இயன் மொழி

8
வையம் காவலர் வழிமொழிந்து ஒழுக,
போகம் வேண்டி, பொதுச் சொல் பொறாஅது,
இடம் சிறிது என்னும் ஊக்கம் துரப்ப,
ஒடுங்கா உள்ளத்து, ஓம்பா ஈகை,
5
கடந்து அடு தானைச் சேரலாதனை
யாங்கனம் ஒத்தியோ? வீங்கு செலல் மண்டிலம்!
பொழுது என வரைதி; புறக்கொடுத்து இறத்தி;
மாறி வருதி; மலை மறைந்து ஒளித்தி;
அகல் இரு விசும்பினானும்
10
பகல் விளங்குதியால், பல் கதிர் விரித்தே.

திணை பாடாண் திணை; துறை இயன்மொழி; பூவை நிலையும் ஆம்.
சேரமான் கடுங்கோ வாழியாதனைக் கபிலர் பாடியது.

9
'ஆவும், ஆன் இயற் பார்ப்பன மாக்களும்,
பெண்டிரும், பிணியுடையீரும், பேணித்
தென் புல வாழ்நர்க்கு அருங் கடன் இறுக்கும்
பொன் போல் புதல்வர்ப் பெறாஅதீரும்,
5
எம் அம்பு கடி விடுதும், நும் அரண் சேர்மின்' என,
அறத்து ஆறு நுவலும் பூட்கை, மறத்தின்
கொல் களிற்று மீமிசைக் கொடி விசும்பு நிழற்றும்
எம் கோ, வாழிய, குடுமி தம் கோச்
செந் நீர்ப் பசும் பொன் வயிரியர்க்கு ஈத்த,
10
முந்நீர் விழவின், நெடியோன்
நல் நீர்ப் பஃறுளி மணலினும் பலவே!

திணையும் துறையும் அவை.
பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை நெட்டிமையார் பாடியது.

10
வழிபடுவோரை வல் அறிதீயே;
பிறர் பழி கூறுவோர் மொழி தேறலையே;
நீ மெய் கண்ட தீமை காணின்;
ஒப்ப நாடி, அத் தக ஒறுத்தி;
5
வந்து, அடி பொருந்தி, முந்தை நிற்பின்,
தண்டமும் தணிதி, நீ பண்டையின் பெரிதே
அமிழ்து அட்டு ஆனாக் கமழ் குய் அடிசில்
வருநர்க்கு வரையா வசை இல் வாழ்க்கை
மகளிர் மலைத்தல் அல்லது, மள்ளர்
10
மலைத்தல் போகிய, சிலைத் தார் மார்ப!
செய்து இரங்கா வினை, சேண் விளங்கும் புகழ்,
நெய்தலங்கானல் நெடியோய்!
எய்த வந்தனம் யாம்; ஏத்துகம் பலவே!

திணையும் துறையும் அவை.
சோழன் நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னியை ஊன்பொதி பசுங்குடையார் பாடியது.

12
பாணர் தாமரை மலையவும், புலவர்
பூ நுதல் யானையொடு புனை தேர் பண்ணவும்,
அறனோ மற்று இது விறல் மாண் குடுமி!
இன்னா ஆகப் பிறர் மண் கொண்டு,
5
இனிய செய்தி, நின் ஆர்வலர் முகத்தே?

திணை அது; துறை இயன்மொழி.
பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை நெட்டிமையார் பாடியது.

14
கடுங் கண்ண கொல் களிற்றால்
காப்பு உடைய எழு முருக்கி,
பொன் இயல் புனை தோட்டியால்
முன்பு துரந்து, சமம் தாங்கவும்;
5
பார் உடைத்த குண்டு அகழி
நீர் அழுவ நிவப்புக் குறித்து,
நிமிர் பரிய மா தாங்கவும்;
ஆவம் சேர்ந்த புறத்தை தேர் மிசைச்
சாப நோன் ஞாண் வடுக் கொள வழங்கவும்;
10
பரிசிலர்க்கு அருங் கலம் நல்கவும்; குரிசில்!
வலிய ஆகும், நின் தாள் தோய் தடக் கை.
புலவு நாற்றத்த பைந் தடி
பூ நாற்றத்த புகை கொளீஇ, ஊன் துவை
கறி சோறு உண்டு வருந்து தொழில் அல்லது,
15
பிறிது தொழில் அறியா ஆகலின், நன்றும்
மெல்லிய பெரும! தாமே. நல்லவர்க்கு
ஆர் அணங்கு ஆகிய மார்பின், பொருநர்க்கு
இரு நிலத்து அன்ன நோன்மை,
செரு மிகு சேஎய்! நிற் பாடுநர் கையே.

திணை அது; துறை இயன்மொழி.
சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன் கபிலர் கைப் பற்றி, 'மெல்லியவாமால் நூம்கை' என, கபிலர் பாடியது.

15
கடுந் தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண்,
வெள் வாய்க் கழுதைப் புல் இனம் பூட்டி,
பாழ் செய்தனை, அவர் நனந் தலை நல் எயில்;
புள்ளினம் இமிழும் புகழ்சால் விளை வயல்,
5
வெள் உளைக் கலி மான் கவி குளம்பு உகளத்
தேர் வழங்கினை, நின் தெவ்வர் தேஎத்து;
துளங்கு இயலான், பணை எருத்தின்,
பாவு அடியான், செறல் நோக்கின்,
ஒளிறு மருப்பின் களிறு அவர
10
காப்பு உடைய கயம் படியினை;
அன்ன சீற்றத்து அனையை; ஆகலின்,
விளங்கு பொன் எறிந்த நலம் கிளர் பலகையொடு
நிழல் படு நெடு வேல் ஏந்தி, ஒன்னார்
ஒண் படைக் கடுந் தார் முன்பு தலைக் கொண்மார்,
15
நசை தர வந்தோர் நசை பிறக்கு ஒழிய,
வசை பட வாழ்ந்தோர் பலர்கொல்? புரை இல்
நல் பனுவல், நால் வேதத்து,
அருஞ் சீர்த்திப் பெருங் கண்ணுறை
நெய்ம் மலி ஆவுதி பொங்க, பல் மாண்
20
வீயாச் சிறப்பின் வேள்வி முற்றி,
யூபம் நட்ட வியன் களம் பலகொல்?
யா பலகொல்லோ? பெரும! வார் உற்று
விசி பிணிக்கொண்ட மண் கனை முழவின்
பாடினி பாடும் வஞ்சிக்கு
25
நாடல் சான்ற மைந்தினோய்! நினக்கே.

திணையும் துறையும் அவை.
பாண்டியன் பல் யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை நெட்டிமையார் பாடியது.

17
தென் குமரி, வட பெருங்கல்,
குண குட கடலா எல்லை,
குன்று, மலை, காடு, நாடு,
ஒன்று பட்டு வழிமொழிய,
5
கொடிது கடிந்து, கோல் திருத்தி,
படுவது உண்டு, பகல் ஆற்றி,
இனிது உருண்ட சுடர் நேமி
முழுது ஆண்டோர் வழி காவல!
குலை இறைஞ்சிய கோள் தாழை
10
அகல் வயல், மலை வேலி,
நிலவு மணல் வியன் கானல்,
தெண் கழிமிசைத் தீப் பூவின்,
தண் தொண்டியோர் அடு பொருந!
மாப் பயம்பின் பொறை போற்றாது,
15
நீடு குழி அகப்பட்ட
பீடு உடைய எறுழ் முன்பின்,
கோடு முற்றிய கொல் களிறு
நிலை கலங்கக் குழி கொன்று,
கிளை புகலத் தலைக்கூடியாங்கு
20
நீ பட்ட அரு முன்பின்
பெருந் தளர்ச்சி, பலர் உவப்ப,
பிறிது சென்று, மலர் தாயத்துப்
பலர் நாப்பண் மீக்கூறலின்,
'உண்டாகிய உயர் மண்ணும்,
25
சென்று பட்ட விழுக் கலனும்,
பெறல் கூடும், இவன் நெஞ்சு உறப் பெறின்' எனவும்,
'ஏந்து கொடி இறைப்புரிசை,
வீங்கு சிறை, வியல்அருப்பம்,
இழந்து வைகுதும், இனி நாம் இவன்
30
உடன்று நோக்கினன், பெரிது' எனவும்,
வேற்று அரசு பணி தொடங்கு நின்
ஆற்றலொடு புகழ் ஏத்தி,
காண்கு வந்திசின், பெரும! ஈண்டிய
மழை என மருளும் பல் தோல், மலை எனத்
35
தேன் இறை கொள்ளும் இரும் பல் யானை,
உடலுநர் உட்க வீங்கி, கடல் என
வான் நீர்க்கு ஊக்கும் தானை, ஆனாது
கடு ஒடுங்கு எயிற்ற அரவுத் தலை பனிப்ப,
இடி என முழங்கும் முரசின்,
40
வரையா ஈகைக் குடவர் கோவே!

திணை வாகை; துறை அரச வாகை; இயன்மொழியும் ஆம்.
பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனால் பிணியிருந்த யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை வலிதின் போய்க் கட்டில் எய்தினானைக் குறுங்கோழியூர் கிழார் பாடியது.

22
தூங்கு கையான் ஓங்கு நடைய,
உறழ் மணியான் உயர் மருப்பின,
பிறை நுதலான் செறல் நோக்கின,
பா அடியான் பணை எருத்தின,
5
தேன் சிதைந்த வரை போல,
மிஞிறு ஆர்க்கும் கமழ் கடாத்து,
அயறு சோரும் இருஞ் சென்னிய,
மைந்து மலிந்த மழ களிறு
கந்து சேர்பு நிலைஇ வழங்க;
10
பாஅல் நின்று கதிர் சோரும்
வான் உறையும் மதி போலும்
மாலை வெண் குடை நீழலான்,
வாள் மருங்கு இலோர் காப்பு உறங்க;
அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த
15
ஆய் கரும்பின் கொடிக் கூரை,
சாறு கொண்ட களம் போல,
வேறு வேறு பொலிவு தோன்ற;
குற்று ஆனா உலக்கையான்
கலிச் சும்மை வியல் ஆங்கண்,
20
பொலந் தோட்டுப் பைந் தும்பை
மிசை அலங்கு உளைய பனைப் போழ் செரீஇ,
சின மாந்தர் வெறிக் குரவை
ஓத நீரின் பெயர்பு பொங்க;
வாய் காவாது பரந்து பட்ட
25
வியன் பாசறைக் காப்பாள!
வேந்து தந்த பணி திறையான்
சேர்ந்தவர்தம் கடும்பு ஆர்த்தும்,
ஓங்கு கொல்லியோர், அடு பொருந!
வேழ நோக்கின் விறல் வெஞ் சேஎய்!
30
வாழிய, பெரும! நின் வரம்பு இல் படைப்பே,
நிற் பாடிய வயங்கு செந் நாப்
பின் பிறர் இசை நுவலாமை,
ஓம்பாது ஈயும் ஆற்றல் எம் கோ!
'மாந்தரஞ்சேரல் இரும்பொறை ஓம்பிய நாடே
35
புத்தேள் உலகத்து அற்று' எனக் கேட்டு வந்து,
இனிது கண்டிசின்; பெரும! முனிவு இலை,
வேறு புலத்து இறுக்கும் தானையொடு,
சோறு பட நடத்தி நீ துஞ்சாய்மாறே!

திணையும் துறையும் அவை; துறை இயன்மொழியும் ஆம்.
சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையைக் குறுங் கோழியூர் கிழார் பாடியது.

30
செஞ் ஞாயிற்றுச் செலவும்,
அஞ் ஞாயிற்றுப் பரிப்பும்,
பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்,
வளி திரிதரு திசையும்,
5
வறிது நிலைஇய காயமும், என்று இவை
சென்று அளந்து அறிந்தோர் போல, என்றும்
இனைத்து என்போரும் உளரே; அனைத்தும்
அறி அறிவு ஆகாச் செறிவினை ஆகி,
களிறு கவுள் அடுத்த எறிகல் போல
10
ஒளித்த துப்பினைஆதலின், வெளிப்பட
யாங்ஙனம் பாடுவர், புலவர்? கூம்பொடு
மீப் பாய் களையாது மிசைப் பரம் தோண்டாது
புகாஅர்ப் புகுந்த பெருங் கலம் தகாஅர்
இடைப் புலப் பெரு வழிச் சொரியும்
15
கடல் பல் தாரத்த நாடு கிழவோயே!

திணை பாடாண் திணை; துறை இயன்மொழி
அவனை அவர் பாடியது.

32
கடும்பின் அடுகலம் நிறையாக, நெடுங் கொடிப்
பூவா வஞ்சியும் தருகுவன்; ஒன்றோ?
'வண்ணம் நீவிய வணங்கு இறைப் பணைத் தோள்,
ஒள் நுதல், விறலியர் பூவிலை பெறுக!' என,
5
மாட மதுரையும் தருகுவன்; எல்லாம்
பாடுகம் வம்மினோ, பரிசில் மாக்கள்!
தொல் நிலக் கிழமை சுட்டின், நல் மதி
வேட்கோச் சிறாஅர் தேர்க் கால் வைத்த
பசு மண் குரூஉத் திரள் போல, அவன்
10
கொண்ட குடுமித்து, இத் தண் பணை நாடே.

திணை பாடாண்திணை; துறை இயன்மொழி.
அவனை அவர் பாடியது.

34
'ஆன் முலை அறுத்த அறனிலோர்க்கும்,
மாண் இழை மகளிர் கருச் சிதைத்தோர்க்கும்,
பார்ப்பார்த் தப்பிய கொடுமையோர்க்கும்,
வழுவாய் மருங்கில் கழுவாயும் உள' என,
5
'நிலம் புடைபெயர்வது ஆயினும், ஒருவன்
செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்' என,
அறம் பாடின்றே ஆயிழை கணவ!
'காலை அந்தியும், மாலை அந்தியும்,
புறவுக் கரு அன்ன புன் புல வரகின்
10
பால் பெய் புன்கம் தேனொடு மயக்கி,
குறு முயல் கொழுஞ் சூடு கிழித்த ஒக்கலொடு,
இரத்தி நீடிய அகன் தலை மன்றத்து,
கரப்பு இல் உள்ளமொடு வேண்டு மொழி பயிற்றி,
அமலைக் கொழுஞ் சோறு ஆர்ந்த பாணர்க்கு
15
அகலாச் செல்வம் முழுவதும் செய்தோன்,
எம் கோன், வளவன் வாழ்க!' என்று, நின்
பீடு கெழு நோன் தாள் பாடேன் ஆயின்,
படுபு அறியலனே, பல் கதிர்ச் செல்வன்;
யானோ தஞ்சம்; பெரும! இவ் உலகத்து,
20
சான்றோர் செய்த நன்று உண்டாயின்,
இமயத்து ஈண்டி, இன் குரல் பயிற்றி,
கொண்டல் மா மழை பொழிந்த
நுண் பல் துளியினும் வாழிய, பலவே!

திணை பாடாண் திணை; துறை இயன்மொழி.
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை ஆலத்தூர் கிழார் பாடியது.

38
வரை புரையும் மழ களிற்றின் மிசை,
வான் துடைக்கும் வகைய போல,
விரவு உருவின கொடி நுடங்கும்
வியன் தானை விறல் வேந்தே!
5
நீ, உடன்று நோக்கும்வாய் எரி தவழ,
நீ, நயந்து நோக்கும்வாய் பொன் பூப்ப,
செஞ் ஞாயிற்று நிலவு வேண்டினும்,
வெண் திங்களுள் வெயில் வேண்டினும்,
வேண்டியது விளைக்கும் ஆற்றலைஆகலின்,
10
நின் நிழல் பிறந்து, நின் நிழல் வளர்ந்த,
எம் அளவு எவனோ மற்றே? 'இன் நிலைப்
பொலம் பூங் காவின் நல் நாட்டோரும்
செய் வினை மருங்கின் எய்தல் அல்லதை,
உடையோர் ஈதலும் இல்லோர் இரத்தலும்
15
கடவது அன்மையின், கையறவு உடைத்து' என,
ஆண்டுச் செய் நுகர்ச்சி ஈண்டும் கூடலின்,
நின் நாடு உள்ளுவர், பரிசிலர்
ஒன்னார் தேஎத்தும், நின்னுடைத்து எனவே.

திணை பாடாண் திணை; துறை இயன்மொழி.
அவன், 'எம் உள்ளீர்? எம் நாட்டீர்?' என்றாற்கு ஆவூர் மூலங்கிழார் பாடியது.

39
புறவின் அல்லல் சொல்லிய, கறை அடி
யானை வால் மருப்பு எறிந்த வெண் கடைக்
கோல் நிறை துலாஅம் புக்கோன் மருக!
ஈதல் நின் புகழும் அன்றே; சார்தல்
5
ஒன்னார் உட்கும் துன் அருங் கடுந் திறல்
தூங்கு எயில் எறிந்த நின் ஊங்கணோர் நினைப்பின்,
அடுதல் நின் புகழும் அன்றே; கெடு இன்று,
மறம் கெழு சோழர் உறந்தை அவையத்து,
அறம் நின்று நிலையிற்று ஆகலின், அதனால்
10
முறைமை நின் புகழும் அன்றே; மறம் மிக்கு
எழு சமம் கடந்த எழு உறழ் திணி தோள்,
கண் ஆர் கண்ணி, கலி மான், வளவ!
யாங்கனம் மொழிகோ யானே ஓங்கிய
வரை அளந்து அறியாப் பொன் படு நெடுங் கோட்டு
15
இமயம் சூட்டிய ஏம விற்பொறி,
மாண் வினை நெடுந் தேர், வானவன் தொலைய,
வாடா வஞ்சி வாட்டும் நின்
பீடு கெழு நோன் தாள் பாடுங்காலே?

திணையும் துறையும் அவை.
அவனை மாறோக்கத்து நப்பசலையார் பாடியது.

49
நாடன் என்கோ? ஊரன் என்கோ?
பாடு இமிழ் பனிக் கடல் சேர்ப்பன் என்கோ?
யாங்கனம் மொழிகோ, ஓங்கு வாள் கோதையை?
புனவர் தட்டை புடைப்பின், அயலது
5
இறங்கு கதிர் அலமரு கழனியும்,
பிறங்கு நீர்ச் சேர்ப்பினும், புள் ஒருங்கு எழுமே!

திணையும் துறையும் அவை; துறை இயன்மொழியும் ஆம்.
அவனை அவர் பாடியது.

50
மாசு அற விசித்த வார்புறு வள்பின்
மை படு மருங்குல் பொலிய, மஞ்ஞை
ஒலி நெடும் பீலி ஒண் பொறி மணித் தார்,
பொலங் குழை உழிஞையொடு, பொலியச் சூட்டி,
5
குருதி வேட்கை உரு கெழு முரசம்
மண்ணி வாரா அளவை, எண்ணெய்
நுரை முகந்தன்ன மென் பூஞ் சேக்கை
அறியாது ஏறிய என்னைத் தெறுவர,
இரு பாற்படுக்கும் நின் வாள் வாய் ஒழித்ததை
10
அதூஉம் சாலும், நல் தமிழ் முழுது அறிதல்;
அதனொடும் அமையாது, அணுக வந்து, நின்
மதனுடை முழவுத்தோள் ஓச்சி, தண்ணென
வீசியோயே; வியலிடம் கமழ,
இவண் இசை உடையோர்க்கு அல்லது, அவணது
15
உயர் நிலை உலகத்து உறையுள் இன்மை
விளங்கக் கேட்ட மாறுகொல்
வலம் படு குருசில்! நீ ஈங்கு இது செயலே?

திணை அது; துறை இயன்மொழி.
சேரமான் தகடூர் எறிந்த பெருஞ் சேரல் இரும்பொறை முரசுகட்டில் அறியாது ஏறிய மோசிகீரனைத் தவறு செய்யாது, அவன் துயில் எழுந்துணையும் கவரி கொண்டு வீசியானை மோசிகீரனார் பாடியது.

67
அன்னச் சேவல்! அன்னச் சேவல்!
ஆடு கொள் வென்றி அடு போர் அண்ணல்
நாடு தலை அளிக்கும் ஒள் முகம் போல,
கோடு கூடு மதியம் முகிழ் நிலா விளங்கும்
5
மையல் மாலை, யாம் கையறுபு இனைய,
குமரிஅம் பெருந் துறை அயிரை மாந்தி,
வடமலைப் பெயர்குவைஆயின், இடையது
சோழ நல் நாட்டுப் படினே, கோழி
உயர் நிலை மாடத்து, குறும்பறை அசைஇ,
10
வாயில் விடாது கோயில் புக்கு, எம்
பெருங் கோக் கிள்ளி கேட்க, 'இரும் பிசிர்
ஆந்தை அடியுறை' எனினே, மாண்ட நின்
இன்புறு பேடை அணிய, தன்
அன்புறு நன் கலம் நல்குவன் நினக்கே.

திணை பாடாண் திணை; துறை இயன்மொழி.
கோப்பெருஞ் சோழனைப் பிசிராந்தையார் பாடியது.

92
யாழொடும் கொள்ளா; பொழுதொடும் புணரா;
பொருள் அறிவாரா; ஆயினும், தந்தையர்க்கு
அருள் வந்தனவால், புதல்வர்தம் மழலை;
என் வாய்ச் சொல்லும் அன்ன ஒன்னார்
5
கடி மதில் அரண் பல கடந்த
நெடுமான் அஞ்சி! நீ அருளல்மாறே.

திணை அது; துறை இயன்மொழி.
அவனை அவர் பாடியது.

96
அலர் பூந் தும்பை அம் பகட்டு மார்பின்,
திரண்டு நீடு தடக்கை, என்னை இளையோற்கு
இரண்டு எழுந்தனவால், பகையே: ஒன்றே,
பூப் போல் உண்கண் பசந்து, தோள் நுணுகி,
5
நோக்கிய மகளிர்ப் பிணித்தன்று; ஒன்றே,
'விழவின்றுஆயினும், படு பதம் பிழையாது,
மை ஊன் மொசித்த ஒக்கலொடு, துறை நீர்க்
கைமான் கொள்ளுமோ?' என,
உறையுள் முனியும், அவன் செல்லும் ஊரே.

திணை அது; துறை இயன்மொழி.
அவன் மகன் பொகுட்டெழினியை அவர் பாடியது.

97
போர்க்கு உரைஇப் புகன்று கழித்த வாள்,
உடன்றவர் காப்புடை மதில் அழித்தலின்,
ஊன் உற மூழ்கி, உரு இழந்தனவே;
வேலே, குறும்பு அடைந்த அரண் கடந்து, அவர்
5
நறுங் கள்ளின் நாடு நைத்தலின்,
சுரை தழீஇய இருங் காழொடு
மடை கலங்கி நிலை திரிந்தனவே;
களிறே, எழூஉத் தாங்கிய கதவம் மலைத்து, அவர்
குழூஉக் களிற்றுக் குறும்பு உடைத்தலின்,
10
பரூஉப் பிணிய தொடி கழிந்தனவே;
மாவே, பரந்து ஒருங்கு மலைந்த மறவர்
பொலம் பைந் தார் கெடப் பரிதலின்,
களன் உழந்து அசைஇய மறுக் குளம்பினவே;
அவன் தானும், நிலம் திரைக்கும் கடல் தானைப்
15
பொலந் தும்பைக் கழல் பாண்டில்
கணை பொருத துளைத் தோலன்னே.
ஆயிடை, உடன்றோர் உய்தல் யாவது? 'தடந் தாள்,
பிணிக் கதிர், நெல்லின் செம்மல் மூதூர்
நுமக்கு உரித்தாகல் வேண்டின், சென்று அவற்கு
20
இறுக்கல் வேண்டும், திறையே; மறுப்பின்,
ஒல்வான் அல்லன், வெல்போரான்' எனச்
சொல்லவும் தேறீராயின், மெல் இயல்,
கழல் கனி வகுத்த துணைச் சில் ஓதி,
குறுந் தொடி மகளிர் தோள் விடல்
25
இறும்பூது அன்று; அஃது அறிந்து ஆடுமினே.

திணையும் துறையும் அவை.
அதியமான் நெடுமான் அஞ்சியை அவர் பாடியது.

102
'எருதே இளைய; நுகம் உணராவே;
சகடம் பண்டம் பெரிது பெய்தன்றே;
அவல் இழியினும், மிசை ஏறினும்,
அவணது அறியுநர் யார்?' என, உமணர்
5
கீழ் மரத்து யாத்த சேம அச்சு அன்ன,
இசை விளங்கு கவி கை நெடியோய்! திங்கள்
நாள் நிறை மதியத்து அனையை; இருள்
யாவணதோ, நின் நிழல் வாழ்வோர்க்கே?

திணை அது; துறை இயன்மொழி.
அவன் மகன் பொகுட்டெழினியை அவர் பாடியது.

106
நல்லவும் தீயவும் அல்ல குவி இணர்ப்
புல் இலை எருக்கம் ஆயினும், உடையவை
கடவுள் பேணேம் என்னா; ஆங்கு,
மடவர் மெல்லியர் செல்லினும்,
5
கடவன், பாரி கை வண்மையே.

திணை அது; துறை இயன்மொழி.
அவனை அவர் பாடியது.

107
'பாரி பாரி' என்று பல ஏத்தி,
ஒருவற் புகழ்வர், செந் நாப் புலவர்;
பாரி ஒருவனும் அல்லன்;
மாரியும் உண்டு, ஈண்டு உலகு புரப்பதுவே.

திணையும் துறையும் அவை.
அவனை அவர் பாடியது.

108
குறத்தி மாட்டிய வறல் கடைக் கொள்ளி
ஆரம் ஆதலின், அம் புகை அயலது
சாரல் வேங்கைப் பூஞ் சினைத் தவழும்
பறம்பு பாடினரதுவே; அறம் பூண்டு,
5
பாரியும், பரிசிலர் இரப்பின்,
'வாரேன்' என்னான், அவர் வரையன்னே.

திணையும் துறையும் அவை.
அவனை அவர் பாடியது.

122
கடல் கொளப்படாஅது, உடலுநர் ஊக்கார்,
கழல் புனை திருந்து அடிக் காரி! நின் நாடே;
அழல் புறந்தரூஉம் அந்தணரதுவே;
வீயாத் திருவின் விறல் கெழு தானை
5
மூவருள் ஒருவன், 'துப்பு ஆகியர்' என,
ஏத்தினர் தரூஉம் கூழே, நும் குடி
வாழ்த்தினர் வரூஉம் இரவலரதுவே;
வடமீன் புரையும் கற்பின், மட மொழி,
அரிவை தோள் அளவு அல்லதை,
10
நினது என இலை நீ பெருமிதத்தையே.

திணை பாடாண் திணை; துறை இயன்மொழி.
அவனை அவர் பாடியது.

123
நாள் கள் உண்டு, நாள் மகிழ் மகிழின்,
யார்க்கும் எளிதே, தேர் ஈதல்லே;
தொலையா நல் இசை விளங்கு மலையன்
மகிழாது ஈத்த இழை அணி நெடுந் தேர்
5
பயன் கெழு முள்ளூர் மீமிசைப்
பட்ட மாரி உறையினும் பலவே.

திணையும் துறையும் அவை.
அவனை அவர் பாடியது.

124
நாள் அன்று போகி, புள் இடை தட்ப,
பதன் அன்று புக்கு, திறன் அன்று மொழியினும்,
வறிது பெயர்குநர்அல்லர் நெறி கொளப்
பாடு ஆன்று, இரங்கும் அருவிப்
5
பீடு கெழு மலையன் பாடியோரே.

திணையும் துறையும் அவை.
அவனை அவர் பாடியது.

128
மன்றப் பலவின் மாச் சினை மந்தி
இரவலர் நாற்றிய விசி கூடு முழவின்
பாடு இன் தெண் கண், கனி செத்து, அடிப்பின்,
அன்னச் சேவல் மாறு எழுந்து ஆலும்,
5
கழல் தொடி ஆஅய் மழை தவழ் பொதியில்
ஆடுமகள் குறுகின் அல்லது,
பீடு கெழு மன்னர் குறுகலோ அரிதே.

திணை அது; துறை வாழ்த்து; இயன்மொழியும் ஆம்.
அவனை அவர் பாடியது.

129
குறி இறைக் குரம்பைக் குறவர் மாக்கள்
வாங்கு அமைப் பழுனிய தேறல் மகிழ்ந்து,
வேங்கை முன்றில் குரவை அயரும்,
தீம் சுளைப் பலவின், மா மலைக் கிழவன்
5
ஆஅய் அண்டிரன், அடு போர் அண்ணல்
இரவலர்க்கு ஈத்த யானையின், கரவு இன்று,
வானம் மீன் பல பூப்பின், ஆனாது
ஒரு வழிக் கரு வழி இன்றிப்
பெரு வெள்ளென்னின், பிழையாது மன்னே.

திணை அது; துறை இயன்மொழி.
அவனை அவர் பாடியது.

130
விளங்கு மணிக் கொடும் பூண் ஆஅய்! நின் நாட்டு
இளம் பிடி ஒரு சூல் பத்து ஈனும்மோ?
நின்னும் நின்மலையும் பாடி வருநர்க்கு,
இன் முகம் கரவாது, உவந்து நீ அளித்த
5
அண்ணல் யானை எண்ணின், கொங்கர்க்
குட கடல் ஓட்டிய ஞான்றைத்
தலைப்பெயர்த்திட்ட வேலினும் பலவே!

திணையும் துறையும் அவை.
அவனை அவர் பாடியது.

131
மழைக் கணம் சேக்கும் மா மலைக் கிழவன்,
வழைப் பூங் கண்ணி வாய் வாள் அண்டிரன்,
குன்றம் பாடினகொல்லோ
களிறு மிக உடைய இக் கவின் பெறு காடே?

திணையும் துறையும் அவை.
அவனை அவர் பாடியது.

132
முன் உள்ளுவோனைப் பின் உள்ளினேனே!
ஆழ்க, என் உள்ளம்! போழ்க, என் நாவே!
பாழ் ஊர்க் கிணற்றின் தூர்க, என் செவியே!
நரந்தை நறும் புல் மேய்ந்த கவரி
5
குவளைப் பைஞ் சுனை பருகி, அயல
தகரத் தண் நிழல் பிணையொடு வதியும்
வட திசையதுவே வான் தோய் இமயம்.
தென் திசை ஆஅய் குடி இன்றாயின்,
பிறழ்வது மன்னோ, இம் மலர் தலை உலகே.

திணையும் துறையும் அவை.
அவனை அவர் பாடியது.

134
அற விலை வணிகன் ஆஅய் அல்லன்;
பிறரும் சான்றோர் சென்ற நெறி என,
ஆங்குப் பட்டன்று, அவன் கைவண்மையே.

திணை அது; துறை இயன்மொழி.
அவனை அவர் பாடியது.

137
இரங்கு முரசின், இனம்சால் யானை,
முந்நீர் ஏணி விறல் கெழு மூவரை
இன்னும் ஓர் யான் அவா அறியேனே;
நீயே, முன் யான் அறியுமோனே துவன்றிய
5
கயத்து இட்ட வித்து வறத்தின் சாவாது,
கழைக் கரும்பின் ஒலிக்குந்து,
கொண்டல் கொண்ட நீர் கோடை காயினும்,
கண் அன்ன மலர் பூக்குந்து,
கருங் கால் வேங்கை மலரின், நாளும்
10
பொன் அன்ன வீ சுமந்து,
மணி அன்ன நீர் கடல் படரும்;
செவ் வரைப் படப்பை நாஞ்சில் பொருந!
சிறு வெள் அருவிப் பெருங் கல் நாடனை!
நீ வாழியர்! நின் தந்தை
15
தாய் வாழியர், நிற் பயந்திசினோரே!

திணை அது; துறை இயன்மொழி; பரிசில் துறையும் ஆம்.
நாஞ்சில் வள்ளுவனை ஒரு சிறைப் பெரியனார் பாடியது.

142
அறு குளத்து உகுத்தும், அகல் வயல் பொழிந்தும்,
உறும் இடத்து உதவாது உவர் நிலம் ஊட்டியும்,
வரையா மரபின் மாரிபோல,
கடாஅ யானைக் கழல் கால் பேகன்
5
கொடைமடம் படுதல் அல்லது,
படைமடம் படான், பிறர் படை மயக்குறினே.

திணை அது; துறை இயன்மொழி.
அவனை அவர் பாடியது.

149
நள்ளி! வாழியோ; நள்ளி! நள்ளென்
மாலை மருதம் பண்ணி, காலை
கைவழி மருங்கின் செவ்வழி பண்ணி,
வரவு எமர் மறந்தனர் அது நீ
5
புரவுக் கடன் பூண்ட வண்மையானே.

திணை அது; துறை இயன்மொழி.
அவனை அவர் பாடியது.

150
கூதிர்ப் பருந்தின் இருஞ் சிறகு அன்ன
பாறிய சிதாரேன், பலவு முதல் பொருந்தி,
தன்னும் உள்ளேன், பிறிது புலம் படர்ந்த என்
உயங்கு படர் வருத்தமும் உலைவும் நோக்கி,
5
மான் கணம் தொலைச்சிய குருதி அம் கழல் கால்,
வான் கதிர்த் திரு மணி விளங்கும் சென்னி,
செல்வத் தோன்றல், ஓர் வல் வில் வேட்டுவன்,
தொழுதனென் எழுவேற் கை கவித்து இரீஇ,
இழுதின் அன்ன வால் நிணக் கொழுங் குறை,
10
கான் அதர் மயங்கிய இளையர் வல்லே
தாம் வந்து எய்தாஅளவை, ஒய்யெனத்
தான் ஞெலி தீயின் விரைவனன் சுட்டு, 'நின்
இரும் பேர் ஒக்கலொடு தின்ம்' எனத் தருதலின்,
அமிழ்தின் மிசைந்து, காய்பசி நீங்கி,
15
நல் மரன் நளிய நறுந் தண் சாரல்,
கல் மிசை அருவி தண்ணெனப் பருகி,
விடுத்தல் தொடங்கினேனாக, வல்லே,
'பெறுதற்கு அரிய வீறுசால் நன் கலம்
பிறிது ஒன்று இல்லை; காட்டு நாட்டேம்' என,
20
மார்பில் பூண்ட வயங்கு காழ் ஆரம்
மடை செறி முன்கைக் கடகமொடு ஈத்தனன்;
'எந் நாடோ?' என, நாடும் சொல்லான்;
'யாரீரோ?' என, பேரும் சொல்லான்;
பிறர் பிறர் கூற வழிக் கேட்டிசினே
25
'இரும்பு புனைந்து இயற்றாப் பெரும் பெயர்த் தோட்டி
அம் மலை காக்கும் அணி நெடுங் குன்றின்,
பளிங்கு வகுத்தன்ன தீம் நீர்,
நளி மலை நாடன் நள்ளி அவன்' எனவே.

திணை அது; துறை இயன்மொழி.
அவனை அவர் பாடியது.

151
பண்டும் பண்டும் பாடுநர் உவப்ப,
விண் தோய் சிமைய விறல் வரைக் கவாஅன்,
கிழவன் சேட் புலம் படரின், இழை அணிந்து,
புன் தலை மடப் பிடி பரிசிலாக,
5
பெண்டிரும் தம் பதம் கொடுக்கும் வண் புகழ்க்
கண்டீரக்கோன்ஆகலின், நன்றும்
முயங்கல் ஆன்றிசின், யானே; பொலந் தேர்
நன்னன் மருகன் அன்றியும், நீயும்
முயங்கற்கு ஒத்தனை மன்னே; வயங்கு மொழிப்
10
பாடுநர்க்கு அடைத்த கதவின், ஆடு மழை
அணங்கு சால் அடுக்கம் பொழியும் நும்
மணம் கமழ் மால் வரை வரைந்தனர், எமரே.

திணையும் துறையும் அவை.
இளங் கண்டீரக்கோவும் இள விச்சிக்கோவும் ஒருங்கு இருந்தவழி, சென்ற பெருந்தலைச் சாத்தனார் இளங் கண்டீரக்கோவைப் புல்லி, இள விச்சிக்கோவைப் புல்லாராக 'என்னை என் செயப் புல்லீராயினீர்?' என, அவர் பாடியது.

153
மழை அணி குன்றத்துக் கிழவன், நாளும்,
இழை அணி யானை இரப்போர்க்கு ஈயும்,
சுடர் விடு பசும் பூண், சூர்ப்பு அமை முன் கை,
அடு போர் ஆனா, ஆதன் ஓரி
5
மாரி வண் கொடை காணிய, நன்றும்
சென்றதுமன், எம் கண்ணுளங் கடும்பே;
பனி நீர்ப் பூவா மணி மிடை குவளை
வால் நார்த் தொடுத்த கண்ணியும், கலனும்,
யானை இனத்தொடு பெற்றனர், நீங்கி,
10
பசியாராகல் மாறுகொல் விசி பிணிக்
கூடு கொள் இன் இயம் கறங்க,
ஆடலும் ஒல்லார், தம் பாடலும் மறந்தே?

திணை அது; துறை இயன்மொழி.
அவனை அவர் பாடியது.

156
ஒன்று நன்கு உடைய பிறர் குன்றம்; என்றும்
இரண்டு நன்கு உடைத்தே கொண் பெருங் கானம்;
நச்சிச் சென்ற இரவலர்ச் சுட்டித்
தொடுத்து உணக் கிடப்பினும் கிடக்கும்; அஃதான்று
5
நிறை அருந் தானை வேந்தரைத்
திறை கொண்டு பெயர்க்கும் செம்மலும் உடைத்தே.

திணை அது; துறை இயன் மொழி.
அவனை அவர் பாடியது.

157
தமர் தற் தப்பின் அது நோன்றல்லும்,
பிறர் கையறவு தான் நாணுதலும்,
படைப் பழி தாரா மைந்தினன் ஆகலும்,
வேந்துடை அவையத்து ஓங்குபு நடத்தலும்,
5
நும்மோர்க்குத் தகுவன அல்ல; எம்மோன்,
சிலை செல மலர்ந்த மார்பின், கொலை வேல்,
கோடல் கண்ணி, குறவர் பெருமகன்
ஆடு மழை தவிர்க்கும் பயம் கெழு மீமிசை,
எல் படு பொழுதின், இனம் தலைமயங்கி,
10
கட்சி காணாக் கடமான் நல் ஏறு
மட மான் நாகு பிணை பயிரின், விடர் முழை
இரும் புலிப் புகர்ப் போத்து ஓர்க்கும்
பெருங் கல் நாடன் எம் ஏறைக்குத் தகுமே.

திணையும் துறையும் அவை.
ஏறைக் கோனைக் குறமகள் இளவெயினி பாடியது.

168
அருவி ஆர்க்கும் கழை பயில் நனந் தலைக்
கறி வளர் அடுக்கத்து மலர்ந்த காந்தள்
கொழுங் கிழங்கு மிளிரக் கிண்டி, கிளையொடு,
கடுங் கண் கேழல் உழுத பூழி,
5
நல் நாள் வரு பதம் நோக்கி, குறவர்
உழாஅது வித்திய பரூஉக் குரல் சிறு தினை
முந்து விளை யாணர் நாள் புதிது உண்மார்
மரை ஆன் கறந்த நுரை கொள் தீம் பால்,
மான் தடி புழுக்கிய புலவு நாறு குழிசி
10
வான் கேழ் இரும் புடை கழாஅது, ஏற்றி,
சாந்த விறகின் உவித்த புன்கம்
கூதளம் கவினிய குளவி முன்றில்,
செழுங் கோள் வாழை அகல் இலைப் பகுக்கும்
ஊராக் குதிரைக் கிழவ! கூர்வேல்,
15
நறை நார்த் தொடுத்த வேங்கை அம் கண்ணி,
வடி நவில் அம்பின் வில்லோர் பெரும!
கை வள் ஈகைக் கடு மான் கொற்ற!
வையக வரைப்பில் தமிழகம் கேட்ப,
பொய்யாச் செந் நா நெளிய ஏத்திப்
20
பாடுப என்ப பரிசிலர், நாளும்
ஈயா மன்னர் நாண,
வீயாது பரந்த நின் வசை இல் வான் புகழே.

திணை பாடாண் திணை; துறை பரிசில் துறை; இயன்மொழியும், அரச வாகையும் ஆம்.
பிட்டங் கொற்றனைக் கருவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனார் பாடியது.

171
இன்று செலினும் தருமே; சிறு வரை
நின்று செலினும் தருமே; பின்னும்,
'முன்னே தந்தனென்' என்னாது, துன்னி
வைகலும் செலினும், பொய்யலன் ஆகி,
5
யாம் வேண்டியாங்கு எம் வறுங் கலம் நிறைப்போன்;
தான் வேண்டியாங்குத் தன் இறை உவப்ப
அருந் தொழில் முடியரோ, திருந்து வேல் கொற்றன்;
இனம் மலி கதச் சேக் களனொடு வேண்டினும்,
களம் மலி நெல்லின் குப்பை வேண்டினும்,
10
அருங் கலம் களிற்றொடு வேண்டினும், பெருந்தகை
பிறர்க்கும் அன்ன அறத் தகையன்னே.
அன்னன் ஆகலின், எந்தை உள் அடி
முள்ளும் நோவ உறாற்கதில்ல!
ஈவோர் அரிய இவ் உலகத்து,
15
வாழ்வோர் வாழ, அவன் தாள் வாழியவே!

திணை பாடாண் திணை; துறை இயன்மொழி.
அவனைக் காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக் கண்ணனார் பாடியது.

172
ஏற்றுக உலையே; ஆக்குக சோறே;
கள்ளும் குறைபடல் ஓம்புக; ஒள் இழைப்
பாடு வல் விறலியர் கோதையும் புனைக;
அன்னவை பிறவும் செய்க; என்னதூஉம்
5
பரியல் வேண்டா; வரு பதம் நாடி,
ஐவனம் காவலர் பெய் தீ நந்தின்,
ஒளி திகழ் திருந்து மணி நளிஇருள் அகற்றும்
வன் புல நாடன், வய மான் பிட்டன்:
ஆர் அமர் கடக்கும் வேலும், அவன் இறை
10
மா வள் ஈகைக் கோதையும்,
மாறுகொள் மன்னரும், வாழியர் நெடிதே!

திணையும் துறையும் அவை.
அவனை வடம வண்ணக்கன் தாமோதரனார் பாடியது.

173
யான் வாழும் நாளும் பண்ணன் வாழிய!
பாணர்! காண்க, இவன் கடும்பினது இடும்பை;
யாணர்ப் பழு மரம் புள் இமிழ்ந்தன்ன
ஊண் ஒலி அரவம்தானும் கேட்கும்;
5
பொய்யா எழிலி பெய்விடம் நோக்கி,
முட்டை கொண்டு வன் புலம் சேரும்
சிறு நுண் எறும்பின் சில் ஒழுக்கு ஏய்ப்ப,
சோறுடைக் கையர் வீறு வீறு இயங்கும்
இருங் கிளைச் சிறாஅர்க் காண்டும்; கண்டும்,
10
மற்றும் மற்றும் வினவுதும், தெற்றென;
பசிப்பிணி மருத்துவன் இல்லம்
அணித்தோ? சேய்த்தோ? கூறுமின், எமக்கே.

திணையும் துறையும் அவை.
சிறுகுடி கிழான் பண்ணனைச் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் பாடியது.

175
எந்தை! வாழி; ஆதனுங்க! என்
நெஞ்சம் திறப்போர் நிற் காண்குவரே;
நின் யான் மறப்பின், மறக்கும் காலை,
என் உயிர் யாக்கையின் பிரியும் பொழுதும்,
5
என்னியான் மறப்பின், மறக்குவென் வென் வேல்
விண் பொரு நெடுங் குடைக் கொடித் தேர் மோரியர்
திண் கதிர்த் திகிரி திரிதரக் குறைத்த
உலக இடைகழி அறை வாய் நிலைஇய
மலர் வாய் மண்டிலத்து அன்ன, நாளும்
10
பலர் புரவு எதிர்ந்த அறத் துறை நின்னே.

திணை பாடாண் திணை; துறை இயன்மொழி.
ஆதனுங்கனைக் கள்ளில் ஆத்திரையனார் பாடியது.

176
ஓரை ஆயத்து ஒண் தொடி மகளிர்
கேழல் உழுத இருஞ் சேறு கிளைப்பின்,
யாமை ஈன்ற புலவு நாறு முட்டையைத்
தேன் நாறு ஆம்பல் கிழங்கொடு பெறூஉம்,
5
இழுமென ஒலிக்கும் புனல் அம் புதவின்,
பெரு மாவிலங்கைத் தலைவன், சீறியாழ்
இல்லோர் சொல் மலை நல்லியக்கோடனை
உடையை வாழி, எற் புணர்ந்த பாலே!
பாரி பறம்பின் பனிச் சுனைத் தெண் நீர்
10
ஓர் ஊர் உண்மையின் இகழ்ந்தோர் போல,
காணாது கழிந்த வைகல், காணா
வழி நாட்கு இரங்கும், என் நெஞ்சம் அவன்
கழி மென் சாயல் காண்தொறும் நினைந்தே.

திணையும் துறையும் அவை.
ஓய்மான் நல்லியக் கோடனைப் புறத்திணை நன்னாகனார் பாடியது.

177
ஒளிறு வாள் மன்னர் ஒண் சுடர் நெடு நகர்,
வெளிறு கண் போகப் பல் நாள் திரங்கி,
பாடிப் பெற்ற பொன் அணி யானை,
தமர்எனின், யாவரும் புகுப; அமர் எனின்,
5
திங்களும் நுழையா எந்திரப் படு புழை,
கள் மாறு நீட்ட நணி நணி இருந்த
குறும் பல் குறும்பின் ததும்ப வைகி,
புளிச் சுவை வேட்ட செங் கண் ஆடவர்
தீம் புளிக் களாவொடு துடரி முனையின்,
10
மட்டு அறல் நல் யாற்று எக்கர் ஏறி,
கருங் கனி நாவல் இருந்து கொய்து உண்ணும்,
பெரும் பெயர் ஆதி, பிணங்குஅரில் குட நாட்டு,
எயினர் தந்த எய்ம் மான் எறி தசைப்
பைஞ் ஞிணம் பெருத்த பசு வெள் அமலை,
15
வருநர்க்கு வரையாது தருவனர் சொரிய,
இரும் பனங் குடையின் மிசையும்
பெரும் புலர் வைகறைச் சீர் சாலாதே.

திணையும் துறையும் அவை.
மல்லிகிழான் காரியாதியை ஆவூர் மூலங்கிழார் பாடியது.

212
'நும் கோ யார்?' என வினவின், எம் கோக்
களமர்க்கு அரித்த விளையல் வெங் கள்
யாமைப் புழுக்கின் காமம் வீட ஆரா,
ஆரல் கொழுஞ் சூடு அம் கவுள் அடாஅ,
5
வைகு தொழில் மடியும் மடியா விழவின்
யாணர் நல் நாட்டுள்ளும், பாணர்
பைதல் சுற்றத்துப் பசிப் பகை ஆகி,
கோழியோனே, கோப்பெருஞ்சோழன்
பொத்து இல் நண்பின் பொத்தியொடு கெழீஇ,
10
வாய் ஆர் பெரு நகை வைகலும் நக்கே.

திணை அது; துறை இயன்மொழி.
கோப்பெருஞ்சோழனைப் பிசிராந்தையார் பாடியது.

215
கவைக் கதிர் வரகின் அவைப்புறு வாக்கல்
தாது எரு மறுகின் போதொடு பொதுளிய
வேளை வெண் பூ வெண் தயிர்க் கொளீஇ,
ஆய்மகள் அட்ட அம் புளி மிதவை
5
அவரை கொய்யுநர் ஆர மாந்தும்
தென்னம் பொருப்பன் நல் நாட்டுள்ளும்
பிசிரோன் என்ப, என் உயிர் ஓம்புநனே;
செல்வக் காலை நிற்பினும்,
அல்லற் காலை நில்லலன்மன்னே.

திணை பாடாண் திணை; துறை இயன்மொழி.
கோப்பெருஞ்சோழன், 'பிசிராந்தையார் வாரார்' என்ற சான்றோர்க்கு, 'அவர் வருவார்' என்று சொல்லியது.

216
'கேட்டல் மாத்திரை அல்லது, யாவதும்
காண்டல் இல்லாது யாண்டு பல கழிய,
வழு இன்று பழகிய கிழமையர் ஆயினும்,
அரிதே, தோன்றல்! அதற்பட ஒழுகல்' என்று,
5
ஐயம் கொள்ளன்மின், ஆர் அறிவாளீர்!
இகழ்விலன்; இனியன்; யாத்த நண்பினன்;
புகழ் கெட வரூஉம் பொய் வேண்டலனே;
தன் பெயர் கிளக்கும்காலை, 'என் பெயர்
பேதைச் சோழன்' என்னும், சிறந்த
10
காதற் கிழமையும் உடையன்; அதன்தலை,
இன்னது ஓர் காலை நில்லலன்;
இன்னே வருகுவன்; ஒழிக்க, அவற்கு இடமே!

திணையும் துறையும் அவை.
அவன் வடக்கிருந்தான், 'பிசிராந்தையார்க்கு இடன் ஒழிக்க!' என்றது.

376
விசும்பு நீத்தம் இறந்த ஞாயிற்றுப்
பசுங் கதிர் மழுகிய சிவந்து வாங்கு அந்தி
சிறு நனி பிறந்த பின்றை, செறி பிணிச்
சிதாஅர் வள்பின் என் தெடாரி தழீஇ,
5
பாணர் ஆரும்அளவை, யான் தன்
யாணர் நல் மனைக் கூட்டுமுதல் நின்றனென்;
இமைத்தோர் விழித்த மாத்திரை, ஞெரேரென,
குணக்கு எழு திங்கள் கனை இருள் அகற்ற,
பண்டு அறிவாரா உருவோடு, என் அரைத்
10
தொன்று படு துளையொடு பரு இழை போகி,
நைந்து கரை பறைந்த என் உடையும், நோக்கி,
'விருந்தினன் அளியன், இவன்' என, பெருந்தகை
நின்ற முரற்கை நீக்கி, நன்றும்
அரவு வெகுண்டன்ன தேறலொடு, சூடு தருபு,
15
நிரயத்து அன்ன என் வறன் களைந்து, அன்றே,
இரவினானே, ஈத்தோன் எந்தை;
அன்றை ஞான்றினொடு இன்றின் ஊங்கும்,
இரப்பச் சிந்தியேன், நிரப்பு அடு புணையின்;
உளத்தின் அளக்கும் மிளிர்ந்த தகையேன்;
20
நிறைக் குளப் புதவின் மகிழ்ந்தனென் ஆகி,
ஒரு நாள், இரவலர் வரையா வள்ளியோர் கடைத்தலை,
ஞாங்கர் நெடுமொழி பயிற்றி,
தோன்றல் செல்லாது, என் சிறு கிணைக் குரலே.

திணை அது; துறை இயன்மொழி.
ஒய்மான் நல்லியாதனைப் புறத்திணை நன்னாகனார் பாடியது.

378
 
தென் பரதவர் மிடல் சாய,
வட வடுகர் வாள் ஓட்டிய,
தொடை அமை கண்ணி, திருந்து வேல் தடக் கை,
கடு மா கடைஇய விடு பரி வடிம்பின்,
5
நல் தார், கள்ளின், சோழன் கோயில்,
புதுப் பிறை அன்ன சுதை சேய் மாடத்து,
பனிக் கயத்து அன்ன நீள் நகர் நின்று, என்
அரிக் கூடு மாக் கிணை இரிய ஒற்றி,
எஞ்சா மரபின் வஞ்சி பாட,
10
எமக்கு என வகுத்த அல்ல, மிகப் பல,
மேம்படு சிறப்பின் அருங் கல வெறுக்கை
தாங்காது பொழிதந்தோனே; அது கண்டு,
இலம்பாடு உழந்த என் இரும் பேர் ஒக்கல்,
விரல் செறி மரபின செவித் தொடக்குநரும்,
15
செவித் தொடர் மரபின விரல் செறிக்குநரும்,
அரைக்கு அமை மரபின மிடற்று யாக்குநரும்,
மிடற்று அமை மரபின அரைக்கு யாக்குநரும்,
கடுந் தெறல் இராமனுடன் புணர் சீதையை
வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை,
20
நிலம் சேர் மதர் அணி கண்ட குரங்கின்
செம் முகப் பெருங் கிளை இழைப் பொலிந்தாஅங்கு,
அறாஅ அரு நகை இனிது பெற்றிகுமே
இருங் கிளைத் தலைமை எய்தி,
அரும்படர் எவ்வம் உழந்ததன்தலையே.

திணை அது; துறை இயன்மொழி.
சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னியை ஊன்பொதி பசுங் குடையார் பாடியது.

380
தென் பவ்வத்து முத்துப் பூண்டு,
வட குன்றத்துச் சாந்தம் உரீஇ,
........................................ங் கடல் தானை,
இன் இசைய விறல் வென்றி,
5
தென்னவர் வய மறவன்;
மிசைப் பெய்த நீர் கடல் பரந்து முத்து ஆகுந்து,
நாறு இதழ்க் குளவியொடு கூதளம் குழைய,
வேறுபெ.....................................................................த்துந்து,
தீம் சுளைப் பலவின் நாஞ்சில் பொருநன்;
10
துப்பு எதிர்ந்தோர்க்கே உள்ளாச் சேய்மையன்;
நட்பு எதிர்ந்தோர்க்கே அங்கை நண்மையன்;
வல் வேல் கந்தன் நல் இசை அல்ல,
.....................த்தார்ப் பிள்ளை அம் சிறாஅர்;
அன்னன் ஆகன்மாறே, இந் நிலம்
15
இலம்படு காலை ஆயினும்,
புலம்பல் போயின்று, பூத்த என் கடும்பே.

திணை அது; துறை இயன்மொழி.
நாஞ்சில் வள்ளுவனைக் கருவூர்க் கதப்பிள்ளை பாடியது.

381
ஊனும் ஊணும் முனையின், இனிது என,
பாலின் பெய்தவும், பாகின் கொண்டவும்,
அளவுபு கலந்து, மெல்லிது பருகி,
விருந்துறுத்து, ஆற்றி இருந்தனெமாக,
5
'சென்மோ, பெரும! எம் விழவுடை நாட்டு?' என,
யாம் தன் அறியுநமாக, தான் பெரிது
அன்பு உடைமையின், எம் பிரிவு அஞ்சி,
துணரியது கொளாஅவாகி, பழம் ஊழ்த்து,
பயம் பகர்வு அறியா மயங்கு அரில் முது பாழ்,
10
பெயல் பெய்தன்ன, செல்வத்து ஆங்கண்,
ஈயா மன்னர் புறங்கடைத் தோன்றி,
சிதாஅர் வள்பின் சிதர்ப் புறத் தடாரி
ஊன் சுகிர் வலந்த தெண் கண் ஒற்றி,
விரல் விசை தவிர்க்கும் அரலை இல் பாணியின்,
15
இலம்பாடு அகற்றல் யாவது? புலம்பொடு
தெருமரல் உயக்கமும் தீர்க்குவெம்; அதனால்,
இரு நிலம் கூலம் பாற, கோடை
வரு மழை முழக்கு இசைக்கு ஓடிய பின்றை,
சேயைஆயினும், இவணைஆயினும்,
20
இதற்கொண்டு அறிநை; வாழியோ, கிணைவ!
சிறு நனி, ஒரு வழிப் படர்க என்றோனே எந்தை,
ஒலி வெள் அருவி வேங்கட நாடன்,
உறுவரும் சிறுவரும் ஊழ் மாறு உய்க்கும்
அறத்துறை அம்பியின் மான, மறப்பு இன்று,
25
இருங் கோள் ஈராப் பூட்கை,
கரும்பனூரன் காதல் மகனே.

திணையும் துறையும் அவை.
கரும்பனூர் கிழானை நன்னாகனார் பாடியது.

388
வெள்ளி தென் புலத்து உறைய, விளை வயல்,
பள்ளம், வாடிய பயன் இல் காலை,
இரும் பறைக் கிணைமகன் சென்றவன், பெரும் பெயர்
................................................................................பொருந்தி,
5
தன் நிலை அறியுநனாக, அந் நிலை,
இடுக்கண் இரியல் போக, உடைய
கொடுத்தோன் எந்தை, கொடை மேந் தோன்றல்,
.......................................................................னாமருப்பாக,
வெல்லும் வாய்மொழிப் புல்லுடை வி
10
பெயர்க்கும் பண்ணற் கேட்டிரோ, மககிரென,
வினைப் பகடு ஏற்ற மேழி கிணைத் தொடா,
நாள்தொறும் பாடேன்ஆயின், ஆனா
மணி கிளர் முன்றில் தென்னவன் மருகன்,
பிணி முரசு இரங்கும் பீடு கெழு தானை
15
அண்ணல் யானை வழுதி,
கண்மாறிலியர் என் பெருங் கிளைப் புரவே!

திணை அது; துறை இயன்மொழி.
சிறுகுடி கிழான் பண்ணனை மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் பாடியது.

389
'நீர் நுங்கின் கண் வலிப்ப,
கான வேம்பின் காய் திரங்க,
கயம் களியும் கோடை ஆயினும்,
ஏலா வெண்பொன் போருறு காலை,
5
எம்மும் உள்ளுமோ பிள்ளைஅம் பொருநன்!'
என்று ஈத்தனனே, இசைசால் நெடுந்தகை;
இன்று சென்று எய்தும் வழியனும் அல்லன்;
செலினே, காணா வழியனும் அல்லன்;
புன் தலை மடப் பிடி இனைய, கன்று தந்து,
10
குன்றக நல் ஊர் மன்றத்துப் பிணிக்கும்
கல் இழி அருவி வேங்கடம் கிழவோன்,
செல்வுழி எழாஅ நல் ஏர் முதியன்!
ஆதனுங்கன் போல, நீயும்
பசித்த ஒக்கல் பழங்கண் வீட,
15
வீறுசால் நன் கலம் நல்குமதி, பெரும!
ஐது அகல் அல்குல் மகளிர்
நெய்தல் கேளன்மார், நெடுங் கடையானே!

திணையும் துறையும் அவை.
ஆதனுங்கனைக் கள்ளில் ஆத்திரையனார் பாடியது.

390
அறவை நெஞ்சத்து ஆயர், வளரும்
மறவை நெஞ்சத்து ஆயிவாளர்,
அரும்பு அலர் செருந்தி நெடுங் கால் மலர் கமழ்,
.........................................................மன்ன முற்றத்து,
5
ஆர்வலர் குறுகின் அல்லது, காவலர்
கனவினும் குறுகாக் கடியுடை வியல் நகர்,
மலைக் கணத்து அன்ன மாடம் சிலம்ப, என்
அரிக் குரல் தடாரி இரிய ஒற்றிப்
பாடி நின்ற பல் நாள் அன்றியும்,
10
சென்ற ஞான்றைச் சென்று படர் இரவின்
வந்ததற் கொண்டு, 'நெடுங் கடை நின்ற
புன் தலைப் பொருநன் அளியன்தான்' என,
தன்னுழைக் குறுகல் வேண்டி, என் அரை
முது நீர்ப் பாசி அன்ன உடை களைந்து,
15
திரு மலர் அன்ன புது மடிக் கொளீஇ,
மகிழ் தரல் மரபின் மட்டே அன்றியும்,
அமிழ்து அன மரபின் ஊன் துவை அடிசில்
வெள்ளி வெண் கலத்து ஊட்டல் அன்றி,
முன் ஊர்ப் பொதியில் சேர்ந்த மென் நடை
20
இரும் பேர் ஒக்கல் பெரும் புலம்பு அகற்ற,
அகடு நனை வேங்கை வீ கண்டன்ன
பகடு தரு செந்நெல் போரொடு நல்கி,
'கொண்டி பெறுக!' என்றோனே உண் துறை
மலை அலர் அணியும் தலை நீர் நாடன்;
25
கண்டாற் கொண்டும் அவன் திருந்து அடி வாழ்த்தி,
.............................................................................................................................
வான் அறியல என் பாடு பசி போக்கல்;
அண்ணல் யானை வேந்தர்
உண்மையோ, அறியல்? காண்பு அறியலரே!

திணையும் துறையும் அவை.
அதியமான் நெடுமான் அஞ்சியை ஒளவையார் பாடியது.

400
மாக விசும்பின் வெண் திங்கள்
மூ ஐந்தான் முறை முற்ற,
கடல் நடுவண் கண்டன்ன என்
இயம் இசையா, மரபு ஏத்தி,
5
கடைத் தோன்றிய கடைக் கங்குலான்
பலர் துஞ்சவும் தான் துஞ்சான்,
உலகு காக்கும் உயர் ெ..........க்
கேட்டோன், எந்தை, என் தெண் கிணைக் குரலே;
கேட்டதற்கொண்டும், வேட்கை தண்டாது,
10
தொன்று படு சிதாஅர் மருங்கு நீக்கி,
மிகப் பெருஞ் சிறப்பின் வீறு.......
...........................................................லவான
கலிங்கம் அளித்திட்டு என் அரை நோக்கி,
நார் அரி நறவின் நாள் மகிழ் தூங்குந்து;
15
போது அறியேன், பதிப் பழகவும்,
தன் பகை கடிதல் அன்றியும், சேர்ந்தோர்
பசிப் பகை கடிதலும் வல்லன் மாதோ;
மறவர் மலிந்த த.............................................
கேள்வி மலிந்த வேள்வித் தூணத்து,
20
இருங் கழி இழிதரு........ கலி வங்கம்
தேறு நீர்ப் பரப்பின் யாறு சீத்து உய்த்து,
துறைதொறும் பிணிக்கும் நல் ஊர்,
உறைவு இன் யாணர்,........ கிழவோனே!
திணை அது; துறை இயன்மொழி.