| முகப்பு | தொடக்கம் | 
| 
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் | 
| 
 34 | 
| 
'ஆன் முலை அறுத்த அறனிலோர்க்கும், | |
| 
மாண் இழை மகளிர் கருச் சிதைத்தோர்க்கும், | |
| 
பார்ப்பார்த் தப்பிய கொடுமையோர்க்கும், | |
| 
வழுவாய் மருங்கில் கழுவாயும் உள' என, | |
| 
5 | 
'நிலம் புடைபெயர்வது ஆயினும், ஒருவன் | 
| 
செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்' என, | |
| 
அறம் பாடின்றே ஆயிழை கணவ! | |
| 
'காலை அந்தியும், மாலை அந்தியும், | |
| 
புறவுக் கரு அன்ன புன் புல வரகின் | |
| 
10 | 
பால் பெய் புன்கம் தேனொடு மயக்கி, | 
| 
குறு முயல் கொழுஞ் சூடு கிழித்த ஒக்கலொடு, | |
| 
இரத்தி நீடிய அகன் தலை மன்றத்து, | |
| 
கரப்பு இல் உள்ளமொடு வேண்டு மொழி பயிற்றி, | |
| 
அமலைக் கொழுஞ் சோறு ஆர்ந்த பாணர்க்கு | |
| 
15 | 
அகலாச் செல்வம் முழுவதும் செய்தோன், | 
| 
எம் கோன், வளவன் வாழ்க!' என்று, நின் | |
| 
பீடு கெழு நோன் தாள் பாடேன் ஆயின், | |
| 
படுபு அறியலனே, பல் கதிர்ச் செல்வன்; | |
| 
யானோ தஞ்சம்; பெரும! இவ் உலகத்து, | |
| 
20 | 
சான்றோர் செய்த நன்று உண்டாயின், | 
| 
இமயத்து ஈண்டி, இன் குரல் பயிற்றி, | |
| 
கொண்டல் மா மழை பொழிந்த | |
| 
நுண் பல் துளியினும் வாழிய, பலவே! | |
| 
திணை பாடாண் திணை; துறை இயன்மொழி.
 | |
| 
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை ஆலத்தூர் கிழார் பாடியது.
 | 
| 
 35 | 
| 
நளி இரு முந்நீர் ஏணி ஆக, | |
| 
வளி இடை வழங்கா வானம் சூடிய | |
| 
மண் திணி கிடக்கைத் தண் தமிழ்க் கிழவர், | |
| 
முரசு முழங்கு தானை மூவருள்ளும், | |
| 
5 | 
அரசு எனப்படுவது நினதே, பெரும! | 
| 
அலங்குகதிர்க் கனலி நால்வயின் தோன்றினும், | |
| 
இலங்குகதிர் வெள்ளி தென் புலம் படரினும், | |
| 
அம் தண் காவிரி வந்து கவர்பு ஊட்ட, | |
| 
தோடு கொள் வேலின் தோற்றம் போல, | |
| 
10 | 
ஆடு கண் கரும்பின் வெண் பூ நுடங்கும் | 
| 
நாடு எனப்படுவது நினதே அத்தை; ஆங்க | |
| 
நாடு கெழு செல்வத்துப் பீடு கெழு வேந்தே! | |
| 
நினவ கூறுவல்; எனவ கேண்மதி! | |
| 
அறம் புரிந்தன்ன செங்கோல் நாட்டத்து | |
| 
15 | 
முறை வேண்டு பொழுதில் பதன் எளியோர் ஈண்டு | 
| 
உறை வேண்டு பொழுதில் பெயல் பெற்றோரே; | |
| 
ஞாயிறு சுமந்த கோடு திரள் கொண்மூ | |
| 
மாக விசும்பின் நடுவு நின்றாங்கு, | |
| 
கண் பொர விளங்கு நின் விண் பொரு வியன்குடை | |
| 
20 | 
வெயில் மறைக் கொண்டன்றோ? அன்றே; வருந்திய | 
| 
குடி மறைப்பதுவே; கூர்வேல் வளவ! | |
| 
வெளிற்றுப் பனந் துணியின் வீற்றுவீற்றுக் கிடப்ப, | |
| 
களிற்றுக் கணம் பொருத கண் அகன் பறந்தலை, | |
| 
வருபடை தாங்கி, பெயர் புறத்து ஆர்த்து, | |
| 
25 | 
பொருபடை தரூஉம் கொற்றமும் உழுபடை | 
| 
ஊன்று சால் மருங்கின் ஈன்றதன் பயனே; | |
| 
மாரி பொய்ப்பினும், வாரி குன்றினும், | |
| 
இயற்கை அல்லன செயற்கையில் தோன்றினும், | |
| 
காவலர்ப் பழிக்கும், இக் கண் அகல் ஞாலம்; | |
| 
30 | 
அது நற்கு அறிந்தனைஆயின், நீயும் | 
| 
நொதுமலாளர் பொதுமொழி கொள்ளாது, | |
| 
பகடு புறந்தருநர் பாரம் ஓம்பி, | |
| 
குடி புறந்தருகுவை ஆயின், நின் | |
| 
அடி புறந்தருகுவர், அடங்காதோரே. | |
| 
திணை அது; துறை செவியறிவுறூஉ.
 | |
| 
அவனை வெள்ளைக்குடி நாகனார் பாடி, பழஞ் செய்க்கடன் வீடுகொண்டது.
 | 
| 
 36 | 
| 
அடுநை ஆயினும், விடுநை ஆயினும், | |
| 
நீ அளந்து அறிதி, நின் புரைமை வார் கோல், | |
| 
செறி அரிச் சிலம்பின், குறுந் தொடி மகளிர் | |
| 
பொலம் செய் கழங்கின் தெற்றி ஆடும் | |
| 
5 | 
தண் ஆன்பொருநை வெண் மணல் சிதைய, | 
| 
கருங் கைக் கொல்லன் அரம் செய் அவ் வாய் | |
| 
நெடுங் கை நவியம் பாய்தலின், நிலை அழிந்து, | |
| 
வீ கமழ் நெடுஞ் சினை புலம்ப, காவுதொறும் | |
| 
கடி மரம் தடியும் ஓசை தன் ஊர் | |
| 
10 | 
நெடு மதில் வரைப்பின் கடி மனை இயம்ப, | 
| 
ஆங்கு இனிது இருந்த வேந்தனொடு, ஈங்கு, நின் | |
| 
சிலைத் தார் முரசம் கறங்க, | |
| 
மலைத்தனை என்பது நாணுத் தகவு உடைத்தே. | |
| 
திணை வஞ்சி; துறை துணைவஞ்சி.
 | |
| 
அவன் கருவூர் முற்றியிருந்தானை ஆலத்தூர் கிழார் பாடியது.
 | 
| 
 37 | 
| 
நஞ்சுடை வால் எயிற்று, ஐந் தலை சுமந்த, | |
| 
வேக வெந் திறல், நாகம் புக்கென, | |
| 
விசும்பு தீப் பிறப்பத் திருகி, பசுங் கொடிப் | |
| 
பெரு மலை விடரகத்து உரும் எறிந்தாங்கு, | |
| 
5 | 
புள் உறு புன்கண் தீர்த்த, வெள் வேல், | 
| 
சினம் கெழு தானை, செம்பியன் மருக! | |
| 
கராஅம் கலித்த குண்டு கண் அகழி, | |
| 
இடம் கருங் குட்டத்து உடன் தொக்கு ஓடி, | |
| 
யாமம் கொள்பவர் சுடர் நிழல் கதூஉம் | |
| 
10 | 
கடு முரண் முதலைய நெடு நீர் இலஞ்சி, | 
| 
செம்பு உறழ் புரிசை, செம்மல் மூதூர், | |
| 
வம்பு அணி யானை வேந்து அகத்து உண்மையின், | |
| 
'நல்ல' என்னாது, சிதைத்தல் | |
| 
வல்லையால், நெடுந்தகை! செருவத்தானே. | |
| 
திணை வாகை; துறை அரசவாகை; முதல் வஞ்சியும் ஆம்.
 | |
| 
அவனை மாறோக்கத்து நப்பசலையார் பாடியது.
 | 
| 
 38 | 
| 
வரை புரையும் மழ களிற்றின் மிசை, | |
| 
வான் துடைக்கும் வகைய போல, | |
| 
விரவு உருவின கொடி நுடங்கும் | |
| 
வியன் தானை விறல் வேந்தே! | |
| 
5 | 
நீ, உடன்று நோக்கும்வாய் எரி தவழ, | 
| 
நீ, நயந்து நோக்கும்வாய் பொன் பூப்ப, | |
| 
செஞ் ஞாயிற்று நிலவு வேண்டினும், | |
| 
வெண் திங்களுள் வெயில் வேண்டினும், | |
| 
வேண்டியது விளைக்கும் ஆற்றலைஆகலின், | |
| 
10 | 
நின் நிழல் பிறந்து, நின் நிழல் வளர்ந்த, | 
| 
எம் அளவு எவனோ மற்றே? 'இன் நிலைப் | |
| 
பொலம் பூங் காவின் நல் நாட்டோரும் | |
| 
செய் வினை மருங்கின் எய்தல் அல்லதை, | |
| 
உடையோர் ஈதலும் இல்லோர் இரத்தலும் | |
| 
15 | 
கடவது அன்மையின், கையறவு உடைத்து' என, | 
| 
ஆண்டுச் செய் நுகர்ச்சி ஈண்டும் கூடலின், | |
| 
நின் நாடு உள்ளுவர், பரிசிலர் | |
| 
ஒன்னார் தேஎத்தும், நின்னுடைத்து எனவே. | |
| 
திணை பாடாண் திணை; துறை இயன்மொழி.
 | |
| 
அவன், 'எம் உள்ளீர்? எம் நாட்டீர்?' என்றாற்கு ஆவூர் மூலங்கிழார் பாடியது.
 | 
| 
 39 | 
| 
புறவின் அல்லல் சொல்லிய, கறை அடி | |
| 
யானை வால் மருப்பு எறிந்த வெண் கடைக் | |
| 
கோல் நிறை துலாஅம் புக்கோன் மருக! | |
| 
ஈதல் நின் புகழும் அன்றே; சார்தல் | |
| 
5 | 
ஒன்னார் உட்கும் துன் அருங் கடுந் திறல் | 
| 
தூங்கு எயில் எறிந்த நின் ஊங்கணோர் நினைப்பின், | |
| 
அடுதல் நின் புகழும் அன்றே; கெடு இன்று, | |
| 
மறம் கெழு சோழர் உறந்தை அவையத்து, | |
| 
அறம் நின்று நிலையிற்று ஆகலின், அதனால் | |
| 
10 | 
முறைமை நின் புகழும் அன்றே; மறம் மிக்கு | 
| 
எழு சமம் கடந்த எழு உறழ் திணி தோள், | |
| 
கண் ஆர் கண்ணி, கலி மான், வளவ! | |
| 
யாங்கனம் மொழிகோ யானே ஓங்கிய | |
| 
வரை அளந்து அறியாப் பொன் படு நெடுங் கோட்டு | |
| 
15 | 
இமயம் சூட்டிய ஏம விற்பொறி, | 
| 
மாண் வினை நெடுந் தேர், வானவன் தொலைய, | |
| 
வாடா வஞ்சி வாட்டும் நின் | |
| 
பீடு கெழு நோன் தாள் பாடுங்காலே? | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
அவனை மாறோக்கத்து நப்பசலையார் பாடியது.
 | 
| 
 40 | 
| 
நீயே, பிறர் ஓம்புறு மற மன் எயில் | |
| 
ஓம்பாது கடந்து அட்டு, அவர் | |
| 
முடி புனைந்த பசும் பொன் நின் | |
| 
அடி பொலியக் கழல் தைஇய | |
| 
5 | 
வல்லாளனை; வய வேந்தே! | 
| 
யாமே, நின், இகழ் பாடுவோர் எருத்து அடங்க, | |
| 
புகழ் பாடுவோர் பொலிவு தோன்ற, | |
| 
இன்று கண்டாங்குக் காண்குவம் என்றும் | |
| 
இன்சொல் எண் பதத்தை ஆகுமதி பெரும! | |
| 
10 | 
ஒரு பிடி படியும் சீறிடம் | 
| 
எழு களிறு புரக்கும் நாடு கிழவோயே! | |
| 
திணை அது; துறை செவியறிவுறூஉ.
 | |
| 
அவனை ஆவூர் முலங்கிழார் பாடியது.
 | 
| 
 41 | 
| 
காலனும் காலம் பார்க்கும்; பாராது, | |
| 
வேல் ஈண்டு தானை விழுமியோர் தொலைய, | |
| 
வேண்டு இடத்து அடூஉம் வெல் போர் வேந்தே! | |
| 
திசை இரு நான்கும் உற்கம் உற்கவும், | |
| 
5 | 
பெரு மரத்து, இலை இல் நெடுங் கோடு வற்றல் பற்றவும், | 
| 
அஞ்சுவரத் தகுந புள்ளுக் குரல் இயம்பவும், | |
| 
எயிறு நிலத்து வீழவும், எண்ணெய் ஆடவும், | |
| 
களிறு மேல் கொள்ளவும், காழகம் நீப்பவும், | |
| 
10 | 
வெள்ளி நோன் படை கட்டிலொடு கவிழவும், | 
| 
கனவின் அரியன காணா, நனவில் | |
| 
செருச் செய் முன்ப! நின் வரு திறன் நோக்கி, | |
| 
மையல் கொண்ட ஏமம் இல் இருக்கையர், | |
| 
புதல்வர் பூங் கண் முத்தி, மனையோட்கு | |
| 
15 | 
எவ்வம் கரக்கும் பைதல் மாக்களொடு | 
| 
பெருங் கலக்குற்றன்றால் தானே காற்றோடு | |
| 
எரி நிகழ்ந்தன்ன செலவின் | |
| 
செரு மிகு வளவ! நின் சினைஇயோர் நாடே. | |
| 
திணை வஞ்சி; துறை கொற்றவள்ளை.
 | |
| 
அவனைக் கோவூர் கிழார் பாடியது.
 | 
| 
 42 | 
| 
ஆனா ஈகை, அடு போர், அண்ணல்! நின் | |
| 
யானையும் மலையின் தோன்றும்; பெரும! நின் | |
| 
தானையும் கடல் என முழங்கும்; கூர் நுனை | |
| 
வேலும் மின்னின் விளங்கும்; உலகத்து | |
| 
5 | 
அரைசு தலை பனிக்கும் ஆற்றலைஆதலின், | 
| 
புரை தீர்ந்தன்று; அது புதுவதோ அன்றே; | |
| 
தண் புனல் பூசல் அல்லது, நொந்து, | |
| 
'களைக, வாழி, வளவ!' என்று, நின் | |
| 
முனைதரு பூசல் கனவினும் அறியாது, | |
| 
10 | 
புலி புறங்காக்கும் குருளை போல, | 
| 
மெலிவு இல் செங்கோல் நீ புறங்காப்ப, | |
| 
பெரு விறல் யாணர்த்து ஆகி, அரிநர் | |
| 
கீழ் மடைக் கொண்ட வாளையும், உழவர் | |
| 
படை மிளிர்ந்திட்ட யாமையும், அறைநர் | |
| 
15 | 
கரும்பில் கொண்ட தேனும், பெருந் துறை | 
| 
நீர் தரு மகளிர் குற்ற குவளையும், | |
| 
வன் புலக் கேளிர்க்கு வரு விருந்து அயரும் | |
| 
மென் புல வைப்பின் நல் நாட்டுப் பொருந! | |
| 
மலையின் இழிந்து, மாக் கடல் நோக்கி, | |
| 
20 | 
நில வரை இழிதரும் பல் யாறு போல, | 
| 
புலவர் எல்லாம் நின் நோக்கினரே; | |
| 
நீயே, மருந்து இல் கணிச்சி வருந்த வட்டித்துக் | |
| 
கூற்று வெகுண்டன்ன முன்பொடு, | |
| 
மாற்று இரு வேந்தர் மண் நோக்கினையே. | |
| 
திணை வாகை; துறை அரசவாகை.
 | |
| 
அவனை இடைக்காடனார் பாடியது.
 | 
| 
 46 | 
| 
நீயே, புறவின் அல்லல் அன்றியும், பிறவும் | |
| 
இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை, | |
| 
இவரே, புலன் உழுது உண்மார் புன்கண் அஞ்சி, | |
| 
தமது பகுத்து உண்ணும் தண் நிழல் வாழ்நர்; | |
| 
5 | 
களிறு கண்டு அழூஉம் அழாஅல் மறந்த | 
| 
புன் தலைச் சிறாஅர்; மன்று மருண்டு நோக்கி, | |
| 
விருந்தின் புன்கண் நோவுடையர்; | |
| 
கேட்டனைஆயின், நீ வேட்டது செய்ம்மே! | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் மலையமான் மக்களை யானைக்கு இடுவுழி, கோவூர் கிழார் பாடி, உய்யக் கொண்டது.
 | 
| 
 69 | 
| 
கையது, கடன் நிறை யாழே; மெய்யது, | |
| 
புரவலர் இன்மையின் பசியே; அரையது, | |
| 
வேற்று இழை நுழைந்த வேர் நனை சிதாஅர் | |
| 
ஓம்பி உடுத்த உயவல் பாண! | |
| 
5 | 
பூட்கை இல்லோன் யாக்கை போலப் | 
| 
பெரும் புல்லென்ற இரும் பேர் ஒக்கலை; | |
| 
வையகம் முழுதுடன் வளைஇ, பையென | |
| 
என்னை வினவுதி ஆயின், மன்னர் | |
| 
அடு களிறு உயவும் கொடி கொள் பாசறை, | |
| 
10 | 
குருதிப் பரப்பின் கோட்டு மா தொலைச்சி, | 
| 
புலாக் களம் செய்த கலாஅத் தானையன் | |
| 
பிறங்கு நிலை மாடத்து உறந்தையோனே; | |
| 
பொருநர்க்கு ஓக்கிய வேலன், ஒரு நிலைப் | |
| 
பகைப் புலம் படர்தலும் உரியன்; தகைத் தார் | |
| 
15 | 
ஒள் எரி புரையும் உரு கெழு பசும் பூண் | 
| 
கிள்ளி வளவற் படர்குவை ஆயின், | |
| 
நெடுங் கடை நிற்றலும் இலையே; கடும் பகல் | |
| 
தேர் வீசு இருக்கை ஆர நோக்கி, | |
| 
நீ அவற் கண்ட பின்றை, பூவின் | |
| 
20 | 
ஆடு வண்டு இமிராத் தாமரை | 
| 
சூடாயாதல் அதனினும் இலையே. | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை ஆலத்தூர் கிழார் பாடியது.
 | 
| 
 70 | 
| 
தேஎம் தீம் தொடைச் சீறியாழ்ப் பாண! | |
| 
'கயத்து வாழ் யாமை காழ் கோத்தன்ன | |
| 
நுண் கோல் தகைத்த தெண் கண் மாக் கிணை | |
| 
இனிய காண்க; இவண் தணிக' எனக் கூறி; | |
| 
5 | 
வினவல் ஆனா முது வாய் இரவல! | 
| 
தைஇத் திங்கள் தண் கயம் போல, | |
| 
கொளக்கொளக் குறைபடாக் கூழுடை வியல் நகர், | |
| 
அடுதீ அல்லது சுடுதீ அறியாது; | |
| 
இரு மருந்து விளைக்கும் நல் நாட்டுப் பொருநன், | |
| 
10 | 
கிள்ளி வளவன் நல் இசை உள்ளி, | 
| 
நாற்ற நாட்டத்து அறு கால் பறவை | |
| 
சிறு வெள் ஆம்பல் ஞாங்கர் ஊதும் | |
| 
கை வள் ஈகைப் பண்ணன் சிறுகுடிப் | |
| 
பாதிரி கமழும் ஓதி, ஒள் நுதல், | |
| 
15 | 
இன் நகை விறலியொடு மென்மெல இயலிச் | 
| 
செல்வைஆயின், செல்வை ஆகுவை; | |
| 
விறகு ஒய் மாக்கள் பொன் பெற்றன்னதோர் | |
| 
தலைப்பாடு அன்று, அவன் ஈகை; | |
| 
நினைக்க வேண்டா; வாழ்க, அவன் தாளே! | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
அவனைக் கோவூர் கிழார் பாடியது.
 | 
| 
 226 | 
| 
செற்றன்று ஆயினும், செயிர்த்தன்று ஆயினும், | |
| 
உற்றன்று ஆயினும், உய்வு இன்று மாதோ; | |
| 
பாடுநர் போலக் கைதொழுது ஏத்தி, | |
| 
இரந்தன்றாகல் வேண்டும் பொலந் தார் | |
| 
5 | 
மண்டு அமர் கடக்கும் தானைத் | 
| 
திண் தேர் வளவற் கொண்ட கூற்றே. | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனை மாறோக்கத்து நப்பசலையார் பாடியது.
 | 
| 
 227 | 
| 
நனி பேதையே, நயன் இல் கூற்றம்! | |
| 
விரகு இன்மையின் வித்து அட்டு உண்டனை; | |
| 
இன்னும் காண்குவை, நன் வாய் ஆகுதல்; | |
| 
ஒளிறு வாள் மறவரும், களிறும், மாவும், | |
| 
5 | 
குருதி அம் குரூஉப் புனல் பொரு களத்து ஒழிய, | 
| 
நாளும் ஆனான் கடந்து அட்டு, என்றும் நின் | |
| 
வாடு பசி அருத்திய வசை தீர் ஆற்றல் | |
| 
நின் ஓர் அன்ன பொன் இயல் பெரும் பூண் | |
| 
வளவன் என்னும் வண்டு மூசு கண்ணி | |
| 
10 | 
இனையோற் கொண்டனைஆயின், | 
| 
இனி யார், மற்று நின் பசி தீர்ப்போரே? | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
அவனை ஆடுதுறை மாசாத்தனார் பாடியது.
 | 
| 
 228 | 
| 
கலம் செய் கோவே! கலம் செய் கோவே! | |
| 
இருள் திணிந்தன்ன குரூஉத் திரள் பரூஉப் புகை | |
| 
அகல் இரு விசும்பின் ஊன்றும் சூளை, | |
| 
நனந் தலை மூதூர்க் கலம் செய் கோவே! | |
| 
5 | 
அளியை நீயே; யாங்கு ஆகுவைகொல்? | 
| 
நிலவரை சூட்டிய நீள் நெடுந் தானைப் | |
| 
புலவர் புகழ்ந்த பொய்யா நல் இசை, | |
| 
விரி கதிர் ஞாயிறு விசும்பு இவர்ந்தன்ன | |
| 
சேண் விளங்கு சிறப்பின், செம்பியர் மருகன் | |
| 
10 | 
கொடி நுடங்கு யானை நெடுமா வளவன் | 
| 
தேவர் உலகம் எய்தினன்ஆதலின், | |
| 
அன்னோற் கவிக்கும் கண் அகன் தாழி | |
| 
வனைதல் வேட்டனைஆயின், எனையதூஉம் | |
| 
இரு நிலம் திகிரியா, பெரு மலை | |
| 
15 | 
மண்ணா, வனைதல் ஒல்லுமோ, நினக்கே? | 
| 
திணை அது; துறை ஆனந்தப்பையுள்.
 | |
| 
அவனை ஐயூர் முடவனார் பாடியது.
 | 
| 
 386 | 
| 
நெடு நீர நிறை கயத்துப் | |
| 
படு மாரித் துளி போல, | |
| 
நெய் துள்ளிய வறை முகக்கவும், | |
| 
சூடு கிழித்து வாடுஊன் மிசையவும், | |
| 
5 | 
ஊன் கொண்ட வெண் மண்டை | 
| 
ஆன் பயத்தான் முற்று அழிப்பவும், | |
| 
வெய்து உண்ட வியர்ப்பு அல்லது, | |
| 
செய் தொழிலான் வியர்ப்பு அறியாமை | |
| 
ஈத்தோன், எந்தை, இசை தனது ஆக; | |
| 
10 | 
வயலே, நெல்லின் வேலி நீடிய கரும்பின் | 
| 
பாத்திப் பன் மலர்ப் பூத் ததும்பின; | |
| 
புறவே, புல் அருந்து பல் ஆயத்தான், | |
| 
வில் இருந்த வெங் குறும்பின்று; | |
| 
கடலே, கால் தந்த கலன் எண்ணுவோர் | |
| 
15 | 
கானல் புன்னைச் சினை நிலைக்குந்து; | 
| 
கழியே, சிறு வெள் உப்பின் கொள்ளை சாற்றி, | |
| 
பெருங் கல் நல் நாட்டு உமண் ஒலிக்குந்து; | |
| 
அன்ன நல் நாட்டுப் பொருநம், யாமே; | |
| 
பொராஅப் பொருநரேம்; | |
| 
20 | 
குண திசை நின்று குடமுதல் செலினும், | 
| 
குட திசை நின்று குணமுதல் செலினும், | |
| 
வட திசை நின்று தென்வயின் செலினும், | |
| 
தென் திசை நின்று குறுகாது நீடினும், | |
| 
யாண்டும் நிற்க, வெள்ளி; யாம் | |
| 
25 | 
வேண்டியது உணர்ந்தோன் தாள் வாழியவே! | 
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைக் கோவூர் கிழார் பாடியது.
 | 
| 
 393 | 
| 
பதிமுதல் பழகாப் பழங்கண் வாழ்க்கைக் | |
| 
குறு நெடுந் துணையொடு கூமை வீதலின், | |
| 
குடி முறை பாடி, ஒய்யென வருந்தி, | |
| 
அடல் நசை மறந்த எம் குழிசி மலர்க்கும் | |
| 
5 | 
கடன் அறியாளர் பிற நாட்டு இன்மையின், | 
| 
'வள்ளன்மையின் எம் வரைவோர் யார்?' என, | |
| 
உள்ளிய உள்ளமொடு உலை நசை துணையா, | |
| 
.................... கவகம் எல்லாம் ஒருபால் பட்டென, | |
| 
மலர் தார் அண்ணல் நின் நல் இசை உள்ளி, | |
| 
10 | 
ஈர்ங்கை மறந்த என் இரும் பேர் ஒக்கல் | 
| 
கூர்ந்த எவ்வம் விட, கொழு நிணம் கிழிப்ப, | |
| 
கோடைப் பருத்தி வீடு நிறை பெய்த | |
| 
மூடைப் பண்டம் மிடை நிறைந்தன்ன, | |
| 
வெண் நிண மூரி அருள, நாள் உற | |
| 
15 | 
ஈன்ற அரவின் நா உருக் கடுக்கும் என் | 
| 
தொன்று படு சிதாஅர் துவர நீக்கி, | |
| 
போது விரி பகன்றைப் புது மலர் அன்ன, | |
| 
அகன்று மடி கலிங்கம் உடீஇ, செல்வமும், | |
| 
கேடு இன்று நல்குமதி, பெரும! மாசு இல் | |
| 
20 | 
மதி புரை மாக் கிணை தெளிர்ப்ப ஒற்றி, | 
| 
ஆடுமகள் அல்குல் ஒப்ப வாடி, | |
| 
'கோடை ஆயினும், கோடி............................... | |
| 
காவிரி புரக்கும் நல் நாட்டுப் பொருந! | |
| 
வாய் வாள் வளவன்! வாழ்க! எனப் | |
| 
25 | 
பீடு கெழு நோன் தாள் பாடுகம் பலவே. | 
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை நல்லிறையனார் பாடியது.
 | 
| 
 397 | 
| 
வெள்ளியும் இரு விசும்பு ஏர்தரும்; புள்ளும் | |
| 
உயர் சினைக் குடம்பைக் குரல் தோற்றினவே; | |
| 
பொய்கையும் போது கண் விழித்தன; பைபயச் | |
| 
சுடரும் சுருங்கின்று, ஒளியே; பாடு எழுந்து | |
| 
5 | 
இரங்குரல் முரசமொடு வலம்புரி ஆர்ப்ப, | 
| 
இரவுப் புறங்கண்ட காலைத் தோன்றி, | |
| 
எஃகு இருள் அகற்றும் ஏமப் பாசறை, | |
| 
வைகறை அரவம் கேளியர்! 'பல கோள் | |
| 
செய் தார் மார்ப! எழுமதி துயில்' என, | |
| 
10 | 
தெண் கண் மாக் கிணை தெளிர்ப்ப ஒற்றி, | 
| 
நெடுங் கடைத் தோன்றியேனே; அது நயந்து, | |
| 
'உள்ளி வந்த பரிசிலன் இவன்' என, | |
| 
நெய்யுறப் பொரித்த குய்யுடை நெடுஞ் சூடு, | |
| 
மணிக் கலன் நிறைந்த மணம் நாறு தேறல், | |
| 
15 | 
பாம்பு உரித்தன்ன வான் பூங் கலிங்கமொடு, | 
| 
மாரி அன்ன வண்மையின் சொரிந்து, | |
| 
வேனில் அன்ன என் வெப்பு நீங்க, | |
| 
அருங் கலம் நல்கியோனே; என்றும், | |
| 
செறுவில் பூத்த சேயிதழ்த் தாமரை, | |
| 
20 | 
அறு தொழில் அந்தணர் அறம் புரிந்து எடுத்த | 
| 
தீயொடு விளங்கும் நாடன், வாய் வாள் | |
| 
வலம் படு தீவின் பொலம் பூண் வளவன்; | |
| 
எறி திரைப் பெருங் கடல் இறுதிக்கண் செலினும், | |
| 
தெறு கதிர்க் கனலி தென் திசைத் தோன்றினும், | |
| 
25 | 
'என்?' என்று அஞ்சலம், யாமே; வென் வேல் | 
| 
அருஞ் சமம் கடக்கும் ஆற்றல் அவன் | |
| 
திருந்து கழல் நோன் தாள் தண் நிழலேமே. | |
| 
திணை அது; துறை பரிசில்விடை; கடைநிலை விடையும் ஆம்.
 | |
| 
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார் பாடியது.
 |