முறைப் பாட்டு
கை கடந்த மாயமென்ன?

அவளுடைய மச்சான் ஊர் வெளிப்புறம் சாயாக்கடையில் உட்கார்ந்திருக்கிறான். அவனை வம்புக்கிழுத்துப் பேச்சுத் தொடங்குகிறாள் மாமன் மகள். அவன் விடுவானா? அவன் பதில் பேச, இவளும் பேசுகிறாள்.

அவள் : சாயாக் கடையிலே
சமுக்கம் விரித்த பெஞ்சியிலே
இருக்காங்க எங்க மச்சான்
இன்பமாகத் தலைப்பாக் கட்டி
 
அவன் : நேராக வளர்ந்த புள்ள
நித்திரைக்கு ஏத்த புள்ள
கொண்டாடி தலை முடியை
கொடுங்கையில் போட்டுறங்க
மானத்திலே ரோட்டுப் போட்டு
மாதுளம் பூப் பாய் விரிச்சு
அங்கே இருந்து பேசுறாளே
அரக்கு லேஞ்சுக் காரனோடே
களை எடுத்துக் கை கழுவி
காலாங்கரைப் பாதை கூடி
முகங் கழுவி முத்தம் தந்தால்
மூணு லட்சம் பொன் தருவேன்
ஒன்னையே நம்பி யல்ல
ஒரு வருஷம் தலை வளர்த்தேன்
கலியாண மாத்தையிலே
கை கடந்த மாயமென்ன?
கட்டப்புள்ள குட்டப்புள்ள
கருவ மணி போட்ட புள்ள
என்னைக் கெடுத்த புள்ள
அன்னா போறா சின்ன புள்ள
 
அவள் : கொத்த மல்லித் தோட்டத்திலே
குளிக்கப் போயி நிக்கயிலே
கொத்தோடு பூவெடுத்து
விட்டெறிஞ்சான் அத்தை மகன்
அத்தை மகனின்னு
செத்த மனம் பொறுத்தேன்
மத்தவன் ஒருத்தனானால்
மாட்டிருவேன் கைவிலங்கு
பச்சச் சிகப்புக் கல்லு
பளிங்கு நிறம் உங்க பல்லு
பல்லு அழகுக்காக-நான்
மாறாத ஆசை கொண்டேன்

வட்டார வழக்கு : அரக்குலேஞ்சுக்காரன்-வேறோர் முறை மாப்பிள்ளை ; தலை வளர்த்தேன்-சிரைக்காமல் முடியை வளர விட்டேன் ; மாத்தையிலே-மாதத்திலே.

குறிப்பு : கருவமணி-இது தெலுங்கு பேசுபவர்கள் அணிவது. தமிழ் நாட்டில் செட்டியார்கள் தவிர மற்ற தெலுங்கர்கள் அணிவார்கள். அவர்களுடைய பாட்டுக்களும் தமிழ் பாட்டுக்களே. தெலுங்குப்பாட்டு, தெலுங்கு நாட்டில் உறவுடையவர்களுக்கே தெரியும்.

சேகரித்தவர் :
M.P.M. ராஜவேலு

இடம் :
தூத்துக்குடி வட்டாரம்,
நெல்லை மாவட்டம்.