816 காஞ்சிப் புராணம்

எங்ஙனம் பெற இயலும் என்னும் அன்னை சொற்கேட்டு வினவியறிந்து காஞ்சியை அடைந்து தான்தோன்றீசப் பெருமானைப் பூசனை புரிந்து பெருமான் திருப்பாற்கடலைக் கொண்டூட்ட உண்ட உபமன்னிய முனிவர் கண்ணபிரானுக்குத் திருவடி தீக்கை செய்து சிறந்தனர்.

தீக்கைபெற்ற கண்ணபிரானார் திருநீற்றுடன் உருத்திராக்க முதலிய பூண்டு ‘சிவநேசர்’ எனப் போற்றப்பெற்றனர். இத்தலம் ஏகாம்பரநாதர் சந்நிதி வீதியில் உள்ளது.

இரணியேசம்: இரணியன் எனப் பெயரிய அவுணர் தலைவன் தனது, குலகுருவாகிய சுக்கிரனை வருவித்து வணங்கி, பிறர் எவரும் பெறாத திருவினையுடைய அரசு பெறற்குரிய உபாயம் யாதென வினவினன். சிவபூசனையே எவற்றையும் நல்கவல்லதெனவும், அரனைப் போற்றாத ஆக்கையும், பொறிகளும் பயப்பாடு உடையன அல்ல எனவும் குருவால் அறிவுறுக்கப்பெற்றனன் இரணியன். மேலும், தலங்கள் பலவற்றுள்ளும் காசியே சிறப்புடையது; அதனின் மிக்கது காஞ்சி எனவும் அறிந்தனன். பச்சிலையோ, பழம்போதோ யாதோ கொண்டு பேரன்பொடும் செய்யப்பட வேண்டும் என்னும் கேள்விச் செல்வனாய் இரணியன் தன் தமையன் இரணியாக்கன் அவன் மகன் அந்தகன் தன் மகன் பிரகலாதன் வழிவந்த மைந்தர்கள், மனைவிமார் மற்றும் பலரொடும் காஞ்சியை அடைந்து அவரவரும் தம்தம் பெயரால் சிவலிங்கம் தாபித்துப் பூசிக்கத் தானும் இரணியேசம் எனத் தன் பெயரால் சிவலிங்கப் பதிட்டை செய்து அருச்சனை புரிந்தனன். மனிதராலும், விலங்காலும், ஏனைய சீவர்களாலும், நிலத்திலும், விண்ணிலும், கொடிய ஆயுதங்களாலும் உலர்ந்த ஈரிய இடங்களிலும் வீட்டிற்குப் புறத்திலும் அகத்திலும் இரவிலும் பகலிலும் ஆக இத்திறங்களில் இறவாமையும், மூவுலகை ஆளும் அரசும் வேண்டிய இரணியனுக்கு அவற்றை வழங்கினார் சிவபிரானார். உடன் போந்தவரும் தத்தம் மனத்திற்கினியன வேண்டிப் பெற்றனர். இரணியன் பூசித்த இரணியேசம் ஏனையோர் வழிபட்ட தலங்களோடும் உத்தமோத்தமமாய்ச் சிறக்கும். இத்தலம் சருவதீர்த்தத்தின் கிழக்குக் கரையிலுள்ளது.

ஓணகாந்தன் தளி: வாணாசுரனுடைய சேனைத் தலைவராகிய ஓணன்காந்தன் என்னும் அசுரர் இருவர் காஞ்சியை அடைந்து தீர்த்தம் எடுத்து அதன் கரையில் சிவலிங்கம் இரண்டு தத்தம் பெயரால் நிறுவிப் பூசித்தவழிப் பெருமானார் விடைமீது அம்மையொடும் காட்சிதரத் தமக்கு மெய்யறிவு தந்துய்யக் கொள்ளவும், அவ்விலிங்கங்களில் எழுந்தருளியிருந்து எந்நாளும் யாவர்க்கும் அருள்செய்யவும் வரம் பெற்றனர்,

இத்தலம் பஞ்சுப்பேட்டைக்கு மேற்கில் உள்ளது. சுந்தரர் தேவாரம் பெற்ற விளக்கமுடைய திருத்தலம்.