பரிசில் விடை

140
தடவு நிலைப் பலவின் நாஞ்சில் பொருநன்
மடவன், மன்ற; செந் நாப் புலவீர்!
வளைக் கை விறலியர் படப்பைக் கொய்த
அடகின் கண்ணுறைஆக யாம் சில
5
அரிசி வேண்டினேமாக, தான் பிற
வரிசை அறிதலின், தன்னும் தூக்கி,
இருங் கடறு வளைஇய குன்றத்து அன்னது ஓர்
பெருங் களிறு நல்கியோனே; அன்னது ஓர்
தேற்றா ஈகையும் உளதுகொல்?
10
போற்றார் அம்ம, பெரியோர் தம் கடனே?

திணை அது; துறை பரிசில் விடை.
அவனை ஒளவையார் பாடியது.

152
'வேழம் வீழ்த்த விழுத் தொடைப் பகழி
பேழ் வாய் உழுவையைப் பெரும்பிறிது உறீஇ,
புழல் தலைப் புகர்க் கலை உருட்டி, உரல் தலைக்
கேழற் பன்றி வீழ, அயலது
5
ஆழல் புற்றத்து உடும்பில் செற்றும்,
வல் வில் வேட்டம் வலம் படுத்து இருந்தோன்,
புகழ்சால் சிறப்பின் அம்பு மிகத் திளைக்கும்
கொலைவன் யார்கொலோ? கொலைவன் மற்று இவன்
விலைவன் போலான்; வெறுக்கை நன்கு உடையன்;
10
ஆரம் தாழ்ந்த அம் பகட்டு மார்பின்,
சாரல் அருவிப் பய மலைக் கிழவன்,
ஓரி கொலோ? அல்லன்கொல்லோ?
பாடுவல், விறலி! ஓர் வண்ணம்; நீரும்
மண் முழா அமைமின்; பண் யாழ் நிறுமின்;
15
கண் விடு தூம்பின் களிற்று உயிர் தொடுமின்;
எல்லரி தொடுமின்; ஆகுளி தொடுமின்;
பதலை ஒரு கண் பையென இயக்குமின்;
மதலை மாக் கோல் கைவலம் தமின்' என்று,
இறைவன் ஆகலின், சொல்லுபு குறுகி,
20
மூ ஏழ் துறையும் முறையுளிக் கழிப்பி,
'கோ' எனப் பெயரிய காலை, ஆங்கு அது
தன் பெயர் ஆகலின் நாணி, மற்று, 'யாம்
நாட்டிடன் நாட்டிடன் வருதும்; ஈங்கு ஓர்
வேட்டுவர் இல்லை, நின் ஒப்போர்' என,
25
வேட்டது மொழியவும் விடாஅன், வேட்டத்தில்
தான் உயிர் செகுத்த மான் நிணப் புழுக்கோடு,
ஆன் உருக்கு அன்ன வேரியை நல்கி,
தன் மலைப் பிறந்த தா இல் நன் பொன்,
பல் மணிக் குவையொடும் விரைஇ, 'கொண்ம்' என,
30
சுரத்திடை நல்கியோனே விடர்ச் சிமை
ஓங்கு இருங் கொல்லிப் பொருநன்,
ஓம்பா ஈகை விறல் வெய்யோனே!

திணை அது; துறை பரிசில் விடை.
வல் வில் ஓரியை வன்பரணர் பாடியது.

162
இரவலர் புரவலை நீயும் அல்லை;
புரவலர் இரவலர்க்கு இல்லையும் அல்லர்;
இரவலர் உண்மையும் காண், இனி; இரவலர்க்கு
ஈவோர் உண்மையும் காண், இனி; நின் ஊர்க்
5
கடிமரம் வருந்தத் தந்து யாம் பிணித்த
நெடு நல் யானை எம் பரிசில்;
கடுமான் தோன்றல்! செல்வல் யானே.

திணை அது; துறை பரிசில் விடை.
அவர் வெளிமானுழைச் சென்றார்க்கு வெளிமான் துஞ்சுவான் தம்பியைப் 'பரிசில் கொடு' என, அவன் சிறிது கொடுப்பக் கொள்ளாது போய், குமணனைப் பாடி,குமணன் பகடு கொடுப்பக் கொணர்ந்து நின்று, வெளிமான் ஊர்க் கடிமரத்து யாத்துச் சென்று,

165
மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்
தம் புகழ் நிறீஇத் தாம் மாய்ந்தனரே;
துன் அருஞ் சிறப்பின் உயர்ந்த செல்வர்,
இன்மையின் இரப்போர்க்கு ஈஇயாமையின்,
5
தொன்மை மாக்களின் தொடர்பு அறியலரே;
தாள் தாழ் படு மணி இரட்டும், பூ நுதல்,
ஆடு இயல் யானை பாடுநர்க்கு அருகாக்
கேடு இல் நல் இசை வய மான் தோன்றலைப்
பாடி நின்றனெனாக, 'கொன்னே
10
பாடு பெறு பரிசிலன் வாடினன் பெயர்தல் என
நாடு இழந்ததனினும் நனி இன்னாது' என,
வாள் தந்தனனே, தலை எனக்கு ஈய,
தன்னின் சிறந்தது பிறிது ஒன்று இன்மையின்;
ஆடு மலி உவகையொடு வருவல்,
15
ஓடாப் பூட்கை நின் கிழமையோற் கண்டே.

திணை அது; துறை பரிசில் விடை.
தம்பியால் நாடு கொள்ளப்பட்டுக் காடு பற்றியிருந்த குமணனைக் கண்டு, அவன் தன் வாள் கொடுப்பக் கொண்டு வந்து, இளங் குமணற்குக் காட்டி, பெருந்தலைச் சாத்தனார் பாடியது.

397
வெள்ளியும் இரு விசும்பு ஏர்தரும்; புள்ளும்
உயர் சினைக் குடம்பைக் குரல் தோற்றினவே;
பொய்கையும் போது கண் விழித்தன; பைபயச்
சுடரும் சுருங்கின்று, ஒளியே; பாடு எழுந்து
5
இரங்குரல் முரசமொடு வலம்புரி ஆர்ப்ப,
இரவுப் புறங்கண்ட காலைத் தோன்றி,
எஃகு இருள் அகற்றும் ஏமப் பாசறை,
வைகறை அரவம் கேளியர்! 'பல கோள்
செய் தார் மார்ப! எழுமதி துயில்' என,
10
தெண் கண் மாக் கிணை தெளிர்ப்ப ஒற்றி,
நெடுங் கடைத் தோன்றியேனே; அது நயந்து,
'உள்ளி வந்த பரிசிலன் இவன்' என,
நெய்யுறப் பொரித்த குய்யுடை நெடுஞ் சூடு,
மணிக் கலன் நிறைந்த மணம் நாறு தேறல்,
15
பாம்பு உரித்தன்ன வான் பூங் கலிங்கமொடு,
மாரி அன்ன வண்மையின் சொரிந்து,
வேனில் அன்ன என் வெப்பு நீங்க,
அருங் கலம் நல்கியோனே; என்றும்,
செறுவில் பூத்த சேயிதழ்த் தாமரை,
20
அறு தொழில் அந்தணர் அறம் புரிந்து எடுத்த
தீயொடு விளங்கும் நாடன், வாய் வாள்
வலம் படு தீவின் பொலம் பூண் வளவன்;
எறி திரைப் பெருங் கடல் இறுதிக்கண் செலினும்,
தெறு கதிர்க் கனலி தென் திசைத் தோன்றினும்,
25
'என்?' என்று அஞ்சலம், யாமே; வென் வேல்
அருஞ் சமம் கடக்கும் ஆற்றல் அவன்
திருந்து கழல் நோன் தாள் தண் நிழலேமே.

திணை அது; துறை பரிசில்விடை; கடைநிலை விடையும் ஆம்.
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார் பாடியது.

399
அடு மகள் முகந்த அளவா வெண்ணெல்
தொடி மாண் உலக்கைப் பரூஉக் குற்று அரிசி
காடி வெள் உலைக் கொளீஇ, நீழல்
ஓங்கு சினை மாவின் தீம் கனி நறும் புளி,
5
மோட்டு இரு வராஅல் கோட்டு மீன் கொழுங் குறை,
செறுவின் வள்ளை, சிறு கொடிப் பாகல்,
பாதிரி ஊழ் முகை அவிழ் விடுத்தன்ன
மெய் களைந்து, இனனொடு விரைஇ,
மூழ்ப்பப் பெய்த முழு அவிழ்ப் புழுக்கல்,
10
அழிகளின் படுநர் களி அட வைகின்,
பழஞ்சோறு அயிலும் முழங்கு நீர்ப் படப்பைக்
காவிரிக் கிழவன், மாயா நல் இசைக்
கிள்ளிவளவன் உள்ளி, அவற் படர்தும்;
செல்லேன் செல்லேன், பிறர் முகம் நோக்கேன்;
15
நெடுங் கழைத் தூண்டில் விடு மீன் நொடுத்து,
கிணைமகள் அட்ட பாவல் புளிங்கூழ்
பொழுது மறுத்து உண்ணும் உண்டியேன், அழிவு கொண்டு,
ஒரு சிறை இருந்தேன்; என்னே! 'இனியே,
அறவர் அறவன், மறவர் மறவன்,
20
மள்ளர் மள்ளன், தொல்லோர் மருகன்,
இசையின் கொண்டான், நசை அமுது உண்க' என,
மீப் படர்ந்து இறந்து, வன் கோல் மண்ணி,
வள் பரிந்து கிடந்த.......................மணக்க
விசிப்புறுத்து அமைந்த புதுக் காழ்ப் போர்வை,
25
அலகின் மாலை ஆர்ப்ப வட்டித்து,
கடியும் உணவு என்னக் கடவுட்கும் தொடேன்,
'கடுந் தேர் அள்ளற்கு அசாவா நோன் சுவல்
பகடே அத்தை யான் வேண்டி வந்தது' என,
ஒன்று யான் பெட்டாஅளவை, அன்றே
30
ஆன்று விட்டனன் அத்தை, விசும்பின்
மீன் பூத்தன்ன உருவப் பல் நிரை
ஊர்தியொடு நல்கியோனே; சீர் கொள
இழுமென இழிதரும் அருவி,
வான் தோய் உயர் சிமைத் தோன்றிக் கோவே.

திணை அது; துறை பரிசில் விடை.
தாமான் தோன்றிக் கோனை ஐயூர் முடவனார் பாடியது.