நெடுமொழி

54
எம் கோன் இருந்த கம்பலை மூதூர்,
உடையோர் போல இடையின்று குறுகி,
செம்மல் நாள் அவை அண்ணாந்து புகுதல்
எம் அன வாழ்க்கை இரவலர்க்கு எளிதே;
5
இரவலர்க்கு எண்மை அல்லது புரவு எதிர்ந்து,
வானம் நாண, வரையாது, சென்றோர்க்கு
ஆனாது ஈயும் கவி கை வண்மைக்
கடு மான் கோதை துப்பு எதிர்ந்து எழுந்த
நெடுமொழி மன்னர் நினைக்கும் காலை,
10
பாசிலைத் தொடுத்த, உவலைக் கண்ணி,
மாசு உண் உடுக்கை, மடி வாய், இடையன்
சிறு தலை ஆயமொடு குறுகல்செல்லாப்
புலி துஞ்சு வியன் புலத்தற்றே
வலி துஞ்சு தடக் கை அவனுடை நாடே.

திணையும் துறையும் அவை.
சேரமான் குட்டுவன் கோதையைக் கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரன் பாடியது.

298
எமக்கே கலங்கல் தருமே; தானே
தேறல் உண்ணும் மன்னே; நன்றும்
இன்னான் மன்ற வேந்தே, இனியே
நேரார் ஆர் எயில் முற்றி,
5
வாய் மடித்து உரறி, 'நீ முந்து' என்னானே.

திணை கரந்தை; துறை நெடுமொழி.
ஆலியார் பாடியது.

376
விசும்பு நீத்தம் இறந்த ஞாயிற்றுப்
பசுங் கதிர் மழுகிய சிவந்து வாங்கு அந்தி
சிறு நனி பிறந்த பின்றை, செறி பிணிச்
சிதாஅர் வள்பின் என் தெடாரி தழீஇ,
5
பாணர் ஆரும்அளவை, யான் தன்
யாணர் நல் மனைக் கூட்டுமுதல் நின்றனென்;
இமைத்தோர் விழித்த மாத்திரை, ஞெரேரென,
குணக்கு எழு திங்கள் கனை இருள் அகற்ற,
பண்டு அறிவாரா உருவோடு, என் அரைத்
10
தொன்று படு துளையொடு பரு இழை போகி,
நைந்து கரை பறைந்த என் உடையும், நோக்கி,
'விருந்தினன் அளியன், இவன்' என, பெருந்தகை
நின்ற முரற்கை நீக்கி, நன்றும்
அரவு வெகுண்டன்ன தேறலொடு, சூடு தருபு,
15
நிரயத்து அன்ன என் வறன் களைந்து, அன்றே,
இரவினானே, ஈத்தோன் எந்தை;
அன்றை ஞான்றினொடு இன்றின் ஊங்கும்,
இரப்பச் சிந்தியேன், நிரப்பு அடு புணையின்;
உளத்தின் அளக்கும் மிளிர்ந்த தகையேன்;
20
நிறைக் குளப் புதவின் மகிழ்ந்தனென் ஆகி,
ஒரு நாள், இரவலர் வரையா வள்ளியோர் கடைத்தலை,
ஞாங்கர் நெடுமொழி பயிற்றி,
தோன்றல் செல்லாது, என் சிறு கிணைக் குரலே.

திணை அது; துறை இயன்மொழி.
ஒய்மான் நல்லியாதனைப் புறத்திணை நன்னாகனார் பாடியது.