இனி, விருந்தோம்பாமையால் இல்லறவகையாலும் செருக்கடங்காமையால் துறவறவகையாலும், ஆரியர் வீட்டையடைவதும் இயலாதென அறிந்து கொள்க.

17. இன்பத்துப்பாலின் இருதிறம்

சில ஆரிய நூல்களைக் கற்ற துணையானே தம்மைச் சிறந்த அறிஞராகக் கருதிக்கொள்ளும் மடத்தலைவரும் போலித்துறவியரும், திருக்குறள் இன்பத்துப்பாலைக் கொண்டிருப்பதால் துறவியர் கற்கத்தக்க நூலன்றென்று துணிந்து கூறுவர். இறைவனுக்கும் ஆதனுக்கு மிடைப்பட்ட அன்பை உவமை வாயிலாக விளக்குதற்கு, கணவன் மனைவியரிடைப்பட்ட காதலினுஞ் சிறந்தது வேறின்மை யானேயே, சிவனடியாருட் சிறந்த மாணிக்கவாசகர் சிற்றம்பலக் கோவையைப் பாடினாரென்றும், அதன் வெளிப்பொருள் உலகநெறியும் உட்பொருள் வீட்டுநெறியும் பற்றினவென்றும்,  அறிந்துகொள்க.

"ஆரணங்கா ணென்ப ரந்தணர் யோகியர் ஆகமத்தின்
காரணங்கா ணென்பர் காமுகர் காமநன் னூலதென்பர்
ஏரணங்கா ணென்ப ரெண்ண ரெழுத்தென்ப ரின்புலவோர்
சீரணங் காகிய சிற்றம் பலக்கோவை செப்பிடினே." (தனியன்)

இத்தகையதே திருக்குறளின்பத்துப் பாலுமென்க.
 

18.தமிழ ஆரியக் கருத்து வேறுபாடுகள்
 
தமிழக்கருத்து ஆரியக்கருத்து
பிறப்பாற் சிறப்பில்லை பிறப்பாற் சிறப்புண்டு
தொழில் பற்றிக் குலம் பிறப்புப்பற்றிக் குலம்
உழவு உயிர்களை ஓம்பும் உயர் தொழில் உழவு உயிர்களை கொல்லும் இழி தொழில்
நால்வரணம் மாந்தன் பாகுபாடு நால்வரணம் கடவுட்படைப்பு
தமிழன் பிராமணனுக்குத் தாழ்ந்தவ னல்லன் தமிழன் பிராமணனுக்குத் தாழ்ந்தவன்.
தென்புலத்தார் இறந்த முன்னோர் தென்புலத்தார் படைப்புக் காலத்தில் நான்முகனாற் படைக்கப்பட்ட தேவவகுப்பினர்.