101-110

101
அன்னை, வாழி! வேண்டு, அன்னை! உதுக் காண்
ஏர் கொடிப் பாசடும்பு பரிய ஊர்பு இழிபு
நெய்தல் மயக்கி வந்தன்று, நின் மகள்
பூப் போல் உண்கண் மரீஇய
5
நோய்க்கு மருந்து ஆகிய கொண்கன் தேரே.

அறத்தோடு நின்ற பின்னர் வரைதற் பொருட்டுப் பிரிந்த தலைமகன் வரைவோடு புகுந்தவழித் தோழி செவிலிக்குக் காட்டிச் சொல்லியது. 1

102
அன்னை, வாழி! வேண்டு, அன்னை! நம் ஊர்
நீல் நிறப் பெருங் கடல் புள்ளின் ஆனாது,
துன்புறு துயரம் நீங்க,
இன்புற இசைக்கும், அவர் தேர் மணிக் குரலே.

இதுவும் அது. 2

103
அன்னை, வாழி! வேண்டு, அன்னை! புன்னையொடு
ஞாழல் பூக்கும் தண்ணம் துறைவன்
இவட்கு அமைந்தனனால் தானே;
தனக்கு அமைந்தன்று, இவள் மாமைக் கவினே.

அறத்தொடு நின்ற தோழி, வதுவை நிகழாநின்றுழி, தாய்க்குக் காட்டி உவந்து சொல்லியது. 3

104
அன்னை, வாழி! வேண்டு, அன்னை! நம் ஊர்ப்
பலர் மடி பொழுதின், நலம் மிகச் சாஅய்
நள்ளென வந்த இயல் தேர்ச்
செல்வக் கொண்கன் செல்வனஃது ஊரே.

புதல்வற் பெற்றுழித் தலைமகன் மனைக்கண் சென்ற செவிலிக்கு, முன்பு அறத்தொடு நின்று வதுவை கூட்டிய தோழி, அவன் ஊர் நன்மை காட்டிச் சொல்லியது. 4

105
அன்னை, வாழி! வேண்டு, அன்னை! முழங்குகடல்
திரை தரு முத்தம் வெண் மணல் இமைக்கும்
தண்ணம் துறைவன் வந்தென,
பொன்னினும் சிவந்தன்று; கண்டிசின் நுதலே.

அறத்தொடு நின்ற பின் வேண்டுவன தருதற்குப் பிரிந்த தலைமகன் வரைவொடு வந்துழி, தலைமகள் நுதற்கண் முன்புள்ள பசப்பு நீங்கும் வண்ணம் தோன்றிய கதிர்ப்புக் காட்டி, செவிலிக்குத் தோழி சொல்லியது. 5

106
அன்னை, வாழி!வேண்டு, அன்னை! அவர் நாட்டுத்
துதிக்கால் அன்னம் துணை செத்து மிதிக்கும்
தண் கடல் வளையினும் இலங்கும் இவள்
அம் கலிழ் ஆகம் கண்டிசின் நினைந்தே.

அறத்தொடு நின்ற தோழி அது வற்புறுப்பான் வேண்டிச் செவிலிக்குச் சொல்லியது. 6

107
அன்னை, வாழி! வேண்டு, அன்னை! என் தோழி
சுடர் நுதல் பசப்பச் சாஅய், படர் மெலிந்து,
தண் கடல் படு திரை கேட்டொறும்,
துஞ்சாள் ஆகுதல் நோகோ யானே.

தோழி செவிலிக்கு அறத்தொடுநிலை குறித்துக் கூறியது. 7

108
அன்னை, வாழி! வேண்டு, அன்னை! கழிய
முண்டகம் மலரும் தண் கடல் சேர்ப்பன்
எம் தோள் துறந்தனன்ஆயின்,
எவன்கொல் மற்று அவன் நயந்த தோளே?

அறத்தொடுநிலை பிறந்த பின்னும் வரைவு நீடிற்றாக, 'மற்றொரு குலமகளை வரையும் கொல்?' என்று ஐயுற்ற செவிலி, குறிப்பு அறிந்த தோழி அவட்குச் சொல்லியது. 8

109
அன்னை, வாழி! வேண்டு, அன்னை! நெய்தல்
நீர்ப் படர் தூம்பின் பூக் கெழு துறைவன்
எம் தோள் துறந்த காலை, எவன்கொல்
பல் நாள் வரும், அவன் அளித்த பொழுதே?

அறத்தொடு நின்ற பின்பு வரைவான் பிரிந்த தலைமகன் கடிதின் வாராதவழி, ஐயுற்ற செவிலி, 'அவன் நும்மைத் துறந்தான்போலும்; நுங்கட்கு அவன் கூறிய திறம் யாது?' என்றாட்குத் தோழி சொல்லியது. 9

110
அன்னை, வாழி! வேண்டு, அன்னை! புன்னை
பொன் நிறம் விரியும் பூக் கெழு துறைவனை
'என்னை' என்றும், யாமே; இவ் ஊர்
பிறிது ஒன்றாகக் கூறும்;
5
ஆங்கும் ஆக்குமோ, வாழிய, பாலே?

நொதுமலர் வரைவின்கண் தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றது. 10

உரை

Home
HOME