தொகைநிலை

62
வரு தார் தாங்கி, அமர் மிகல் யாவது?
பொருது ஆண்டு ஒழிந்த மைந்தர் புண் தொட்டு,
குருதி செங் கைக் கூந்தல் தீட்டி,
நிறம் கிளர் உருவின் பேஎய்ப் பெண்டிர்
5
எடுத்து எறி அனந்தல் பறைச் சீர் தூங்க,
பருந்து அருந்துற்ற தானையொடு, செரு முனிந்து,
அறத்தின் மண்டிய மறப் போர் வேந்தர்
தாம் மாய்ந்தனரே; குடை துளங்கினவே;
உரைசால் சிறப்பின் முரைசு ஒழிந்தனவே;
10
பல் நூறு அடுக்கிய வேறு படு பைஞ் ஞிலம்
இடம் கெட ஈண்டிய வியன் கண் பாசறை,
களம் கொளற்கு உரியோர் இன்றி, தெறுவர,
உடன் வீழ்ந்தன்றால், அமரே; பெண்டிரும்
பாசடகு மிசையார், பனி நீர் மூழ்கார்,
15
மார்பகம் பொருந்தி ஆங்கு அமைந்தனரே;
வாடாப் பூவின், இமையா நாட்டத்து,
நாற்ற உணவினோரும் ஆற்ற
அரும் பெறல் உலகம் நிறைய
விருந்து பெற்றனரால்; பொலிக, நும் புகழே!

திணை தும்பை; துறை தொகை நிலை.
சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதனும், சோழன் வேற் பல் தடக்கைப் பெருவிறற்கிள்ளியும், போர்ப்புறத்துப் பொருது வீழ்ந்தாரைக் கழாத்தலையார் பாடியது.

63
எனைப் பல் யானையும் அம்பொடு துளங்கி,
விளைக்கும் வினை இன்றிப் படை ஒழிந்தனவே;
விறல் புகழ் மாண்ட புரவி எல்லாம்
மறத் தகை மைந்தரொடு ஆண்டுப் பட்டனவே;
5
தேர் தர வந்த சான்றோர் எல்லாம்,
தோல் கண் மறைப்ப, ஒருங்கு மாய்ந்தனரே;
விசித்து வினை மாண்ட மயிர்க் கண் முரசம்,
பொறுக்குநர் இன்மையின், இருந்து விளிந்தனவே;
சாந்து அமை மார்பில் நெடு வேல் பாய்ந்தென,
10
வேந்தரும் பொருது, களத்து ஒழிந்தனர்; இனியே,
என் ஆவதுகொல்தானே கழனி
ஆம்பல் வள்ளித் தொடிக் கை மகளிர்
பாசவல் முக்கி, தண் புனல் பாயும்,
யாணர் அறாஅ வைப்பின்
15
காமர் கிடக்கை அவர் அகன் தலை நாடே?

திணையும் துறையும் அவை.
அவரை அக் களத்தில் பரணர் பாடியது.