நிழன்ற கோலினை' எனவும்
'தேரோர்க்கு அழன்ற வேலினை' எனவும்
நீ சில மொழியா அளவை 235


பாணர் முதலியோர்க்கு அவன் 
உண்டி முதலியன கொடுத்தல்


மாசு இல்,
காம்பு சொலித்தன்ன அறுவை உடீஇ,
பாம்பு வெகுண்டன்ன தேறல் நல்கி,
கா எரியூட்டிய கவர் கணைத் தூணிப்
பூ விரி கச்சைப் புகழோன் தன்முன்,
பனிவரை மார்பன், பயந்த நுண் பொருள் 240
பனுவலின் வழாஅப் பல் வேறு அடிசில்,
வாள் நிற விசும்பின் கோள்மீன் சூழ்ந்த
இளங் கதிர் ஞாயிறு எள்ளும் தோற்றத்து
விளங்கு பொற்கலத்தில் விரும்புவன பேணி,
ஆனா விருப்பின், தான் நின்று ஊட்டி, 245


நல்லியக்கோடன் அளிக்கும் பரிசில்


திறல் சால் வென்றியொடு தெவ்வுப் புலம் அகற்றி,
விறல் வேல் மன்னர் மன் எயில் முருக்கி,
நயவர், பாணர், புன்கண் தீர்த்தபின்,
வயவர் தந்த வான் கேழ் நிதியமொடு;
பருவ வானத்துப் பாற்கதிர் பரப்பி 250
உருவ வான் மதி ஊர்கொண்டாங்கு,
கூர் உளி பொருத வடு ஆழ் நோன் குறட்டு
ஆரம் சூழ்ந்த அயில் வாய் நேமியொடு,
சிதர் நனை முருக்கின் சேண் ஓங்கு நெடுஞ் சினைத்
ததர் பிணி அவிழ்ந்த தோற்றம் போல, 255
உள் அரக்கு எறிந்த உருக்குறு போர்வை,
கருந் தொழில் வினைஞர் கைவினை முற்றி,
ஊர்ந்து பெயர் பெற்ற எழில் நடைப் பாகரொடு;
மா செலவு ஒழிக்கும் மதனுடை நோன் தாள்
வாள் முகப் பாண்டில் வலவனொடு; தரீஇ, 260
அன்றே விடுக்கும், அவன் பரிசில்


நல்லியக்கோடனது புகழும் பண்பும்


மென் தோள்,
துகில் அணி அல்குல், துளங்கு இயல் மகளிர்
அகில் உண விரித்த அம் மென் கூந்தலின்,
மணி மயில் கலாபம் மஞ்சு இடைப் பரப்பி,
துணி மழை தவழும் துயல் கழை நெடுங் கோட்டு, 265
எறிந்து உரும் இறந்த ஏற்று அருஞ் சென்னி,
குறிஞ்சிக் கோமான், கொய் தளிர்க் கண்ணி,
செல் இசை நிலைஇய பண்பின்,
நல்லியக்கோடனை நயந்தனிர் செலினே.


ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை
இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.


சிறுபாண் ஆற்றுப்படை முற்றும்

தனிப் பாடல்கள்


அணி இழையார்க்கு ஆர் அணங்கு ஆகி, மற்று அந் நோய்
தணி மருந்தும் தாமே ஆம் என்ப-மணி மிடை பூண்
இம்மென் முழவின் எயிற்பட்டின நாடன்
செம்மல் சிலை பொருத தோள். 1

நெடு வரைச் சந்தனம் நெஞ்சம் குளிர்ப்பப்
படும், அடும் பாம்பு ஏர் மருங்குல்-இடு கொடி
ஓடிய மார்பன் உயர் நல்லியக்கோடன்
சூடிய கண்ணி சுடும். 2