101-110 |
101 |
அன்னை, வாழி! வேண்டு, அன்னை! உதுக் காண் |
|
ஏர் கொடிப் பாசடும்பு பரிய ஊர்பு இழிபு |
|
நெய்தல் மயக்கி வந்தன்று, நின் மகள் |
|
பூப் போல் உண்கண் மரீஇய |
|
5 |
நோய்க்கு மருந்து ஆகிய கொண்கன் தேரே. |
அறத்தோடு நின்ற பின்னர் வரைதற் பொருட்டுப் பிரிந்த தலைமகன் வரைவோடு புகுந்தவழித் தோழி செவிலிக்குக் காட்டிச் சொல்லியது. 1 |
102 |
அன்னை, வாழி! வேண்டு, அன்னை! நம் ஊர் |
|
நீல் நிறப் பெருங் கடல் புள்ளின் ஆனாது, |
|
துன்புறு துயரம் நீங்க, |
|
இன்புற இசைக்கும், அவர் தேர் மணிக் குரலே. |
|
இதுவும் அது. 2 |
103 |
அன்னை, வாழி! வேண்டு, அன்னை! புன்னையொடு |
|
ஞாழல் பூக்கும் தண்ணம் துறைவன் |
|
இவட்கு அமைந்தனனால் தானே; |
|
தனக்கு அமைந்தன்று, இவள் மாமைக் கவினே. |
|
அறத்தொடு நின்ற தோழி, வதுவை நிகழாநின்றுழி, தாய்க்குக் காட்டி உவந்து சொல்லியது. 3 |
104 |
அன்னை, வாழி! வேண்டு, அன்னை! நம் ஊர்ப் |
|
பலர் மடி பொழுதின், நலம் மிகச் சாஅய் |
|
நள்ளென வந்த இயல் தேர்ச் |
|
செல்வக் கொண்கன் செல்வனஃது ஊரே. |
|
புதல்வற் பெற்றுழித் தலைமகன் மனைக்கண் சென்ற செவிலிக்கு, முன்பு அறத்தொடு நின்று வதுவை கூட்டிய தோழி, அவன் ஊர் நன்மை காட்டிச் சொல்லியது. 4 |
105 |
அன்னை, வாழி! வேண்டு, அன்னை! முழங்குகடல் |
|
திரை தரு முத்தம் வெண் மணல் இமைக்கும் |
|
தண்ணம் துறைவன் வந்தென, |
|
பொன்னினும் சிவந்தன்று; கண்டிசின் நுதலே. |
|
அறத்தொடு நின்ற பின் வேண்டுவன தருதற்குப் பிரிந்த தலைமகன் வரைவொடு வந்துழி, தலைமகள் நுதற்கண் முன்புள்ள பசப்பு நீங்கும் வண்ணம் தோன்றிய கதிர்ப்புக் காட்டி, செவிலிக்குத் தோழி சொல்லியது. 5 |
106 |
அன்னை, வாழி!வேண்டு, அன்னை! அவர் நாட்டுத் |
|
துதிக்கால் அன்னம் துணை செத்து மிதிக்கும் |
|
தண் கடல் வளையினும் இலங்கும் இவள் |
|
அம் கலிழ் ஆகம் கண்டிசின் நினைந்தே. |
|
அறத்தொடு நின்ற தோழி அது வற்புறுப்பான் வேண்டிச் செவிலிக்குச் சொல்லியது. 6 |
107 |
அன்னை, வாழி! வேண்டு, அன்னை! என் தோழி |
|
சுடர் நுதல் பசப்பச் சாஅய், படர் மெலிந்து, |
|
தண் கடல் படு திரை கேட்டொறும், |
|
துஞ்சாள் ஆகுதல் நோகோ யானே. |
|
தோழி செவிலிக்கு அறத்தொடுநிலை குறித்துக் கூறியது. 7 |
108 |
அன்னை, வாழி! வேண்டு, அன்னை! கழிய |
|
முண்டகம் மலரும் தண் கடல் சேர்ப்பன் |
|
எம் தோள் துறந்தனன்ஆயின், |
|
எவன்கொல் மற்று அவன் நயந்த தோளே? |
|
அறத்தொடுநிலை பிறந்த பின்னும் வரைவு நீடிற்றாக, 'மற்றொரு குலமகளை வரையும் கொல்?' என்று ஐயுற்ற செவிலி, குறிப்பு அறிந்த தோழி அவட்குச் சொல்லியது. 8 |
109 |
அன்னை, வாழி! வேண்டு, அன்னை! நெய்தல் |
|
நீர்ப் படர் தூம்பின் பூக் கெழு துறைவன் |
|
எம் தோள் துறந்த காலை, எவன்கொல் |
|
பல் நாள் வரும், அவன் அளித்த பொழுதே? |
|
அறத்தொடு நின்ற பின்பு வரைவான் பிரிந்த தலைமகன் கடிதின் வாராதவழி, ஐயுற்ற செவிலி, 'அவன் நும்மைத் துறந்தான்போலும்; நுங்கட்கு அவன் கூறிய திறம் யாது?' என்றாட்குத் தோழி சொல்லியது. 9 |
110 |
அன்னை, வாழி! வேண்டு, அன்னை! புன்னை |
|
பொன் நிறம் விரியும் பூக் கெழு துறைவனை |
|
'என்னை' என்றும், யாமே; இவ் ஊர் |
|
பிறிது ஒன்றாகக் கூறும்; |
|
5 |
ஆங்கும் ஆக்குமோ, வாழிய, பாலே? |
நொதுமலர் வரைவின்கண் தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றது. 10 |