தாபத நிலை

143
'மலை வான் கொள்க!' என, உயர் பலி தூஉய்,
'மாரி ஆன்று, மழை மேக்கு உயர்க!' எனக்
கடவுள் பேணிய குறவர் மாக்கள்,
பெயல் கண்மாறிய உவகையர், சாரல்
5
புனத் தினை அயிலும் நாட! சினப் போர்க்
கை வள் ஈகைக் கடு மான் பேக!
யார்கொல் அளியள்தானே நெருநல்,
சுரன் உழந்து வருந்திய ஒக்கல் பசித்தென,
குணில் பாய் முரசின் இரங்கும் அருவி
10
நளி இருஞ் சிலம்பின் சீறூர் ஆங்கண்,
வாயில் தோன்றி, வாழ்த்தி நின்று,
நின்னும் நின் மலையும் பாட, இன்னாது
இகுத்த கண்ணீர் நிறுத்தல் செல்லாள்,
முலையகம் நனைப்ப, விம்மி,
15
குழல் இனைவதுபோல் அழுதனள், பெரிதே?

திணை பெருந்திணை; துறை குறுங்கலி; தாபதநிலையும் ஆம்.
அவனால் துறக்கப்பட்ட கண்ணகி காரணமாக அவனைக் கபிலர் பாடியது.

248
அளியதாமே, சிறு வெள் ஆம்பல்!
இளையமாகத் தழை ஆயினவே;
இனியே, பெரு வளக் கொழுநன் மாய்ந்தென, பொழுது மறுத்து,
இன்னா வைகல் உண்ணும்
5
அல்லிப் படூஉம் புல் ஆயினவே.

திணை அது; துறை தாபத நிலை.
.......................... ஒக்கூர் மாசாத்தனார் பாடியது.

249
கதிர் மூக்கு ஆரல் கீழ் சேற்று ஒளிப்ப,
கணைக் கோட்டு வாளை மீநீர்ப் பிறழ,
எரிப் பூம் பழனம் நெரித்து உடன் வலைஞர்
அரிக் குரல் தடாரியின் யாமை மிளிர,
5
பனை நுகும்பு அன்ன சினை முதிர் வராலொடு,
உறழ் வேல் அன்ன ஒண் கயல் முகக்கும்,
அகல் நாட்டு அண்ணல் புகாவே, நெருநைப்
பகல் இடம் கண்ணிப் பலரொடும் கூடி,
ஒருவழிப்பட்டன்று; மன்னே! இன்றே,
10
அடங்கிய கற்பின், ஆய் நுதல் மடந்தை,
உயர் நிலை உலகம் அவன் புக,.... வரி
நீறு ஆடு சுளகின் சீறிடம் நீக்கி,
அழுதல் ஆனாக் கண்ணள்,
மெழுகும், ஆப்பி கண் கலுழ் நீரானே.

திணையும் துறையும் அவை.
....................தும்பி சேர் கீரனார் பாடியது.

250
குய் குரல் மலிந்த கொழுந் துவை அடிசில்
இரவலர்த் தடுத்த வாயில், புரவலர்
கண்ணீர்த் தடுத்த தண் நறும் பந்தர்,
கூந்தல் கொய்து, குறுந் தொடி நீக்கி,
5
அல்லி உணவின் மனைவியொடு, இனியே
புல்லென்றனையால் வளம் கெழு திரு நகர்!
வான் சோறு கொண்டு தீம் பால் வேண்டும்
முனித்தலைப் புதல்வர் தந்தை
தனித் தலைப் பெருங் காடு முன்னிய பின்னே.

திணையும் துறையும் அவை.
...................தாயங்கண்ணியார் பாடியது.