நாளைப் பயணமடி

காதலரிருவர் அன்பு மிகுதியால் ஒருவருக்கொருவர் உரையாடிக் கொள்கிறார்கள். கடைசியில் அவன் 'நாளைப் பயணம்' என்கிறான். அவள் 'நானும் வருகிறேன்' என்கிறாள். ஆனால் நடக்குமா?

பெண்: ஆல மரமுறங்க
அடி மரத்துக் கொப்புறங்க
பாதையிலே நானிருக்க-நீங்க
பக்க வழி போகலாமா?
ஆண்: வாழையடி உன்கூந்தல்
வைரமடி பல்காவி
ஏழையடி நானுனக்கு
இரங்கலையோ உன்மனசு?
பெண்: சந்திரரே சூரியரே
தலைக்கு மேலே வாரவரே
இந்திரர்க்கு இளையவரே-நான்
என்ன சொல்லிக் கூப்பிடட்டும்
ஆண்: அத்தை மகளே-நீ
அருவங் கொடி வாயழகி
கோவம் பழத்தழகி-என்னை
கொழுந்தனிண்ணு கூப்பிடடி
மேற்கே சூலமடி
மே மலையும் கோணலடி
நாளைப் பயணமடி
பெண்: நானும் வாரேன் கூடப் போவோம்

 

சேகரித்தவர்:
S.M. கார்க்கி

இடம்:
சிவகிரி,