முகப்பு
 
தொடக்கம்

வ.சுப.மாணிக்கனாரின் தமிழ்க் கொடை
பதிப்புச்செம்மல் ச.மெய்யப்பன்
நிறுவனர் : மெய்யப்பன் தமிழாய்வகம்
 

மூதறிஞர், பேராசிரியர் முனைவர் வ.சுப.மாணிக்கனார் தமிழ்செய்த
தவப்பயன்; தமிழ் தம் உயிருக்கு நேர் என்று வாழ்ந்த பேராசான்!
தொல்காப்பியத்தை-சங்கத்தமிழை-வள்ளுவத்தை-சிலம்பை-கம்பனை நஞ்சுக்கு
நீதியாய்க் கொண்டவர். தமிழியம் அவர்தம் உயிர்நதி! தமிழ்வழிக் கல்விக்கு
அவர்ஒரு பாசறை! குறளின் சுடர்: அகத்திணை ஆய்விற்கு விடிவெள்ளி!
அவர் நடையில் பாட்டும் தொகையும் பவனிவரும். தமிழில் மாத்திரை முதல்
அடிநிலைவரை நோக்கிப் பார்க்கும் அவரது இலக்கியப்பார்வை விசாலமானது.
தொல்காப்பியம் முதல் கவிஞர் வைரமுத்துவின் திரைஇசைக் கவிதைகள்
வரை பார்த்தவர். படித்தவர். இலக்கிய - இலக்கண சமுத்திரங்களின்
ஆழங்கண்டவர். ஒருபுறம் தொல்காப்பியத் புதுமை காண்பார்; மறுபுறம்
பாரதியிடம் பழமை காண்பார்.

இலக்கியங்களின் வித்து - விழுதுகள் - கிளைகள் - விருட்சங்கள்
எல்லாம் கண்டவர். சங்கஇலக்கியங்களின் பன்முகப் பெருமைகளைக்
கண்டுணர்த்திய கலங்கரைவிளக்கு. வள்ளுவ நெஞ்சத்தின் உயிர்ப்பறிந்து
எழுதியவர்; மணிவாசகரின் மாணிக்க உள்ளம் கண்டவர். இராமபிரானின்
தோள்கண்டான் கம்பன் என்றால்...கம்பனின் தோள் கண்டார் வ.சுப.
மாணிக்கனார். அவர் கூறினால்... எழுதிக் காட்டினால் இளங்கோ தரிசனம்;
சாத்தனார் தரிசனம்; கம்ப தரிசனம்... என்று தமிழின் தரிசனமே தெரியும்!
அம்சொல் நுண்தேர்ச்சி; நுண்மாண் நுழைபுலம்; இரவிவர்மனின் தூரிகைச்
சித்திரங்களாய் மாணிக்க எழுத்துகள்; ஆழ அகலங்களை அதிகரித்துக்
கொண்டே செல்லும் ஆய்வுநடை; தமிழிய மூச்சு... இவை எல்லாம்தாம் வ.சுப.
மாணிக்கனார்!


முன்பக்கம்
அடுத்த பக்கம்