பரிசில் கடாநிலை

11
அரி மயிர்த் திரள் முன்கை,
வால் இழை, மட மங்கையர்
வரி மணல் புனை பாவைக்குக்
குலவுச் சினைப் பூக் கொய்து,
5
தண் பொருநைப் புனல் பாயும்,
விண் பொரு புகழ், விறல் வஞ்சி,
பாடல் சான்ற விறல் வேந்தனும்மே,
வெப்பு உடைய அரண் கடந்து,
துப்பு உறுவர் புறம் பெற்றிசினே;
10
புறம் பெற்ற வய வேந்தன்
மறம் பாடிய பாடினியும்மே,
ஏர் உடைய விழுக் கழஞ்சின்,
சீர் உடைய இழை பெற்றிசினே;
இழை பெற்ற பாடினிக்குக்
15
குரல் புணர் சீர்க் கொளை வல் பாண் மகனும்மே,
என ஆங்கு,
ஒள் அழல் புரிந்த தாமரை
வெள்ளி நாரால் பூ பெற்றிசினே.

திணை பாடாண் திணை; துறை பரிசில் கடா நிலை.
சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோவைப் பேய்மகள் இளவெயினி பாடியது.

101
ஒரு நாள் செல்லலம்; இரு நாள் செல்லலம்;
பல நாள் பயின்று, பலரொடு செல்லினும்,
தலை நாள் போன்ற விருப்பினன்மாதோ
இழை அணி யானை இயல் தேர் அஞ்சி
5
அதியமான்; பரிசில் பெறூஉம் காலம்
நீட்டினும், நீட்டாதுஆயினும், களிறு தன்
கோட்டு இடை வைத்த கவளம் போலக்
கையகத்தது; அது பொய் ஆகாதே;
அருந்த ஏமாந்த நெஞ்சம்!
10
வருந்த வேண்டா; வாழ்க, அவன் தாளே!

திணை பாடாண் திணை; துறை பரிசில் கடாநிலை.
அவனை அவர் பாடியது.

136
யாழ்ப் பத்தர்ப் புறம் கடுப்ப
இழை வலந்த பல் துன்னத்து
இடைப் புரை பற்றி, பிணி விடாஅ
ஈர்க் குழாத்தோடு இறை கூர்ந்த
5
பேஎன் பகை என ஒன்று என்கோ?
உண்ணாமையின் ஊன் வாடி,
தெண் நீரின் கண் மல்கி,
கசிவுற்ற என் பல் கிளையொடு
பசி அலைக்கும் பகை ஒன்று என்கோ?
10
அன்ன தன்மையும் அறிந்து ஈயார்,
'நின்னது தா' என, நிலை தளர,
மரம் பிறங்கிய நளிச் சிலம்பில்,
குரங்கு அன்ன புன் குறுங் கூளியர்
பரந்து அலைக்கும் பகை ஒன்று என்கோ?
15
'ஆஅங்கு, எனைப் பகையும் அறியுநன் ஆய்'
எனக் கருதி, பெயர் ஏத்தி,
வாய் ஆர நின் இசை நம்பி,
சுடர் சுட்ட சுரத்து ஏறி,
இவண் வந்த பெரு நசையேம்;
20
'எமக்கு ஈவோர் பிறர்க்கு ஈவோர்;
பிறர்க்கு ஈவோர் தமக்கு ஈப' என,
அனைத்து உரைத்தனன் யான் ஆக,
நினக்கு ஒத்தது நீ நாடி,
நல்கினை விடுமதி, பரிசில்! அல்கலும்,
25
தண் புனல் வாயில் துறையூர் முன்துறை
நுண் பல மணலினும் ஏத்தி,
உண்குவம், பெரும! நீ நல்கிய வளனே.

திணை அது; துறை பரிசில் கடாநிலை.
அவனைத் துறையூர் ஓடைகிழார் பாடியது.

139
சுவல் அழுந்தப் பல காய
சில் ஓதிப் பல் இளைஞருமே,
அடி வருந்த நெடிது ஏறிய
கொடி மருங்குல் விறலியருமே,
5
வாழ்தல் வேண்டிப்
பொய் கூறேன்; மெய் கூறுவல்;
ஓடாப் பூட்கை உரவோர் மருக!
உயர் சிமைய உழாஅ நாஞ்சில் பொருந!
மாயா உள்ளமொடு பரிசில் துன்னி,
10
கனி பதம் பார்க்கும் காலை அன்றே;
ஈதல் ஆனான், வேந்தே; வேந்தற்குச்
சாதல் அஞ்சாய், நீயே; ஆயிடை,
இரு நிலம் மிளிர்ந்திசினாஅங்கு, ஒரு நாள்,
அருஞ் சமம் வருகுவதுஆயின்,
15
வருந்தலும் உண்டு, என் பைதல் அம் கடும்பே.

திணை அது; துறை பரிசில் கடாநிலை.
அவனை அவர் பாடியது.

158
முரசு கடிப்பு இகுப்பவும், வால் வளை துவைப்பவும்,
அரசுடன் பொருத அண்ணல் நெடு வரை,
கறங்கு வெள் அருவி கல் அலைத்து ஒழுகும்
பறம்பின் கோமான் பாரியும்; பிறங்கு மிசைக்
5
கொல்லி ஆண்ட வல் வில் ஓரியும்;
காரி ஊர்ந்து பேர் அமர்க் கடந்த,
மாரி ஈகை, மறப் போர் மலையனும்;
ஊராது ஏந்திய குதிரை, கூர் வேல்,
கூவிளங் கண்ணி, கொடும் பூண், எழினியும்;
10
ஈர்ந் தண் சிலம்பின் இருள் தூங்கு நளி முழை,
அருந் திறல் கடவுள் காக்கும் உயர் சிமை,
பெருங் கல் நாடன் பேகனும்; திருந்து மொழி
மோசி பாடிய ஆயும்; ஆர்வம் உற்று
உள்ளி வருநர் உலைவு நனி தீர,
15
தள்ளாது ஈயும் தகைசால் வண்மை,
கொள்ளார் ஓட்டிய, நள்ளியும் என ஆங்கு
எழுவர் மாய்ந்த பின்றை, 'அழிவரப்
பாடி வருநரும் பிறரும் கூடி
இரந்தோர் அற்றம் தீர்க்கு' என, விரைந்து, இவண்
20
உள்ளி வந்தனென், யானே; விசும்புறக்
கழை வளர் சிலம்பின் வழையொடு நீடி,
ஆசினிக் கவினிய பலவின் ஆர்வுற்று,
முள் புற முது கனி பெற்ற கடுவன்
துய்த் தலை மந்தியைக் கையிடூஉப் பயிரும்,
25
அதிரா யாணர், முதிரத்துக் கிழவ!
இவண் விளங்கு சிறப்பின், இயல் தேர்க் குமண!
இசை மேந்தோன்றிய வண்மையொடு,
பகை மேம்படுக, நீ ஏந்திய வேலே!

திணை அது; துறை வாழ்த்தியல்; பரிசில் கடா நிலையும் ஆம்.
குமணனைப் பெருஞ்சித்திரனார் பாடியது.

159
'வாழும் நாளோடு யாண்டு பல உண்மையின்,
தீர்தல் செல்லாது, என் உயிர்' எனப் பல புலந்து,
கோல் காலாகக் குறும் பல ஒதுங்கி,
நூல் விரித்தன்ன கதுப்பினள், கண் துயின்று,
5
முன்றில் போகா முதிர்வினள் யாயும்;
பசந்த மேனியொடு படர் அட வருந்தி,
மருங்கில் கொண்ட பல் குறுமாக்கள்
பிசைந்து தின, வாடிய முலையள், பெரிது அழிந்து,
குப்பைக் கீரை கொய்கண் அகைத்த
10
முற்றா இளந் தளிர் கொய்துகொண்டு, உப்பு இன்று,
நீர் உலைஆக ஏற்றி, மோர் இன்று,
அவிழ்ப் பதம் மறந்து, பாசடகு மிசைந்து,
மாசொடு குறைந்த உடுக்கையள், அறம் பழியா,
துவ்வாளாகிய என் வெய்யோளும்;
15
என்றாங்கு, இருவர் நெஞ்சமும் உவப்ப கானவர்
கரி புனம் மயக்கிய அகன்கண் கொல்லை,
ஐவனம் வித்தி, மையுறக் கவினி,
ஈனல்செல்லா ஏனற்கு இழுமெனக்
கருவி வானம் தலைஇ யாங்கும்,
20
ஈத்த நின் புகழ் ஏத்தி, தொக்க என்,
பசி தினத் திரங்கிய, ஒக்கலும் உவப்ப
உயர்ந்து ஏந்து மருப்பின் கொல்களிறு பெறினும்,
தவிர்ந்து விடு பரிசில் கொள்ளலென்; உவந்து, நீ
இன்புற விடுதிஆயின், சிறிது
25
குன்றியும் கொள்வல், கூர் வேல் குமண!
அதற்பட அருளல் வேண்டுவல் விறல் புகழ்
வசை இல் விழுத் திணைப் பிறந்த
இசை மேந் தோன்றல்! நிற் பாடிய யானே.

திணை அது; துறை பரிசில் கடா நிலை.
அவனை அவர் பாடியது.

160
'உரு கெழு ஞாயிற்று ஒண் கதிர் மிசைந்த
முளி புல் கானம் குழைப்ப, கல்லென
அதிர் குரல் ஏறொடு துளி சொரிந்தாங்கு,
பசி தினத் திரங்கிய கசிவுடை யாக்கை
5
அவிழ் புகுவு அறியாதுஆகலின், வாடிய
நெறி கொள் வரிக் குடர் குளிப்பத் தண்ணென,
குய் கொள் கொழுந் துவை நெய்யுடை அடிசில்,
மதி சேர் நாள்மீன் போல, நவின்ற
சிறு பொன் நன் கலம் சுற்ற இரீஇ,
10
"கேடு இன்றாக, பாடுநர் கடும்பு" என,
அரிது பெறு பொலங் கலம் எளிதினின் வீசி,
நட்டோர் நட்ட நல் இசைக் குமணன்,
மட்டு ஆர் மறுகின், முதிரத்தோனே;
செல்குவைஆயின், நல்குவன், பெரிது' என,
15
பல் புகழ் நுவலுநர் கூற, வல் விரைந்து,
உள்ளம் துரப்ப வந்தனென்; எள்ளுற்று,
இல் உணாத் துறத்தலின், இல் மறந்து உறையும்
புல் உளைக் குடுமிப் புதல்வன் பல் மாண்
பால் இல் வறு முலை சுவைத்தனன் பெறாஅன்,
20
கூழும் சோறும் கடைஇ, ஊழின்
உள் இல் வறுங் கலம் திறந்து, அழக் கண்டு,
மறப் புலி உரைத்தும், மதியம் காட்டியும்,
நொந்தனளாகி, 'நுந்தையை உள்ளி,
பொடிந்த நின் செவ்வி காட்டு' எனப் பலவும்
25
வினவல் ஆனாளாகி, நனவின்
அல்லல் உழப்போள் மல்லல் சிறப்ப,
செல்லாச் செல்வம் மிகுத்தனை, வல்லே
விடுதல் வேண்டுவல் அத்தை; படு திரை
நீர் சூழ் நிலவரை உயர, நின்
30
சீர் கெழு விழுப் புகழ் ஏத்துகம் பலவே.

திணையும் துறையும் அவை.
அவனை அவர் பாடியது.

164
ஆடு நனி மறந்த கோடு உயர் அடுப்பின்
ஆம்பி பூப்ப, தேம்பு பசி உழவா,
பாஅல் இன்மையின் தோலொடு திரங்கி,
இல்லி தூர்ந்த பொல்லா வறு முலை
5
சுவைத்தொறு அழூஉம் தன் மகத்து முகம் நோக்கி,
நீரொடு நிறைந்த ஈர் இதழ் மழைக்கண் என்
மனையோள் எவ்வம் நோக்கி, நினைஇ,
நிற் படர்ந்திசினே நல் போர்க் குமண!
என் நிலை அறிந்தனைஆயின், இந் நிலைத்
10
தொடுத்தும் கொள்ளாது அமையலென் அடுக்கிய
பண் அமை நரம்பின் பச்சை நல் யாழ்,
மண் அமை முழவின், வயிரியர்
இன்மை தீர்க்கும் குடிப் பிறந்தோயே.

திணை அது; துறை பரிசில் கடாநிலை.
தம்பியால் நாடு கொள்ளப்பட்டுக் காடு பற்றியிருந்த குமணனைப் பெருந்தலைச் சாத்தனார் பாடியது.

169
நும் படை செல்லும்காலை, அவர் படை
எடுத்து எறி தானை முன்னரை எனாஅ,
அவர் படை வரூஉம்காலை, நும் படைக்
கூழை தாங்கிய, அகல் யாற்றுக்
5
குன்று விலங்கு சிறையின் நின்றனை எனாஅ,
அரிதால், பெரும! நின் செவ்வி என்றும்;
பெரிதால் அத்தை, என் கடும்பினது இடும்பை;
இன்னே விடுமதி பரிசில்! வென் வேல்
இளம் பல் கோசர் விளங்கு படை கன்மார்,
10
இகலினர் எறிந்த அகல் இலை முருக்கின்
பெரு மரக் கம்பம் போல,
பொருநர்க்கு உலையா நின் வலன் வாழியவே!

திணை அது; துறை பரிசில் கடா நிலை.
அவனைக் காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடியது.

196
ஒல்லுவது ஒல்லும் என்றலும், யாவர்க்கும்
ஒல்லாது இல் என மறுத்தலும், இரண்டும்,
ஆள்வினை மருங்கின் கேண்மைப் பாலே;
ஒல்லாது ஒல்லும் என்றலும், ஒல்லுவது
5
இல் என மறுத்தலும், இரண்டும், வல்லே
இரப்போர் வாட்டல் அன்றியும், புரப்போர்
புகழ் குறைபடூஉம் வாயில்அத்தை;
அனைத்து ஆகியர், இனி; இதுவே எனைத்தும்
சேய்த்துக் காணாது கண்டனம்; அதனால்,
10
நோய் இலராக நின் புதல்வர்; யானும்,
வெயில் என முனியேன், பனி என மடியேன்,
கல் குயின்றன்ன என் நல்கூர் வளி மறை,
நாண் அலது இல்லாக் கற்பின் வாள் நுதல்
மெல் இயல் குறு மகள் உள்ளிச்
15
செல்வல் அத்தை; சிறக்க, நின் நாளே!

திணை பாடாண் திணை; துறை பரிசில் கடா நிலை.
பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் பரிசில் நீட்டித்தானை ஆவூர் மூலங் கிழார் பாடியது.

197
வளி நடந்தன்ன வாச் செலல் இவுளியொடு
கொடி நுடங்கு மிசைய தேரினர் எனாஅ,
கடல் கண்டன்ன ஒண் படைத் தானையொடு
மலை மாறு மலைக்கும் களிற்றினர் எனாஅ,
5
உரும் உரற்றன்ன உட்குவரு முரசமொடு
செரு மேம்படூஉம் வென்றியர் எனாஅ,
மண் கெழு தானை, ஒண் பூண், வேந்தர்
வெண் குடைச் செல்வம் வியத்தலோ இலமே;
எம்மால் வியக்கப்படூஉமோரே,
10
இடு முள் படப்பை மறி மேய்ந்து ஒழிந்த
குறு நறு முஞ்ஞைக் கொழுங் கண் குற்றடகு,
புன் புல வரகின் சொன்றியொடு, பெறூஉம்,
சீறூர் மன்னர் ஆயினும், எம் வயின்
பாடு அறிந்து ஒழுகும் பண்பினாரே;
15
மிகப் பேர் எவ்வம் உறினும், எனைத்தும்
உணர்ச்சி இல்லோர் உடைமை உள்ளேம்;
நல் அறிவு உடையோர் நல்குரவு
உள்ளுதும், பெரும! யாம், உவந்து, நனி பெரிதே.

திணையும் துறையும் அவை.
சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன் பரிசில் நீட்டித்தானைக் கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார் பாடியது.

198
'அருவி தாழ்ந்த பெரு வரை போல
ஆரமொடு பொலிந்த மார்பில் தண்டா,
கடவுள் சான்ற கற்பின், சேயிழை
மடவோள் பயந்த மணி மருள் அவ் வாய்க்
5
கிண்கிணிப் புதல்வர் பொலிக!' என்று ஏத்தி,
திண் தேர் அண்ணல் நிற் பாராட்டி,
காதல் பெருமையின் கனவினும் அரற்றும் என்
காமர் நெஞ்சம் ஏமாந்து உவப்ப,
ஆல் அமர் கடவுள் அன்ன நின் செல்வம்,
10
வேல் கெழு குருசில்! கண்டேன்; ஆதலின்,
விடுத்தனென்; வாழ்க, நின் கண்ணி! தொடுத்த
தண் தமிழ் வரைப்பகம் கொண்டி ஆக,
பனித்துக் கூட்டு உண்ணும் தணிப்பு அருங் கடுந் திறல்
நின் ஓரன்ன நின் புதல்வர், என்றும்,
15
ஒன்னார் வாட அருங் கலம் தந்து, நும்
பொன்னுடை நெடு நகர் நிறைய வைத்த நின்
முன்னோர் போல்க, இவர் பெருங் கண்ணோட்டம்!
யாண்டும் நாளும் பெருகி, ஈண்டு திரைப்
பெருங் கடல் நீரினும், அக் கடல் மணலினும்,
20
நீண்டு உயர் வானத்து உறையினும், நன்றும்,
இவர் பெறும் புதல்வர்க் காண்தொறும், நீயும்,
புகன்ற செல்வமொடு புகழ் இனிது விளங்கி,
நீடு வாழிய! நெடுந்தகை! யானும்
கேள் இல் சேஎய் நாட்டின், எந்நாளும்,
25
துளி நசைப் புள்ளின் நின் அளி நசைக்கு இரங்கி, நின்
அடி நிழல் பழகிய அடியுறை;
கடுமான் மாற! மறவாதீமே.

திணையும் துறையும் அவை.
பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனை வடம வண்ணக்கன் பேரி சாத்தனார் பாடியது.

199
கடவுள் ஆலத்துத் தடவுச் சினைப் பல் பழம்
நெருநல் உண்டனம் என்னாது, பின்னும்
செலவு ஆனாவே, கலி கொள் புள்ளினம்;
அனையர் வாழியோ இரவலர்; அவரைப்
5
புரவு எதிர்கொள்ளும் பெருஞ் செய் ஆடவர்
உடைமை ஆகும், அவர் உடைமை;
அவர் இன்மை ஆகும், அவர் இன்மையே.

திணையும் துறையும் அவை.
பெரும்பதுமனார் பாட்டு.

209
பொய்கை நாரை போர்வில் சேக்கும்
நெய்தல் அம் கழனி, நெல் அரி தொழுவர்
கூம்பு விடு மெண் பிணி அவிழ்ந்த ஆம்பல்
அகல் அடை அரியல் மாந்தி, தெண் கடல்
5
படு திரை இன் சீர்ப் பாணி தூங்கும்
மென் புல வைப்பின் நல் நாட்டுப் பொருந!
பல் கனி நசைஇ, அல்கு விசும்பு உகந்து,
பெரு மலை விடரகம் சிலம்ப முன்னி,
பழனுடைப் பெரு மரம் தீர்ந்தென, கையற்று,
10
பெறாது பெயரும் புள்ளினம் போல, நின்
நசை தர வந்து, நின் இசை நுவல் பரிசிலென்
வறுவியேன் பெயர்கோ? வாள் மேம்படுந!
ஈயாய் ஆயினும், இரங்குவென்அல்லேன்;
நோய் இலை ஆகுமதி; பெரும! நம்முள்
15
குறு நணி காண்குவதாக நாளும்,
நறும் பல் ஒலிவரும் கதுப்பின், தே மொழி,
தெரிஇழை மகளிர் பாணி பார்க்கும்
பெரு வரை அன்ன மார்பின்,
செரு வெஞ் சேஎய்! நின் மகிழ் இருக்கையே!

திணை அது; துறை பரிசில் கடா நிலை.
மூவன் பரிசில் நீட்டித்தானைப் பெருந்தலைச் சாத்தனார் பாடியது.

210
மன்பதை காக்கும் நின் புரைமை நோக்காது,
அன்பு கண் மாறிய அறன் இல் காட்சியொடு,
நும்மனோரும் மற்று இனையர் ஆயின்,
எம்மனோர் இவண் பிறவலர் மாதோ;
5
செயிர் தீர் கொள்கை எம் வெங் காதலி
உயிர் சிறிது உடையள்ஆயின், எம்வயின்
உள்ளாது இருத்தலோ அரிதே; அதனால்,
'அறன் இல் கூற்றம் திறன் இன்று துணியப்
பிறன் ஆயினன்கொல்? இறீஇயர், என் உயிர்!' என
10
நுவல்வுறு சிறுமையள் பல புலந்து உறையும்
இடுக்கண் மனையோள் தீரிய, இந் நிலை
விடுத்தேன்; வாழியர், குருசில்! உதுக் காண்:
அவல நெஞ்சமொடு செல்வல் நிற் கறுத்தோர்
அருங் கடி முனை அரண் போலப்
15
பெருங் கையற்ற என் புலம்பு முந்துறுத்தே.

திணையும் துறையும் அவை.
சேரமான் குடக்கோச் சேரல் இரும்பொறை பரிசில் நீட்டித்தானைப் பெருங் குன்றூர் கிழார் பாடியது.

211
அஞ்சுவரு மரபின் வெஞ் சினப் புயலேறு
அணங்குடை அரவின் அருந் தலை துமிய,
நின்று காண்பன்ன நீள் மலை மிளிர,
குன்று தூவ எறியும் அரவம் போல,
5
முரசு எழுந்து இரங்கும் தானையொடு தலைச்சென்று,
அரைசு படக் கடக்கும் உரைசால் தோன்றல்! நின்
உள்ளி வந்த ஓங்கு நிலைப் பரிசிலென்,
'வள்ளியை ஆதலின் வணங்குவன் இவன்' என,
கொள்ளா மாந்தர் கொடுமை கூற, நின்
10
உள்ளியது முடித்தோய் மன்ற; முன் நாள்
கை உள்ளது போல் காட்டி, வழி நாள்
பொய்யொடு நின்ற புறநிலை வருத்தம்
நாணாய் ஆயினும், நாணக் கூறி, என்
நுணங்கு செந் நா அணங்க ஏத்தி,
15
பாடப் பாடப் பாடுபுகழ் கொண்ட நின்
ஆடு கொள் வியன் மார்பு தொழுதனென் பழிச்சிச்
செல்வல் அத்தை, யானே வைகலும்,
வல்சி இன்மையின் வயின்வயின் மாறி,
இல் எலி மடிந்த தொல் சுவர் வரைப்பின்,
20
பாஅல் இன்மையின் பல் பாடு சுவைத்து,
முலைக்கோள் மறந்த புதல்வனொடு,
மனைத் தொலைந்திருந்த என் வாள்நுதல் படர்ந்தே.

திணையும் துறையும் அவை.
அவனை அவர் பாடியது.

266
பயம் கெழு மா மழை பெய்யாது மாறி,
கயம் களி முளியும் கோடைஆயினும்,
புழல்கால் ஆம்பல் அகல் அடை நீழல்,
கதிர்க் கோட்டு நந்தின் சுரி முக ஏற்றை
5
நாகு இள வளையொடு பகல் மணம் புகூஉம்
நீர் திகழ் கழனி நாடு கெழு பெரு விறல்!
வான் தோய் நீள் குடை, வய மான் சென்னி!
சான்றோர் இருந்த அவையத்து உற்றோன்,
'ஆசு ஆகு' என்னும் பூசல் போல,
10
வல்லே களைமதிஅத்தை உள்ளிய
விருந்து கண்டு ஒளிக்கும் திருந்தா வாழ்க்கை,
பொறிப் புணர் உடம்பில் தோன்றி என்
அறிவு கெட நின்ற நல்கூர்மையே!

திணை பாடாண் திணை; துறை பரிசில் கடாநிலை.
சோழன் உருவப் பல் தேர் இளஞ் சேட்சென்னியைப் பெருங்குன்றூர் கிழார் பாடியது.