பாணாற்றுப்படை

68
உடும்பு உரித்தன்ன என்பு எழு மருங்கின்
கடும்பின் கடும் பசி களையுநர்க் காணாது,
சில் செவித்து ஆகிய கேள்வி நொந்து நொந்து,
ஈங்கு எவன் செய்தியோ? பாண! 'பூண் சுமந்து,
5
அம் பகட்டு எழிலிய செம் பொறி ஆகத்து
மென்மையின் மகளிர்க்கு வணங்கி, வன்மையின்
ஆடவர்ப் பிணிக்கும் பீடு கெழு நெடுந் தகை,
புனிறு தீர் குழவிக்கு இலிற்று முலை போலச்
சுரந்த காவிரி மரம் கொல் மலி நீர்
10
மன்பதை புரக்கும் நல் நாட்டுப் பொருநன்,
உட்பகை ஒரு திறம் பட்டென, புட் பகைக்கு
ஏவான் ஆகலின், சாவேம் யாம்' என,
நீங்கா மறவர் வீங்கு தோள் புடைப்ப,
தணி பறை அறையும் அணி கொள் தேர் வழி,
15
கடுங் கள் பருகுநர் நடுங்கு கை உகுத்த
நறுஞ் சேறு ஆடிய வறுந் தலை யானை
நெடு நகர் வரைப்பில் படு முழா ஓர்க்கும்
உறந்தையோனே குருசில்;
பிறன் கடை மறப்ப, நல்குவன், செலினே.

திணை அது; துறை பாணாற்றுப்படை.
சோழன் நலங்கிள்ளியைக் கோவூர் கிழார் பாடியது.

69
கையது, கடன் நிறை யாழே; மெய்யது,
புரவலர் இன்மையின் பசியே; அரையது,
வேற்று இழை நுழைந்த வேர் நனை சிதாஅர்
ஓம்பி உடுத்த உயவல் பாண!
5
பூட்கை இல்லோன் யாக்கை போலப்
பெரும் புல்லென்ற இரும் பேர் ஒக்கலை;
வையகம் முழுதுடன் வளைஇ, பையென
என்னை வினவுதி ஆயின், மன்னர்
அடு களிறு உயவும் கொடி கொள் பாசறை,
10
குருதிப் பரப்பின் கோட்டு மா தொலைச்சி,
புலாக் களம் செய்த கலாஅத் தானையன்
பிறங்கு நிலை மாடத்து உறந்தையோனே;
பொருநர்க்கு ஓக்கிய வேலன், ஒரு நிலைப்
பகைப் புலம் படர்தலும் உரியன்; தகைத் தார்
15
ஒள் எரி புரையும் உரு கெழு பசும் பூண்
கிள்ளி வளவற் படர்குவை ஆயின்,
நெடுங் கடை நிற்றலும் இலையே; கடும் பகல்
தேர் வீசு இருக்கை ஆர நோக்கி,
நீ அவற் கண்ட பின்றை, பூவின்
20
ஆடு வண்டு இமிராத் தாமரை
சூடாயாதல் அதனினும் இலையே.

திணையும் துறையும் அவை.
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை ஆலத்தூர் கிழார் பாடியது.

70
தேஎம் தீம் தொடைச் சீறியாழ்ப் பாண!
'கயத்து வாழ் யாமை காழ் கோத்தன்ன
நுண் கோல் தகைத்த தெண் கண் மாக் கிணை
இனிய காண்க; இவண் தணிக' எனக் கூறி;
5
வினவல் ஆனா முது வாய் இரவல!
தைஇத் திங்கள் தண் கயம் போல,
கொளக்கொளக் குறைபடாக் கூழுடை வியல் நகர்,
அடுதீ அல்லது சுடுதீ அறியாது;
இரு மருந்து விளைக்கும் நல் நாட்டுப் பொருநன்,
10
கிள்ளி வளவன் நல் இசை உள்ளி,
நாற்ற நாட்டத்து அறு கால் பறவை
சிறு வெள் ஆம்பல் ஞாங்கர் ஊதும்
கை வள் ஈகைப் பண்ணன் சிறுகுடிப்
பாதிரி கமழும் ஓதி, ஒள் நுதல்,
15
இன் நகை விறலியொடு மென்மெல இயலிச்
செல்வைஆயின், செல்வை ஆகுவை;
விறகு ஒய் மாக்கள் பொன் பெற்றன்னதோர்
தலைப்பாடு அன்று, அவன் ஈகை;
நினைக்க வேண்டா; வாழ்க, அவன் தாளே!

திணையும் துறையும் அவை.
அவனைக் கோவூர் கிழார் பாடியது.

138
ஆனினம் கலித்த அதர் பல கடந்து,
மானினம் கலித்த மலை பின் ஒழிய,
மீனினம் கலித்த துறை பல நீந்தி,
உள்ளி வந்த, வள் உயிர்ச் சீறியாழ்,
5
சிதாஅர் உடுக்கை, முதாஅரிப் பாண!
நீயே, பேர் எண்ணலையே; நின் இறை,
'மாறி வா' என மொழியலன் மாதோ;
ஒலி இருங் கதுப்பின் ஆயிழை கணவன்
கிளி மரீஇய வியன் புனத்து
10
மரன் அணி பெருங் குரல் அனையன் ஆதலின்,
நின்னை வருதல் அறிந்தனர் யாரே?

திணை அது; துறை பாணாற்றுப்படை.
அவனை மருதன் இளநாகனார் பாடியது.

141
'பாணன் சூடிய பசும் பொன் தாமரை
மாண் இழை விறலி மாலையொடு விளங்க,
கடும் பரி நெடுந் தேர் பூட்டு விட்டு அசைஇ,
ஊரீர் போலச் சுரத்திடை இருந்தனிர்!
5
யாரீரோ?' என, வினவல் ஆனா,
காரென் ஒக்கல், கடும் பசி, இரவல!
வென் வேல் அண்ணல் காணா ஊங்கே,
நின்னினும் புல்லியேம் மன்னே; இனியே,
இன்னேம் ஆயினேம் மன்னே; என்றும்
10
உடாஅ, போரா ஆகுதல் அறிந்தும்,
படாஅம் மஞ்ஞைக்கு ஈத்த எம் கோ,
கடாஅ யானைக் கலி மான் பேகன்,
'எத் துணை ஆயினும் ஈத்தல் நன்று' என,
மறுமை நோக்கின்றோ அன்றே,
15
பிறர், வறுமை நோக்கின்று, அவன் கை வண்மையே.

திணை அது; துறை பாணாற்றுப்படை; புலவராற்றுப்படையும் ஆம்.
வையாவிக் கோப்பெரும் பேகனைப் பரணர் பாடியது.

155
வணர் கோட்டுச் சீறியாழ் வாடுபுடைத் தழீஇ,
'உணர்வோர் யார், என் இடும்பை தீர்க்க?' என,
கிளக்கும், பாண! கேள், இனி நயத்தின்,
பாழ் ஊர் நெருஞ்சிப் பசலை வான் பூ
5
ஏர்தரு சுடரின் எதிர்கொண்டாஅங்கு,
இலம்படு புலவர் மண்டை விளங்கு புகழ்க்
கொண் பெருங் கானத்துக் கிழவன்
தண் தார் அகலம் நோக்கின, மலர்ந்தே.

திணை அது; துறை பாணாற்றுப்படை.
அவனை அவர் பாடியது.

180
நிரப்பாது கொடுக்கும் செல்வமும் இலனே;
'இல்' என மறுக்கும் சிறுமையும் இலனே;
இறை உறு விழுமம் தாங்கி, அமரகத்து
இரும்பு சுவைக் கொண்ட விழுப்புண் நோய் தீர்ந்து,
5
மருந்து கொள் மரத்தின் வாள் வடு மயங்கி,
வடு இன்று வடிந்த யாக்கையன், கொடை எதிர்ந்து,
ஈர்ந்தையோனே, பாண் பசிப் பகைஞன்;
இன்மை தீர வேண்டின், எம்மொடு
நீயும் வம்மோ? முது வாய் இரவல!
10
யாம் தன் இரக்கும்காலை, தான் எம்
உண்ணா மருங்குல் காட்டி, தன் ஊர்க்
கருங் கைக் கொல்லனை இரக்கும்,
'திருந்து இலை நெடு வேல் வடித்திசின்' எனவே.

திணையும் துறையும் அவை; துறை பாணாற்றுப் படையும் ஆம்.
ஈர்ந்தூர் கிழான் தோயன் மாறனைக் கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார் பாடியது.