பகைவென்றதனைப் பாடும் புலவரே கூறினாரெனில், இவர் கல்வி கேள்விகளானும் அவற்றால் உள்ள புகழானும் மேலாக மதிக்கப் பெற்றவ ரென்பதற்கு வேறோர் கட்டுரையும் வேண்டுமோ? மகளிருட் புலமைசான்ற ஒருவர், ‘இவர் மக்களுட் குற்ற மற்ற அறிவினர்’ என்றும், ‘தாம் புகழத்தொடங்கியதைப் பிறர் புகழ இடமின்றி முற்றும்புகழ வல்லுநர்’ என்றும், ‘பொய்யா நாவினர்’ என்றும் இவரைப் பாராட்டி யிருக்கிறார். மற்றொரு புலவர் ‘இவர் விளங்கச் சொல்லுகின்ற நாவினையும் உள்ளே கவலை இல்லாத நெஞ்சினையும் மெய்ம்மை பாடுதலையும் நல்ல புகழையு முடையவர்’ என்று இவரைச் சிறப்பித்திருக்கிறார். வேறொரு புலவரும் ‘இவரது புகழ் உலகமுள்ள அளவும் அழியாது’ என்றும் ‘இவர் வாய்மைமொழிபவர்’ என்றும் புகழ்ந்திருக்கிறார். இவரைப் பற்றிச் சங்கத்துச் சான்றோரான பலர் கூறியுள்ள இச்செய்திகளால் இவரது கல்வியும் பாடுந் திறமையும் கேள்வியும் அறிவினுண்மையும் சொல் வன்மையும் வாய்மையும் மன ஒருமையும் புகழு முதலியவை வெள்ளிடைமலையென விளங்குகின்றன. சிலாசாதனம் இவரை ‘முத்தமிழ்க் கபிலன்’ என்று புகழுகின்றது. அன்றியும் இவர் குறிஞ்சிப் பாட்டை இயற்றி ஆரியவரசன் பிரகத்தனைத் தமிழ் அறிவுறுத்தினாரென்ப. இஃது இவர் நிரந்து இனிது சொல்லுதல் வல்லுநரென்பதை அறிவிக்கும். அவ்வரசனே ஆரியவரசன் யாழ்ப் பிரமதத்தனென்பதும் அவனே பின்பு தமிழ்ப் புலமை சான்று பாடினனென்பதும் அவன் பாடிய செய்யுள் குறுந்தொகையுள் கோக்கப்பட்டுள்ள தென்பதும் சிலரது ஊகம். ‘கபிலபரணர் தங்களில் வாது செய்தார்’ என்று வீரசோழியவுரையிற் காணப்படும் வாக்கியம் இவர் வாதாடுதலிலும் வல்லவ ரென்பதைக் காட்டும். உயர்திணை உம்மைத்தொகைக்கு உதாரணமாகக் காட்டப் பெற்ற ‘கபிலபரணர்’ என்பது இராம லக்ஷுமணர் என்பதுபோல நட்புப் பற்றியதோ, இராம ராவணர் என்பதுபோலப் பகை பற்றியதோ, வாலி சுக்கிரீவர் என்பதுபோல முன் நட்பும் பின்
பகையும்
|