அரச வாகை

17
தென் குமரி, வட பெருங்கல்,
குண குட கடலா எல்லை,
குன்று, மலை, காடு, நாடு,
ஒன்று பட்டு வழிமொழிய,
5
கொடிது கடிந்து, கோல் திருத்தி,
படுவது உண்டு, பகல் ஆற்றி,
இனிது உருண்ட சுடர் நேமி
முழுது ஆண்டோர் வழி காவல!
குலை இறைஞ்சிய கோள் தாழை
10
அகல் வயல், மலை வேலி,
நிலவு மணல் வியன் கானல்,
தெண் கழிமிசைத் தீப் பூவின்,
தண் தொண்டியோர் அடு பொருந!
மாப் பயம்பின் பொறை போற்றாது,
15
நீடு குழி அகப்பட்ட
பீடு உடைய எறுழ் முன்பின்,
கோடு முற்றிய கொல் களிறு
நிலை கலங்கக் குழி கொன்று,
கிளை புகலத் தலைக்கூடியாங்கு
20
நீ பட்ட அரு முன்பின்
பெருந் தளர்ச்சி, பலர் உவப்ப,
பிறிது சென்று, மலர் தாயத்துப்
பலர் நாப்பண் மீக்கூறலின்,
'உண்டாகிய உயர் மண்ணும்,
25
சென்று பட்ட விழுக் கலனும்,
பெறல் கூடும், இவன் நெஞ்சு உறப் பெறின்' எனவும்,
'ஏந்து கொடி இறைப்புரிசை,
வீங்கு சிறை, வியல்அருப்பம்,
இழந்து வைகுதும், இனி நாம் இவன்
30
உடன்று நோக்கினன், பெரிது' எனவும்,
வேற்று அரசு பணி தொடங்கு நின்
ஆற்றலொடு புகழ் ஏத்தி,
காண்கு வந்திசின், பெரும! ஈண்டிய
மழை என மருளும் பல் தோல், மலை எனத்
35
தேன் இறை கொள்ளும் இரும் பல் யானை,
உடலுநர் உட்க வீங்கி, கடல் என
வான் நீர்க்கு ஊக்கும் தானை, ஆனாது
கடு ஒடுங்கு எயிற்ற அரவுத் தலை பனிப்ப,
இடி என முழங்கும் முரசின்,
40
வரையா ஈகைக் குடவர் கோவே!

திணை வாகை; துறை அரச வாகை; இயன்மொழியும் ஆம்.
பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனால் பிணியிருந்த யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை வலிதின் போய்க் கட்டில் எய்தினானைக் குறுங்கோழியூர் கிழார் பாடியது.

19
இமிழ் கடல் வளைஇய ஈண்டு அகன் கிடக்கை,
தமிழ் தலைமயங்கிய தலையாலங்கானத்து,
மன் உயிர்ப் பன்மையும், கூற்றத்து ஒருமையும்,
நின்னொடு தூக்கிய வென் வேல் செழிய!
5
'இரும் புலி வேட்டுவன் பொறி அறிந்து மாட்டிய
பெருங் கல் அடாரும் போன்ம்' என விரும்பி,
முயங்கினேன் அல்லனோ, யானே மயங்கிக்
குன்றத்து இறுத்த குரீஇ இனம் போல,
அம்பு சென்று இறுத்த அரும் புண் யானைத்
10
தூம்புடைத் தடக் கை வாயொடு துமிந்து,
நாஞ்சில் ஒப்ப, நிலம் மிசைப் புரள,
எறிந்து களம் படுத்த ஏந்து வாள் வலத்தர்
எந்தையொடு கிடந்தோர், எம் புன் தலைப் புதல்வர்;
'இன்ன விறலும் உளகொல், நமக்கு?' என,
15
மூதில் பெண்டிர் கசிந்து அழ, நாணி,
கூற்றுக் கண்ணோடிய வெருவரு பறந்தலை,
எழுவர் நல் வலம் கடந்தோய்! நின்
கழூஉ விளங்கு ஆரம் கவைஇய மார்பே?

திணை வாகை; துறை அரச வாகை.
அவனை அவர் பாடியது.

20
இரு முந்நீர்க் குட்டமும்,
வியல் ஞாலத்து அகலமும்,
வளி வழங்கு திசையும்,
வறிது நிலைஇய காயமும், என்றாங்கு
5
அவை அளந்து அறியினும், அளத்தற்கு அரியை,
அறிவும், ஈரமும், பெருங் கண்ணோட்டமும்:
சோறு படுக்கும் தீயோடு
செஞ் ஞாயிற்றுத் தெறல் அல்லது
பிறிது தெறல் அறியார், நின் நிழல் வாழ்வோரே;
10
திருவில் அல்லது கொலை வில் அறியார்;
நாஞ்சில் அல்லது படையும் அறியார்;
திறன் அறி வயவரொடு தெவ்வர் தேய, அப்
பிறர் மண் உண்ணும் செம்மல்! நின் நாட்டு
வயவுறு மகளிர் வேட்டு உணின் அல்லது,
15
பகைவர் உண்ணா அரு மண்ணினையே;
அம்பு துஞ்சும் கடி அரணால்,
அறம் துஞ்சும் செங்கோலையே;
புதுப் புள் வரினும், பழம் புள் போகினும்,
விதுப்புறவு அறியா ஏமக் காப்பினை;
20
அனையை ஆகல்மாறே,
மன் உயிர் எல்லாம் நின் அஞ்சும்மே.

திணையும் துறையும் அவை.
சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறையைக் குறுங் கோழியூர் கிழார் பாடியது.

21
புல வரை இறந்த புகழ்சால் தோன்றல்!
'நில வரை இறந்த குண்டு கண் அகழி,
வான் தோய்வு அன்ன புரிசை, விசும்பின்
மீன் பூத்தன்ன உருவ ஞாயில்,
5
கதிர் நுழைகல்லா மரம் பயில் கடி மிளை,
அருங் குறும்பு உடுத்த கானப்பேர் எயில்,
கருங் கைக் கொல்லன் செந் தீ மாட்டிய
இரும்பு உண் நீரினும் மீட்டற்கு அரிது' என,
வேங்கை மார்பன் இரங்க, வைகலும்
10
ஆடு கொளக் குழைந்த தும்பை, புலவர்
பாடுதுறை முற்றிய, கொற்ற வேந்தே!
இகழுநர் இசையொடு மாய,
புகழொடு விளங்கிப் பூக்க, நின் வேலே!

திணையும் துறையும் அவை.
கானப்பேர் எயில் கடந்த உக்கிரப் பெருவழுதியை ஐயூர் மூலங் கிழார் பாடியது.

22
தூங்கு கையான் ஓங்கு நடைய,
உறழ் மணியான் உயர் மருப்பின,
பிறை நுதலான் செறல் நோக்கின,
பா அடியான் பணை எருத்தின,
5
தேன் சிதைந்த வரை போல,
மிஞிறு ஆர்க்கும் கமழ் கடாத்து,
அயறு சோரும் இருஞ் சென்னிய,
மைந்து மலிந்த மழ களிறு
கந்து சேர்பு நிலைஇ வழங்க;
10
பாஅல் நின்று கதிர் சோரும்
வான் உறையும் மதி போலும்
மாலை வெண் குடை நீழலான்,
வாள் மருங்கு இலோர் காப்பு உறங்க;
அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த
15
ஆய் கரும்பின் கொடிக் கூரை,
சாறு கொண்ட களம் போல,
வேறு வேறு பொலிவு தோன்ற;
குற்று ஆனா உலக்கையான்
கலிச் சும்மை வியல் ஆங்கண்,
20
பொலந் தோட்டுப் பைந் தும்பை
மிசை அலங்கு உளைய பனைப் போழ் செரீஇ,
சின மாந்தர் வெறிக் குரவை
ஓத நீரின் பெயர்பு பொங்க;
வாய் காவாது பரந்து பட்ட
25
வியன் பாசறைக் காப்பாள!
வேந்து தந்த பணி திறையான்
சேர்ந்தவர்தம் கடும்பு ஆர்த்தும்,
ஓங்கு கொல்லியோர், அடு பொருந!
வேழ நோக்கின் விறல் வெஞ் சேஎய்!
30
வாழிய, பெரும! நின் வரம்பு இல் படைப்பே,
நிற் பாடிய வயங்கு செந் நாப்
பின் பிறர் இசை நுவலாமை,
ஓம்பாது ஈயும் ஆற்றல் எம் கோ!
'மாந்தரஞ்சேரல் இரும்பொறை ஓம்பிய நாடே
35
புத்தேள் உலகத்து அற்று' எனக் கேட்டு வந்து,
இனிது கண்டிசின்; பெரும! முனிவு இலை,
வேறு புலத்து இறுக்கும் தானையொடு,
சோறு பட நடத்தி நீ துஞ்சாய்மாறே!

திணையும் துறையும் அவை; துறை இயன்மொழியும் ஆம்.
சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையைக் குறுங் கோழியூர் கிழார் பாடியது.

23
'வெளிறு இல் நோன் காழ்ப் பணை நிலை முனைஇ,
களிறு படிந்து உண்டென, கலங்கிய துறையும்;
கார் நறுங் கடம்பின் பாசிலைத் தெரியல்,
சூர் நவை, முருகன் சுற்றத்து அன்ன, நின்
5
கூர் நல் அம்பின் கொடு வில் கூளியர்
கொள்வது கொண்டு, கொள்ளா மிச்சில்
கொள் பதம் ஒழிய வீசிய புலனும்;
வடி நவில் நவியம் பாய்தலின், ஊர்தொறும்
கடி மரம் துளங்கிய காவும்; நெடு நகர்
10
வினை புனை நல் இல் வெவ் எரி நைப்ப,
கனை எரி உரறிய மருங்கும்; நோக்கி,
நண்ணார் நாண, நாள்தொறும் தலைச் சென்று,
இன்னும் இன்ன பல செய்குவன், யாவரும்
துன்னல் போகிய துணிவினோன்' என,
15
ஞாலம் நெளிய ஈண்டிய வியன் படை
ஆலங்கானத்து அமர் கடந்து அட்ட
கால முன்ப! நின் கண்டனென் வருவல்
அறு மருப்பு எழில் கலை புலிப்பால் பட்டென,
சிறு மறி தழீஇய தெறிநடை மடப் பிணை
20
பூளை நீடிய வெருவரு பறந்தலை
வேளை வெண் பூக் கறிக்கும்
ஆள் இல் அத்தம் ஆகிய காடே.

திணையும் துறையும் அவை; துறை நல்லிசை வஞ்சியும் ஆம்.
பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைக் கல்லாடனார் பாடியது.

25
மீன் திகழ் விசும்பில் பாய் இருள் அகல
ஈண்டு செலல் மரபின் தன் இயல் வழாஅது,
உரவுச் சினம் திருகிய உரு கெழு ஞாயிறு,
நிலவுத் திகழ் மதியமொடு, நிலம் சேர்ந்தாஅங்கு,
5
உடல் அருந் துப்பின் ஒன்றுமொழி வேந்தரை
அணங்கு அரும் பறந்தலை உணங்கப் பண்ணி,
பிணியுறு முரசம் கொண்ட காலை,
நிலை திரிபு எறிய, திண் மடை கலங்கிச்
சிதைதல் உய்ந்தன்றோ, நின் வேல் செழிய!
10
முலை பொலி ஆகம் உருப்ப நூறி,
மெய்ம் மறந்து பட்ட வரையாப் பூசல்
ஒள் நுதல் மகளிர் கைம்மை கூர,
அவிர் அறல் கடுக்கும் அம் மென்
குவை இருங் கூந்தல் கொய்தல் கண்டே.

திணை வாகை; துறை அரச வாகை.
அவனைக் கல்லாடனார் பாடியது.

26
நளி கடல் இருங் குட்டத்து
வளி புடைத்த கலம் போல,
களிறு சென்று களன் அகற்றவும்,
களன் அகற்றிய வியல் ஆங்கண்
5
ஒளிறு இலைய எஃகு ஏந்தி,
அரைசு பட அமர் உழக்கி,
உரை செல முரசு வௌவி,
முடித் தலை அடுப்பு ஆக,
புனல் குருதி உலைக் கொளீஇ,
10
தொடித் தோள் துடுப்பின் துழந்த வல்சியின்,
அடுகளம் வேட்ட அடு போர்ச் செழிய!
ஆன்ற கேள்வி, அடங்கிய கொள்கை,
நான் மறை முதல்வர் சுற்றம் ஆக,
மன்னர் ஏவல் செய்ய, மன்னிய
15
வேள்வி முற்றிய வாய் வாள் வேந்தே!
நோற்றோர் மன்ற நின் பகைவர், நின்னொடு
மாற்றார் என்னும் பெயர் பெற்று,
ஆற்றார் ஆயினும், ஆண்டு வாழ்வோரே.

திணையும் துறையும் அவை.
அவனை மாங்குடி கிழார் பாடியது.

31
சிறப்புடை மரபின் பொருளும் இன்பமும்
அறத்து வழிப்படூஉம் தோற்றம் போல,
இரு குடை பின்பட ஓங்கிய ஒரு குடை,
உரு கெழு மதியின், நிவந்து, சேண் விளங்க,
5
நல் இசை வேட்டம் வேண்டி, வெல் போர்ப்
பாசறை அல்லது நீ ஒல்லாயே;
நுதிமுகம் மழுங்க மண்டி, ஒன்னார்
கடி மதில் பாயும் நின் களிறு அடங்கலவே;
'போர்' எனின், புகலும் புனை கழல் மறவர்,
10
'காடு இடைக் கிடந்த நாடு நனி சேஎய;
செல்வேம் அல்லேம்' என்னார்; 'கல்லென்
விழவுடை ஆங்கண் வேற்றுப் புலத்து இறுத்து,
குண கடல் பின்னது ஆக, குட கடல்
வெண் தலைப் புணரி நின் மான் குளம்பு அலைப்ப,
15
வல முறை வருதலும் உண்டு' என்று அலமந்து,
நெஞ்சு நடுங்கு அவலம் பாய,
துஞ்சாக் கண்ண, வட புலத்து அரசே.

திணை வாகை; துறை அரச வாகை; மழபுலவஞ்சியும் ஆம்.
அவனைக் கோவூர் கிழார் பாடியது.

33
கான் உறை வாழ்க்கை, கத நாய், வேட்டுவன்
மான் தசை சொரிந்த வட்டியும், ஆய்மகள்
தயிர் கொடு வந்த தசும்பும், நிறைய,
ஏரின் வாழ்நர் பேர் இல் அரிவையர்
5
குளக் கீழ் விளைந்த களக் கொள் வெண்ணெல்
முகந்தனர் கொடுப்ப, உகந்தனர் பெயரும்
தென்னம் பொருப்பன் நல் நாட்டுள்ளும்,
ஏழ் எயில் கதவம் எறிந்து, கைக்கொண்டு, நின்
பேழ்வாய் உழுவை பொறிக்கும் ஆற்றலை;
10
பாடுநர் வஞ்சி பாட, படையோர்
தாது எரு மறுகின் பாசறை பொலிய,
புலராப் பச்சிலை இடை இடுபு தொடுத்த
மலரா மாலைப் பந்து கண்டன்ன
ஊன் சோற்று அமலை பாண் கடும்பு அருத்தும்
15
செம்மற்று அம்ம, நின் வெம் முனை இருக்கை
வல்லோன் தைஇய வரி வனப்பு உற்ற
அல்லிப் பாவை ஆடு வனப்பு ஏய்ப்ப,
காம இருவர் அல்லது, யாமத்துத்
தனி மகன் வழங்காப் பனி மலர்க் காவின்,
20
ஒதுக்குஇன் திணி மணல் புதுப் பூம் பள்ளி
வாயில் மாடந்தொறும் மை விடை வீழ்ப்ப,
நீ ஆங்குக் கொண்ட விழவினும் பலவே.

திணை வாகை; துறை அரச வாகை.
அவனை அவர் பாடியது.

37
நஞ்சுடை வால் எயிற்று, ஐந் தலை சுமந்த,
வேக வெந் திறல், நாகம் புக்கென,
விசும்பு தீப் பிறப்பத் திருகி, பசுங் கொடிப்
பெரு மலை விடரகத்து உரும் எறிந்தாங்கு,
5
புள் உறு புன்கண் தீர்த்த, வெள் வேல்,
சினம் கெழு தானை, செம்பியன் மருக!
கராஅம் கலித்த குண்டு கண் அகழி,
இடம் கருங் குட்டத்து உடன் தொக்கு ஓடி,
யாமம் கொள்பவர் சுடர் நிழல் கதூஉம்
10
கடு முரண் முதலைய நெடு நீர் இலஞ்சி,
செம்பு உறழ் புரிசை, செம்மல் மூதூர்,
வம்பு அணி யானை வேந்து அகத்து உண்மையின்,
'நல்ல' என்னாது, சிதைத்தல்
வல்லையால், நெடுந்தகை! செருவத்தானே.

திணை வாகை; துறை அரசவாகை; முதல் வஞ்சியும் ஆம்.
அவனை மாறோக்கத்து நப்பசலையார் பாடியது.

42
ஆனா ஈகை, அடு போர், அண்ணல்! நின்
யானையும் மலையின் தோன்றும்; பெரும! நின்
தானையும் கடல் என முழங்கும்; கூர் நுனை
வேலும் மின்னின் விளங்கும்; உலகத்து
5
அரைசு தலை பனிக்கும் ஆற்றலைஆதலின்,
புரை தீர்ந்தன்று; அது புதுவதோ அன்றே;
தண் புனல் பூசல் அல்லது, நொந்து,
'களைக, வாழி, வளவ!' என்று, நின்
முனைதரு பூசல் கனவினும் அறியாது,
10
புலி புறங்காக்கும் குருளை போல,
மெலிவு இல் செங்கோல் நீ புறங்காப்ப,
பெரு விறல் யாணர்த்து ஆகி, அரிநர்
கீழ் மடைக் கொண்ட வாளையும், உழவர்
படை மிளிர்ந்திட்ட யாமையும், அறைநர்
15
கரும்பில் கொண்ட தேனும், பெருந் துறை
நீர் தரு மகளிர் குற்ற குவளையும்,
வன் புலக் கேளிர்க்கு வரு விருந்து அயரும்
மென் புல வைப்பின் நல் நாட்டுப் பொருந!
மலையின் இழிந்து, மாக் கடல் நோக்கி,
20
நில வரை இழிதரும் பல் யாறு போல,
புலவர் எல்லாம் நின் நோக்கினரே;
நீயே, மருந்து இல் கணிச்சி வருந்த வட்டித்துக்
கூற்று வெகுண்டன்ன முன்பொடு,
மாற்று இரு வேந்தர் மண் நோக்கினையே.

திணை வாகை; துறை அரசவாகை.
அவனை இடைக்காடனார் பாடியது.

43
நிலமிசை வாழ்நர் அலமரல் தீர,
தெறு கதிர்க் கனலி வெம்மை தாங்கி,
கால் உணவு ஆக, சுடரொடு கொட்கும்
அவிர்சடை முனிவரும் மருள, கொடுந்சிறைக்
5
கூர் உகிர்ப் பருந்தின் ஏறு குறித்து, ஒரீஇ,
தன் அகம் புக்க குறு நடைப் புறவின்
தபுதி அஞ்சிச் சீரை புக்க
வரையா ஈகை உரவோன் மருக!
நேரார்க் கடந்த முரண் மிகு திருவின்
10
தேர் வண் கிள்ளி தம்பி! வார் கோல்,
கொடுமர மறவர் பெரும! கடு மான்
கை வண் தோன்றல்! ஐயம் உடையேன்:
'ஆர் புனை தெரியல் நின் முன்னோர் எல்லாம்
பார்ப்பார் நோவன செய்யலர்; மற்று இது
15
நீர்த்தோ நினக்கு?' என வெறுப்பக் கூறி,
நின் யான் பிழைத்தது நோவாய் என்னினும்,
நீ பிழைத்தாய் போல் நனி நாணினையே;
'தம்மைப் பிழைத்தோர்ப் பொறுக்கும் செம்மல்
இக் குடிப் பிறந்தோர்க்கு எண்மை காணும்' என,
20
காண்தகு மொய்ம்ப! காட்டினை; ஆகலின்,
யானே பிழைத்தனென்; சிறக்க நின் ஆயுள்
மிக்கு வரும் இன் நீர்க் காவிரி
எக்கர் இட்ட மணலினும் பலவே!

திணையும் துறையும் அவை.
சோழன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தானும் தாமப்பல் கண்ணணும் வட்டுப் பொருவுழி, கை கரப்ப, வெகுண்டு வட்டுக் கொண்டு எறிந்தானை, 'சோழன் மகன் அல்லை, என, நாணியிருந்தானைத் தாமப்பல் கண்ணனார் பாடியது.

44
இரும் பிடித் தொழுதியொடு பெருங் கயம் படியா,
நெல்லுடைக் கவளமொடு நெய்ம் மிதி பெறாஅ,
திருந்து அரை நோன் வெளில் வருந்த ஒற்றி,
நிலமிசைப் புரளும் கைய, வெய்து உயிர்த்து,
5
அலமரல் யானை உரும் என முழங்கவும்,
பால் இல் குழவி அலறவும், மகளிர்
பூ இல் வறுந் தலை முடிப்பவும், நீர் இல்
வினை புனை நல் இல் இனைகூஉக் கேட்பவும்,
இன்னாது அம்ம, ஈங்கு இனிது இருத்தல்;
10
துன் அருந் துப்பின் வய மான் தோன்றல்!
அறவை ஆயின்,' நினது' எனத் திறத்தல்;
மறவை ஆயின், போரொடு திறத்தல்;
அறவையும் மறவையும் அல்லையாக,
திறவாது அடைத்த திண் நிலைக் கதவின்
15
நீள் மதில் ஒரு சிறை ஒடுங்குதல்
நாணுத்தகவு உடைத்து, இது காணுங்காலே.

திணையும் துறையும் அவை.
அவன் ஆவூர் முற்றியிருந்த காலத்து அடைத்து இருந்த நெடுங்கிள்ளியைக் கோவூர் கிழார் பாடியது.

51
நீர் மிகின், சிறையும் இல்லை; தீ மிகின்,
மன் உயிர் நிழற்றும் நிழலும் இல்லை;
வளி மிகின், வலியும் இல்லை; ஒளி மிக்கு
அவற்று ஓர் அன்ன சினப் போர் வழுதி,
5
'தண் தமிழ் பொது' எனப் பொறாஅன், போர் எதிர்ந்து,
கொண்டி வேண்டுவன் ஆயின், 'கொள்க' எனக்
கொடுத்த மன்னர் நடுக்கு அற்றனரே;
அளியரோ அளியர், அவன் அளி இழந்தோரே
நுண் பல சிதலை அரிது முயன்று எடுத்த
10
செம் புற்று ஈயல் போல,
ஒரு பகல் வாழ்க்கைக்கு உலமருவோரே!

திணை வாகை; துறை அரச வாகை.
பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதியை ஐயூர் முடவனார் பாடியது.

52
அணங்குடை நெடுங் கோட்டு அளையகம் முனைஇ,
முணங்கு நிமிர் வயமான் முழு வலி ஒருத்தல்,
ஊன் நசை உள்ளம் துரப்ப, இரை குறித்து,
தான் வேண்டு மருங்கின் வேட்டு எழுந்தாங்கு,
5
வட புல மன்னர் வாட, அடல் குறித்து,
இன்னா வெம் போர் இயல் தேர் வழுதி!
இது நீ கண்ணியது ஆயின், இரு நிலத்து
யார்கொல் அளியர்தாமே? ஊர்தொறும்
மீன் சுடு புகையின் புலவு நாறு நெடுங் கொடி
10
வயலுழை மருதின் வாங்குசினை வலக்கும்
பெரு நல் யாணரின் ஒரீஇ, இனியே
கலி கெழு கடவுள் கந்தம் கைவிடப்
பலி கண் மாறிய பாழ்படு பொதியில்,
நரை மூதாளர் நாய் இடக் குழிந்த
15
வல்லின் நல் அகம் நிறைய, பல் பொறிக்
கான வாரணம் ஈனும்
காடு ஆகி விளியும் நாடு உடையோரே!

திணையும் துறையும் அவை.
அவனை மருதன் இளநாகனார் பாடியது.

53
முதிர் வார் இப்பி முத்த வார் மணல்,
கதிர் விடு மணியின் கண் பொரு மாடத்து,
இலங்கு வளை மகளிர் தெற்றி ஆடும்
விளங்கு சீர் விளங்கில் விழுமம் கொன்ற
5
களம் கொள் யானை, கடு மான், பொறைய!
விரிப்பின் அகலும்; தொகுப்பின் எஞ்சும்;
மம்மர் நெஞ்சத்து எம்மனோர்க்கு ஒருதலை
கைம்முற்றல, நின் புகழே, என்றும்;
ஒளியோர் பிறந்த இம் மலர் தலை உலகத்து
10
வாழேம் என்றலும் அரிதே 'தாழாது
செறுத்த செய்யுள் செய் செந் நாவின்,
வெறுத்த கேள்வி, விளங்கு புகழ்க் கபிலன்
இன்று உளன் ஆயின், நன்றுமன்' என்ற நின்
ஆடு கொள் வரிசைக்கு ஒப்ப,
15
பாடுவல் மன்னால், பகைவரைக் கடப்பே.

திணையும் துறையும் அவை.
சேரன் மாந்தரஞ் சேரல் இரும்பொறையைப் பொருந்தில் இளங்கீரனார் பாடியது.

54
எம் கோன் இருந்த கம்பலை மூதூர்,
உடையோர் போல இடையின்று குறுகி,
செம்மல் நாள் அவை அண்ணாந்து புகுதல்
எம் அன வாழ்க்கை இரவலர்க்கு எளிதே;
5
இரவலர்க்கு எண்மை அல்லது புரவு எதிர்ந்து,
வானம் நாண, வரையாது, சென்றோர்க்கு
ஆனாது ஈயும் கவி கை வண்மைக்
கடு மான் கோதை துப்பு எதிர்ந்து எழுந்த
நெடுமொழி மன்னர் நினைக்கும் காலை,
10
பாசிலைத் தொடுத்த, உவலைக் கண்ணி,
மாசு உண் உடுக்கை, மடி வாய், இடையன்
சிறு தலை ஆயமொடு குறுகல்செல்லாப்
புலி துஞ்சு வியன் புலத்தற்றே
வலி துஞ்சு தடக் கை அவனுடை நாடே.

திணையும் துறையும் அவை.
சேரமான் குட்டுவன் கோதையைக் கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரன் பாடியது.

61
கொண்டைக் கூழைத் தண் தழைக் கடைசியர்
சிறு மாண் நெய்தல் ஆம்பலொடு கட்கும்,
மலங்கு மிளிர், செறுவின் தளம்பு தடிந்து இட்ட
பழன வாளைப் பரூஉக் கண் துணியல்
5
புது நெல் வெண் சோற்றுக் கண்ணுறை ஆக,
விலாப் புடை மருங்கு விசிப்ப மாந்தி,
நீடு கதிர்க் கழனிச் சூடு தடுமாறும்
வன் கை வினைஞர் புன் தலைச் சிறாஅர்
தெங்கு படு வியன் பழம் முனையின், தந்தையர்
10
குறைக்கண் நெடும் போர் ஏறி, விசைத்து எழுந்து
செழுங் கோள் பெண்ணைப் பழம் தொட முயலும்,
வைகல் யாணர், நல் நாட்டுப் பொருநன்,
எஃகு விளங்கு தடக் கை இயல் தேர்ச் சென்னி,
சிலைத் தார் அகலம் மலைக்குநர் உளர்எனின்,
15
தாம் அறிகுவர் தமக்கு உறுதி; யாம் அவன்
எழு உறழ் திணி தோள் வழு இன்று மலைந்தோர்
வாழக் கண்டன்றும் இலமே; தாழாது,
திருந்து அடி பொருந்த வல்லோர்
வருந்தக் காண்டல், அதனினும் இலமே.

திணை வாகை; துறை அரச வாகை.
சோழன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட் சென்னியைக் கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார் பாடியது.

66
நளி இரு முந்நீர் நாவாய் ஓட்டி,
வளி தொழில் ஆண்ட உரவோன் மருக!
களி இயல் யானைக் கரிகால்வளவ!
சென்று, அமர்க் கடந்த நின் ஆற்றல் தோன்ற
5
வென்றோய்! நின்னினும் நல்லன் அன்றே
கலி கொள் யாணர் வெண்ணிப் பறந்தலை,
மிகப் புகழ் உலகம் எய்தி,
புறப் புண் நாணி, வடக்கிருந்தோனே?

திணை வாகை; துறை அரச வாகை.
சோழன் கரிகாற் பெருவளத்தானை வெண்ணிக் குயத்தியார் பாடியது.

76
ஒருவனை ஒருவன் அடுதலும், தொலைதலும்,
புதுவது அன்று; இவ் உலகத்து இயற்கை;
இன்றின் ஊங்கோ கேளலம் திரள் அரை
மன்ற வேம்பின் மாச் சினை ஒண் தளிர்
5
நெடுங் கொடி உழிஞைப் பவரொடு மிடைந்து,
செறியத் தொடுத்த தேம் பாய் கண்ணி,
ஒலியல் மாலையொடு, பொலியச் சூடி,
பாடு இன் தெண் கிணை கறங்க, காண்தக,
நாடு கெழு திருவின், பசும் பூண், செழியன்
10
பீடும் செம்மலும் அறியார் கூடி,
'பொருதும்' என்று தன்தலை வந்த
புனை கழல் எழுவர் நல் வலம் அடங்க,
ஒரு தான் ஆகிப் பொருது, களத்து அடலே.

திணை வாகை; துறை அரச வாகை.
பாண்டியன் தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியனை இடைக் குன்றூர் கிழார் பாடியது.

77
கிண்கிணி களைந்த கால் ஒண் கழல் தொட்டு,
குடுமி களைந்த நுதல் வேம்பின் ஒண் தளிர்
நெடுங் கொடி உழிஞைப் பவரொடு மிலைந்து,
குறுந் தொடி கழித்த கைச் சாபம் பற்றி,
5
நெடுந் தேர்க் கொடுஞ்சி பொலிய நின்றோன்
யார்கொல்? வாழ்க, அவன் கண்ணி! தார் பூண்டு,
தாலி களைந்தன்றும் இலனே; பால் விட்டு
அயினியும் இன்று அயின்றனனே; வயின்வயின்
உடன்று மேல் வந்த வம்ப மள்ளரை
10
வியந்தன்றும், இழிந்தன்றும், இலனே; அவரை
அழுந்தப் பற்றி, அகல் விசும்பு ஆர்ப்பு எழ,
கவிழ்ந்து நிலம் சேர அட்டதை
மகிழ்ந்தன்றும், மலிந்தன்றும், அதனினும் இலனே.

திணையும் துறையும் அவை.
அவனை அவர் பாடியது.

78
வணங்கு தொடைப் பொலிந்த வலி கெழு நோன் தாள்,
அணங்கு அருங் கடுந் திறல் என்னை முணங்கு நிமிர்ந்து,
அளைச் செறி உழுவை இரைக்கு வந்தன்ன
மலைப்பு அரும் அகலம் மதியார், சிலைத்து எழுந்து,
5
'விழுமியம், பெரியம், யாமே; நம்மின்
பொருநனும் இளையன்; கொண்டியும் பெரிது' என,
எள்ளி வந்த வம்ப மள்ளர்
புல்லென் கண்ணர்; புறத்தில் பெயர,
ஈண்டு அவர் அடுதலும் ஒல்லான், ஆண்டு அவர்
10
மாண் இழை மகளிர் நாணினர் கழிய,
தந்தை தம் ஊர் ஆங்கண்,
தெண் கிணை கறங்கச் சென்று, ஆண்டு அட்டனனே.

திணையும் துறையும் அவை.
அவனை அவர் பாடியது.

79
மூதூர் வாயில் பனிக் கயம் மண்ணி,
மன்ற வேம்பின் ஒண் குழை மலைந்து,
தெண் கிணை முன்னர்க் களிற்றின் இயலி,
வெம் போர்ச் செழியனும் வந்தனன்; எதிர்ந்த
5
வம்ப மள்ளரோ பலரே;
எஞ்சுவர் கொல்லோ, பகல் தவச் சிறிதே?

திணையும் துறையும் அவை.
அவனை அவர் பாடியது.

81
ஆர்ப்பு எழு கடலினும் பெரிது; அவன் களிறே
கார்ப் பெயல் உருமின் முழங்கல் ஆனாவே;
யார்கொல் அளியர்தாமே ஆர் நார்ச்
செறியத் தொடுத்த கண்ணிக்
5
கவி கை மள்ளன் கைப்பட்டோரே?

திணை வாகை; துறை அரச வாகை.
அவனை அவர் பாடியது.

82
சாறு தலைக்கொண்டென, பெண் ஈற்று உற்றென,
பட்ட மாரி ஞான்ற ஞாயிற்று,
கட்டில் நிணக்கும் இழிசினன் கையது
போழ் தூண்டு ஊசியின் விரைந்தன்று மாதோ
5
ஊர் கொள வந்த பொருநனொடு,
ஆர் புனை தெரியல் நெடுந்தகை போரே!

திணையும் துறையும் அவை.
அவனை அவர் பாடியது.

93
திண் பிணி முரசம் இழுமென முழங்கச்
சென்று, அமர் கடத்தல் யாவது? வந்தோர்
தார் தாங்குதலும் ஆற்றார், வெடிபட்டு,
ஓடல் மரீஇய பீடு இல் மன்னர்
5
நோய்ப்பால் விளிந்த யாக்கை தழீஇ,
காதல் மறந்து, அவர் தீது மருங்கு அறுமார்,
அறம் புரி கொள்கை நான்மறை முதல்வர்
திறம் புரி பசும் புல் பரப்பினர் கிடப்பி,
'மறம் கந்தாக நல் அமர் வீழ்ந்த
10
நீள் கழல் மறவர் செல்வுழிச் செல்க!' என
வாள் போழ்ந்து அடக்கலும் உய்ந்தனர் மாதோ
வரி ஞிமிறு ஆர்க்கும் வாய் புகு கடாஅத்து
அண்ணல் யானை அடு களத்து ஒழிய,
அருஞ் சமம் ததைய நூறி, நீ,
15
பெருந் தகை! விழுப் புண் பட்ட மாறே.

திணை வாகை; துறை அரச வாகை.
அவன் பொருது புண்பட்டு நின்றோனை அவர் பாடியது.

94
ஊர்க் குறுமாக்கள் வெண் கோடு கழாஅலின்,
நீர்த் துறை படியும் பெருங் களிறு போல
இனியை, பெரும! எமக்கே; மற்று அதன்
துன் அருங் கடாஅம் போல
5
இன்னாய், பெரும! நின் ஒன்னாதோர்க்கே.

திணையும் துறையும் அவை.
அவனை அவர் பாடியது.

98
முனைத் தெவ்வர் முரண் அவியப்
பொரக் குறுகிய நுதி மருப்பின் நின்
இனக் களிறு செலக் கண்டவர்
மதில் கதவம் எழுச் செல்லவும்,
5
பிணன் அழுங்கக் களன் உழக்கிச்
செலவு அசைஇய மறுக் குளம்பின் நின்
இன நல் மாச் செலக் கண்டவர்
கவை முள்ளின் புழை அடைப்பவும்,
மார்புறச் சேர்ந்து ஒல்காத்
10
தோல் செறிப்பு இல் நின் வேல் கண்டவர்
தோல் கழியொடு பிடி செறிப்பவும்,
வாள் வாய்த்த வடுப் பரந்த நின்
மற மைந்தர் மைந்து கண்டவர்
புண் படு குருதி அம்பு ஒடுக்கவும்,
15
நீயே, ஐயவி புகைப்பவும் தாங்காது, ஒய்யென,
உறுமுறை மரபின் புறம் நின்று உய்க்கும்
கூற்றத்து அனையை; ஆகலின், போற்றார்
இரங்க விளிவதுகொல்லோ வரம்பு அணைந்து
இறங்குகதிர் அலம்வரு கழனி,
20
பெரும் புனல் படப்பை, அவர் அகன் தலை நாடே!

திணை வாகை; துறை அரச வாகை; திணை வஞ்சியும், துறை கொற்ற வள்ளையும் ஆம்.
அவனை அவர் பாடியது.

99
அமரர்ப் பேணியும், ஆவுதி அருத்தியும்,
அரும் பெறல் மரபின் கரும்பு இவண் தந்தும்,
நீர் அக இருக்கை ஆழி சூட்டிய
தொல் நிலை மரபின் நின் முன்னோர் போல,
5
ஈகை அம் கழல் கால், இரும் பனம் புடையல்,
பூ ஆர் காவின், புனிற்றுப் புலால் நெடு வேல்,
எழு பொறி நாட்டத்து எழாஅத் தாயம்
வழு இன்று எய்தியும் அமையாய், செரு வேட்டு,
இமிழ் குரல் முரசின் எழுவரொடு முரணிச்
10
சென்று, அமர் கடந்து, நின் ஆற்றல் தோற்றிய
அன்றும், பாடுநர்க்கு அரியை; இன்றும்
பரணன் பாடினன் மற்கொல் மற்று நீ
முரண் மிகு கோவலூர் நூறி, நின்
அரண் அடு திகிரி ஏந்திய தோளே!

திணையும் துறையும் அவை.
அவன் கோவலூர் எறிந்தானை அவர் பாடியது.

100
கையது வேலே; காலன புனை கழல்;
மெய்யது வியரே; மிடற்றது பசும் புண்;
வட்கர் போகிய வளர் இளம் போந்தை
உச்சிக் கொண்ட ஊசி வெண் தோட்டு,
5
வெட்சி மா மலர், வேங்கையொடு விரைஇ,
சுரி இரும் பித்தை பொலியச் சூடி,
வரிவயம் பொருத வயக் களிறு போல,
இன்னும் மாறாது சினனே; அன்னோ!
உய்ந்தனர் அல்லர், இவன் உடற்றியோரே;
10
செறுவர் நோக்கிய கண், தன்
சிறுவனை நோக்கியும், சிவப்பு ஆனாவே.

திணையும் துறையும் அவை; திணை வஞ்சியும், துறை கொற்றவள்ளையும் ஆம்.
அதியமான் தவமகன் பிறந்தவனைக் கண்டானை அவர் பாடியது.

104
போற்றுமின், மறவீர்! சாற்றுதும், நும்மை:
ஊர்க் குறுமாக்கள் ஆடக் கலங்கும்
தாள் படு சில் நீர்க் களிறு அட்டு வீழ்க்கும்
ஈர்ப்புடைக் கராஅத்து அன்ன என்னை
5
நுண் பல் கருமம் நினையாது,
'இளையன்' என்று இகழின், பெறல் அரிது, ஆடே.

திணை வாகை; துறை அரச வாகை.
அவனை அவர் பாடியது.

125
பருத்திப் பெண்டின் பனுவல் அன்ன,
நெருப்புச் சினம் தணிந்த நிணம் தயங்கு கொழுங் குறை,
பரூஉக் கள் மண்டையொடு, ஊழ் மாறு பெயர
உண்கும், எந்தை! நிற் காண்கு வந்திசினே,
5
நள்ளாதார் மிடல் சாய்த்த
வல்லாள! நின் மகிழ் இருக்கையே.
உழுத நோன் பகடு அழி தின்றாங்கு
நல் அமிழ்து ஆக, நீ நயந்து உண்ணும் நறவே;
குன்றத்து அன்ன களிறு பெயர,
10
கடந்து அட்டு வென்றோனும், நிற் கூறும்மே;
'வெலீஇயோன் இவன்' என,
'கழல் அணிப் பொலிந்த சேவடி நிலம் கவர்பு
விரைந்து வந்து, சமம் தாங்கிய,
வல் வேல் மலையன் அல்லன் ஆயின்,
15
நல் அமர் கடத்தல் எளிதுமன், நமக்கு' எனத்
தோற்றோன்தானும், நிற் கூறும்மே,
'தொலைஇயோன் இவன்' என,
ஒரு நீ ஆயினை பெரும! பெரு மழைக்கு
இருக்கை சான்ற உயர் மலைத்
20
திருத் தகு சேஎய்! நிற் பெற்றிசினோர்க்கே.

திணை வாகை; துறை அரச வாகை.
சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறையும் சோழன் இராச சூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் பொருதவழி, சோழற்குத் துப்பாகிய தேர்வண்மலையனை வடம வண்ணக்கன் பெருஞ்சாத்தனார் பாடியது.

167
நீயே, அமர் காணின் அமர் கடந்து, அவர்
படை விலக்கி எதிர் நிற்றலின்,
வாஅள் வாய்த்த வடு ஆழ் யாக்கையொடு,
கேள்விக்கு இனியை; கட்கு இன்னாயே:
5
அவரே, நிற் காணின் புறம் கொடுத்தலின்,
ஊறு அறியா மெய் யாக்கையொடு,
கண்ணுக்கு இனியர்; செவிக்கு இன்னாரே:
அதனால், நீயும் ஒன்று இனியை; அவரும் ஒன்று இனியர்;
ஒவ்வா யா உள, மற்றே? வெல் போர்க்
10
கழல் புனை திருந்து அடிக் கடு மான் கிள்ளி!
நின்னை வியக்கும் இவ் உலகம்; அஃது
என்னோ? பெரும! உரைத்திசின் எமக்கே.

திணை அது; துறை அரச வாகை.
ஏனாதி திருக்கிள்ளியைக் கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார் பாடியது.

168
அருவி ஆர்க்கும் கழை பயில் நனந் தலைக்
கறி வளர் அடுக்கத்து மலர்ந்த காந்தள்
கொழுங் கிழங்கு மிளிரக் கிண்டி, கிளையொடு,
கடுங் கண் கேழல் உழுத பூழி,
5
நல் நாள் வரு பதம் நோக்கி, குறவர்
உழாஅது வித்திய பரூஉக் குரல் சிறு தினை
முந்து விளை யாணர் நாள் புதிது உண்மார்
மரை ஆன் கறந்த நுரை கொள் தீம் பால்,
மான் தடி புழுக்கிய புலவு நாறு குழிசி
10
வான் கேழ் இரும் புடை கழாஅது, ஏற்றி,
சாந்த விறகின் உவித்த புன்கம்
கூதளம் கவினிய குளவி முன்றில்,
செழுங் கோள் வாழை அகல் இலைப் பகுக்கும்
ஊராக் குதிரைக் கிழவ! கூர்வேல்,
15
நறை நார்த் தொடுத்த வேங்கை அம் கண்ணி,
வடி நவில் அம்பின் வில்லோர் பெரும!
கை வள் ஈகைக் கடு மான் கொற்ற!
வையக வரைப்பில் தமிழகம் கேட்ப,
பொய்யாச் செந் நா நெளிய ஏத்திப்
20
பாடுப என்ப பரிசிலர், நாளும்
ஈயா மன்னர் நாண,
வீயாது பரந்த நின் வசை இல் வான் புகழே.

திணை பாடாண் திணை; துறை பரிசில் துறை; இயன்மொழியும், அரச வாகையும் ஆம்.
பிட்டங் கொற்றனைக் கருவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனார் பாடியது.

174
அணங்குடை அவுணர் கணம் கொண்டு ஒளித்தென,
சேண் விளங்கு சிறப்பின் ஞாயிறு காணாது,
இருள் கண் கெடுத்த பருதி ஞாலத்து
இடும்பை கொள் பருவரல் தீர, கடுந் திறல்
5
அஞ்சன உருவன் தந்து நிறுத்தாங்கு,
அரசு இழந்திருந்த அல்லல் காலை,
முரசு எழுந்து இரங்கும் முற்றமொடு, கரை பொருது
இரங்கு புனல் நெரிதரு மிகு பெருங் காவிரி
மல்லல் நல் நாட்டு அல்லல் தீர,
10
பொய்யா நாவின் கபிலன் பாடிய,
மை அணி நெடு வரை ஆங்கண், ஒய்யெனச்
செருப் புகல் மறவர் செல்புறம் கண்ட
எள் அறு சிறப்பின் முள்ளூர் மீமிசை,
அரு வழி இருந்த பெரு விறல் வளவன்
15
மதி மருள் வெண்குடை காட்டி, அக் குடை
புதுமையின் நிறுத்த புகழ் மேம்படுந!
விடர்ப் புலி பொறித்த கோட்டை, சுடர்ப் பூண்,
சுரும்பு ஆர் கண்ணி, பெரும் பெயர் நும் முன்
ஈண்டுச் செய் நல் வினை ஆண்டுச் சென்று உணீஇயர்,
20
உயர்ந்தோர் உலகத்துப் பெயர்ந்தனன் ஆகலின்,
ஆறு கொல் மருங்கின் மாதிரம் துழவும்
கவலை நெஞ்சத்து அவலம் தீர,
நீ தோன்றினையே நிரைத் தார் அண்ணல்!
கல் கண் பொடிய, கானம் வெம்ப,
25
மல்கு நீர் வரைப்பின் கயம் பல உணங்க,
கோடை நீடிய பைது அறு காலை,
இரு நிலம் நெளிய ஈண்டி,
உரும் உரறு கருவிய மழை பொழிந்தாங்கே.

திணை வாகை; துறை அரச வாகை.
மலையமான் சோழிய ஏனாதி திருக்கண்ணனை மாறோக்கத்து நப்பசலையார் பாடியது.